திருவள்ளுவர் இரட்டைப் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவள்ளுவர் இரட்டைப் பாலம், திருநெல்வேலி

திருவள்ளுவர் இரட்டைப் பாலம் என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள ஒரு பாலமாகும். இந்தியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம் இதுதான். நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத் தவிர்க்க இப்பாலம் கட்டப்பட்டது. இதன் நீளம் 800 மீட்டர் 25 குறுக்குத் தூண்கள் உள்ளன. இவற்றில் 13 தூண்கள் வில் வளைவாக 30.30 மீ அகலத்தில் உள்ளன. மற்ற 12 தூண்களும் 11.72 மீ அகலம் கொண்ட தாங்கிகள் ஆகும்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே எஸ்.என். ஐரோட்டில் இரட்டை அடுக்கு மேம்பாலம் இருக்கிறது. "திருவள்ளுவர்" பெயரை தாங்கியுள்ள இந்த மேம்பாலம் ஆசியாவிலேயே ரெயில் பாதையின் குறுக்கே அமைக்கப் பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பை பெற்று விளங்குகிறது.

1969-ம் ஆண்டு அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதியால் இந்த மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 1973-ம் ஆண்டில் 47 லட்சம் செலவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் மாதம் 13-ந்தேதி கருணாநிதி மேம்பாலத்தை திறந்து வைத்தார். திருக்குறள் போன்று இரண்டு அடுக்குகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால் இப்பாலத்துக்குத் திருவள்ளுவர் பாலம் என்று கருணாநிதி பெயர் சூட்டினார்.[1] 706 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இப்பாலம் 26 தூண்கள் மேல் நிறுவப்பட்ட சிமெண்டு சிலாபுகளால் ஆனது.

ஒவ்வொரு சிமெண்டு சிலாபும் 31 மீட்டர் நீளமும் 600 டன் எடையும் கொண்டதாகும். இந்த பாலத்தின் முதல் அடுக்கில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள், வண்டிகள் செல்லவும், மேல் அடுக்கில் பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.

பாலம் கட்டப்பட்டு 27 ஆண்டுகள் கழித்து 2000-வது ஆண்டில் 1 கோடியே 45 லட்சம் செலவில் இப்பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக மீண்டும் திறந்து விடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. முகமது ஹுசைன் (23 சூன் 2018). "நெல்லையின் திருக்குறள் பாலம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2018.