அ. மருதகாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. மருதகாசி
பிறப்புஅய்யம்பெருமாள் மருதகாசி உடையார்
(1920-02-13)13 பெப்ரவரி 1920
மேலக்குடிகாடு, திருச்சினாப்பள்ளி மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா இந்தியா (இன்றைய அரியலூர் மாவட்டம்)
இறப்பு29 நவம்பர் 1989(1989-11-29) (அகவை 69)
தேசியம்இந்தியர்
பணிதமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
சமயம்
  • அய்யம்பெருமாள் உடையார் (தந்தை)
  • மிளகாயி அம்மாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
தனக்கோடி அம்மாள்

மருதகாசி ( Maruthakasi, பெப்ரவரி 13, 1920 - நவம்பர் 29, 1989) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அரியலூர் மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. தந்தை பெயர் அய்யம்பெருமாள் உடையார் தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை கும்பகோணம் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். 1940 ஆம் ஆண்டில் திருமணமான இவரின் மனைவி பெயர் தனக்கோடி அம்மாள். மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள்.

நாடகப் பாடல்கள்[தொகு]

மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் "தேவி நாடக சபை"யின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி வந்தார். மு. கருணாநிதி எழுதிய மந்திரி குமாரி போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்.

திரைப்படப்பாடல்கள்[தொகு]

1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்சார் மாயாவதி என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி. ஆர். மகாலிங்கம், அஞ்சலிதேவி இணைந்து நடித்த இந்தப்படத்தை டி. ஆர். சுந்தரம் இயக்கி வந்தார். இந்தப் படத்திற்குத் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ… என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். இதுவே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.

அதைத் தொடர்ந்து பொன்முடி (1950) படப் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. தொடர்ந்து கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன், ஜிக்கி ஆகியோர். சுரதாவின் கதை-வசனத்திலும், எப். நாகூர் இயக்கத்திலும் உருவாகி வந்த பாகவதரின் அமரகவி படத்துக்கு பாடல்கள் எழுதினார் மருதகாசி. தொடர்ந்து அவர் எழுதிய சிவாஜியின் தூக்குத் தூக்கி படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

மங்கையர் திலகம் படத்தில் இடம்பெற்ற நீலவண்ணக் கண்ணா வாடா என்ற பாடலை முதலில் கண்ணதாசன் எழுதினார். ஆனால் தயாரிப்பாளர் எல். வி. பிரசாத் அதில் திருப்திப்படவில்லை. அவர் மருதகாசியை அழைத்து எழுதச் சொன்னார். மருதகாசி எழுதிய பாடல் மிகப் பிரபலமானது.[1]

அந்தக் காலகட்டத்தில் ஜி.ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.

எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல்[தொகு]

தேவரின் தாய்க்குப்பின் தாரம் படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு புரட்சிகரமான கருத்துக்களுடன் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே என்ற பாடலை எழுதினார்.

இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம்.

மருதகாசியின் பாடல்கள் அரசுடைமை[தொகு]

மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.[2] கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 இலட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.[சான்று தேவை]

நினைவை விட்டு அகலாத சில பாடல்கள்[தொகு]

பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

  1. சம்பூரண இராமாயணம் (1958) - அனைத்துப் பாடல்களும் இவர் எழுதியவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆர். ரங்கராஜ் (27 ஜூலை 2020). "Songs of son of the soil". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2020-07-27 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200727164943/https://timesofindia.indiatimes.com/city/chennai/songs-of-son-of-the-soil/articleshow/77187971.cms. பார்த்த நாள்: 27 ஜூலை 2020. 
  2. "நாட்டுடைமையாக்கப்பட்ட கவிஞர் அ.மருதகாசி எழுதிய நூல்கள்".

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._மருதகாசி&oldid=3909524" இலிருந்து மீள்விக்கப்பட்டது