பாண்டிய நாட்டின் மீது மாலிக் கபூரின் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Map
Delhi and Madurai in present-day India

1310-1311 காலப்பகுதியில், தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளர் அலாவுதீன் கில்சி தன் தலைமைப் படைத்தலைவர் மாலிக் கபூர் தலைமையிலான படைகளை இந்திய துணைக்கண்டத்தின் தெற்கே உள்ள நாடுகளைக் கைப்பற்ற அனுப்பினார். போசளர்களை அடிமைப்படுத்திய பின்னர், மாலிக் கபூர் இன்றைய தமிழ்நாட்டின் பாண்டிய நாட்டின் (முஸ்லீம் காலக்கோவைகளில் மபார் என்று அழைக்கப்படுகிறது) மீது படையெடுத்தார். இதற்கு பாண்டிய சகோதரர்களான வீரபாண்டியன் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோருக்கு இடையிலான தொடர்ச்சியான போரைப் பயன்படுத்திக் கொண்டார். 1311 மார்ச்-ஏப்ரல் காலக்கட்டத்தில், பாண்டிய நாட்டில் அவர்களின் தலைநகர் மதுரை உட்பட பல இடங்களில் திடீர்த்தாக்குதல் நடத்தினார். தில்லி சுல்தானகத்துக்கு அடங்கிய ஆட்சியாளராக பாண்டிய மன்னரை அவரால் செய்ய முடியவில்லை, ஆனால் தமிழ்நாட்டில் இருந்து யானைகள், குதிரைகள், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் உட்பட பெரிய கொள்ளை பொருட்களைப் பெற்றார்.

பின்னணி[தொகு]

1310 வாக்கில், தில்லி சுல்தானகத்தின் அலாவுதீன் கில்சி தென்னிந்தியாவில் தக்காணப் பகுதியின் யாதவர் மற்றும் காக்கத்தியர் போன்ற ஆட்சியாளர்களை தனது பேரரசுக்கு அடங்கிய அரசுகளாக்க கட்டாயப்படுத்தினார். 1310 காக்கத்தியர்களுக்கு எதிரான வாரங்கல் முற்றுகையின் போது, அலாவுதீனின் தளபதியான மாலிக் கபூர், யாதவர் மற்றும் காக்கத்தியரின் நாடுகளுக்கு தெற்கே உள்ள பகுதியும் மிகவும் செல்வவளம் கொண்டவை என்பதை அறிந்தார். தில்லிக்குத் திரும்பிய பிறகு, காஃபூர் இது குறித்து அலாவுதீனிடம் கூறினார், மேலும் இந்தியாவின் தென்பகுதிக்கு ஒரு பயணத்தை மேற்கொள்ள அனுமதி பெற்றார். [1]

1311 இன் துவக்கத்தில், மாலிக் கஃபூர் ஒரு பெரிய இராணுவத்துடன் தக்காணத்தை அடைந்தார். பிப்ரவரியில், அவர் 10,000 வீரர்களுடன் போசளர்களின் தலைநகரான துவாரசாமுத்திரத்தை முற்றுகையிட்டார், மேலும் போசள மன்னர் வல்லாளரை தில்லி சுல்தானகத்தின் மேலாட்சியை ஏற்கும்படி கட்டாயப்படுத்தினார். அவர் 12 நாட்கள் துவாரசாமுத்ரத்தில் தங்கியிருந்தார், மீதமுள்ள இராணுவமும் துவாரசமுத்ரத்துக்கு வரும் வரை காத்திருந்தார். [2]

இந்த நேரத்தில், போசள நாட்டின் தெற்கே அமைந்துள்ள பாண்டிய நாடு அரசியல் கொந்தளிப்பில் இருந்தது. மன்னர் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் இறந்த பிறகு, அவரது மகன்களான வீரபாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் ஆகியோர் அரியணைக்காக அடுத்தடுத்து போரில் ஈடுபட்டனர். [3] பிற்கால வரலாற்றாசிரியர்கள் கூற்றின்படி சுந்தரபாண்டியன் மாலிக் கஃபூரின் உதவியை நாடினார், இது தில்லி படைகள் பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க வழிவகுத்தது. இருப்பினும், சமகால எழுத்தாளரான அமீர் குஸ்ராவின் எழுத்துக்கள் இந்த கூற்றில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன: குஸ்ராவின் குறிப்பில், மாலிக் கஃபூர் அவர்கள் இருவரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் திடீர்த்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகிறது. [2]

குஸ்ராவ் சுந்தர பாண்டியனை ஒரு பிராமணர் என்று வர்ணிக்கிறார், அவர் இந்து மன்னர்களிடையே ஒரு "முத்து" போன்றவர். நிலம் மற்றும் கடல் போன்றவற்றை ஆண்ட சுந்தரபாண்டியனுக்கு பெரிய இராணுவமும் பல கப்பல்களும் இருந்தன என்று அவர் கூறுகிறார். [4]

பாண்டிய நாட்டுக்கு அணிவகுப்பு[தொகு]

மாலிக் கஃபூர் 1311 மார்ச் 10 அன்று துவாரசமுத்ரத்திலிருந்து பாண்டிய நாட்டை நோக்கி (முஸ்லீம் காலக்கோவைகளில் மபார் என்று அழைக்கப்படுகிறது) தனது பயணத்தைத் தொடங்கினார். அதன்பிறகு ஐந்து நாட்களுக்குப் பிறகு பாண்டிய நாட்டு எல்லையை அடைந்தார். [2] தில்லி அரசவையைச் சேர்ந்த அமீர் குஸ்ராவ் என்பவர் குறிப்பிடுகையில், இந்த படை நடத்திய போது, தில்லி இராணுவம் கடுமையான நிலப்பரப்பைக் கண்டது, அங்கு கூர்மையான கற்கள் குதிரை குளம்புகளைக் கிழித்தன, மேலும் வீரர்கள் இரவில் "ஒட்டகத்தின் முதுகைவிட சீரற்ற" தரையில் படுத்துறங்க வேண்டியிருந்தது. [5]

14 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் இசாமியின் கூற்றுப்படி, தோற்கடிக்கப்பட்ட போசள மன்னர் வல்லாலார் பாண்டிய நாட்டை சூறையாடியபோது தில்லி இராணுவத்திற்கு வழிகாட்டினார். [5] இருப்பினும், வரலாற்றாசிரியர் பனார்சி பிரசாத் சக்ஸேனா இந்த கூற்றை சந்தேகிக்கிறார், ஏனெனில் இது குஸ்ராவின் சமகால எழுத்துக்களில் இல்லை. [2]

பாண்டிய நாட்டை ஆராய தில்லி இராணுவம் ஒரு உளவுப் பிரிவை நம்பியிருந்தது என்று இசாமி கூறுகிறார். இந்த பிரிவில் பஹ்ரம் காரா, கட்லா நிஹாங், மஹ்மூத் சர்திஹா மற்றும் அபாச்சி போன்ற முன்னணி தளபதிகள் இருந்தனர். ஒவ்வொரு நாளும், இந்த தளபதிகளில் ஒருவர், பாண்டிய நாட்டின் ஒரு பகுதியைப் உளவு பிரிவுடன் பார்வையிட உள்ளூர் மொழியை அறிந்த ஒரு சிலரின் ஆதரவுடன் சென்றனர். ஒரு நாள், மங்கோலிய தளபதியாக இருந்த அபாச்சி, பாண்டிய படையில் சேர முடிவு செய்தார், மேலும் கஃபூரைக் கொல்ல நினைத்தார். அவரை பாண்டிய மன்னரிடம் அழைத்துச் செல்வதாக உறுதியளித்த சிலருடன் அவர் தொடர்பு கொண்டார். [5] பாண்டிய மன்னரின் அரண்மனையை நோக்கி அணிவகுத்துச் செல்லும்போது, அவரது குழுவினர் பாண்டிய படைகளுடன் மோதலில் ஈடுபட்டனர். [6] தனது நோக்கத்தை பாண்டிய படைகளிடம் தெரிவிக்கும்படி அபாச்சி தனது மொழிபெயர்ப்பாளரிடம் கேட்டார், ஆனால் பாண்டிய படை திடீரென அவர்களைத் தாக்கியது. அப்போது மொழிபெயர்ப்பாளர் ஒரு அம்பு தாக்குதலால் கொல்லப்பட்டார். [7] அபாச்சி பின்வாங்கி மீண்டும் மாலிக் கஃபூருடன் சேர வேண்டியிருந்தது. அபாச்சியின் நடவடிக்கைகள் குறித்து மாலிக் கஃபூருக்குத் தெரிந்ததும், அவர் அபாச்சியை சிறையில் அடைத்தார். [6] பின்னர், அலாவுதீன் அபாச்சியை தில்லியில் தூக்கிலிட்டார், இது மங்கோலிய பிரபுக்களை அவருக்கு எதிராக சதி செய்ய தூண்டியது, இறுதியில் இது 1311 ஆண்டைய மங்கோலியர் படுகொலைக்கு வழிவகுத்தது. [8]

பாண்டிய நாடு உயரமான மலையால் அரண்செய்யப்பட்டதாக குஸ்ராவ் கூறுகிறார், ஆனால் மலையின் இருபுறமும் இரண்டு கணவாய்கள் இருந்தன. இந்த கணவாய்களை தர்மலி மற்றும் தபார் என்று குறிப்பிடுகிறார். இவை தாரமங்கலம் மற்றும் தொப்பூர் என அடையாளம் காணலாம். தில்லி இராணுவம் இந்த கணவாய்கள் வழியாக அணிவகுத்து, பின்னர் ஒரு ஆற்றின் கரையில் முகாமிட்டன (அநேகமாக காவேரி ). அடுத்து, படையெடுப்பாளர்கள் ஒரு கோட்டையைக் கைப்பற்றினர், அதை குஸ்ராவ் "மார்டி" என்று அழைக்கிறார். பனார்சி பிரசாத் சக்ஸேனாவின் கூற்றுப்படி, கோட்டையின் பாதுகாவலர்களைக் குறிக்க, குஸ்ராவ் "மார்டி" ஐ "நமார்டி" ( பாரசீக "வலுவின்மை") க்குப் பயன்படுத்துகிறார். [4] தில்லி இராணுவம் மார்டி மக்களை படுகொலை செய்தது. [9]

தாக்குதல்கள்[தொகு]

Map
Possible locations of the places visited by Malik Kafur's army

பர்துல்[தொகு]

அடுத்து, மாலிக் கஃபூர், வீர பாண்டியானின் தலைமையகத்திற்கு அணிவகுத்தார். இந்த தலைமையகமானது அமீர் குஸ்ராவால் "பேர்துல்" என்று அழைக்கப்பட்டது. இது குர்திஷ் எழுத்தாளர் அபுல்-ஃபிதாவின் புத்தகமான தக்வாம் அல்-புல்டினில் (1321) குறிப்பிடப்படும் ம'பார் நாட்டின் (பாண்டிய பிரதேசம்) தலைநகராக குறிப்பிடப்படும் "பர்தாவல்" என்பதை ஒத்து உள்ளது. பிரிட்டிஷ் அறிஞர் ஏ. பர்னெல் பர்துலை விருத்தாச்சலம் என்று அடையாளம் காட்டினார். [6] "பிர்-தோல்" (அல்லது "விர-சோழன்") என்று பெயரை மொழிபெயர்க்கும் முகமது ஹபீப் மற்றும் பனார்சி பிரசாத் சக்ஸேனா ஆகியோரின் கூற்றுப்படி, இந்த சொல் வீர பாண்டியனின் தலைநகரைக் குறிக்க குஸ்ராவ் கண்டுபிடித்த பேச்சின் உருவமாக இருக்கலாம். [10] இது "பிர்" (வீர) மற்றும் "தோல்" (டிரம்) ஆகிய சொற்களிலிருந்து பெறப்படலாம், இதனால் இது "வீர பாண்டியானின் டிரம் (தலைநகரம்)" க்கு சமம். [2]   மாலிக் கஃபூர் நகருக்குள் நுழைந்ததை விவரிக்கும் போது, குசுராவ் "பிர் (வீர) தப்பி ஓடிவிட்டார், மற்றும் தோல் (டிரம்) காலியாக இருந்தது" என்று கூறுகிறார். [10]

இரு சகோதரர்களுக்கிடையேயான போர் காரணமாக, பாண்டிய படைகள் அதிக எதிர்ப்பை காட்டக்கூடிய நிலையில் இல்லை. வீர பாண்டியன் முதலில் ஒரு தீவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் சில காரணங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அதற்கு பதிலாக, அவர் முதலில் கபம் என்ற நகரத்திற்கு படைகளுடன் சென்றார். அது எந்த நகரம் என்பது அடையாளம் காண இயலவில்லை. அவர் கபாமில் இருந்து வீரர்களையும் செல்வத்தையும் திரட்டினார், பின்னர் கந்தூருக்கு தப்பினார் [10] (இது கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள கண்ணனூர் என அடையாளம் காணப்பட்டது). [11]

பர்துலில், தில்லி இராணுவம் பாண்டிய படையில் சுமார் 20,000 முஸ்லிம் படையினரைக் கண்டது. இந்த வீரர்கள் பாண்டியர்களை விட்டு வெளியேறி, தில்லி இராணுவத்தில் சேர்ந்தனர். [6] விசுவாசதுரோகிகளாக இருப்பதற்காக அவர்களைக் கொல்வதற்கு பதிலாக, தில்லி தளபதிகள் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடிவு செய்தனர். [10]

முசுலீம் வீரர்களின் உதவியுடன், தில்லி இராணுவமானது தப்பிச் சென்ற வீர பாண்டியனை பின் தொடர முயன்றது, ஆனால் அதிக மழை பெய்ததால் அவர்கள் பின்வாங்க வேண்டியிருந்தது. [12] குஸ்ராவின் கூற்றுப்படி, கிராமப்புறங்கள் வெள்ளத்தில் மிகவும் மூழ்கியிருந்தன, "கிணற்றையும் சாலையையும் வேறுபடுத்தி பார்க்க இயலாதவாறு" வெள்ளம் சூழ்ந்திருந்தது. தில்லி இராணுவத்தின் பெரும்பகுதி பர்தூலில் முகாமிட்டது, அதே நேரத்தில் ஒரு படையணி வீர பாண்டியனைத் தேடிச் சென்றது. நள்ளிரவில், வீர பாண்டியன் கண்ணனூரில் இருப்பதாக செய்தி வந்து சேர்ந்தது. [10]

கண்ணணூர்[தொகு]

தில்லி இராணுவம் கன மழையில் கண்ணனூரை நோக்கி அணிவகுத்துச் சென்றது, ஆனால் இந்த நேரத்தில், வீர பாண்டியன் தனது சில ஆதரவாளர்களுடன் ஒரு காட்டுக்கு தப்பிச் சென்றார். மழை நின்றபோது, முத்துக்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் போன்றவை ஏற்றப்பட்ட 108 யானைகளை படையெடுப்பாளர்கள் கைப்பற்றினர். [4] கண்ணண்ணூரில் வசிப்பவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். [9]

தில்லி தளபதிகள் வீர பாண்டியனைக் கண்டுபிடிக்க விரும்பினர், மேலும் அவரை தில்லி சுல்தானகத்தின் மேலாட்சியை ஏற்று கப்பம் செலுத்தும் அரசாக மாறும்படி கட்டாயப்படுத்த விரும்பினர். வீர பாண்டியன் தனது மூதாதையர்களின் ஜல-கோட்டைக்கு ( திவுகோட்டையுடன் அடையாளம் காணப்பட்ட "நீர் கோட்டை") தப்பிச் சென்றதாக அவர்கள் சந்தேகித்தனர். அவர்கள் ஜல-கோட்டையை நோக்கி அணிவகுக்கத் தொடங்கினர், ஆனால் அந்த இடத்திலிருந்து வரும் மக்கள் அவர் அங்கு இல்லை என்று அவர்களுக்குத் தெரிவித்தனர். இறுதியில், தில்லி தளபதிகள் வீர பாண்டியனைக் கண்டுபிடிப்பதில் நம்பிக்கையற்று அது கடினமான பணி என்று முடிவு செய்து, கண்ணனூருக்குத் திரும்ப முடிவு செய்தனர். [11]

பர்மத்புரி[தொகு]

குஸ்ராவின் கூற்றுப்படி, மறுநாள் காலையில், பர்மத்புரி நகரத்தில் ஒரு தங்கக் கோயில் இருப்பதை தில்லி இராணுவம் அறிந்திருந்தது, அதைச் சுற்றி பல அரச யானைகள் சுற்றித் திரிகின்றன என்றும் அறிந்தது. சா. கிருஷ்ணசுவாமி ஐயங்கார் பர்மத்புரியை "பிரம்மபுரி" ( சிதம்பரம் ) என்று அடையாளம் காணுகின்றார், அந்த நடராசர் கோயிலில் கூரையானது தங்கத்தால் வேயப்பட்டு இருந்தது. [11]

தில்லி இராணுவம் நள்ளிரவில் பர்மத்புரியை அடைந்தது, மறுநாள் காலையில் 250 யானைகளை கைப்பற்றியது. படையெடுப்பாளர்கள் பின்னர் தங்கக் கோயிலைக் கொள்ளையடித்தனர், அதன் கூரை மற்றும் சுவர்கள் மாணிக்கங்கள் மற்றும் வைரங்களால் பதிக்கப்பட்டிருந்தன. [11] அவர்கள் அனைவரும் சிவ லிங்கங்களை (குஸ்ராவ் மூலம் "லிங்-இ-மஹாதியோ" என்று அழைக்கிறார்) அழித்து மற்றும் நாராயண (விஷ்ணு) சிலையை வீழ்த்தினர். [13] ஒரு காலத்தில் கஸ்தூரி வாசனை இருந்த தரையில் இப்போது துர்நாற்றம் வீசுகிறது என்று குஸ்ராவ் குறிப்பிடுகிறார். [11]

மதுரை[தொகு]

பர்மபுரியிலிருந்து, தில்லி இராணுவம் 1311 ஏப்ரல் 3 ஆம் தேதி பர்துலில் உள்ள தனது முகாமுக்கு திரும்பிச் சென்றது. [11] அங்கு, படையெடுப்பாளர்கள் வீர பாண்டியனின் கோவிலை அழித்தனர். பின்னர் தில்லி படைகள் 1311 ஏப்ரல் 7 அன்று கனும் (கடம்பவனத்துடன் அடையாளம் காணப்படுகிறது) வந்தன. 5 நாட்களுக்குப் பிறகு, அவர்கள் சுந்தர பாண்டியனின் தலைநகரான மதுரையை (குஸ்ராவால் "மதுரா" என்று அழைக்கப்பட்டது) அடைந்தனர். [14]

இந்த நேரத்தில், சுந்தர பாண்டியன் ஏற்கனவே தனது ராணிகளுடன் நகரத்தை விட்டு வெளியேறிவிட்டார். தில்லி இராணுவம் முதலில் "ஜக்னர்" கோயிலுக்கு யானைகளையும் புதையல்களையும் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் சென்றது. (எச். எம். எலியட் "ஜக்னரை" "ஜகந்நாதர்" என்று மொழிபெயர்த்தார், ஆனால் வரலாற்றாசிரியர் சா. கிருஷ்ணசுவாமி ஐயங்கார் "ஜக்னரை" "சொக்கநாதர்" என்று அடையாளப்படுத்துகிறார், இது மதுரையின் காவல் தெய்வமான சிவனின் ஒரு அம்சமாகும்.)   கோயிலில் 2-3 யானைகள் மட்டுமே எஞ்சியிருப்பதைக் கண்டு மாலிக் கஃபூர் ஏமாற்றமடைந்தார். இதனால் அவர் மிகவும் கோபமடைந்து, கோவிலுக்கு தீ வைத்தார். [14] [9]

இராமேஸ்வரம்[தொகு]

16 -17 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியரான ஃபிரிஷ்டாவின் கூற்றுப்படி, மாலிக் கஃபூர் மஸ்ஜித்-இ-அலாய் ("அலாவுதீனின் மசூதி") என்ற மசூதியைக் கட்டினார், இது ஃபிரிஷ்டாவின் காலத்திலும் "சிட் பேண்ட் ரமிசார்" என்ற இடத்தில் காணக்கூடியதாக இருந்தது. இந்த இடம் " சேதுபந்த இராமேசுவரம் " என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது மாலிக் கபூர் ராமேஸ்வரத்தின்மீது தாக்குதல் நடத்தியதற்கான ஊகத்தை அளிப்பதாக உள்ளது. இருப்பினும், இந்த அடையாளம் சந்தேகத்திற்குரியது, ஏனெனில் ஃபிரிஷ்டா இந்த மசூதியை "கார்னாடக" நாட்டில் "துர் சமந்தர்" துறைமுகத்தில் "உம்மம் கடல்" கரையில் இருந்ததாக குறிப்பிடுவார், மேலும் காஃபர் உள்ளூர் ஆட்சியாளர் பிகாலை அடிபணியச் செய்த பின்னர் இது கட்டப்பட்டதாகக் கூறுகிறது. "உம்மம் கடல்" ( ஓமான் கடல்) என்பது அரேபிக் கடலைக் குறிக்கிறது, எனவே, மசூதி இந்த கடலில் ஒரு துறைமுகத்தில், போசள இராச்சியத்தில் அமைந்திருக்க வேண்டும், அதன் தலைநகரம் துவாரசமுத்ரா ("துர் சமந்தர்") - இது தற்கால கருநாடகம் ஆகும். எனவே, "சிட் பேண்ட் ரமிசார்" ராமேஸ்வரத்தை குறிக்கவில்லை. [15]

அமீர் குஸ்ராவ் அல்லது ஜியாவுதீன் பரானி ஆகியோரின் எழுத்துக்களில் ராமேஸ்வரம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை, மற்றும் ஃபிரிஷ்டாவின் குறிப்பு குழப்பத்தின் விளைவாக இருக்கலாம். [15] மாலிக் கஃபூர் உண்மையில் ராமேஸ்வரத்தில் ஒரு மசூதியைக் கட்டியிருந்தால், அலாவுதீனின் அவை உறுப்பினரான குஸ்ராவ் அத்தகைய சாதனையைப் பற்றி குறிப்பிடத் தவறியிருக்க மாட்டார். ஃபிரிஷ்டாவின் வாழ்நாளில் ராமேஸ்வரத்தில் ஒரு மசூதி இருந்திருந்தால், அது கில்ஜி காலத்திற்குப் பிறகு கட்டப்பட்டிருக்க வேண்டும். [14]

ராமேஸ்வரத்துடன் ஃபிரிஷ்டாவின் "சிட் பேண்ட் ரமிசார்" அடையாளம் காணப்படுவது சந்தேகத்திற்குரியது என்றாலும், மாலிக் காபூரின் படைகள் மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அணிவகுத்துச் சென்றது சாத்தியமில்லை. காரணம் அவை அதிகம் எதிர்பார்த்து தேடியவை யானைகளையும் பாண்டிய செல்வத்தையுமே ஆகும். அமீர் குஸ்ராவின் ஆஷிகாவின் கூற்றுப்படி, "பாண்டிய குரு" என்ற ஆட்சியாளருக்கு எதிரான போர்த் தொடர்களின் போது, கல்ஜி படைகள் "லங்கா கடலின் கரையோரங்கள்" வரை சென்றன. இந்த ஆட்சியாளரின் தலைநகரம் "ஃபதன்" என்று அழைக்கப்பட்டது, மேலும் ஒரு சிலை உள்ள கோவில் இருந்தது. "ஃபதன்" என்பது ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள " பெரியபட்டினம் ", என்ற ஒரு இடத்தின் பெயராக இருக்கலாம். [15]

தில்லிக்குத் திரும்புதல்[தொகு]

பெயர் அறியப்படாத ஒரு எழுத்தாளர் எழுதிய 14 ஆம் நூற்றாண்டு சமஸ்கிருத நூலான லிலாதிலகம் என்ற நூலில், விக்ரம பாண்டியன் என்ற தளபதி முஸ்லிம்களை தோற்கடித்ததாகக் கூறுகிறார். இதன் அடிப்படையில், சில வரலாற்றாசிரியர்கள் வீர பாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியனின் உறவினரான விக்ரம பாண்டியன் மாலிக் கபூரின் இராணுவத்தை தோற்கடித்ததாக நம்புகிறார்கள். இருப்பினும், இந்த விக்ரம பாண்டியனை மாறவர்மன் குலசேகரனின் சகோதரர் என்று அடையாளம் காண்பது வரலாற்று ஆதாரங்களில் முரண்படுகிறது. லிலாதிலக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விக்ரம பாண்டியன் 1365-70 காலப்பகுதியில் இருந்த ஒரு இளவரசன் என்றும் அவர் மற்றொரு முஸ்லீம் இராணுவத்தை தோற்கடித்ததாகத் தெரிகிறது; 1401 இல் அவர் பாண்டிய சிம்மாசனத்தில் ஏறினார். [16]

1311 ஏப்ரலின் பிற்பகுதியில், தில்லி படைகளின் நடவடிக்கைகளுக்கு மழை தடையாக இருந்தது, மேலும் தங்களுக்கு எதிராக ஒரு பெரிய இராணுவத்தை ஒன்று திரட்டப்படுவதாக தளபதிகளுக்கு செய்தி கிடைத்தது. [17] போசள மற்றும் பாண்டிய நாடுகளிகளிலிருந்து ஏற்கனவே ஏராளமான செல்வங்களைச் சேகரித்த கபூர், பாண்டிய மன்னரைப் பின்தொடர்வது பயனற்றது என்று தீர்மானித்தார். எனவே, அவர் தில்லிக்கு திரும்ப முடிவு செய்தார். [18] போசளர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிரான தெற்கு போர்த் தொடர்களின் முடிவில் தில்லி இராணுவம் 512 யானைகள், 5,000 குதிரைகள் மற்றும் 500 மணங்கு தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற கற்களை கைப்பற்றியதாக அலாவுதீன் கல்ஜியின் அரசவை உறுப்பினரும், வரலாற்றாசிரியருமான அமீர் குஸ்ராவ் தெரிவித்துள்ளார். [14] பிற்கால எழுத்தாளர் சியாவுதீன் பரானி ( துக்ளக் காலத்தில் எழுதிய ஒரு நம்பகத்தன்மை குறைந்த எழுத்தாளர்) எழுதிய மிகைப்படுத்தப்பட்ட கணக்கின் படி, கொள்ளையானது 612 யானைகள், 20,000 குதிரைகள்; மற்றும் 96,000 மேன்ஸ் தங்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த செல்வத்தை கைப்பற்றியதானது தில்லியை முஸ்லீம் கைப்பற்றியதிலிருந்து மிகப் பெரியது என்று பரணி விவரிக்கிறார். [19]

1311 ஏப்ரல் 25 அன்று இராணுவம் திரும்பிச் செல்லும் பயணத்தைத் தொடங்கியது. தில்லியில், அலாவுதீன் 1311 அக்டோபர் 19 அன்று சிறீயில் அரசவையை (தர்பார்) நடத்தினார், மாலிக் கபூர் மற்றும் இராணுவத்தின் பிற அதிகாரிகளை வரவேற்றார். [14] அவர் தனது பல பிரபுக்களுக்கும் அமீர்களுக்கும் 0.5 முதல் 4 மேன்ஸ் தங்கத்தை வழங்கினார் . [19]

பின்விளைவு[தொகு]

கஃபூர் வெளியேறிய பிறகு, பாண்டிய சகோதரர்கள் தங்கள் மோதலை மீண்டும் தொடங்கினர். இந்த மோதலின் விளைவாக அலாவுதீனின் உதவியை நாட முடிவு செய்த சுந்தர பாண்டியன் தோல்வியடைந்தார். அலாவுதீனின் படைகளின் உதவியுடன், 1314 வாக்கில் அவர் தென் ஆர்காடு பிராந்தியத்தில் தனது ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முடிந்தது. பின்னர், அலாவுதீனின் மகன் குத்புத் தின் முபாரக் ஷாவின் ஆட்சியின் போது, தில்லி தளபதி குஸ்ரோ கான் பாண்டிய பிரதேசங்களின்மீது திடீர் தாக்குதலை நடத்தினார். பாண்டிய நாட்டின் வடக்கு பகுதி அடுத்த இரண்டு தசாப்தங்களில் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது: இது முதலில் துக்ளக் வம்சத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, பின்னர் குறுகிய காலம் மதுரை சுல்தானகத்தின் ஒரு பகுதியாக மாறியது. இருப்பினும், பாண்டிய நாட்டின் தெற்கு பகுதி சுதந்திர நாடாக இருந்தது. [17]

குறிப்புகள்[தொகு]