இராச நாகம்
இராச நாகம் | |
---|---|
![]() | |
Specimen from Kaeng Krachan National Park | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாம்பினம்
|
பேரினம்: | பாம்பு திண்ணி Gunther, 1864
|
இனம்: | O. hannah
|
இருசொற் பெயரீடு | |
Ophiophagus hannah (Cantor, 1836) | |
![]() | |
கருநாகம் பரவலாக காணப்படும் இடங்கள்
| |
வேறு பெயர்கள் | |
Genus-level:
|
இராச நாகம் (King Cobra) (Ophiophagus hannah) அல்லது கருநாகம்[2] (ⓘ) என்பது ஆசியாகண்டத்தில் மட்டுமே வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இது உலகின் நீளமான விஷப்பாம்பு (longest venomous snake) மட்டுமல்லாமல், அதிக எடையுள்ள பாம்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இதன் சராசரி நீளம் 3.18 முதல் 4 மீட்டர் (10.4 - 13.1 அடிகள்) ஆகவும், பதிவான மிக அதிக நீளம் 5.85 மீட்டர் (19.2 அடிகள்) ஆகவும் உள்ளது. [3] பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்[4][5]
Ophiophagus இனக்குழுவின் கீழ் வருவதால், அதன் பெயரில் "நாகம்" (Cobra) இருந்தாலும், இது உயிரியல் முறையில் உண்மையான "நாகப்பாம்பு" (Cobra) இனத்தை சேர்ந்த பாம்பு அல்ல. இந்திய துணைக் கண்டத்திலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் சீனா வரை பரவியுள்ள இந்த பாம்பு, பரவலாக காணப்பட்டாலும், பொதுவாக மனிதர்களுடன் எதிர்ப்படுவதில்லை. இராச நாக பாம்புகளின் உடல் நிறம் மற்றும் வடிவம் அதன் வாழ்விடத்தைப் பொறுத்து மாறுபடுகிறது – சில பாம்புகள் வெள்ளை வரிகளுடன் கருப்பாக காணப்படலாம், மற்றவை முழுவதும் ஒரேவிதமான பழுப்பு-சாம்பல் நிறத்திலும் இருக்கலாம். சமீபத்திய ஆய்வுகளுக்குப் பிறகான மறுமதிப்பீட்டின் (Taxonomic Re-evaluation) படி, இது தனித்த இனமாக அல்லாது, இனக்குழுவாக (Species Complex) மாறியுள்ளது[6]. அதன் முற்பிறப்பினங்கள் (ancestry) மற்றும் வடிவ மாறுபாடுகள் காரணமாக, இதனை முறையாக நான்கு தனிப்பட்ட இனங்களாகப் பிரிக்க வாய்ப்புள்ளது.ஆனால், வாழ்விட நாசம் (Habitat Destruction) காரணமாக, இது IUCN சிவப்பு பட்டியலில் (Red List) 2010 முதல் அழிவாய்ப்பு இனம் (Vulnerable) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கநூல் குறிப்பு
[தொகு]- கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் தனக்குக் கிட்டிய நீலநாகம் உரித்த தோலைத் தான் அணிந்துகொள்ளாமல் தன் நாட்டுக் குற்றால நாதருக்கு அணிவித்து மகிழ்ந்தானாம்.[7]
அமைப்பு
[தொகு]

பொதுவாக இந்த பாம்புகள் 12 முதல் 13 அடி நீளம் வரை வளருகின்றன. 6 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கின்றன. இவற்றில் தென் தாய்லாந்து நாட்டில் உள்ள நக்கோன்-சி-தம்மாரத் மலையில் பிடிபட்ட ஒரு பாம்பு 18.5 அடி நீளம் இருந்தது. இதற்கு மேலாக லண்டன் உயிரினக்காட்சி சாலையில் இருந்த ஒரு பாம்பு 18.8 அடி நீளம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இவை பெரும்பாலும் மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது பாசியின் பச்சை நிறத்திலான உடலில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தினாலான பட்டைகளுடன் காணப்படுகின்றன[8]. இப்பாம்புகள் மிகப்பெரிய கண்களுடன் வட்டவடிவ கட்பார்வை கொண்டனவையாகும். கருநாகத்தின் தோலில் பாம்புச் செதில்கள் காணப்படும். பாம்புகளில் இச்செதில்களின் எண்ணிக்கையும் மற்றும் வடிவமும் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்தை வேறுபடுத்திக் கண்டறிய உதவுகிறது. இந்த நிற அமைப்பு இளம் பருவத்தில் மிகவும் சற்று வெளிச்சமாக காணப்படும். ஆண் இனம் பெண்ணை விட அதிக நீளமாகவும், தடிமனாகவும் இருக்கின்றன. இவற்றின் வாழ்நாள் 20 ஆண்டுகள் ஆகும்.
பழக்கவழக்கங்கள்
[தொகு]இவை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மாஞ்சோலை மலைக்காடுகளிலும் காணப்படுகின்றன.பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வசிக்கும் இவை, நீர் நிறைந்த பகுதிகளை ஒட்டியே தனது வாழ்விடத்தை அமைத்துக்கொள்கின்றன. பெருகிவரும் காடுகளை ஆக்கிரமிக்கும் முறைகளால் இவ்வினம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இருப்பினும் இவ்வினம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் அழிந்துவரும் உயிரினங்களுக்கான 'சிகப்பு பட்டியலில்' சேர்க்கப்படவில்லை.
வேட்டையாடும் முறை
[தொகு]இந்த இனமானது, மற்ற பாம்புகளைப் போலவே தனது இரையை அதன் மணத்தைக் கொண்டே அறிகின்றது. இதன் இரட்டை நாக்குகளில் மணம் தரும் வேதிப்பொருள்களை உணரும் நுகரணுக்கள் உள்ளன. இவற்றில் இருந்து வரும் செய்தியை வாயின் மேல் அண்ணத்தில் உள்ள யாக்கோப்சன் உறுப்பு என்னும் நுகர்பொறி உணர்கின்றது.[3] தன் இரையின் மணத்தை உணர்ந்தபின் இரட்டை நாக்கை அசைத்து, இருகாது கேள்விபோல் (stereo) உணர்ந்து துல்லியமாய் இரை எங்குள்ளது என்று உணர்கின்றது இதன் நுண்ணிய பார்வைத்திறன், 300 அடிக்கு அப்பால் உள்ள இரையின் சிறு அசைவைக்கூட அறியும் திறன் கொண்டது. மற்ற பாம்புகளை போலவே இவற்றிற்கும் நான்கு புறமும் வாய்த்தசைகள் விரியும் அமைப்பு உள்ளது. இதன் மூலம் இவை முழு இரையையும் ஒரே முறையில் விழுங்கிவிடுகின்றன. மேலும் இதன் வாய்த்தசைகள், இதன் தலையை விட பெரியதாக விரியும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் நாள் முழுவதும் வேட்டையாடும் இவற்றை, இரவில் காண்பது அரிது.
இவை ஒரு முறை உணவை உட்கொண்டால், அதன் பிறகு பலநாட்கள் உண்ணாமல் உயிர் வாழும் தன்மை கொண்டவை.
தற்காப்பு முறைகள்
[தொகு]பொதுவாக இவ்வகை பாம்புகள் தனது இரையைத் தவிர மற்றவர்களை தாக்குவதில்லை. எதிரிகள் இதன் வழியில் குறுக்கிடும் பொழுது, தன்னை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு இவை தனது உடலை, தரையில் இருந்து பல அடி எழுந்து உயர்த்தி காட்டுகின்றன. பின் படம் எடுத்து காட்டுகின்றன. மேலும் 'ஸ்ஸ்ஸ்' என்று காற்றொலி எழுப்புகின்றன. தனது சக்தியை, எதிரிகளுக்கு காட்டும் பொருட்டே இவை இவ்வகையான செயல்களில் ஈடுபடுகின்றன. இதையும் தாண்டி எதிரி தன்னை நெருங்கும்பொழுதே, இவை அவற்றை தாக்கி அதன் உடலில் நஞ்சைப் பாய்ச்சுகின்றன.
நஞ்சு
[தொகு]
கருநாகத்தின் நஞ்சானது மிகவும் கொடியது. இது தனது ஒரே கடியில் மனிதனை கொல்ல வல்லது. இது கடித்த சில நிமிடங்களிலேயே மனிதன் கோமா நிலைக்கு சென்று மரணத்தை தழுவிவிடுவான். மேலும் ஆசிய யானைகளும் இது கடித்த 3 மணி நேரத்தில் இறந்து விடும். இதன் நஞ்சானது ஆப்பிரிக்க கறுப்பு மாம்பா பாம்புகளை விட 5 மடங்கு அதிகமானது.
உண்மையில் இதன் நஞ்சானது குறைந்த அளவு நச்சு தன்மையே கொண்டதுதான். ஆனால் இவ்வகை கருநாகங்கள் ஒரு முறை எதிரியைக் கடிக்கும் பொழுது, ஏறத்தாழ 6 முதல் 7 மில்லி அளவு நஞ்சை அதன் உடலில் செலுத்தவல்லது. இதன் காரணமாகவே இதன் எதிரிகள் உடனடியாக மரணத்தை தழுவுகின்றன.
இதன் நஞ்சை முறிக்க இதுவரை இரண்டு மருந்துகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலாவது தாய்லாந்து நாட்டில் இயங்கும் செஞ்சிலுவை சங்கம் கண்டுபிடித்தது. மற்றது இந்திய மத்திய ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்தது. ஆனால் இவை இரண்டும் பரவலாக கிடைக்காத காரணத்தால், இதன் கடி பட்ட பலரும் இறந்து விடுகின்றனர்.
பொதுவாக எல்லா நச்சுயிரிகளுக்கும் நஞ்சை ஆக்கும் சிறப்புச் சுரப்பி அமைந்துள்ளதைப் போன்றே நல்ல பாம்பிற்கும் அதன் தலைப்பகுதியில் நஞ்சுச் சுரப்பி அமைந்துள்ளது. இதன் வாயின் மேற்பரப்பில் இதன் நஞ்சுப்பை (venom sac) அமைந்துள்ளது. இந்த நஞ்சுப்பையுடன் இணைந்த குழாய் உட்புறம் முற்றிலும் துளையுடைய முன்புற பற்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த முன்புறப் பற்களின் முனை மிகக் கூர்மையாகவும் துளையுடையதாகவும் அமைந்துள்ளது. இவை தங்களின் எதிரிக்கு காயத்தை ஏற்படுத்துவதற்காகவே தீண்டுகிறது. அதன் பிறகு வாயின் உட்புறம் அமைந்த கடைவாய் பற்களைக் கொண்டு அதன் மேற்புறத்தில் அமைந்த நஞ்சுப்பையை அழுத்துவதன் மூலம் வெளியேறும் நஞ்சு அதனுடன் இணைக்கப் பட்ட குழாய் மூலம் வெளியேறி துளையுடைய முன்பற்களை அடைகின்றது. அப்பொழுது தீண்டியதால் ஏற்பட்ட காயத்தின் மூலம் நஞ்சு இரத்த ஓட்டத்தில் கலந்தவுடன் முதலில் மத்திய நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதுக் தீண்டியவுடன் பொதுவாக சாவு பயம் ஏற்பட்டு விடுவதனால் இதயம் மிக வேகமாக துடிக்க ஆரம்பிக்கின்றது. இதன் மூலமும் இரத்தம் விரைவுப் படுத்தப்பட்டு விரைவாக நஞ்சு உடல் முழுதும் பரவி ஆபத்தையும் விரைவுப் படுத்துகின்றது.
பாம்பின் நஞ்சு செரிந்த புரோட்டீன்களினால் (highly protin) ஆன பொருளாகும். இது நியூக்ரோ டாக்ஸிஸ் என்று அழைக்கப்படுகின்றது. புரதம் என்ற ஒரு சத்துப் பொருள் மனிதன் உயிர்வாழ மிகவும் இன்றியமையாதது. நாம் உண்ணக்கூடிய இறைச்சி மற்றும் தாவர எண்ணெய் போன்றவற்றில் புரதங்கள் அடங்கியுள்ளன. இருப்பினும் நம் உடல் அமைப்பை பொருத்தவரை புரதமோ, வைட்டமின்களோ, அல்லது தாதுப் பொருள்களோ நம் வாயின் மூலம் உட்கொள்ளப்பட்டு வயிற்றில் செரிமானம் செய்யப்பட்டு நம் உடலுக்குத் தேவையான மற்றொருப் பொருளாக மாற்றப்பட்டு (metabolism) தேவையற்றவை அகற்றப்பட்டு அதன் பிறகுதான் இரத்தில் கலக்க இயலும். ஆனால் பாம்பு கடிப்பதனால் நஞ்சு (highly protin) இரத்தத்தில் நேரடியாகக் கலப்பதனாலும் நம் உடலின் இயல்பிற்கு மாற்றமாக இருப்பதனாலும் நம் உடலின் திசுக்களும் கல்லீரலும் நரம்பு மண்டலங்களும் பாதிப்படைந்து இறப்புக்கு வழிவகுக்கிறது. பாம்பின் நஞ்சு பல்வகை மருத்துவத்திற்குப் பயனாகின்றது. பாம்பு கடிக்கான மருந்து ஆக்கத்திலும் (anti venom) வலி நிவாரணம், மூட்டுதசை மற்றும் புற்றுநோய்க்கான மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. கிராம் நல்ல பாம்புடைய விஷம் 50-க்கும் மேற்பட்ட மனிதர்களை கொல்ல போதுமானதாகும். ஒரு முறை இவை கொட்டுவதனால் பிரயோகம் செய்யப்படும் நஞ்சு (ஏழு டன் எடை கொண்ட மிகப்பெரிய யானையையே சில மணித்துளிகளில் இறக்கச்செய்யப் போதுமானது. முட்டையிலிருந்து வெளிவந்த சிறிய பாம்புடைய நஞ்சு, பெரிய பாம்பின் நஞ்சைப் போன்றே செறிவு மிக்கதாகும்.
இனப்பெருக்கம்
[தொகு]இந்த இனம் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கின்றது. தாய் கருநாகமானது தனது நீள உடல் முழுவதையும் மலையடுக்கு போல வட்டமாக சுருட்டிக்கொண்டு அதன் உள்ளே முட்டைகளை இடுகின்றது. ஒரே நேரத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இடும். தாய் தான் இட்ட முட்டைகளை வேறு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும், அதற்குள்ளே இருக்கும் வெப்பம் சீராக மாறாமல் 28 °C (82 °F)இருக்குமாறும், காய்ந்த இலைகளைக் குவித்து அதனுள் முட்டைகளை வைத்திருக்கும். இதைப் போன்ற தொரு கூட்டை, இப்பாம்பைத்தவிர, எந்த சோதனைச்சாலைகளில் முயற்சிகள் எடுத்தும் கட்ட இயலவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். பெரிய விலங்குகள் அருகில் வந்தாலொழிய இவை, அடைக்காப்பதை விட்டு விலகுவதில்லை. இவ்வினத்தின் இனச்சேர்க்கை சனவரியிலிருந்து மார்சு மாதம் வரை நடக்கும், பின் ஏப்ரலிலிருந்து மே மாதம் வரையில் பெண் முட்டைகளை இடும்[8].
சமூக மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம்
[தொகு]இந்தியாவின் தேசிய ஊர்வன விலங்காக (National Reptile of India) அறிவிக்கப்பெற்றுள்ளது.[9]. இந்தியா, வங்காளதேசம், இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் மதபூர்வ கதைகளில் (Mythology) மற்றும் நாட்டுப்புற வழக்கங்களில் (Folk Traditions) முக்கிய இடம் பெற்றுள்ளது.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stuart, B., Wogan, G., Grismer, L., Auliya, M., Inger, R.F., Lilley, R., Chan-Ard, T., Thy, N., Nguyen, T.Q., Srinivasulu, C. & Jelić, D. (2012). Ophiophagus hannah. The IUCN Red List of Threatened Species. Version 2014.3.
- ↑ What would you call global warming in Tami? (ஆங்கிலம்) காண்க: பத்தி:3, வரி:4-6.
- ↑ 3.0 3.1 Mehrtens, John (1987). Living Snakes of the World. New York: Sterling. p. 263. ISBN 0-8069-6461-8.
- ↑ மற்ற வகை பாம்புகள் முட்டை, பால் என சாப்பிட்டாலும், "ராஜநாகம்' பாம்பை மட்டுமே உணவாக உட்கொள்ளும். அதிலும், சாரை பாம்புகளையே பெரும்பாலும் உணவாக சாப்பிடும். இவ்வகை பாம்புகள் இனப்பெருக்க காலத்தின்போது, 30 முட்டைகள் வரை இடும். இதன் விஷம் ஒரே நேரத்தில் பலரை கொல்லும் தன்மை கொண்டது. இது தெற்கு ஆசியாவில் காணப்படுகிறது."Ophitoxaemia (venomous snake bite)". Retrieved 2007-09-05.
- ↑ Sean Thomas. "One most Dangerous Snakes in the World". Retrieved 2007-09-05.
mortality varies sharply with amount of venom involved, most bites involve nonfatal amounts
- ↑ Varma, Gbsnp (2024-11-26). "King cobra has four species, not one" (in en). Nature India. doi:10.1038/d44151-024-00196-3. https://www.nature.com/articles/d44151-024-00196-3.
- ↑ <poem> நீல நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் ஆர்வ நன்மொழி ஆய் - சிறுபாணாற்றுப்படை (96-99)
- ↑ 8.0 8.1 Khaire, N. 2006. A Guide to the Snakes of Maharashtra, Goa and Karnataka. Indian Herpetological Society, Pune, India. Photographic guide with 61 spp.
- ↑ "Significant symbols". The Hindu. 8 August 2011. Retrieved 28 January 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]- கருநாகத்தின் சீற்றம் - ஒலி பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம்
- பாம்புகளும் வகைகளும்