சௌராட்டிர மொழி
| சௌராட்டிரா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | தமிழ் நாடு | |
| பேசுபவர்கள்: | 310,000 (1997) | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இந்திய-ஈரானியம் இந்திய-ஆரியம் நடு வலய இந்திய-ஆரியம் குஜராத்தி சௌராட்டிரா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | saz | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
சௌராட்டிர மொழி தமிழ் நாட்டின் சில பகுதிகளிற் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இதனைப் பேசுவோர் சௌராட்டிரர் எனப்படுகின்றனர். தமிழில் இவர்கள் பட்டுநூல்காரர் எனவும் அழைக்கப்படுவது உண்டு. எத்னோலாக் அறிக்கையின்படி இம்மொழி பேசுவோர் 510,000 இருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், எத்னோலாக் அறிக்கையின்படி இது 310,000 (1997) ஆகும்.
பொருளடக்கம் |
வகைப்பாடு [தொகு]
சௌராஷ்டிர மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்பமான இந்திய-ஈரானியக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரியப் பிரிவைச் சேர்ந்தது. இது இப் பிரிவில் உள்ள மேற்கு இந்திய-ஆரிய மொழிக் குழுவில் உள்ள குஜராத்தி மொழிகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆயினும் குஜராதி மொழிக்கு முன் இருந்த நிலையில் சௌராட்டிரா மொழி பேசப் படுவதால் தனி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வுள்ளது.
புவியியற் பரம்பல் [தொகு]
இவர்கள் தமிழ் நாட்டின் கோயில் நகரம் எனப்படும் மதுரையில் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நகரில் இச்சமுதாயத்தினரின் மக்கள்தொகை 20 - 25% வரை வசிக்கிறார்கள் . அத்துடன் இவர்கள் தமிழ் நாட்டில், திண்டுக்கல், பரமக்குடி, ஈரோடு, பழநி, காஞ்சிபுரம், ராஜபாளையம், நிலக்கோட்டை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், அய்யம்பேட்டை, அம்மாப்பேட்டை, தாராசுரம், திருபுவனம்,[சிதம்பரம்], [புவனகிரி] அம்மையப்பன், வாலாஜா, திருவண்ணாமலை, வீரவநல்லூர், திருநெல்வேலி, நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு ஆகிய பகுதிகளிலும் வாழ்கிறார்கள். இவை தவிர ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதியிலும் இவர்கள் உள்ளனர். இவர்கள் சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களிலும் தற்போது குறைந்த அளவில் காணப்படினும், இது அண்மைக் காலங்களில் ஏற்பட்ட சிறிய அளவிலான இடப்பெயர்வுகளினால் ஏற்பட்டது ஆகும்.
வரலாறு [தொகு]
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இம் மொழி பேசுவோர் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரப் பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லாவிட்டாலும், மரபுவழித் தகவல்களும், தற்கால மொழியியல் ஆய்வுகளும் இதனை ஓரளவுக்கு உறுதி செய்கின்றன. எனினும் இம் மொழி தற்காலக் குஜராத்தி மொழியைவிட மராத்தி, கொங்கணி போன்ற மேற்கு இந்திய மொழிகளுடனேயே கூடிய ஒப்புமை உடையதாகக் காணப்படுகிறது. இதற்கான காரணத்தை மொழியியலாளர்கள் ஓரளவுக்கு விளக்கியுள்ளனர்.
குஜராத்தியும், சௌராஷ்டிர மொழியும் ஒரு பொது மொழியிலிருந்து தோன்றியவை. பின்னர் சௌராஷ்டிர மொழி பேசுவோர் குஜராத்திலிருந்து இடம் பெயர இரண்டு மொழிகளும் தனித்தனியாக வளர்ந்தன. குஜராத்தி, ஹிந்தி, பாரசீகம், அரபி மொழிகளின் தாக்கங்களுக்கு உட்பட்டது. ஆனால் சௌராஷ்டிர மொழி, மேற் சொன்ன தாக்கங்கள் ஏற்படுவதற்கு முன்னரே குஜராத்தை விட்டு நீங்கியதனால் இத் தாக்கங்கள் அதனைப் பாதிக்கவில்லை. சமசுகிருதம் பேசுவது போன்ற ஒலி வடிவினை சௌரஷ்ட்ரீ மொழி பெற்று உள்ளது.[மேற்கோள் தேவை] எனினும் இம்மொழி பேசுவோரின் படிப்படியான இடப் பெயர்வு வேறு பல மொழிகளின் தொடர்புகளை அதற்கு ஏற்படுத்தியது. மராத்தி, தமிழ், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகள் சௌராட்டிர மொழியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
லண்டன் இந்தியா ஆபீஸ் நூலகர் டாக்டர் எச்.என்.ரேண்டேல் (Dr.H.N.Randle), என்பவர் இம்மொழியை ஆராய்ந்து இது குஜராதி மொழியின் வட்டார வழக்கு என்று கூற முடியாது என்று தனது கட்டுரையில் கூறியுள்ளார்.[1]
இந்திய அரசு தனது ஜனத்தொகை 1961 அறிக்கையில் ஸௌராஷ்ட்ர மொழியை குஜராதியின் கிளை மொழியாக காண்பித்துள்ளது. மேலும் இது சம்பந்தமாக் மேலும் ஆய்வை மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளது. அதன் பின்பு 1971 ஜனத்தொகை அறிக்கையில் அகில இந்திய அளவில் 68-வது நிலையில் (Rank) ஸௌராஷ்ட்ர மொழியை தனி மொழியாக காட்டப் பட்டுள்ளது. ஆனால் 1991 மற்றும் 2001 ஆண்டு அறிக்கைகளில் ஸௌராஷ்ட்ர மொழியை குஜராதின் வட்டார வழக்கு மொழியாக காண்பித்து விட்டு, தமிழ்நாட்டில் குஜராதி மொழி பேசுவோரின் எண்ணிக்கையில் சேர்த்துவிட்டு ஸௌராஷ்ட்ரர்கள் எல்லோரும் குஜராதிகள் என்று கூறியுள்ளது.
எழுத்து வடிவம் [தொகு]
பல நூற்றாண்டுகளாக இம் மொழிக்குத் தனியான எழுத்து வடிவம் இருந்து வந்ததுடன், இம் மொழியில் பல இலக்கியங்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலையில் சில அண்மைக்கால இலக்கியங்களைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. இம் மொழி பாடசாலைகளில் கற்பிக்கப்படாததால், இது ஒரு பேச்சு மொழியாக மட்டுமே இருந்து வருகிறது. அண்மையில் இந்திய மொழிகளுக்கான மத்திய அரசு நிறுவம் மைசூர் - தேவநகரி எழுத்துக்களை சௌராட்டிரா மொழிக்கு பயன்படுத்த வரை முறைகளை வுருவாக்கி வெளியிட்டுள்ளது.[மேற்கோள் தேவை] அதன் படி உயிர் எழுத்தில் இரு குறில் எழுத்துக்கள் சேர்க்கப்பட்ள்ளது. மெய் எழுத்தில் நான்கு சௌராட்டிரா மொழிக்கே உரிய எழுத்துருக்கள் சேர்க்கப்பட்ள்ளது. இந்த எழுத்துரு இந்திய மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[மேற்கோள் தேவை]
தமிழ் இரண்டாம் மொழி [தொகு]
தற்போது இம் மொழி பேசுவோர் தமது இரண்டாம் மொழியாகத் தமிழையே கொண்டுள்ளனர். எல்லாவித நடைமுறைத் தேவைகளுக்கும் தமிழைப் பேசவும் எழுதவும் இவர்கள் வல்லவர்களாக உள்ளனர்.
புகழ் பெற்ற சில சௌராட்டிரர்கள் [தொகு]
- டி. எம். சௌந்தரராஜன், பாடகர்
- எம். வி. வெங்கட்ராம், எழுத்தாளர்
- முன்னாள் அமைச்சர் எசு. ஆர். இராதா,
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சி.எசு. ராம்பாபு,
- முன்னாள் பா.ச.க. சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன்,
- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ராமசாமி,
- திரைப்பட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
- சௌராட்டிரர் வரலாறு, ஒலி வடிவில் கேட்க [[1]]
- சௌராஷ்டிர மொழி எழுத்து
- செளராட்டிரர்
- இந்திய-ஆரிய மொழிகள்
- சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்
- புகழ்பெற்ற சௌராட்டிர சமூகத்தவர்கள்
மேற்கோள்கள் [தொகு]
- தமிழ்நாட்டில் சௌராட்டிரர்:முழு வரலாறு,ஆசிரியர் குட்டின்.கே.ஆர்.சேதுராமன்,மதுரை,2008
- சௌராட்டிர பிராமணர் சரித்திரம்,நூலாசிரியர்,கே.ஏ.அன்னாசாமி சாத்திரியார்,1914
- ↑ 'The Sourashtrans of South India' By H.N.Randle, in the Journal of Royal Asiatic Society, London (October 1944) [under the chapter 'The Language'].