சதுர்த்தசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதுர்த்தசித் திதியைக் குறிக்கும் கோணம் செம்மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

சதுர்த்தசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினான்காவது திதி சதுர்த்தசி ஆகும். சதுர்த்தச எனும் வடமொழிச் சொல் பதினான்கு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினான்காவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினான்காம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பதினான்காம் நாளுமாக இரண்டு முறை சதுர்த்தசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் சதுர்த்தசியைச் சுக்கில பட்சத் சதுர்த்தசி என்றும், பூரணையை அடுத்த சதுர்த்தசியைக் கிருட்ண பட்சத் சதுர்த்தசி என்றும் அழைக்கின்றனர்.

வானியல் விளக்கம்[தொகு]

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[1] சதுர்த்தசித் திதி பதினான்காவது திதியும் 29 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 156 பாகையில் இருந்து 168 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்சத் சதுர்த்தசித் திதியும், 336 பாகையிலிருந்து 348 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்சத் சதுர்த்தசியும் ஆகும்.

இந்து சமயச் சிறப்பு நாட்கள்[தொகு]

அமாவாசைக்கு முதல் நாள் வரும் சதுர்த்தசி இருத்தை என அழைக்கப்படுவதுடன் இது சுப காரியங்களுக்கு விலக்கப்படும். பவித்ர சதுர்த்தசி ஆஷாட பௌர்ணமியின் முன்னாள் சதுர்த்திசி திதி அமையும் நாளை பவித்ர சதுர்த்தசி என்கின்றனர். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுதல் வேண்டும். [2]

ஆதாரம்[தொகு]

  1. Sharma, P.D., 2004. பக். 22.
  2. தினமலர் பக்திமலர் 23.07.2015 பக்கம் 4

உசாத்துணைகள்[தொகு]

  • இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்றம், 2006.
  • திரவியம், மு., இந்துசமயக் களஞ்சியம், திருமகள் நிலையம், 1995.
  • Balachandra Rao, S., Indian Astronomy: An Introduction, University Press (India) Private Limited, 2002.
  • Sharma, P. D., Hindu Astronomy, Global Vision Publishing House, 2004.

காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுர்த்தசி&oldid=3242787" இலிருந்து மீள்விக்கப்பட்டது