திருவிதாங்கூர்
|
|||||||||||||||||||||||
திருவிதாங்கூர் என்பது, இந்தியாவின் தற்காலக் கேரள மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம் (princely state) ஆகும். திருவனந்தபுரம் இதன் தலைநகரமாக விளங்கியது. இது வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செந்நிறக் கொடியைக் கொண்டிருந்தது. திருவிதார்கூர் அரசு வேநாடு அரசினை, வாரிசு முறையில் அடைந்த ஸ்ரீ மார்த்தாண்ட வர்மா மன்னருடன் தொடங்கி, அன்னாரது ஆட்சி காலத்தில் 1729-1758, திருவிதாங்கூர் என்று விரிவடைந்த நாடு. இது, பெரும்பகுதியாகத் தென் கேரளாவையும், கன்னியாகுமரி மாவட்டத்தையும் தன்னகத்தே கொண்டு பத்மநாபபுரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தது.
1 ஜூலை 1949 இல், திருவிதாங்கூர், மலையாளம் பேசும் இன்னொரு அரசாக இருந்த கொச்சியுடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி ஆனது. பின்னர் இது மதராஸ் மாநிலத்தின், மலபார் மாவட்டம் ஆக்கப்பட்டது. 1956 நவம்பர் மாதம் முதல் தேதியன்று இது கேரளா என்னும் புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது. இச் சமஸ்தானத்தின் கடைசி அரசர் சித்திரைத் திருநாள் பாலராம வர்மர் ஆவார்.
பரசுராமர் தனது கோடரியைக் கடலுள் எறிந்தபோது கேரளா உருவானதாக மரபுவழிக் கதைகள் கூறுகின்றன. திருவிதாங்கூர் அரசர்கள், விஷ்ணுவின் ஒரு அம்சமான பத்மநாப சுவாமியின் அடியவர்கள் என்னும் பொருள்படத் தம்மைப் பத்மநாபதாசர் என அழைத்துக் கொள்கின்றனர்.
புவியியல் [தொகு]
திருவிதாங்கூர், பெரும்பாலும் தென்கேரளப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இவ்வரசின் புவியியல் மூன்று விதமாக அமைந்திருந்தது. மேற்கே கரையோரப் பகுதியையும், நடுவில் இடைநிலைப் பகுதியையும், கிழக்கில் 9,000 அடிவரை உயர்ந்த மலை உச்சிகளைக் கொண்ட பகுதியையும் இது கொண்டிருந்தது.
வரலாறு [தொகு]
இப்பகுதி சங்ககாலத்தில் ஆய் மரபினரால் ஆளப்பட்டு வந்தது. இதன்பின்னர் சோழர், பாண்டியர் ஆகியோருடன் போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. பிற்காலத்தில் இப்பகுதி வேணாடு என அழைக்கப்பட்டது. இதனை ஆண்டுவந்தவர்கள் பலம் குறைந்தவர்களாக இருந்ததால், வெளியில் நாயக்கர்களிடம் இருந்தும், உள்ளூர் தலைவர்களிடம் இருந்தும் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன.
மார்த்தாண்ட வர்மா [தொகு]
திருவிதாங்கூரின் தற்கால வரலாறு, வேணாட்டு அரச மரபில் வந்து திருவிதாங்கூர்வரை தனது நாட்டை விரிவாக்கிய மார்த்தாண்ட வர்மர் காலத்துடனேயே (1729–1758) தொடங்குகிறது. இவர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினருடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டு அவர்கள் உதவியுடன் தனக்கு எதிராகக் கிளம்பிய உள்ளூர் நிலப்பிரபுக்களான எட்டுவீட்டில் பிள்ளைமார் முதலியோரையும், மன்னர் மகாராஜ ராம வர்மரின் மக்களை ஆதரித்தவர்களையும் அடக்கினார். அடுத்தடுத்து நிகழ்ந்த போர்களில், கொச்சி வரை இருந்த அட்டிங்கல், கொல்லம், காயம்குளம், கொட்டாரக்கரை, கோட்டையம், சங்கனசேரி, மீனச்சில், அம்பலப்புழா ஆகிய அரசுகளைத் தோற்கடித்துத் தனது அரசுடன் இவர் சேர்த்துக்கொண்டார். திருவிதாங்கூர்-டச்சுப் போரில், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியை இவர் தோற்கடித்தார். இப் போரில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வு குளச்சல் போர் ஆகும். 1741 ஆகஸ்ட் 10 ஆம் நாள் இடம்பெற்ற போரில் டச்சுத் தளபதியான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் (Eustachius De Lannoy) என்பவன் பிடிபட்டான். 1750 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் நாள், தனது அரசைத் திருவனந்தபுரத்திலுள்ள இறைவன் ஸ்ரீபத்மநாபனுக்குக் காணிக்கையாக்கினார். அன்றிலிருந்து திருவாங்கூர் அரசர்கள் தங்களை இறைவன் ஸ்ரீபத்மநாபனின் அடியவர்களாகக் கொண்டு நாட்டை ஆண்டுவந்தனர். 1753 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் மன்னருடன் ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டனர். 1754 ஜனவரி 3 ஆம் நாள் அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார். 1757 இல் திருவிதாங்கூர், கொச்சி ஆகிய அரசுகளிடையே செய்யப்பட்ட ஒப்பந்தம் திருவிதாங்கூரின் வட எல்லையில் அமைதி ஏற்பட வழி வகுத்தது.
தொடர்ந்து நடைபெற்ற போர்களில் அவர், கொச்சிவரை உள்ளடக்கிய அரசுகளாம், ஆற்றின்கல், கொல்லம் காயம்குளம், கொட்டாரக்கரா மற்றும் அம்பலப்புழா ஆகியவற்றை போரில் வெற்றி கொண்டு தனது அரசுடன் சேர்த்துக் கொண்டார். 10-08-1741-ல் நடைப்பெற்ற குளச்சல் போரில், வெற்றி வாகை சூடி, டச்சு கப்பற்படைத் தலைவன் யுஸ்டாச்சின்ஸ் டிலன்னாய் என்பவரைச் சிறைப்பிடித்து, போர்க்கைதியாக்கி அவனையே பெரிய கப்பற்படைத்தலைவன் (வலிய கப்பீத்தான்) என்று நியமனமும் செய்தார். இதனால் டிலன்னாய் திருவிதாங்கூர் படையில், நவீன ஆயுதங்களைக் கையாள பயிற்சிக் கொடுத்து மேலும் வலிமையுறச்செய்தார்.
கார்த்திகைத் திருநாள் இராமவர்மா [தொகு]
ஸ்ரீ கார்த்திகைத் திருநாள் இராமவர்மா (தர்மராஜா), 1758 முதல் 1798 ஆண்டு வரை அரசாட்சி செய்தார். 1791-ஆம் ஆண்டு, மைசூர் மன்னன் திப்புசுல்தான், திருவிதாங்கூர் மீது படை எடுத்தார். திருவிதாங்கூர் படைவீரர்கள், சுல்தானின் படைபலத்தாக்குதலை ஆறு மாத காலம் எதிர் கொண்டு, அன்னாரை 2 முறை தோற்கடித்த பிறகு மகாராஜா, பிரிட்டீஷ் கிழக்கு இந்தியா கம்பெனிக்கு முறையிட்டு உதவி கோரியதால், ஆங்கிலேய திக்கத்திற்கு வழி வகுத்தது. அவர், பத்மநாபபுரத்திலிருந்த தலைநகரை, திருவனந்தபுரத்திற்கு 1795-ல் மாற்றினார்.
பாலராமவர்மா [தொகு]
1758ல், ஸ்ரீ பாலராமவர்மா அரியாசனத்தில் அமர்ந்தார்.இவரே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரை 1795'ம் ஆண்டு பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றியவர்.இவரது காலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பொற்காலம் ஆகும்.1799ம் ஆண்டு வேலுத்தம்பி திவானாக (முதல் மந்திரி) பதவி பெற்றார். 1809-ஆம் ஆண்டு, வேலுத்தம்பி மற்றும் கொச்சின் அமைச்சர் பாலியத் அச்சன், ஆங்கிலேயர்களை எதிர்த்து, புரட்சி நடத்தினர், அதில் வெற்றி கிட்டவில்லை. ஆங்கிலேயர், வேலுத்தம்பியை, நாகர்கோயில் மற்றும் கொல்லம் ஆகியவற்றில் நடந்த சண்டையில், தோற்கடித்தனர். திருவிதாங்கூரின் படையணியின் நாயர் பிரிவு, படைக்கலன்களை இழக்க நேரிட்டது. 1810-ல் மீதியிருந்த படையும், வேலுத்தம்பியின் விவேகமற்ற புரட்சிக்குப் பின்னர் திருவிதாங்கூர் சாம்ராஜ்யம் நிராயுதபாணியாக ஆக்கப்பட்டது.
இராணி கெளரி லட்சுமி பாய் [தொகு]
இராணி கெளரி லட்சுமி பாய், 1810 ல், ஆங்கிலேயரின் ஆசியுடன் அரியணையில் அமர்ந்தார், அவருக்கு ஒரு மகன் பிறக்கவே, 1813-ல் அரசராக பிரகடனப்படுத்தப்பட்டு, 1815-ல் இராணி கெளரி லட்சுமி பாய் இறந்த பின்னர், மகாராணி கெளரி பார்வதி பாய், அரசனின் இளவயது காரணமாக நாட்டினைப் பதிலிக்கு ஆள்பவர் என்ற முறையில் தொடர்ந்து ஆட்சி செய்தார்.
சுவாதி திருநாள் இராமவர்மா [தொகு]
1829-ஆம் ஆண்டு, ஸ்ரீ சுவாதி திருநாள் இராமவர்மா, அரியாணையில் அமர்ந்து 1846-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அடுத்தாற் போல், மகாராஜா உத்திராடம் திருமால் மார்த்தாண்ட வர்மா (1847-1860), 1853-ம் ஆண்டு தனது ஆட்சியில் தனது நாட்டில் அடிமைத் தனத்தை ஒழித்தார். மற்றும், சில வகுப்பு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த உடையணியும் கட்டுப்பாட்டினையும் நீக்கினார். இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ஆயில்யம் திருநாள் (1860-1880) ஆண்டு வரையும், மற்றும் ஸ்ரீ இராமவர்மா விசாகம் திருநாள் (1880-1885) ஆண்டு முடிய சிறப்பாக ஆட்சி செய்தார்.
ஸ்ரீ மூலம் திருநாள் இராமவர்மா [தொகு]
இவர் 1857 செப்டம்பர் 25'ம் தேதி சங்கனேசரி ராஜ குடும்பத்தை சேர்ந்த,ராஜ ராஜ வர்மா தம்புரான் மற்றும் மகாராணி லட்சுமி பாய் அவர்களுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.இளவயதிலேயே தாயையும் சகோதரனையும் இழந்த இவர் அன்னாஜி ராவ்(BA) மற்றும் ரகுநாத் ராவ்(BA) ஆகியோரிடம் கல்வி பயின்றார்.
ஸ்ரீ மூலம் திருநாள் ஸ்ரீ இராமவர்மா 1885-1924 வரை ஆட்சி செய்த போது, பல கல்லூரிகளும் பள்ளிக்கூடங்களும் நிறுவப்பட்டன.இவரது ஆட்சிக் காலத்தில் கல்வி,மருத்துவம்,சட்ட ஒழுங்கு ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.பெண்கள் கல்வியும் அனுமதிக்கப்பட்டது.ஆயுள் காப்பீடும் இவரது காலத்தில் கொண்டு வரப்பட்டது.இவரது சேவைகளை பாராட்டி 1898 ஆண்டு முதல் ஆங்கிலேய அரசு இவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை அளித்து கவுரப்படுத்தியது.
இவருக்கு இரு மனைவிகள் ஆவர்.முதலாமானவர் நாகர்கோயில் அம்மவீட்டைச் சேர்ந்த அனந்தலட்சுமி பிள்ளை கொச்சம்மா ஆவார்.1882'ம் ஆண்டு ஒரு மகனைப் பெற்ற பிறகு இவர் மரணம் அடைந்தார்.இரண்டாமானவர் வடசேரி அம்மவீட்டைச் சேர்ந்த கார்த்தியாயினி கொச்சம்மா ஆவார்.
மருமக்கதாய முறைப்படி இவருக்கு பெண் பிள்ளைகள் இல்லாதபடியால், மாவேலிக்கரை வீட்டைச் சேர்ந்த இரு ராஜகுமாரிகளான சேது லட்சுமி பாய் மற்றும் சேது பார்வதி பாய் ஆகிய இருவரையும் தத்தெடுத்தார்.
சேதுலட்சுமி பாய் [தொகு]
மூலம் திருநாள் இராமவர்மாவிற்கு பின்னர், சேதுலட்சுமி பாய், ரீஜெண்டாக 1924-1931 வரை, ஆட்சி செய்தார். இவர் 12.11.1936ம் நாள், இந்துக்கள் அனைவரும் கோயிலில் நுழைந்து வணங்கிட (Temple Entry Proclamation) அதிகார பூர்வமாக ஆணை பிறப்பித்தார். இதனால் கேரளாவில் இருந்த அனைத்து இந்து கோயில்களும், அதுவரை உயர்வகுப்புச் சாதி மக்களுக்கு மட்டுமே இருந்த உரிமை, இந்துக்கள் அனைவருக்குமே திறந்து விடப்பட்டன.
திவான் சர்.சி.பி. இராமசாமி அய்யர் [தொகு]
ஆங்கில அரசு, இந்தியாவிற்கு விடுதலை அளிக்க முடிவு செய்த போது, திவான் சர்.சி.பி. இராமசாமி அய்யர், திருவிதாங்கூர் ஒரு சுதந்திர நாடாகவே இருக்கும் என்று விளம்புகை செய்தார். இந்திய தேசீய காங்கிரஸ் மற்றும் திவான். சர்.சி.பி.இராமசாமி அய்யர், ஆகியோரிடையே இருந்த, கடுமையான மனத்தாக்கின் காரணமாக, நாட்டில் பலவிடங்களில் புரட்சி ஏற்படலாயிற்று. இத்தகைய புரட்சி ஒன்று. புன்னப்பரா - வயலாறு எனும் இடத்தில் 1946-ல் வெடித்தது, அதில் கம்யூனிஸ்டுகள் தமது சொந்த அரசை அந்தப்பகுதியில் ஏற்படுத்தினர். இது, திருவிதாங்கூர் படையினரால் மிருகத்தனமாக நசுக்கப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்தனர். இது, மேலும் அமைதியின்மைக்கு வழிவகுத்ததில், சர்.சி.பி. இராமசாமி அய்யரின் தவறான போக்கு என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் விளைவாக சர்.சி.பி. இராமசாமி ஐயரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவே, அதைத் தொடர்ந்து திரு. P.G.N.உன்னித்தான் திவான் (முதல் மந்திரி) ஆனார். அதன்பிறகு, மகாராஜா. இந்தியாவுடன் சேர்ந்து கொள்ள இணக்கம் தெரிவிக்கவே, திருவிதாங்கூர், இந்திய யூனியனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
சித்திரை திருநாள் பலராம வர்மா [தொகு]
1949, ஜூலை 1-ஆம் நாள், திருவிதாங்கூர் - கொச்சி மாநிலம் ஏற்படுத்தப்பட்டு திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா புதிய மாநிலத்தின் "இராஜப்பிரமுக்", பதவி ஏற்றார். அப்போது "திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்" குமரித்தந்தை திரு. மார்ஷல் நேசமணி என்பவரால், உருவாக்கப்பெற்று, அவர்தம் தலைமையில், தென் திருவிதாங்கூர் தமிழ் பேசும் பகுதி, அருகிலுள்ள சென்னை மாநிலத்தோடு இணைந்திட இயக்கம் நடைபெற்றது. இந்தப்போராட்டம், வன்முறைக் கலவரமாக மாறிடவே, காவலர்கள் மற்றும் பல உள்ளூர் மக்கள், மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை ஆகிய இடங்களில், கலவரத்தின் போது கொல்லப்பட்டனர்.மாநில மறுமுறை திருத்தி அமைத்தல் சட்டம், (State Re-organisation Act of 1956) கீழ், திருவிதாங்கூரின் நான்கு தாலுகா பகுதிகளாம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு மற்றும் செங்கோட்டையின் ஒருபகுதி, சென்னை மாநிலத்தோடு இணைக்கப்பட்டது. 1971, ஜூலை 31, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 26-வது திருத்தத்தின்படி மகாராஜாவிற்கிருந்த, மன்னர் மானியம் (தகுதி மற்றும் சலுகைகள்) பறிக்கப்பட்டு விட்டது. இம்மன்னர் 1991-ஜூலை 19-ஆம் நாள் காலமானார்.
உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா [தொகு]
ஸ்ரீ உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, இப்போது உள்ள திருவிதாங்கூர் மகாராஜா ஆவார்.1991-ஆம் ஆண்டிலிருந்து இவர் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தலைவருமாவர், இவர் இரண்டு வயதிலேயே இளையராஜாவாக, திருவிதாங்கூர் வாரிசுச்சட்டத்தின்படி அறிவிக்கப்பட்டார்.