பெருங்காமநல்லூர் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருங்காமநல்லூர் படுகொலை என்பது தென் இந்தியாவின், தமிழ் நாட்டின், மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும்.

இந்நிகழ்வில் ‘மாயக்காள்’ என்ற ஒரு பெண் உள்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். [1]

பின்னணி பார்க்கவும்[தொகு]

தென்னக ஜலியான்வாலா பாக் படுகொலை என்று அழைக்கப்படும் மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூடாகும். இந்தியா முழுவதும் குறிப்பிட்ட பிரிவினர் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் (Criminal Tribes Act) கீழ் கொண்டு வரப்பட்டனர். சுமார் 213 சாதிகளைக் குற்றப் பரம்பரையினர் பட்டியலில் ஆங்கிலேய அரசு இணைத்தது. மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி அந்த பட்டியலில் கள்ளர்கள் பதிவு செய்யப்படுவதை ஆரம்பித்து வைத்தார். இதில் கள்ளர் மக்கள் தொகை சுமார் 60,000 ஆக இருந்தபோதும் 3000 பேர் மட்டுமே பதிவு செய்தனர். மேலும், ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்வதற்கு வந்துள்ளனர் என்ற தகவல் அறிந்து அதிகாரிகள் கோபம் கொண்டனர். அதிக எண்ணிக்கையில் கள்ளர்களைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமானது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர்ந்து கூறிவந்தார்.[2]

பிரமலைக் கள்ளர்கள் அதிகம் வாழும் பகுதியில் அதிகாரிகள் இந்தச் சட்டத்தை வேகமாக அமல்படுத்தி வருகையில், பெருங்காமநல்லூர் கிராமத்திற்கு வந்தனர். அந்தச் சட்டத்திற்கு அடிபணிய அந்தக் கிராம மக்கள் மறுத்தனர்.[2]

2 மார்ச் 1920 அன்று கிராமங்களின் அருகில் ரேகைப்பதிவு அதிகாரிகளுடன் போலீசார் முகாமிடத் தொடங்கினர். கிராமத்துப் பெரிய ஆள்களும் செல்வாக்கான நபர்களும் போலீசாரை அணுகி, ‘கள்ளர்கள் விவசாயிகள்; காட்டுமிராண்டிகள் அல்ல. எனவே, நீங்கள் எங்கள் கிராமத்துக்கு வந்து ரேகை எடுத்தால் அதை ஏற்க மாட்டோம் என்று’ அங்கிருக்கும் பெரியவர்கள் மதுரை சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.[2]

1920 ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதி காலை 11 மணிக்குப் பதிவு செய்வதற்காக தனித்துணை ஆட்சியர் முன் ஆஜராக வேண்டும் என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி 29 மார்ச் 1920 அன்று உத்தரவிட்டார். இந்நிலையில், 1 ஏப்ரல் 1920 அன்று பெருங்காமநல்லூர் மற்றும் பிற கிராமங்களைச் சேர்ந்த அம்மக்கள் கோயிலில் கூடினர். ஆயுதங்களைக் கொண்டு நம்மை அடிபணிய வைக்க ஆங்கில அரசு நினைக்கிறது. நிரபராதிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து, காவல் நிலையத்தில் கைரேகைப் பதியச் சொல்வது நமக்குப் பெரிய அவமானம். இதற்கு அடிபணியாமல் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துப் போராடுவோம் என்று முடிவு செய்தனர்.[2]

தலைவர்களுக்கும் போலீசாருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அது பயனற்றுப்போகவே மக்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். போலீசார் போராட்டத்திற்குச் செவிசாய்க்காமல் மக்களை நோக்கி முன்நகர்ந்தனர். மக்களுடைய போர்க்குரலை அடக்கத் துணை கலெக்டர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிடுமாறு உரிமையியல் நீதிபதிக்கு ஆலோசனைக் கூறினார். அவரது ஆலோசனைப்படி ஆணை கொடுக்கப்பட்டது. துப்பாக்கிச் சப்தத்தைக் கேட்ட இளைஞர்கள் சிலர் விரைந்து பிரித்தானிய போலீஸ் படையை எதிர்கொண்டனர்.[2]

பிரிட்டிஷாரின் துப்பாக்கி 17 பேரின் உயிரைக் காவு வாங்கியது. இதில் வீர மரணம் அடைந்த மாயாண்டித்தேவர் என்ற நொத்தினி மாயாண்டி தேவர், குள்ளன் பெரியகருப்பன், விருமாண்டி தேவர், சிவன் காளை தேவர், பெரியாண்டி தேவர், ஓவாயன் என்ற முத்துக் கருப்பன், மோளை சின்னாத்தேவர், மாயாண்டி தேவர், முனியாண்டி என்கிற மாயாண்டி தேவர், உடையார் தேவர் , சின்னமாயத்தேவர், பெரியகருப்பத் தேவர், வீரணத்தேவர், முத்தையா தேவர், வீரத்தேவர் ஆகிய 16 பேர்களின் உடல்களை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி, உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர்.[3][4]

இந்த துப்பாக்கிச் சூட்டின் போது போராடிய மக்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்து உதவியதற்காக ‘மாயாக்காள்’ என்ற பெண்மணியை காவலர்கள் தாக்கி, துப்பாக்கியின் கத்தியினால் குத்திக் கொலை செய்தனர். இவ்வாறான காட்டுமிராண்டி துப்பாக்கிச் சூட்டில் நிலைகுலைந்து சிதறியோடிய மக்களில் சுமார் 200 பேரைப் பிடித்து, கையை ஒரு காலுடன் இணைக்கும் நெடிய சங்கிலியால் விலங்கிட்டு ஆடு மாடுகளைப் போல் நடைப்பயணமாக சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருமங்கலத்திலிருக்கும் நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்தனர் அதிகாரிகள்.[5]

கள்ளர் சீரமைப்புத் துறை[தொகு]

பெருங்காமநல்லூர் அப்பாவி மக்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அப்பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி, நலத் திட்டங்களைத் தொடங்க ஆங்கில அரசு வழிசெய்தது.[2][6][7]

நினைவுத்தூண்[தொகு]

உயிர்த் தியாகம் புரிந்தவர்களுக்கு, ஊர் மக்களில் இருவர் நினைவு மண்டபம் எழுப்ப ஆறேமுக்கால் செண்ட் நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள். அதில் ஒரு நினைவுத் தூணில் உயிர்த்தியாகம் புரிந்த பதினாறு பேர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பெருங்காமநல்லூர் படுகொலையின் 100வது ஆண்டு". புதிய தலைமுறை.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "100-வது ஆண்டில் பெருங்காமநல்லூர் துப்பாக்கிச்சூடு". ஆனந்த விகடன்.
  3. Vazhum Varalaru. 2021. pp. [40].
  4. South Indian History Congress. 2002. pp. [59].
  5. Karunaikku Marupeyar Kasaap. 2021. pp. [].
  6. "மறுக்கப்படும் சமூகநீதி". தினமணி.
  7. "கள்ளர் சீரமைப்புத்துறை". மதுரை மாவட்டம்.
  8. "The pillar at Perungamanallur tells the tale of a little-known tragedy". the hindu.