இந்திய தேசியக் கொடி
![]() | |
பிற பெயர்கள் | மூவர்ணக் கொடி |
---|---|
பயன்பாட்டு முறை | தேசியக் கொடி ![]() ![]() ![]() ![]() ![]() |
அளவு | 3:2 |
ஏற்கப்பட்டது | 22 சூலை 1947 |
வடிவம் | மேலிருந்து கீழாக, இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்களும், நடுவில் கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரமும் உள்ளது. |
வடிவமைப்பாளர் | சுரையா தியாப்ஜி[1] |
இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், சூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும். சனவரி 26, 1950-ல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது.
நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் எனக் கூறப்படும் 24 ஆரங்களைக் கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தைக் கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் சுரையா தியாப்ஜி ஆவார்.[2], ஆனால் பொதுவாக பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்ததாகச் சொல்லப்படும் கொடியில் இராட்டை சின்னம் இடம் பெற்றிருக்கும்.[3] அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப்படுகிறது.
கொடி உருவாக்கம்[தொகு]
தேசியக்கொடியின் வண்ணங்கள், வெவ்வேறு வண்ணக் குழுக்களின் கீழ், பின்வருமாறு வெளிப்படுத்தப்படும்.
வண்ணம் | X | Y | Z | பிரகாசம், சதவீதம் |
---|---|---|---|---|
காவி | 0.538 | 0.360 | 0.102 | 21.5 |
வெள்ளை | 0.313 | 0.319 | 0.368 | 72.6 |
பச்சை | 0.288 | 0.395 | 0.317 | 8.9 |
வண்ணத் திட்டம் | காவி | வெள்ளை | பச்சை | கடற்படை நீலம் |
---|---|---|---|---|
பான்டோன் வண்ணம் | 165 C | 000 C | 2258 C | 2735 C |
CMYK | 0-60-88-0 | 0-0-0-0 | 96-0-47-58 | 96-98-0-45 |
HEX | #FF671F | #FFFFFF | #046A38 | #06038D |
RGB | 255,103,31 | 255,255,255 | 4,106,56 | 6,3,141 |
கொடியின் அம்ச பொருள் விளக்கம்[தொகு]
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1931-ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும் பச்சை நிறம் இஸ்லாமியத்தையும் வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம், அயர்லாந்தின் கொடியைப் போல மூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாகப் பொருள் கொண்டது.
விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்குப் பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார்.
சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளைத் துறப்பதைக் குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதைத் துறந்து, வேலையின் காரணத்திற்குத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியைக் குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோகச் சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருமத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலைக் குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னேறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தைக் குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்.
பெரும்பான்மைக் கூற்றோ தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும் வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும் பச்சை நிறம், புணர்ப்பையும் செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும்.
வரலாறு[தொகு]
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையைத் தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904-ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி எனக் கூற்று கொண்டது. சிவப்பு வண்ணத்தில், சதுர வடிவில், மஞ்சள் நிற உள்வடிவத்தைக் கொண்ட பேரிடியை உணர்த்துமாறு, ஒரு 'வஜ்ர' வடிவத்தையும் வெள்ளை தாமரையையும் நடுவில் கொண்டது. மேலும் அது வங்காள மொழியில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகளை உருக்கொண்டது. சிவப்பு நிறம் சுதந்திரப் போராட்டத்தைக் குறிக்கும் வகையிலும், மஞ்சள் நிறம் வெற்றியைக் குறிக்கும் வகையிலும், வெள்ளை நிறம் தூய்மையைக் குறிக்கும் வகையிலும் அமைந்தன.
முதல் மூவர்ணக் கொடி, 7 ஆகஸ்ட் 1906ஆம் நாளில், கல்கத்தாவின் பார்ஸி பகன் சதுரத்தில், வங்காளப் பிரிவினை எதிர்ப்பு போராட்டத்தின் போது, சிந்திர பிரசாத் போஸ் என்பவரால் கொடியேற்றப் பட்டது. அக்கொடி பிற்காலத்தில், கல்கத்தாக் கொடி என வழங்கப் பட்டது. கொடியில், நீள் வடிவில், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என மூன்று பாகங்கள் இருந்தது. முதல் பாகத்தில், எட்டு, பாதி விரிந்த தாமரை பூக்களும் அடி பாகத்தில், சூரிய வடிவமும் சந்திர வடிவமும் அமைந்தன. நடு பாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் உருக் கொண்டன.
பின்னர், 22 ஆகஸ்ட் 1907ஆம் நாளில், பைக்கஜி காமா என்ற அம்மையார், ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் என்ற நகரில், மற்றுமொரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்தக் கொடியில், பச்சை நிறம் மேலிலும் இளஞ்சிவப்பு நடுவிலும் சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தைக் குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும் புத்த மதத்தையும் குறிப்பதாகவும் அமைந்தன. அக்கொடி, பச்சை பாகத்தில், ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களைக் குறிக்கும் வகையில், வரிசையாக எட்டு தாமரைகளைக் கொண்டது. நடுபாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப்பட்டது. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டது. இக்கொடியை, பக்கஜி காமா அம்மையார், வீர சவார்கர், சியாம்ஜி கிருட்டின வர்மா ஆகியோர் சேர்ந்து வடிவமைத்தனர். முதலாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், அது போராட்ட கலகர்களின், பெர்லின் குழுமத்திற்குப் பிறகு, பெர்லின் குழுமக் கொடி எனப் பெயர் கொண்டது. முதல் உலகப் போரின் போது, மெசப்படோமியாவிலும், அமெரிக்காவின் காதர் கட்சியிலும், இக்கொடி, இந்தியாவின் சின்னமாக, நிலை கொண்டது.
பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்து தொடங்கிய சுயாட்சிப் போராட்டத்தில் ஐந்து சிவப்பு நிற நீள்வடிவங்களும், நான்கு பச்சை நிற நேர் கோல் நீள்வடிவங்களும் கொண்ட மற்றுமொரு கொடி பயன்பாட்டுக்கு வந்தது. மேல் இடது மூலையில், ஆங்கிலேய பேரரசிடம் இருந்து சுயாட்சி பெறுவதைக் குறிக்கும் வகையில், யூனியன் ஜாக் வடிவம் அமைந்தது. வெள்ளை நிறத்தில் பிறைநிலா வடிவமும் நட்சத்திர வடிவமும் மேல் வலது பாகத்தில் அமைந்தன. மேலும் ஏழு வெள்ளை நட்சத்திரங்கள், இந்துக்கள் புனிதமாகக் கருதும் சப்தரிஷி நட்சத்திர குழு அமைப்பு வடிவில் உருவாக்கப்பட்டது. இக்கொடி, அநேகமாக யூனியன் ஜாக் சின்னத்தைக் கொண்ட காரணத்தினால் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறவில்லை.
ஒரு வருடம் கழித்து, 1916ல், மச்சிலிப்பட்டினத்தின் (இன்றைய ஆந்திர பிரதேசம்) பிங்கலி வெங்கய்யா அவர்கள், இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவானதொரு கொடியை வடிவமைக்க முயன்றார். அவரது தளராத முயற்சிகளைக் கண்ட உமர் சொபானியும் எஸ்.பி.பொம்மஜியும், இந்திய தேசியக் கொடி நெறி அமைப்பைத் தொடங்கினர். வெங்கய்யா, மகாத்மா காந்தியிடம் கொடிக்கான சம்மதத்தைக் கோரிய போது, மகாத்மா, இந்தியாவின் எழுச்சியையும் தாழ்ச்சியின் விடுதலையையும் குறிக்கும் வகையில் சக்கரத்தைச் சேர்க்குமாறு வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, பிங்கலி வெங்கய்யா அவர்கள், சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு சிவப்பு, பச்சை ஆகிய இரு வர்ணங்களைக் கொண்ட ஒரு கொடியை உருவாக்கினார்.
அக்கொடி, இந்திய மதங்கள் அனைத்தையும் நிலையுறுத்தவில்லை என மகாத்மா காந்தி கருதவே, புதிய கொடி ஒன்று வடிவமைக்கப்பட்டது. இக்கொடியில் வெள்ளை நிறம் மேலேயும், பச்சை நிறம் நடுவிலும், சிவப்பு நிறம் கீழேயும், வெவ்வேறு மதங்களைச் சமமாகக் குறிக்குமாறு அமைந்தன. அதில் சக்கரமோ எல்லா வர்ணங்களிலும் இடம் பெற்றன. இந்தக் கொடி, ஆங்கிலேய பேரரசிடம் இருந்து விடுதலைக்காக போராடிய அயர்லாந்தின் கொடிக்கு சமமாக உள்நோக்கத்தை கொண்டவாறு அனுசரிக்கப்பட்டது. முதன்முதலாக அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் ஏற்றப்பட்ட இக்கொடி, இந்திய சுதந்திர போராட்டத்தின் மையமாகப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தைக் கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தைக் குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931-இல் காங்கிரசு ஆட்சிக் குழு, அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும் அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாகக் காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை.

1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை நிறங்களுடன் நடுவில் இராட்டையுடன் கூடிய கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும் வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும் பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன.[5]
அதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்குப் பதிலாகத் தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசியப் படை பயன்படுத்தியது. சக்கரத்திற்குப் பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது. இந்தக் கொடி தேசியக் கொடியா இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது.
1947-இல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத் அவர்களைத் தலைவராகவும் மௌலானா அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, சி. ராஜகோபாலச்சாரி, கே.எம். முன்ஷி, மற்றும் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரையும் குழுநபர்களாகக் கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதித்தது. 23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம் மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஜூலை 14, 1947-இல் முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் கொடியைச் சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது. மேலும் இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது. முன் இருந்த சக்கரத்திற்கு பதில், சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப் பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய தேசியக் கொடி முதல் முதலாகச் சுதந்திர இந்தியாவில் ஆகஸ்ட் 15, 1947-ஆம் நாள் கொடியேற்றப்பட்டது. இதனை வடிவமைத்தவர் பத்ருதின் தியாப்ஜி ஆவார் இதன் வடிவமைப்பைக் குழுவின் முன் சமர்ப்பித்த பின் இதன் மாதிரியை தனது மனைவி சுரையா தியாப்ஜியின் மூலம் கதர் துணியில் உருவாக்கி ஒப்படைத்தார்.[6].
கொடி தயாரிப்பு முறை[தொகு]
அளவு[7][8] | அகலம் மற்றும் உயரம் (மிமீ) | அசோக சக்கரத்தின் விட்டம் (மிமீ)[4] |
---|---|---|
1 | 6300 × 4200 | 1295 |
2 | 3600 × 2400 | 740 |
3 | 2700 × 1800 | 555 |
4 | 1800 × 1200 | 370 |
5 | 1350 × 900 | 280 |
6 | 900 × 600 | 185 |
7 | 450 × 300 | 90[9] |
8 | 225 × 150 | 40 |
9 | 150 × 100 | 25[9] |
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இநத அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.
கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.
காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்.
காந்திஜியின் கருத்து[தொகு]
சுதந்திர இந்திய தேசியக் கொடியில் கைராட்டைக்கு இடம் இல்லாதது குறித்த மனத்தாங்கலை காந்திஜி தமது அரிஜன் பந்து (3-8-1947) இதழில் பதிவு செய்திருக்கிறார்.[10]
மேலும் பார்க்கவும்[தொகு]
விளக்க அடிக்குறிப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ https://www.vikatan.com/literature/politics/76267-behind-the-story-of-suraiya-who-designed-the-national-flag |https://www.vikatan.com/
- ↑ https://www.vikatan.com/literature/politics/76267-behind-the-story-of-suraiya-who-designed-the-national-flag இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த சுரையா... மறைக்கப்பட்ட உண்மைகள் |https://www.vikatan.com/
- ↑ https://www.scoopwhoop.com/inothernews/surayya-tayyabji-designer-of-the-indian-tricolour/#.57c8zl51m This Woman Made A Big Contribution In Designing The Indian Flag And Sadly, No One Knows Who She Is
- ↑ 4.0 4.1 Bureau of Indian Standards (1968). IS 1 : 1968 Specification for the national flag of India (cotton khadi). Government of India. https://archive.org/details/gov.in.is.1.1968. பார்த்த நாள்: 23 July 2012.
- ↑ பிங்கலி வெங்கய்யா: தேசியக் கொடியை வடிவமைத்தவர்
- ↑ https://www.scoopwhoop.com/inothernews/surayya-tayyabji-designer-of-the-indian-tricolour/#.57c8zl51m This Woman Made A Big Contribution In Designing The Indian Flag And Sadly, No One Knows Who She Is
- ↑ "Flag Code of India". Ministry of Home Affairs, Government of India. 25 January 2006. 10 January 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 October 2006 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "IS 1 (1968): Specification for The National Flag of India (Cotton Khadi, PDF version)" (PDF). Government of India. 22 October 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 9.0 9.1 Bureau of Indian Standards (1979). IS 1 : 1968 Specification for the national flag of India (cotton khadi), Amendment 2. Government of India.
- ↑ ராட்டைச் சின்னமற்ற தேசியக் கொடி!
பொதுவான மற்றும் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்கள்[தொகு]
- Arundhati Virmani (2008). A National Flag for India: Rituals, Nationalism and the Politics of Sentiment. Delhi, Permanent Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7824-232-3.
- Virmani, Arundhati (August 1999). "National Symbols under Colonial Domination: The Nationalization of the Indian Flag, March–August 1923". Past & Present 164 (164): 169–197. doi:10.1093/past/164.1.169. https://archive.org/details/sim_past-present_1999-08_164/page/169..
- Roy, Srirupa (August 2006). "A Symbol of Freedom: The Indian Flag and the Transformations of Nationalism, 1906–". Journal of Asian Studies 65 (3). பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9118. இணையக் கணினி நூலக மையம்:37893507.
- Jha, Sadan (25 October 2008). "The Indian National Flag as a site of daily plebiscite". Economic and Political Weekly: 102–111. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. இணையக் கணினி நூலக மையம்:1567377.
- "Indian Standards" (PDF). Bureau of Indian Standards. 1 July 2005 அன்று பார்க்கப்பட்டது.
- "India". Flags of the World. 30 June 2005 அன்று பார்க்கப்பட்டது.
- "India: Historical Flags". Flags of the World. 30 June 2005 அன்று பார்க்கப்பட்டது.
- "Flying the real tricolour". Rediff.com. 1 July 2005 அன்று பார்க்கப்பட்டது.
- "My Flag, My Country". Rediff.com. 1 July 2005 அன்று பார்க்கப்பட்டது.
- Royle, Trevor (1997). The Last Days of the Raj. John Murray. பக். 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7195-5686-9. https://books.google.com/books?id=T-W5QgAACAAJ.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: இந்திய தேசியக் கொடி |
![]() |
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: |
- "National Flag". National Portal of India. Government of India. 26 January 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 February 2010 அன்று பார்க்கப்பட்டது.
- "History of Indian Tricolour". National Portal of India. Government of India. 9 August 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 August 2010 அன்று பார்க்கப்பட்டது.
- "Flag Code of India" (PDF). Ministry of Home Affairs (India). 19 October 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 26 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
- வார்ப்புரு:FOTW