திருக்குறள் காலிங்கர் உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குறள் காலிங்கர் உரை என்பது திருக்குறளுக்கு உரை எழுதிய பண்டைய உரையாசிரியர்களுள் ஒருவரான காலிங்கர் என்பவர் திருக்குறளுக்கு எழுதிய உரையைக் குறிக்கும். இவர் திருக்குறளுக்கு எழுதிய உரை மணக்குடவர் உரைக்கும் பிற்பட்டது என்று அறிஞர் கருதுகின்றனர்.

பெயர் வடிவங்கள்[தொகு]

இவரது பெயர் "காலிங்கர்" என்று பொதுவாக எழுதப்பட்டாலும், ச. தண்டபாணி தேசிகர் தம் "திருக்குறள் உரைக் களஞ்சியம்" நூலில் "காளிங்கர்" என்றே இப்பெயரை எழுதுகிறார்.

காலிங்கர் திருவள்ளுவரை "வள்ளுவக் கடவுள்" என்று அழைப்பது அவர் வள்ளுவர் மட்டில் கொண்டிருந்த பக்தியைக் காட்டுகிறது.

காலிங்கரின் திருக்குறள் அமைப்பு[தொகு]

மணக்குடவர் திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பால்களாகப் பிரித்திருப்பது போலவே, காலிங்கரும் செய்கிறார்.


காலிங்கர் அறத்துப்பாலைப் பிரிக்கும் முறை[தொகு]

பண்டைய திருக்குறள் உரையாசிரியரான மணக்குடவர் அறத்துப்பாலைப் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்று நான்காகப் பகுத்துள்ளது போன்றே, காலிங்கரும் அறத்துப்பாலை நான்கு இயல்களாகப் பகுக்கின்றார்.

காலிங்கர் பொருட்பாலைப் பிரிக்கும் முறை[தொகு]

காலிங்கர் திருக்குறளின் பொருட்பாலைப் பின்வருமாறு பகுக்கின்றார்:

இயல் பெயர் அதிகாரங்கள் அமைப்பு
அரசியல் 39 முதல் 63 முடிய
அமைச்சியல் 64 முதல் 108 முடிய

இந்தப் பாகுபாடு மணக்குவர் செய்த பாகுபாட்டிலிருந்து வேறுபடுகிறது. மணக்குடவர் திருக்குறளின் பொருட்பாலை ஆறு இயல்களாகப் பிரித்தார். அரசியல் (39 -63 அதிகாரங்கள்), அமைச்சியல் (64 -73 அதிகாரங்கள்), பொருளியல் (74 - 78 அதிகாரங்கள்), நட்பியல் (79 - 83 அதிகாரங்கள்), துன்பவியல் (84 -95 அதிகாரங்கள்), குடியியல் (96 - 108) அதிகாரங்கள்.

காலிங்கரோ, மணக்குடவரிலிருந்து மாறுபட்டு, 39 - 63 அதிகாரங்களை அரசியல் என்னும் இயல் தலைப்பின்கீழும், எஞ்சிய 64 - 108 அதிகாரங்களை அமைச்சியல் என்னும் தலைப்பின்கீழும் அமைத்துள்ளார்.

இவ்வாறு, காலிங்கர், அமைச்சியல் என்பதில் மணக்குடவர் சுட்டும் ஐந்து பகுப்புகளை ஒன்றாக்கிக் கொள்கின்றார்.

காலிங்கர் காமத்துப்பாலைப் பிரிக்கும் முறை[தொகு]

காமத்துப்பால் இயல் பகுப்பில் உரையாசிரியர்களிடையே பெருத்த வேறுபாடு காணப்படுகின்றது. மணக்குடவர் காமத்துப்பாலைக் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனப் பகுத்து ஒவ்வோர் இயலுக்கும் ஐந்தைந்து அதிகாரங்களாகக் கொண்டுள்ளார் என்பர்.

காலிங்கர் மேற்கூறிய பகுப்பினைக் கொள்ளாமல் "தலைமகன் கூற்று" என்னும் தலைப்பின்கீழ் 109 - 115 அதிகாரங்களையும், "தலைமகள் கூற்று" என்னும் தலைப்பின்கீழ் 116 - 127 அதிகாரங்களையும், "இருபாற் கூற்று" என்னும் தலைப்பின்கீழ் 128 - 133 அதிகாரங்களையும் கொணர்கின்றார்.

இந்தப் பகுப்பு திருவள்ளுவமாலையில் மோசிகீரனார் கூறும் பகுப்போடு ஒத்து வருகின்றது. மோசிகீரனார் பாடல் இது:

ஆண்பால் ஏழ் ஆறிரண்டு பெண்பால் அடுத்தன்பு
பூண்பால் இருபால் ஓர் ஆறாக - மாண்பாய
காமத்தின் பக்கவொரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நமத்தின் வள்ளுவனார் நன்கு.

காலிங்கர் அமைப்புப்படி இயலுக்குள் வரும் அதிகார வைப்பு முறை[தொகு]

திருக்குறளின் இயல்களில் வரும் அதிகார வைப்புகளிலும், அதிகார முறை வைப்புகளிலும் மணக்குடவர் போக்குக்கும் காலிங்கரின் போக்குக்கும் வேறுபாடுகள் உள்ளன.

இனியவை கூறல்
அடக்கமுடைமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை

ஆகிய ஐந்து அதிகாரங்களைத் துறவறவியலுள் முறையே 26, 27, 30, 31, 32 -ஆவது அதிகாரங்களாக மணக்குடவர் அமைத்துள்ளார்.

ஆனால், காலிங்கரும் பிற பழைய உரையாசிரியர்களும் இந்த அமைப்பு முறையை மாற்றி, இவற்றை இல்லறவியலில் முறையே 10, 13, 17, 18, 19 - ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.

அதேபோல், மணக்குடவர் இல்லறவியலில் வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளாமை என்னும் அதிகாரங்களை முறையே 10, 16, 17, 18, 19, 20 ஆம் அதிகாரங்களாக அமைத்திருக்க, காலிங்கரும் பிற பழைய உரையாசிரியர்களும் அவற்றை மாற்றி, துறவறவியலில் முறையே 30, 31, 32, 33, 26, 29 -ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.

மணக்குடவரின் குறள் வைப்பு முறை[தொகு]

அதிகாரங்களுக்குள் வரும் குறள்களை வரிசைப்படுத்தி வைப்பதில் மணக்குடவர் ஒரு முறையைக் கையாளுகின்றார். ஆனால் காலிங்கர் உள்ளிட்ட பிற பழைய உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணப்படி குறள் வைப்பு வரிசைமுறையை மாற்றியுள்ளார்கள்.

திருக்குறளின் முதல் அதிகாரத்தை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்:

திருக்குறள் முதல் அதிகாரத்தில் வரும் குறள்களின் முதல் சீர்கள் மணக்குடவர் வைப்பு முறை பரிப்பெருமாள் வைப்பு முறை பரிதியார் வைப்பு முறை காலிங்கர் வைப்பு முறை பரிமேலழகர் வைப்பு முறை
அகர முதல எழுத்தெல்லாம் 1 1 1 1 1
கற்றதனால் ஆய பயன் என்கொல் 2 2 2 2 2
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 3 3 3 3 3
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு 6 6 5 7 4
இருள் சேர் இருவினையும் சேரா 7 7 6 6 5
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 8 8 7 7 6
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு 4 4 6 4 7
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு 5 5 10 9 8
கோளில் பொறியில் குணமிலவே 10 10 8 5 9
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் 9 9 9 10 10

காலிங்கர் கொள்ளும் திருக்குறள் பாடமும் வேறுபாடுகளும்[தொகு]

தலைமுறை தலைமுறையாக ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு வந்த திருக்குறளின் படிகள் பல பாட வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில் வியப்பில்லை.

என்றாலும், மணக்குடவர் திருக்குறளின் முதல் உரையாசிரியராக விளங்குவதால் அவர் கையாளுகின்ற மூல பாடத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் அவருடைய மூல பாடத்திலிருந்து, பின் வந்த பழைய உரையாசிரியர்களான பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் பின்வரும் எண்ணிக்கையில் வேறுபடுவதை அறிய முடிகிறது:

மணக்குடவர் குறள் பாடத்திலிருந்து வேறுபாடுகள்

உரையாசிரியர் குறள் பாட வேறுபாடுகளின் எண்ணிக்கை
பரிப்பெருமாள் 16
பரிதியார் 20
காலிங்கர் 171
பரிமேலழகர் 120

மேலே காட்டிய பட்டியலிலிருந்து காலிங்கரும் பரிமேலழகரும் தாம் விரும்பியவாறு பாடங்களை மாற்றியுள்ளனர் என அறிய முடிகின்றது. இந்தப் பாட வேறுபாடுகளுக்கு ஒருவேளை அவர்களுக்குக் கிடைத்த சுவடிகளும் காரணமாக இருக்கலாம்.

இதிலிருந்து, பிற்காலத்தில் திருக்குறளுக்கு முறை மாறிய உரைகள் எழுந்ததற்கு வித்திட்ட பழைய உரையாசிரியர்ளுள் காலிங்கரும் ஒருவர் என்பது தெளிவாகிறது.

காலிங்கரின் உரை நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு[தொகு]

அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு (குறள்: 343)

என்னும் குறளுக்கு காலிங்கர் எழுதும் உரை இது:

இனி இதன் உட்கருவியாகிய ஐம்புலன்களையும் துறவுநெறிக்குப் புறவழியாகிய ஐம்பொறிகளின் நுகர்ச்சியைப் பரவாமல் தனது உள்ளத்தால் செறுத்தல் வேண்டும்; மற்று அங்கனம் செறுத்தபின் அவ்வுள்ளந்தான் முன்னின்று விரும்புவதாகிய வேட்கைகளெல்லாம் ஒருதன்மைப்பட விடுதல் வேண்டும்; எனவே அவ்வுள்ளமானது தானும் ஒருவழிப்பட்டு நிற்க வேண்டும் என்பது பொருளாயிற்று என்றவாறு.

இந்த உரையை மதிப்பிடும் வகையில் ச. தண்டபாணி தேசிகர் [1]கீழ்வருமாறு கூறுகிறார்:

காளிங்கர் உரை பொறிபுலன் மனமாகிய கருவி - காரியம் - கருத்தன் இலக்கணங்களையும் அவற்றின் இயைபையும் நன்கு விளக்குதலின் சிறப்புடையது. ஏனையோர் உரைகள் விடவேண்டுவன எவை என விளக்குதலில் பெரிதும் வேறுபடுகின்றன. பரிமேலழகர் "நுகர்ச்சிக்காகத் தாம் தேடிவைத்துள்ள பொருள்களை" என்பர். மணக்குடவர் "தாம் விரும்பிய அனைத்தையும்" என்பர். பரிதி "ஐம்புல உணர்வுகளை" என்பர். "உள்ளம் விரும்புவதாகிய வேட்கைகளை" என்பர் காளிங்கர்.

நாலடியார் பின்னர் "ஐவாய வேட்கையவா நீப்பின்" என்பதால் ஐம்பொறிகளும் ஐம்பொறிகளுடைய போகப் பொருள்களை நுகர, நுகர்ந்ததன் விளைவாய ஐவாய வேட்கை உள்ளத்திலிருக்கும் வகையில் துறவு நிலையாதாகலின் அவற்றையும் ஒருசேர விடுதல் வேண்டும் என்ற உரைகள் சிறந்தன.

மேலும் காண்க[தொகு]

மணக்குடவர் (திருக்குறள் உரையாசிரியர்)
திருக்குறள் பழைய உரைகள்
திருக்குறள் வைப்புமுறை
திருக்குறள் அமைப்பும் முறையும் (நூல்)

ஆதாரங்கள்[தொகு]

  1. ச. தண்டபாணி தேசிகர், திருக்குறள் உரைக் களஞ்சியம் - துறவறவியல்-ஊழியல், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1986, பக்கங்கள்: 303-305.


தொடர் வரிசை எண் திருக்குறளுக்கு முறை மாறிய உரை வகுத்த ஆசிரியர் உரையாசிரியர் வாழ்ந்த காலம்/உரை வெளியான ஆண்டு முறை மாறிய உரையின் தன்மை
0 மணக்குடவர் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10ஆம் நூற்றாண்டு மணக்குடவர் உரையில் அமைந்த திருக்குறள் மூலப் பதிவே முதற் பதிவு என்பதாலும், பரிமேலழகர் மணக்குடவருக்கு இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகள் பிற்பட்டவர் என்பதாலும், திருக்குறளில் காணும் பால், இயல், அதிகாரம், குறள்கள் போன்றவற்றிலான வைப்பு முறைகளை மணக்குடவர் அவர்களின் உரையை அடிப்படையாகக் கொண்டு காண்பதுதான் முறை
1 காலிங்கர் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 171.
2 பரிதியார் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 20.
3 பரிப்பெருமாள் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 16.
4 பரிமேலழகர் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவை ஏற்கின்றார். ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து பல இடங்களில் வேறுபடுகின்றார். மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 120.
5 சுகாத்தியர் T.M. Scott என்ற ஆங்கில நாட்டு அறிஞர்; தம் பெயரை "சுகாத்தியர்" என்று தமிழ்ப்படுத்திக் கொண்டார் - உரை வெளியீடு: 1889: "திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருதுரயட்டவணையும் பொழிப்புரயும்" திருக்குறளின் முப்பால்களின் பெயர்களை மாற்றினார். அறத்துப்பாலிலுள்ள பாயிரத்தைத் தனியே பிரித்து அப்பாயிரத்துக்கு "நூன்முகம்" என்று பெயரிட்டு, அந்தப் பாயிரத்தில் வரும் அதிகாரப் பெயர்களையும் மாற்றியமைத்தார். ஒவ்வொரு பாலையும் மூன்று ஆண்மைகளாகவும், ஒவ்வோர் ஆண்மையையும் மூன்று இயல்களாகவும், ஒவ்வோர் இயலையும் மூன்று உடைமைகளாகவும் பிரித்தார். எதுகை மோனை அமைவுகளில் தாம் கருதும் அமைவு கருதிப் பெரும் மாற்றங்களைச் செய்தார். அவரே புதுப்புதுக் குறள்களை உருவாக்குவதுபோல் தெரிகிறது.
6 வ. உ. சிதம்பரனார் உரை வெளியீடு: 1935: "திருக்குறள் அறத்துப்பால் விருத்தியுரையுடன்" திருக்குறளில் வரும் முதல் மூன்று அதிகாரங்களை இடைச்செருகல் என்று கருதுகிறார். எனவே, அப்பகுதியை "இடைப்பாயிரம்" என்கிறார். அறத்துப்பால் என்பதை அறப்பால் என்று மாற்றுகிறார். காமத்துப்பாலை இன்பப்பால் என்கிறார். அறத்துப்பாலில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திருக்குறள் பாடத்தைத் திருத்தியுள்ளார். சில வேளைகளில் பரிமேலழகருக்கு முற்பட்ட பழைய உரையாசிரியர்களைப் பின்பற்றி இத்திருத்தங்களைச் செய்துள்ளார்.
7 திரு. வி. கலியாணசுந்தரனார் உரை வெளியீடு: 1939: "திருக்குறள் விரிவுரை - பாயிரம்"; 1941: "திருக்குறள் விரிவுரை - அறத்துப்பால்-இல்லறவியல்" இவர் செய்த முக்கிய மாற்றம், அதிகாரங்களில் வரும் குறள்களின் வைப்பு முறையை மாற்றியது ஆகும். பரிமேலழகரைப் போலவே திரு.வி.க.வும் தம் போக்கிற்கேற்ப குறட்பாக்களின் வைப்புமுறையை மாற்றியுள்ளார். அதற்கான காரணங்களையும் கூறுகின்றார்.
8 மு. வரதராசன் உரை வெளியீடு: 1948: "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்" இவர் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலில் பால் அமைப்பு முறையைக் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்று வரிசை மாற்றி வைத்துள்ளார். ஆனால் 1949இல் மு. வரதராசனார் "திருக்குறள் தெளிவுரை" என்னும் நூலில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்றே வரிசைப்படுத்தியுள்ளார். உரை நூலில் மரபு மாறினால் குழப்பம் ஏற்படும் என்ற காரணத்தால் பழைய மரபை அப்படியே பயன்படுத்தியுள்ளார்.
9 புலவர் அ.மு. குழந்தை உரை வெளியீடு: 1949: "திருக்குறள் குழந்தையுரை" பரிமேலழகரின் வைதிக உரைக்கு மாற்றாக, திராவிட இயக்கப் பின்னணியில் முதலில் வெளிவந்த உரை "திருக்குறள் புலவர் குழந்தையுரை" ஆகும். இவர் திருக்குறளுக்குப் பகுத்தறிவு நோக்கில் எளிமையாகப் புரியும் வகையில் உரை வழங்குவதையே முதன்மை நோக்காகக் கொண்டுள்ளார். எனவே, இயல், அதிகாரப் பகுப்பு போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தவில்லை; என்றாலும் நடைமுறைக்கு ஏற்ப அதிகார வைப்பு முறையில் சில மாற்றங்களைச் செய்துகொள்கின்றார்.
10 ரா.ந. கல்யாணசுந்தரம் உரை வெளியீடு: 1955: "தொகுப்புத் திருக்குறள் (மூலமும் உரையும்)" இவரது உரை நூலில், திருக்குறளில் வரும் இறுதிச் சீர்களின் அகரவரிசையில் குறள்களை மாற்றி அமைத்து, குறட்பாக்களுக்குப் பரிமேலழகரின் உரையைத் தழுவி உரைகண்டுள்ளார். நினைவாற்றல் பயிற்சிக்கு இது பெரும் துணையாகும். இது முறைமாறிய அமைப்பு ஆயினும் பயனுள்ள ஒன்று.
11 டாக்டர் தே. ஆண்டியப்பன் உரை வெளியீடு: 1978: "குறள் கண்ட நாடும் வீடும்" இந்நூலில் இவர் பொருட்பாலில் தொடங்கி, 1330 குறள்களையும் அவற்றின் அதிகார உள்ளடக்கத்தைச் சிதைக்காமல், அதிகாரங்களை மாற்றி, நாடும் வீடும் என்பதற்குள் அடக்கி விடுகின்றார். இந்நூல் ஓர் உரைத்தொகுப்பு விளக்க ஆய்வுநூல் என்னும் முறையில் அமைகின்றது.
12 கு. ச. ஆனந்தன் உரை வெளியீடு: 1986: "திருக்குறள் உண்மைப் பொருள்" இவர் தமது திருக்குறள் உண்மைப் பொருள் என்னும் நூலில், ஒரு புதிய பகுப்பு முறையை உருவாக்கிக் கொண்டு, அறத்துப்பாலையும் பொருட்பாலையும் ஒன்றாக்கி 1080 குறள்களையும் தாம் விரும்பும் வகையில் மாற்றியமைத்து, ஒரு புதிய பார்வையில் தருகின்றார். இவர் பால், இயல், அதிகாரம், அதிகாரத்தில் வரும் குறள்கள் என்னும் அனைத்தையும் மாற்றித் தாமே ஒரு புதுப் பகுப்பை உருவாக்கிக்கொண்டுள்ளார். 108 அதிகாரங்களை 115 தலைப்புகளில் அடக்கியுள்ளார். ஒரு தலைப்பில் ஒன்றுமுதல் 23 வரை குறட்பாக்கள் உள்ளடக்கமாகியுள்ளன. காமத்துப்பாலில் வரும் குறட்பாக்களை ஒரு நாடகப் போக்கில் மாற்றி அமைத்து உரை எழுதி தனி நூலாக 1989இல் "மலரினும் மெல்லிது காமம்" என்னும் பெயரில் வெளியிட்டார். இவருடைய படைப்பை உரைநூல் என்பதைவிட ஆய்வுநூல் எனலாம்.
13 கவிரத்தின நலங்கிள்ளி உரை வெளியீடு: 1990: "பொதுமறை அமுது" இவர் இந்நூலில் திருக்குறள் அதிகார முறையில் சில முக்கிய மாற்றங்கள் செய்துள்ளார். அதற்கான காரணங்களையும் காட்டுகின்றார்.
14 டாக்டர் ஜனகாசுந்தரம் உரை வெளியீடு: 1995: "திருக்குறள் தொகுப்புரை" இந்நூலில் இவர் இறுதிச் சீர் அடிப்படையில் திருக்குறளுக்கு உரைகண்டுள்ளார். குறள் வரும் அதிகார எண், அந்த அதிகாரத்தில் குறள் பெரும் வரிசை எண் போன்றவை தரப்படவில்லை. குறளின் எண் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது.
15 சாலமன் பாப்பையா உரை வெளியீடு: 1995: "திருக்குறள் - உரையுடன்" இவர் திருக்குறள் வைப்பு முறையில் பல மாற்றங்கள் செய்து தம் உரை நூலை வெளியிட்டார். பால், இயல் என்னும் பிரிவுகளை விளக்கி, 133 அதிகாரங்களையும் ஏழு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். களவியலில் வரும் சில அதிகாரங்களைத் திருமண வாழ்க்கையில் வருமாறு இணைக்கிறார். திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை சமுதாயம் என்னும் பிரிவின்கீழ் கொண்டுவருகின்றார்.
16 ஆரூர் தாஸ் உரை வெளியீடு: 2000: "அய்யன் திருக்குறள் அகரவரிசைக் குறள் அகராதி" இவர் வெளியிட்ட குறள் அகராதி நூலில் 1330 குறட்பாக்களையும் முதல் சீர்களின் அகர வரிசையில் தொகுத்து, அக்குறள்களுக்கு உரை வரைந்துள்ளார். குறள் எண்ணுக்குப் பரிமேலழகர் முறை வைப்பையே பயன்படுத்துகிறார். முறை மாறிய உரை ஆயினும் பயன் கருதிய மாற்றம் இது.
17 இராஜகாந்தீபன் உரை வெளியீடு: 2000: "ஆளவும் வாழவும்" இவர் வெளியிட்ட நூல் மரபு சார் உரை நூல் அல்ல என்றாலும், இவர் புதுக்கவிதை நடையில் தந்துள்ள விளக்கங்கள் பல குறள்களுக்கு விளக்கங்களாகவும் அமைந்துள்ளன. இவர் திருக்குறளை ஓர் அரசியல் நூலாகக் கொண்டு, அதில் காமத்துப்பாலுக்கு இடம் இல்லை என்கிறார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால்களில் வரும் 108 அதிகாரங்களையும் 38 பெயர்களாலான பகுப்புகளுள் அடக்க முயன்றுள்ளார். இது திருக்குறளுக்கு முற்றிலும் புதிய வகையிலான முறை வைப்பு.
18 புலவர் குடந்தையான் உரை வெளியீடு: 2001: "திருக்குறள் ஒரு பகுத்தறிவுப் பார்வை" இவர் வெளியிட்ட திருக்குறள் உரை நூலில் பால் வைப்பு முறை மாற்றங்களும் அதிகார வைப்பு முறை மாற்றங்களும் ஒரு சில குறட்பா மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. மு. வரதராசனைப் போல் இவரும் காமத்துப்பாலில் தொடங்குகின்றார். அதன் பின் பொருட்பால் வருகிறது. இதில் 58 அதிகாரங்களை மட்டுமே கொண்டு, மீதமுள்ள 12 அதிகாரங்களையும் அறத்துப்பாலில் சேர்த்து அறத்துப்பாலை 50 அதிகாரங்களாகக் கொள்கிறார். இவர் அதிகார வைப்பு முறையில் தமது பார்வைக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்துள்ளார். ஆனால், அதிகாரப் பெயர்களை மாற்றவில்லை, குறளில் வரும் சொற்களையும் மாற்றவில்லை.
19 அ.மா. சாமி உரை வெளியீடு: 2003: "திருக்குறள் செம்பதிப்பு (கருத்துரை)" கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத்தில் திருக்குறள் பல முறை சிதைக்கப்பட்டது என்றும், எனவே "செம்பதிப்பு" ஒன்று தேவை என்றும் கருதி, அறிஞர்கள் ஒன்று கூடி அததகைய படைப்பை ஆக்காத நிலையில் தானாகவே அந்த முயற்சியில் இறங்கியதாக இவர் கூறுகிறார். தமது உரைக்கு "திருக்குறள் செம்பதிப்பு" என்றே பெயர் இட்டுள்ளார். பழைய உரைகாரர்களுள் முதல்வராகிய மணக்குடவரின் பாடத்தை மிகுதியாக எடுத்துக்கொண்டதாகக் கூறுகின்றார். அதிகாரங்களை மாற்றியுள்ளார். குறள்களில் சில சொல் மாற்றங்களையும் செய்துள்ளார். அதற்கான காரணங்கள் தரப்படவில்லை.
20 க.ப. அறவாணன் உரை வெளியீடு: 2006: "திருவள்ளுவம்" இவர் திருக்குறள் முழுமைக்கும் "கருத்துவழிப் பகுப்பு முறை"யில் தெளிவுரை எழுதியுள்ளார். காமத்துப்பால் அதிகார வரிசை மாற்றப்படவில்லை. ஆனால் "இக்காலத் தமிழ் வாசகர் தேவையை முன்னிறுத்தி" அறப்பாலிலும் பொருட்பாலிலும் அதிகார வரிசையை மாற்றியுள்ளார். திருக்குறள் முழுமையையும் 16 இயல்களாக முறைப்படுத்துகின்றார்.