சனீஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சனீசுவரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சனி
வேறு பெயர்கள்சனீஸ்வரன்
தேவநாகரிशनि
வகைதேவன், நவக்கிரகங்களில் ஒருவர்
இடம்சனிலோகம்
கிரகம்சனி (கோள்)
மந்திரம்ஓம் சனீஸ்வராய நமக
ஆயுதம்தண்டாயுதம்
துணைமாந்தா தேவி, நீலாவதி
பெற்றோர்கள்சூரிய தேவர், சாயா தேவி
சகோதரன்/சகோதரிதபதி, சாவர்ணி மனு, யமுனை, எமன்
குழந்தைகள்மாந்தன் (குளிகன்)
23 அடி உயரமுள்ள சனி தேவனின் சிலை உடுப்பி

சனீஸ்வரன் (சமக்கிருதம்: शनि, Śani) என்பவர் இந்து சோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இவர் சூரிய தேவன் - சாயா தேவி தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக காகத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக / மந்தமாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது. எனவே மந்தன் எனும் பெயர் வழங்கப்படுகிறது.

வேறு பெயர்கள்[தொகு]

  • சனி தேவன்
  • சனீஸ்வரன்
  • மந்தாகரன் - மந்தமானவன் (மெதுவானவன்)
  • சாயாபுத்ரன் - சாயையின் மகன் (சாயபுத்ரா)

இவ்வாறு பல்வேறு பெயர்கள் சனீஸ்வரன் அழைக்கப்படுகிறார். நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே ஆவார்.

புராணம்[தொகு]

ஒரு கோவிலில் சனி, கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா

சூரியதேவரின் மனைவி சந்தியாதேவி, நீண்ட நெடுங்காலமாக சூரியனையும், அவரது வெப்பத்தையும் அருகில் இருந்து தாங்கி வந்ததன் காரணமாக தன்னுடைய சக்தியை இழந்திருந்தார். ஆகவே அவர் பூலோகம் சென்று தவம் செய்து மீண்டும் சக்தியைப் பெற எண்ணினார். அதை சூரியனிடம் சொல்ல பயந்த சந்தியா, தன்னுடைய நிழலில் இருந்து தன்னைப் போன்ற உருவம் கொண்ட பெண்ணைத் தோற்றுவித்தார். நிழலில் இருந்து உருவானதால் அந்தப் பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டார்.

இதையடுத்து சந்தியா தவம் செய்வதற்காக பூலோகம் செல்ல, சாயாதேவி சூரியனுடன் வாழ்ந்து வந்தார். சாயாவிற்கு சனி என்ற மகன் பிறந்தார். நிழலின் மகனாகப் பிறந்ததால் சனி கருமை நிற தோற்றத்துடன் இருந்தார். அதைக் கண்ட சூரியன் சனியை தன் புதல்வனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அப்போது சாயா கண்ணீர் விட்டார். அதைக் கண்டு கோபமடைந்த சனி தன் வக்கிர பார்வையை சூரியன் மீது செலுத்தினார். அப்போது சூரியன் மீது கிரகணம் ஏற்பட்டது. சனியின் சக்தியைக் கண்டு வியந்த சூரிய தேவர் சிவபெருமானிடம் சனியைப் பற்றி கேட்டார். அதற்கு சிவபெருமான் தேவர்கள், கடவுளர்கள், மக்கள் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் அவர்களின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கவே சனி பிறந்துள்ளதாகக் கூறினார். இதனால் மகிழ்ந்த சூரியன், சனியைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொண்டார். சனி வளர்ந்த பிறகு தன் பொறுப்பை உணர்ந்து கொண்டார். பாரபட்சமின்றி நீதி வழங்க பந்த பாசங்களைத் துறக்க வேண்டும் என்பதால் சனி தன் பெற்றோரைப் பிரிந்து சென்று சனிலோகத்தில் வாழத் தொடங்கினார். இவரது வக்கிர பார்வையின் பிடியில் இருந்து சிவபெருமான் உட்பட யாருமே தப்பியதில்லை என்பர்.

குறியீடு மற்றும் பழக்கங்கள்[தொகு]

வெள்ளிக் காப்பில் சனீசுவர பகவான்

சனீசுவரனுக்கும் கருமை நிறத்திற்குமான குறியீடு கவனத்தில் கொள்ளத்தக்கது. கோயில்களில் சனீசுவரனுக்கு கருமை நிற ஆடையும், கரிய எள்ளை முடிந்த கரிய துணியை திரியாக கொண்ட விளக்குகளும் கொடுக்கப்படுகின்றன. இவற்றோடு சனீசுவரனின் வாகனமாக கருதப்படும் காகமும் கருமை நிறமுடையதாகும். இவ்வாறு பல்வேறு பட்ட குறியீடுகள் கருமை நிறம் கொண்டவையாக உள்ளன. இவை இருள் சூழ்ந்த பாதாள உலகத்தினைக் குறிப்பதாகவும் கருத இடமுண்டு. கிரகங்களில் சேவகனான இவர், மனித உடலில் நரம்பு ஆவார். தொடை, பாதம், கணுக்கால் இவற்றின் சொந்தக்காரர். பஞ்சபூதங்களில்- காற்று. ஊழியர்களைப் பிரதிபலிப்பவர். பாப கிரக வரிசையில் முதலிடம் வகிப்பவர். இவரின் நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்திரட்டாதி. உலோகப் பொருள்களில் - இரும்பு இவருடையது. கிரக ரத்தினங்களில் நீலக்கல் இவருடையது. லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், சரளமான பணவருவாய், பெயர்-புகழ் மற்றும் அரசியல் செல்வாக்கு கிடைக்கும். 6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.[1]

கோயில்கள்[தொகு]

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்[தொகு]

இந்தியாவில் புகழ்பெற்ற சனீஸ்வரத் தலங்களில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். இத்தலத்தில் சனீஸ்வரனுக்கென தனியாக சன்னதி காணப்படுகிறது. காசியில் சிவபெருமானை வழிபட்ட பிறகு சனீஸ்வரன் இங்கு வந்து வழிபட்டதாக கருதப்படுகிறது.

குச்சனூர் சனீஸ்வரன் கோயில்[தொகு]

தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் சனீஸ்வரன் சுயம்புவாக உள்ளார். இக்கோயிலின் மூலவராக சனீஸ்வரன் உள்ளது சிறப்பாகும்.

திருகோணமலை சனீஸ்வரன் ஆலயம்[தொகு]

இலங்கையில் சனீஸ்வரன் ஆலயம் திருகோணமலை நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் இடத்தில் ஸ்ரீ கிருஸ்ணன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வாலயம் 1885 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது.

லோக நாயக சனீஸ்வரன் கோயில்[தொகு]

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் எனும் ஊரில் லோக நாயக சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இங்கு உலோகத்தினால் ஆன சனீஸ்வரின் சிலை மூலவராக அமைந்துள்ளது.

முக்கிய கோயில்கள்[தொகு]

  1. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில், காரைக்கால், புதுச்சேரி
  2. குச்சனூர் சனீஸ்வரன் கோயில், தேனி மாவட்டம், தமிழ்நாடு
  3. சனீசுவரன் ஆலயம் திருகோணமலை, திருகோணமலை, இலங்கை

சனிப் பெயர்ச்சி[தொகு]

இந்திய சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர்.[2]

  • ஏழரைச் சனி
  • மங்கு சனி
  • பொங்கு சனி
  • தங்கு சனி
  • மரணச் சனி

சனி பகவான் கிரகஸ்துதி[தொகு]

நீலாஞ்சன ஸமா பாஸம் ரவி புத்ரம், யமா க்ரஜம் ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்

சனி காயத்ரி[தொகு]

காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசொதயாத்

மேற்கோள்கள்[தொகு]

  1. ஜோதிடத்தில் சனி[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.ariviyal.in/2011/12/blog-post_3560.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனீஸ்வரன்&oldid=3777199" இலிருந்து மீள்விக்கப்பட்டது