லிட்டில் இந்தியா, கூலிம்

ஆள்கூறுகள்: 5°47′N 100°23′E / 5.783°N 100.383°E / 5.783; 100.383
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிட்டில் இந்தியா
கூலிம்
நகர்ப்பகுதி
Little India Kulim
லிட்டில் இந்தியா, கூலிம் is located in மலேசியா
லிட்டில் இந்தியா, கூலிம்
ஆள்கூறுகள்: 5°47′N 100°23′E / 5.783°N 100.383°E / 5.783; 100.383
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாநகரம் கூலிம்
நேர வலயம்மலேசிய நேரம்
அஞ்சல் குறியீடு09xxx
தொலைபேசி எண்கள்+6-04
போக்குவரத்துப் பதிவெண்K

லிட்டில் இந்தியா கூலிம் அல்லது பாயா பெசார் (ஆங்கிலம்: Little India, Kulim; மலாய்: Little India, Kulim; சீனம்: 居林小印度) என்பது மலேசியா, கெடா, கூலிம் மாநகரில், மலேசிய இந்தியர்கள் கணிசமான அளவில் வாழும் இடங்களில் ஒன்றாகும்.

கூலிம் மாநகரில் இருந்து 6.7 கி.மீ. தொலைவில் பாயா பெசார் (Paya Besar) எனும் இடத்தில் ’லிட்டில் இந்தியா கூலிம்’ அமைந்துள்ளது. அத்துடன் இந்தப் பாயா பெசார் புறநகரம்; கெடா மாநிலச் சட்டமன்றத்தின் மாவட்டமாகவும், கெடா மாநிலத்தின் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியாகவும் செயல்படுகிறது.

லிட்டில் இந்தியா கூலிம் எனும் பாயா பெசார், கெடா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு கிழக்கே 27 கி.மீ. அருகில் உள்ளது.

பொது[தொகு]

கூலிம் வட்டாரத்தில் ஒரு முக்கியமான வணிகத் தளமாக இயங்கி வரும் கூலிம் லிட்டில் இந்தியா, இந்தியர் தொடர்புடைய பல்வேறு விற்பனை மையங்களைக் கொண்டு உள்ளது. அத்துடன் இங்கு கீர்த்தனி உணவகம்; கண்ணா உணவகம்; ஸ்ரீ காந்தி உணவகம் என இந்திய உணவகங்கள் மிகுதியாய் உள்ளன.

இந்திய இனத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஓர் இடமாகவும்; இந்தியர்களுக்கான கலாசார மையமாகவும் திகழ்கிறது. இங்கு அதிகமாக தமிழர்கள் வாழ்கின்றனர்.

கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி[தொகு]

மலேசியாவின் 525-ஆவது தமிழ்ப்பள்ளியாகப் பாயா பெசார் தமிழ்ப்பள்ளி பாயா பெசார் எனும் இடத்தில் 2014-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் அவர்களால் திறப்புவிழா கண்டது.[1]

அன்றைய தினம் பாயா பெசார் தமிழ்ப்பள்ளி (SJKT Paya Besar) எனும் பெயர் கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி (SJKT Ko Sarangapani) எனப் பெயர் மாற்றம் கண்டது.

பெயர் மாற்றம்[தொகு]

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் தொண்டாற்றியத் தமிழ்வேள் கோ. சாரங்கபாணியை நினைவு கூறும் வகையில் தமிழ் உணர்வாளர்களின் பெரும் முயற்சியால் ‘கோ.சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியாக உருமாற்றம் கண்டது.[2]

இந்தப் பள்ளியில் 270 மாணவர்கள் பயில்கிறார்கள். 28 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை 525 ஆக உயர்வு கண்டது.

வரலாறு[தொகு]




2022 - கூலிம் பண்டார் பாரு வாக்காளர்களின் இனப் பிரிவு[3]

  மலாய்க்காரர்கள் (70.54%)
  சீனர்கள் (17.12%)
  இந்தியர்கள் (11.53%)
  இதர இனத்தவர் (0.55%)

1900-ஆம் ஆண்டுகளில், பினாங்கு மாநிலத்தில் இருந்தும்; கெடா மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பல்லாயிரம் தமிழர்கள் லூனாஸ் பகுதியில் குடியேறினார்கள். அப்போது கூலிம் நகரம், லூனாஸ் பாயா பெசார் பகுதிகள் ஒரு குடியேற்ற மையமாக விளங்கியது.

அதற்கு முன்னர், 1890-ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூலிம்; லூனாஸ் பகுதிகளில் இருந்த காபி, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப் பட்டார்கள். அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று அழைத்தார்கள்.

தொழில்துறை மேம்பாடுகள்[தொகு]

அந்தக் காலக்கட்டத்தில் லூனாஸ் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. 1990-ஆம் ஆண்டுகளில் லூனாஸ்; கூலிம் வட்டாரங்களில் தொழில்துறை மேம்பாடுகள். அவற்றின் காரணமாக பல ரப்பர் தோட்டங்கள் மூடப்பட்டன.

அந்தத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்களில் பெரும்பாலோர் லூனாஸ் புறநகர்ப் பகுதிகளில் குடியேறினார்கள். மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் இடங்களில் லூனாஸ் நகரமும் ஒன்றாகும்.

அவர்கள் செழிப்பான வணிகங்களை உருவாக்கினர். அந்த வகையில் இந்தப் பாயா பெசார் குடியேற்றப் பகுதி இந்தியர்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஒரு குட்டி இந்தியாகவாக மாற்றம் கண்டது.

தியானா ஆசிரமம்[தொகு]

கூலிம் பாயா பெசார்; பரமானந்த ஆன்மீகக் கூடம்

தியானா ஆசிரமம் (Dhyana Ashram) எனும் சுய அறிவு கோயில் (Temple Of Self Knowledge), கூலிம் பாயா பெசார் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆசிரமம், சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி (Swami Brahmananda Saraswati) என்பவரால் 2006-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த ஆசிரமம் கற்பித்தல் நிறுவனமாகவும், ஓய்வு மையமாகவும் செயல்படுவதற்காக நிறுவப்பட்டது.[4]

அத்துடன் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைத் தேடும் மக்களுக்கு ஆன்மீக மையமாகவும் இந்த ஆசிரமம் திகழ்கிறது.[5]

அன்னை கருமாரியம்மன் ஆலயம்[தொகு]

பாயா பெசார் கிராமத்தில் அருள்மிகு அன்னை கருமாரியம்மன் ஆலயம் (Arulmigu Annai Karumariamman Alayam) எனும் ஓர் இந்து ஆலயமும் உள்ளது. மலேசியாவின் பல பகுதிகளில் இருந்து இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் வருகை புரிந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]