தெற்கு கோசலத்தின் பாண்டுவம்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு கோசலத்தின் பாண்டுவம்சிகள்
சுமார் 7வது நூற்றாண்டு–சுமார் 8வது நூற்றாண்டு
சமயம்
இந்து சமயம்
பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்ஆரம்ப இடைக்கால காலம்
• தொடக்கம்
சுமார் 7வது நூற்றாண்டு
• முடிவு
சுமார் 8வது நூற்றாண்டு
முந்தையது
பின்னையது
[[சரபபுரிய வம்சம்]]
[[சோமவம்சி வம்சம்]]
பொ.ச. 600-இல் பாண்டுவம்சிகளின் பிரதேசம்
Map
தெற்கு கோசலத்தின் பாண்டுவம்சிகளின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்[1]

பாண்டுவம்சிகள் (Panduvamshis) அல்லது பாண்டவர்கள் இந்தியாவின் இன்றைய சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள வரலாற்று தெற்கு கோசலப் பகுதியை 7-8ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட இந்திய வம்சத்தினர் ஆவர். இவர்கள் மேகலாவின் முந்தைய பாண்டுவம்சிகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். இரு வம்சங்களும் சந்திர பரம்பரையையும் புராண பாண்டவர்களின் வம்சாவளியையும் உரிமை கோரின.

6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சரபபுரியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாண்டுவம்சிகள் இப்பகுதியின் கட்டுப்பாட்டைப் பெறும் வரை தெற்கு கோசலம் சில குட்டித் தலைவர்களால் கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. பாண்டுவம்சிகள் அண்டை நாடுகளான உத்கல நாடு (நவீன ஒடிசா) , விதர்பா ஆகிய பகுதிகளின் ஒரு பகுதியை வெவ்வேறு காலங்களில் கைப்பற்றியிருக்கலாம். ஆனால் இந்த பகுதிகளின் மீதான அவர்களின் கட்டுப்பாடு நீண்ட காலம் நீடிக்கவில்லை.

இவர்களின் தலைநகர் சிறீபுரத்தில் (நவீன சிர்பூர்) அமைந்திருக்கலாம். சந்திர வம்சாவளியைக் கூறும் பிற்கால சோமவம்சி வம்சம் இவர்களுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. ஆனால் இதை உறுதியாகக் கூற முடியாது.

தோற்றம்[தொகு]

பழம்பெரும் வம்சாவளி உரிமைகோரல்கள்[தொகு]

குடும்பத்தின் பல பதிவுகள் சந்திர பரம்பரையைக் கூறுகின்றன: [2]

  • இரண்டாவது பாண்டுவம்சி மன்னன் இந்திரபாலனின் கல்வெட்டு, கரோட்டில் உள்ள இலட்சுமனேசுவர் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவரை "வானத்தில் முழு நிலவு (சந்திர குடும்பம்)" என்று விவரிக்கிறது.
  • இரண்டாம் நன்னராசாவின் அத்பார் (ஆதபாரா) கல்வெட்டு, இவரது மூதாதையர் திவரதேவன் "சந்திர பரம்பரை"யில் பிறந்ததாகக் கூறுகிறது.
  • பாலார்ச்சுனனின் கல்வெட்டுகள் அவர் 'சோம -வம்சம்' அல்லது 'சிதாம்சு-வம்ச'த்தில் பிறந்ததாகக் கூறுகின்றன (இரண்டுக்கும் "சந்திரப் பரம்பரை" என்று பொருள்)
  • பாலார்ச்சுனனின் சிர்பூர் இலட்சுமனர் கோயில் கல்வெட்டு, அவரது தாத்தா சந்திரகுப்தன் 'சந்திரன்வயவில்' ("சந்திரனின் குடும்பம்") பிறந்ததாகக் கூறுகிறது.
  • பாலார்ச்சுனனின் மற்றொரு கல்வெட்டு, வம்சத்தின் நிறுவனர் உதயணன் 'சசதாரன்வய' ("சந்திரனின் குடும்பம்") யைச் சேர்ந்தவர் என்று கூறுகிறது.

சந்திர பரம்பரைக்குள், பழம்பெரும் பாண்டவர்களின் வம்சாவளியை வம்சம் கண்டறிந்தது. உதாரணமாக: [3]

  • முதலாம் நன்னராசாவின் காலத்து அரங்கக் கல்வெட்டு, அவனது மூதாதையான உதயணன் பாண்டவ-வம்சத்தில் ("பாண்டவ பரம்பரை") பிறந்ததாகக் கூறுகிறது.
  • திவரதேவனின் மூன்று செப்புத் தகடுகள் அவனது தந்தை முதலாம் நன்னராசா பாண்டு-வம்சத்தை (" பாண்டுவின் பரம்பரை") அலங்கரித்ததாகக் கூறுகின்றன.

சந்திர பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்ற கூற்று (" சோமவம்சி ") இந்த வம்சத்தின் வாழ்நாள் முழுவதும் வெளியிடப்பட்டக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இருப்பினும், திவரதேவனின் ஆட்சிக்குப் பிறகு வெளியிடப்பட்ட கல்வெட்டுகளில் பாண்டவர் மரபைச் சேர்ந்தவர்கள் ("பாண்டுவம்சி") என்ற கூற்றுக் காணப்படவில்லை. இருந்தபோதிலும், நவீன அறிஞர்கள் வம்சத்தை "பாண்டுவம்சி" என்று விவரிக்கிறார்கள். இதனால் இவர்களை பிற்கால சோமவம்சி வம்சத்திலிருந்து வேறுபடுத்துகிறார்கள். [4]

மேகலாவின் பாண்டுவம்சிகளுடனான உறவு[தொகு]

தெற்கு கோசலத்தின் பாண்டுவம்சிகள், அருகிலுள்ள பகுதியை ஆண்ட முந்தைய வம்சமான மேகலாவின் பாண்டுவம்சிகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். இரண்டு வம்சங்களும் பழம்பெரும் பாண்டவர்களின் வம்சாவளியை உரிமைக் கூறின. மேலும் சந்திர வம்சாவளியையும் கோரின. [5] இருப்பினும், கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில், இரண்டு வம்சங்களுக்கிடையேயான உறவு, ஏதேனும் இருந்தால், உறுதியாகத் தீர்மானிக்க முடியாது. [5]

தெற்கு கோசலத்தின் பாண்டுவம்சிகள் மேகலாவின் பாண்டுவம்சிகளின் வழித்தோன்றல்கள் அல்ல என்ற கோட்பாட்டிற்கு ஆதரவாக பல வாதங்கள் முன்வைக்கப்பட்டது. உதாரணத்திற்கு:

  • தெற்கு கோசல மன்னர்களின் கல்வெட்டுகள் மேக ஆட்சியாளர்களைக் குறிப்பிடவில்லை. இருப்பினும் அவை அவர்களின் வம்சத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தைக் கொண்டுள்ளன. [6]
  • தெற்கு கோசல வம்சத்தின் ஒரு மன்னன் மட்டுமே "பாலன்" என்று முடிவடையும் பெயரைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, அதே சமயம் மேகலா வம்சத்தின் ஒரு மன்னர் தவிர மற்ற அனைவருக்கும் "பாலன்" என்று முடிவடையும் பெயர்கள் இருந்தன. [7]
  • தெற்கு கோசல வம்சத்தின் செப்புத் தகடுகள் உரைநடையில் இயற்றப்பட்டுள்ளன. மேலும் அவை "பெட்டித் தலை" எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன (இருப்பினும் அவர்களின் ஆட்சியின் சில தனிப்பட்டவர்களின் கல் கல்வெட்டுகள் "ஆணி-தலை" எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன). மறுபுறம், மேகலா வம்சத்தின் கல்வெட்டுகள் உரைநடை மற்றும் செய்யுள் கலவையில் இயற்றப்பட்டு, "ஆணி-தலை" எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. [7]
  • தெற்கு கோசல ஆட்சியாளர்கள் வைணவர்கள், மேகலா ஆட்சியாளர்களைப் போலல்லாமல், அவர்கள் சைவர்கள். [7]

பிரதேசம்[தொகு]

இன்றைய சத்தீசுகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தெற்கு கோசலப் பகுதியை பாண்டுவம்சிகள் ஆண்டனர். [3] உதயணனின் கலிஞ்சர் கல்வெட்டைத் தவிர, வம்சத்தின் அனைத்து கல்வெட்டுகளும் சத்தீசுகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது இவர்களின் மையப் பகுதி சத்தீசுகருக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறுகிறது. [4]

திவரதேவனின் கல்வெட்டுகள் அவரை கோசலாதிபதி (" கோசலத்தின் இறைவன்") என்று விவரிக்கின்றன. இவரது மகன் இரண்டாம் நன்னராசாவின் அத்பார் கல்வெட்டு, அவர் அனைத்து கோசலம், உத்கல நாடு மற்றும் பிற மண்டலங்களின் (மாகாணங்கள்) "தனது சொந்த கைகளின் வீரத்தால்" அதிபதியானார் என்று கூறுகிறது. இருப்பினும், இரண்டாம் நன்னராசா தன்னை கோசலத்தின் அதிபதியாக மட்டுமே குறிப்பிடுகிறார். [3] உத்கல நாடு போன்ற பிற பகுதிகளின் மீது திவரதேவனின் கட்டுப்பாடு நீண்ட காலம் நீடிக்கவில்லை என்று இது அறிவுறுத்துகிறது. சிவகுப்தனின் சோனக்பாட் (அல்லது செங்கபட்) கல்வெட்டு, பாண்டுவம்சி இராச்சியம் இன்றைய மகாராட்டிராவில் உள்ள விதர்பா பகுதியின் ஒரு பகுதியை உள்ளடக்கியதாகக் கூறுகிறது. ஆனால் இதுவும் தற்காலிகமானது. [8]

சாத்தியமான வாரிசுகள்[தொகு]

உதயணன்[தொகு]

முதலாம் நன்னராசாவின் அரங்கக் கல்வெட்டு, பாலார்ச்சுனனின் சிர்பூர் கல் கல்வெட்டு உட்பட வம்சத்தின் கல்வெட்டுகளில் ஆரம்பகால மன்னராக உதயணன் என்பவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இவரது சொந்த ஆட்சியின் கல்வெட்டு எதுவும் கிடைக்கவில்லை. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலிஞ்சர் கல்வெட்டு, பாண்டவ மன்னன் உதயணன் கலிஞ்சரில் பத்ரேசுவரர் ( சிவன் ) கோயிலைக் கட்டியதாகக் கூறுகிறது. இது பாண்டுவம்சி மன்னன் உதயணனைக் குறிக்கிறது என்று வைத்துக் கொண்டால், உதயணன் கலிஞ்சரை மையமாகக் கொண்ட ஒரு பகுதியின் ஆட்சியாளராக இருந்ததாகத் தெரிகிறது. இவர் தெற்கு கோசலையை வென்றிருக்கலாம். ஆனால் இதை உறுதியாகக் கூற முடியாது. பெரும்பாலும், இவர் தெற்கு கோசலத்தை ஆட்சி செய்யவில்லை. மேலும் இப்பகுதி இவரது சந்ததியினரால் கைப்பற்றப்பட்டது. [9]

இந்திரபாலன்[தொகு]

உதயணனின் மகன் இந்திரபாலன் தெற்கு கோசலத்தின் ஒரு பகுதியையாவது ஆட்சி செய்ததாக அறியப்படும் வம்சத்தின் ஆரம்பகால ஆட்சியாளர் ஆவார். கரோட், இலட்சுமனேசுவரர் கோயில் கல்வெட்டு இவர் தனது எதிரிகளை அழித்ததாகக் குறிப்பிடுகிறது. மேலும் "அனைத்து இளவரசர்களின் முகடு-நகைகளின் வரிசைகள் இவரது தாமரை போன்ற பாதங்களை அலங்கரித்தன" என்று கூறுகிறது.[4] இந்த விளக்கம் இவர் சில காலம் இறையாண்மை கொண்ட மன்னராக இருந்ததைக் குறிக்கிறது.[10] கல்வெட்டு, 'இந்திரபுரம்' என்ற நகரத்தையும் குறிப்பிடுகிறது, இது ஒரு பகுதியின் தலைமையகமாக செயல்பட்டது. இந்த ஊரின் பெயரே இது இந்திரபாலனால் நிறுவப்பட்டதாகக் கூறுகிறது. [10]

வரலாற்றாசிரியர் ஏ.எம்.சாஸ்திரி இந்திரபாலனின் ஆட்சிக்காலம் பொ.ச. 620-640 என வரையறுக்கிறார்.[11] அவரைப் பொறுத்தவரை, வடக்குப் பேரரசர் ஹர்ஷவர்தனின் படைகள் கலிஞ்சர் வரை முன்னேறியபோது, இந்திரபாலன் தனது பூர்வீக இராச்சியத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் தெற்கு நோக்கி தெற்கு கோசலத்திற்கு குடிபெயர்ந்தார். சரபபுரியர்களின் தம்தரி மற்றும் கவுவடல் கல்வெட்டுகளால் சான்றளிக்கப்பட்டபடி, சரபபுரிய மன்னன் சுதேவராசாவின் கீழ் சர்வாதிகாரதிக்ருத பதவியை வகித்த மகா- 'சமந்தா' ("பெரிய நிலப்பிரபுத்துவ") இந்திரபால-ராசாவுடன் இந்திரபாலனை அடையாளம் காணலாம். சரபபுரியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிராந்தியத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி இவர் புதிய இராச்சியத்தை நிறுவியதாகத் தெரிகிறது.[10]

அறிஞர் லோச்சன் பிரசாத் பாண்டேயா, இந்திரபாலனை மேகலா பாண்டுவம்சி மன்னன் பரதபாலன் அல்லது இந்திரனின் பேரன் என்று அடையாளம் காட்டினார். இந்த அடையாளத்தை நம்பி, உச்சகல்பர்கள் மேகலா மீது படையெடுத்ததாக வரலாற்றாசிரியர் வி.வி.மிராஷி கருதுகிறார். இந்திரபாலன் கோசலத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் முதலில் சரபபுரிய நிலப்பிரபுவாக ஆட்சி செய்தார். பின்னர், அவர்களது மேலாதிக்கத்தை அகற்றினார். இருப்பினும், இந்த அடையாளமானது ஒரே மாதிரியான ஒலியுடைய பெயர்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது ("இந்திரபாலன்" மற்றும் "பரதபாலன் என்ற இந்திரன்"), மேலும் இதை உறுதியாகக் கருத முடியாது. [4]

இந்திரபாலனின் வாரிசுகள்[தொகு]

இந்திரபாலனுக்குப் பிறகு வாரிசு வரிசை தெளிவாக இல்லை. இந்திரபாலனின் மகன் முதலாம் நன்னராசாவின் ஆட்சிக்காலத்தின் அரங்கக் கல்வெட்டு, இந்திரபாலனுக்கு ஒரு சகோதரர் இருந்ததாகக் கூறுகிறது. இருப்பினும் சேதமடைந்த பகுதியில் சகோதரனின் பெயர் தொலைந்து போனது. இது தனது அண்ணனை பலராமனைப் பின்தொடர்ந்து எதிரிகளை அழித்த கிருட்டிணனுடன் ஒப்பிடுகிறது. இந்திரபாலனின் சகோதரர் தெற்கு கோசலத்தில் தனது அதிகாரத்தை பலப்படுத்த உதவியதாக இந்த விளக்கம் தெரிவிக்கிறது.[10] கல்வெட்டு சகோதரனை 'நிர்பா' (இராசா) என்று குறிப்பிடுகிறது.[12]

இந்திரபாலனின் சகோதரரின் நான்காவது மகனான பவதேவன், அரங்கக் கல்வெட்டில் நிர்பா என்றும் "பூமியின் அதிபதி" என்றும் குறிப்பிடப்படுகிறார்.[12] இவர் பின்வரும் பட்டங்களைப் பெற்றிருந்தார்: [4]

  • இரணகேசரி ("போர்-சிங்கம்"), ஏனெனில் இவர் போர்க்களத்தில் தனது வாளால் எதிரிகளின் யானைகளைக் கொன்றார்.
  • சிந்த-துர்கா, இவர் தனது எதிரிகளுக்கு கவலையை (சிந்தா) ஏற்படுத்தியதாலும், போட்டி வீரர்கள் இவரை (துர்கா) போரில் விஞ்சுவது கடினமாக இருந்ததாலும்.
  • அப்ரியா-வைசிகா ("விபச்சாரிகளை இழிவுபடுத்துதல்")

இந்திரபாலனின் மகன் ஈசானதேவன் கரோட்டில் உள்ள இலட்சுமனேசுவர் கோயிலின் பராமரிப்புக்காக சில கிராமங்களை வழங்கினார். இது அவரும் ஒரு ஆட்சியாளர் என்பதைக் குறிக்கிறது.[12] இந்திரபாலனின் மற்றொரு மகனான முதலாம் நன்னராசா, 'இராசாதிராசா' என்ற பட்டத்தை பெற்றிருந்தார். மேலும் வம்சத்தின் அடுத்தடுத்த ஆட்சியாளர்கள் இவரிடமிருந்து வந்தவர்கள். [12]

திவரதேவன்[தொகு]

முதலாம் நன்னராசாவுக்குப் பிறகு அவரது மகன் திவரதேவன் "மகாசிவ திவரன்" என்று அழைக்கப்பட்டான். திவரதேவன் என்ற பெயர் இவரது கல்வெட்டுகளின் முத்திரையில் உள்ளது. மேலும் இது இவரது தனிப்பட்ட பெயராகத் தெரிகிறது. "மகாசிவ திவரன்" என்ற பெயர் கல்வெட்டுகளின் உரையில் காணப்படுகிறது. இது இவரது முடிசூட்டுப் பெயராக இருக்கலாம். [13] ஜே. எப். பிளீத் இவரை நன்னராசாவின் வளர்ப்பு மகன் என்று தவறாக நம்பினார். இது ராஜிம் கல்வெட்டின் அடிப்படையில் எழுதப்பட்ட பிழையைக் கொண்டுள்ளது. மன்னரின் மற்ற இரண்டு கல்வெட்டுகள் - போண்டா மற்றும் பலோடாவில் கண்டுபிடிக்கப்பட்டவை - திவரதேவன் முதலாம் நன்னராசாவின் உயிரியல் மகன் என்பதை தெளிவுபடுத்துகின்றன. [14]

இன்றைய ஒடிசாவின் அண்டை நாடான சைலோத்பவ பகுதியையும் திவரதேவன் ஆக்கிரமித்ததாகத் தெரிகிறது. இவரது மகன் இரண்டாம் நன்னராசாவின் அத்பார் கல்வெட்டு, தனது தந்தை கோசலம், உத்கலம் (இன்றைய ஒடிசா) மற்றும் பிற பகுதிகளுக்கு "தனது சொந்த கைகளின் வலிமையால்" தலைவரானார் என்று கூறுகிறது. கல்வெட்டு இரண்டாம் நன்னராசாவை கோசலத்தின் உரிமையாளாராக மட்டுமே விவரிக்கிறது, இது மற்ற பிரதேசங்களில் பாண்டுவம்சியின் கட்டுப்பாடு நீண்ட காலம் நீடிக்கவில்லை என்பதைக் குறிக்கிறது. சைலோத்பவ மன்னன் இரண்டாம் தர்மராசாவின் (மானபிதா என்றழைக்கப்படும்) கல்வெட்டு, அவனது சகோதரன் மாதவன் அவனைத் தூக்கியெறிய முயன்றதாகவும், ஆனால் பாசிகாவில் தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறுகிறது; மாதவன் பின்னர் மன்னன் திரிவரனுடன் கூட்டுச் சேர்ந்தான். ஆனால் தர்மராசா இரு எதிரி மன்னர்களையும் விந்திய மலை அடிவாரத்தில் தோற்கடித்தார். தர்மராசாவின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திரிவரனை திவரதேவனுடன் அடையாளம் காணலாம். [15]

இரண்டாம் நன்னராசா[தொகு]

மகா-நன்னராசா என்ற இரண்டாம் நன்னராசா தனது அத்பார் கல்வெட்டு மூலம் அறியப்படுகிறார். முத்திரை இல்லாதது, முடிவில் முழுமையடையாத சரணம் மற்றும் விடுபட்ட தேதி ஆகியவற்றால் சுட்டிக்காட்டப்பட்டபடி, சில காரணங்களால் கல்வெட்டு முழுமையடையவில்லை. அது இவரையும் இவரது தந்தையையும் முறையே பிரத்திம்யும்மனன் மற்றும் கிருஷ்ணனுடன் ஒப்பிட்டு, இவரை மது கைடபனின் எதிரி என்று விவரிக்கிறது. [16]

இவர் அநேகமாக வாரிசு இல்லாமல் இறந்துவிட்டார். இதன் காரணமாக இவருக்குப் பிறகு இவரது மாமா சந்திரகுப்தன் ஆட்சிக்கு வந்தார். [17]

சந்திரகுப்தன்[தொகு]

சந்திரகுப்தன் முதலாம் நன்னராசாவின் மகன், மேலும் இவர் தனது மருமகன் இரண்டாம் நன்னராசாவுக்குப் பிறகு தனது முதுமையில் அரியணை ஏறியிருக்க வேண்டும். [4] இவரது பேரன் பாலார்ச்சுனனின் சிர்பூர் இலடுமனக் கோயில் கல்வெட்டில் இவரது இராணுவ சாதனைகள் பற்றிய தெளிவற்ற குறிப்புகள் உள்ளன. மேலும் இவரை "பூமியின் ஆட்சியாளர்களின் அதிபதி"யாக இருந்த நர்பதி (ராசா) என்று விவரிக்கிறது. [17]

இராஷ்டிரகூட மன்னன் முதலாம் அமோகவர்சனின் சஞ்சன் கல்வெட்டின் படி, அவரது தந்தை மூன்றாம் கோவிந்தன் சந்திரகுப்தன் என்ற ஆட்சியாளரை தோற்கடித்தார். வரலாற்றாசிரியர் டி.ஆர். பண்டார்கர் இந்த தோற்கடிக்கப்பட்ட ஆட்சியாளரை பாண்டுவம்சி மன்னர் சந்திரகுப்தன் என்று அடையாளம் காட்டினார். ஆனால் இந்த அடையாளம் சரியானது அல்ல. இது காலவரிசையில் சாத்தியமற்றது. மேலும், சஞ்சன் கல்வெட்டு கோசலத்தை மூன்றாம் கோவிந்தனின் பிற்கால, தனித்துவமான வெற்றியாகக் குறிப்பிடுகிறது. [18]

ஹர்ஷகுப்தன்[தொகு]

சந்திரகுப்தனுக்குப் பிறகு இவரது மகன் ஹர்ஷகுப்தன் ஆட்சிக்கு வந்தார். இவரது வாரிசான பாலார்ச்சுனனின் ஆட்சியின் போது வெளியிடப்பட்ட கல்வெட்டுகளின் மூலம் இவர் அறியப்படுகிறார். இந்த கல்வெட்டுகளின் அறிமுகப் பகுதி இவரை ஹர்ஷதேவன் என்றும், கல்வெட்டுகளின் முத்திரை இவரை ஹர்ஷகுப்தன் என்றும் அழைக்கிறது. இவர் மன்னன் சூரியவர்மனின் மகள் வசதாவை மணந்தார். [18] இவர் ஒரு வைணவர். இவர் இறந்த பிறகு, இவரது மனைவி வசதா இவரது நினைவாக ஒரு விஷ்ணு கோயிலைக் கட்டினார். [19]

மகா-சிவகுப்த பாலார்ச்சுனன்[தொகு]

பாலார்ச்சுனன், ஹர்ஷகுப்தன் - இராணி வசதா ஆகியோரின் மகனாவார். இவரது சொந்த செப்புத் தகடுகள் இவரை மகா-சிவகுப்தன் என்று அழைக்கின்றன, மேலும் கல்வெட்டுகளின் முத்திரைகள் இவரை சிவகுப்தன் என்று அழைக்கின்றன. இவரது ஆட்சியின் போது வெளியிடப்பட்ட மற்ற கல்வெட்டுகள் பொதுவாக இவரை சிவகுப்தன் அல்லது பாலார்ச்சுனன் என்று அழைக்கின்றன. ஒரு கல்வெட்டு இவரை மகா-சிவகுப்தன் என்று அழைக்கிறது. [19] பாலார்ச்சுனன் என்பது இவரது தனிப்பட்ட பெயராகவும், மகாசிவகுப்தன் என்பது இவரது முடிசூட்டுப் பெயராகவும் இருக்கலாம். [13]

இவருடைய 57வது ஆட்சி ஆண்டைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இவர் குறைந்தது 57 ஆண்டுகள் ஆட்சி செய்ததைக் குறிக்கிறது. இவரது இளைய சகோதரர் இரணகேசரி இவரது இராணுவ வெற்றிகளில் இவருக்கு ஆதரவளித்தார். இவருக்கு சிவானந்தின் என்ற மகன் இருந்தான். [19]

வீழ்ச்சி[தொகு]

பாலார்ச்சுனனுக்குப் பிறகு பாண்டுவம்சிகள் பற்றிய எந்தப் பதிவும் இல்லை, [20] தெற்கு கோலத்த்தில் இவர்களின் ஆட்சி 8-ஆம் நூற்றாண்டில் முடிவடைந்திருக்கலாம். [21] இவர்களின் பிரதேசம் பின்னர் நளர்கள், பனாக்கள், காலச்சுரிகளால் ஆளப்பட்டது. [20] நள மன்னன் விலாசதுங்கனின் கல்வெட்டு, 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால அடிப்படைகளை அடிப்படையாகக் கொண்டது. ராஜீம் என்ற இடத்தில் ராஜீவ் லோச்சன் கோவில் கட்டப்பட்டதை பதிவு செய்கிறது. 8 ஆம் நூற்றாண்டில் இன்றைய ராய்ப்பூரைச் சுற்றியுள்ள பகுதியை நளர்கள் ( முந்தைய நள வம்சத்தின் ஒரு கிளையாக இருக்கலாம்) கைப்பற்றியதாக இது தெரிவிக்கிறது. [22]

மதம்[தொகு]

இலட்சுமணர் கோவில், சிர்பூர்

பாண்டுவம்சி மன்னர்கள் பொதுவாக இந்து மரபுகளைப் பின்பற்றினர். இருப்பினும் இவர்கள் பௌத்தத்தின் மீதும் சகிப்புத்தன்மையுடன் இருந்தனர். [23] பவதேவன் பௌத்தத்தை ஆதரித்தார். மேலும் முதலில் சூரியகோசனால் கட்டப்பட்ட புத்த விகாரத்தை மீட்டெடுத்தார். இவரது ஆதரவின் கீழ், சன்னதியுடன் இணைக்கப்பட்ட மடாலயம் வர்ணம் பூசப்பட்டது. மேலும் படிக்கட்டு கிணறு மற்றும் தோட்டங்களால் அலங்கரிக்கப்பட்டது. [13] ஈசானதேவன் கரோட்டில் இலட்சுமனேசுவரர் கோவிலைக் கட்டினார். மேலும் அதன் பராமரிப்புக்காக சில கிராமங்களையும் வழங்கினார். முதலாம் நன்னராசா அநேகமாக ஒரு சைவராக இருக்கலாம். இவருடைய வழித்தோன்றலான பாலார்ச்சுனனின் சிர்பூர் கல்வெட்டு இவர் "பூமியை சிவன் கோவில்களால் மூடினார்" என்று கூறுகிறது. [13]

திவரதேவன் ஒரு வைணவர், இவரது பட்டப்பெயர் 'பரம-வைணவர்' என்றும், இவரது முத்திரைகள் வைணவ சின்னங்களையும் கொண்டிருந்தன. [24] இவரது மகன் இரண்டாம் நன்னராசாவும் 'பரம-வைணவர்' என்ற பட்டத்தை கொண்டிருந்தார். மேலும் இவரது அத்பார் கல்வெட்டு ஒரு 'பாகவதருக்கு', அதாவது வைணவருக்கு மானியம் அளித்ததை பதிவு செய்கிறது. இந்தக் கல்வெட்டு திவரதேவனை விஷ்ணுவின் அவதாரமான கிருட்டிணனுடனும், இரண்டாம் நன்னராசாவை கிருட்டிணனின் மகன் பிரத்யும்யுமனனுடனும் ஒப்பிடுகிறது. [17]

வம்சத்தின் கல்வெட்டுகள் ஹர்ஷகுப்தனை அச்சுதனை (அதாவது விஷ்ணுவை ) எப்பொழுதும் வழிபடுபவர் என்று விவரிக்கிறது. [19] இவரது மனைவி வசதா சிர்பூரில் உள்ள இலட்சுமனர் கோவிலை நிறுவினார். அந்த இடத்தில் இவர் நிறுவிய நினைவு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [25]

சிவகுப்தன் அல்லது பாலார்ச்சுனன் ஒரு சைவர், மேலும் இவரது முத்திரை சிவனின் வாகனமான நந்தியினைக் கொண்டிருந்தது. [24] இவர் தனது தாய்வழி மாமா பாஸ்கரவர்மனின் (வசதாவின் சகோதரர்) வேண்டுகோளின் பேரில் ஒரு புத்த மடாலயத்திற்கு ஒரு கிராமத்தை வழங்கினார். [19]

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]