இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (இ. தொ. க) (Indian Institutes of Technology, IITs) இந்திய நாடாளுமன்றத்தினால் நிறுவப்பட்டு, நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல், நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட கல்விநிலையங்கள். முதலில் இந்தியாவில் கரக்பூர், பம்பாய் (இப்பொழுது மும்பை), கான்ப்பூர், மதராசு (இப்பொழுது சென்னை), தில்லி ஆகிய ஐந்து இடங்களில் நிறுவப்பட்டன. இப்பொழுது இவை பதிமூன்று தன்னாட்சி பெற்ற கல்விக்கூடங்களாக விளங்குகின்றன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலையான பின்னர் இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக ஒரு திறமைமிக்க மனிதவளத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன் அறிவியலாளர்களையும் பொறியாளர்களையும் உருவாக்க இக் கழகங்கள் உருவாயின. பொதுவான பேச்சு மொழியில் இவை ஐ.ஐ.டி எனவும் இவற்றில் படித்தவர்கள் ஐ.ஐ.டியர் எனவும் விளிக்கப்படுகிறது.
இக் கழகங்கள் தொடங்கிய வரிசையில் அமைக்கப்பட்டுள்ள இடங்கள்: கரக்பூர் (1950; இ. தொ.கவாக 1951[1]), மும்பை (1958), சென்னை (1959), கான்பூர் (1959), தில்லி (1961; இ. தொ.கவாக 1963), குவகாத்தி (1994), ரூர்க்கி (1847; இ. தொ.க-வாக 2001), புவனேசுவர் (2008), காந்திநகர் (2008), ஐதராபாத் (2008), பட்னா (2008), பஞ்சாப் (2008) மற்றும் இராசத்தான் (2008).
இந்திய அரசு மேலும் மூன்று இ.தொ.கழகங்களை இந்தூர், மண்டி, மற்றும் (பனாரசு இந்து பல்கலைக்கழகத்தை மாற்றி) வாரணாசி ஆகிய இடங்களில் திறக்க அறிவித்துள்ளது. சில இ.தொ.கழகங்கள் யுனெசுக்கோ, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் சோவியத் கூட்டமைப்பு பண மற்றும் நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இ.தொ.கவும் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகம்; மற்றவற்றுடன் ஒரு பொது இ.தொ.க அவையால் இணைக்கப்பட்டுள்ளன. இவ் அவை ஆட்சிப் பொறுப்புகளை மேற்பார்வை இடுகின்றது.
இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மூலம் இவற்றின் பட்டப்படிப்பு நுழைவு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. ஓர் ஆண்டில் ஏறத்தாழ 4000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பட்டமேற்படிப்பிற்கான மாணவர்கள் மேற்கொள்ளவிருக்கும் துறையினைப் பொறுத்து பட்டதாரி பொறியியல் நாட்டம் தேர்வு (GATE), JMET, JAM மற்றும் CEED மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பட்டபடிப்பில் ஏறத்தாழ 15,500 மாணவர்களும் பட்டமேற்படிப்பில் 12,000 மாணவர்களும் இந்தக் கழகங்களில் படிக்கின்றனர். தவிர ஆய்வு செய்யும் முனைவர்பட்ட மாணவரும் உள்ளனர். இ.தொ.க முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அவர்களது பணி அமெரிக்க காங்கிரசினால் பாராட்டப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "கழக வரலாறு – இந்திய தொழில்நுட்ப கழகம் கரக்பூர்". இ.தொ.க கரக்பூர். பார்த்த நாள் 2008-10-22.
- ↑ லைப்ரரி, காங்கிரசு (2005-04-26). "அவை தீர்மானம் 227". Bill Text for the 109th Congress (2005–2006). The House of Representatives, U.S.. பார்த்த நாள் 2006-05-14.
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||||||||||||||||