அமர்நீதி நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமர்நீதி நாயனார்
அமர்நீதி நாயனார் விக்கிரகம்

அமர்நீதி நாயனர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர்.[1].


பொருளடக்கம்

[தொகு] வரலாறு

வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.


அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார்.


சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார். கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.


இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே!, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார், தராசின் ஒரு தட்டில் அடியார் தந்த கோவணத்தை வைத்து, அதற்கு ஈடாகத் தம்மில் [2] உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும், பின்பு தம் மனைவி, புதல்வன் ஆகியோரையும் தட்டில் அமர்த்தினார். அப்பொழுது கூட தட்டு நேர் நிற்கவில்லை. நாயனார் 'நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்றால் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக’ என்று திருவைந்தெழுத்து ஓதித் தாமும் அதன் மேல் ஏறி அமர்ந்தார். அந்நிலையில் அத்தாராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நேர் நின்றன.


அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன்திருத்தொண்டத்தொகை

[தொகு] நுண்பொருள்

இறைவனும் இறையடியாரும் ஒரே நிறை. அம்மையப்பரான இறைவனே நம் தலைவர். அவரைப் பூசித்தல் ஒன்றே தலையாய கருமம். அதன் பின்னாகவே இக்கருமத்தைச் செய்யும், தில்லைவாழந்தணரை நம் தலைவராகக் கொள்ளுதல் நன்று, அரன் நாமத்தை மந்திரமாக்கிக் கொள்ளுதலும் நன்று. ஆயின் இறையடியாரையும் தலைவராகக் கொள்ளுதல் வேண்டுமோ? அவர்தம் உடைமையே அனைத்துமென்று அவர் வேண்டுவதெல்லம் இல்லையென்னாது கொடுப்பதும் (இயற்பகை) அவரை மகேசுவரராகப் பூசித்தலும் (இளையான் குடிமாறர்)அவர்தம் வேடத்தையே மெய்ப்பொருளாகக் கொள்வதும் (மெய்ப்பொருள் நாயனார்) இறைவனைத் தொழமுன் அவர்களைக் கும்பிடுவதும் (விறன்மிண்டர்) ஆதிய இவையெல்லாம் எதற்கு. என்பர்க்குரிய விடையாக அமர்நீதி நாயனார் புராணம் அமைந்திருக்கின்றது. வேதப் பொருளான சிவனும் சிவனடியார்களும் ஒரே நிறை என்பதே அவ்விடை.

அமர்நீதியார் குருபூசைநாள் ஆனி பூரம்.

[தொகு] அடிக்குறிப்புகள்

  1. பூலோகசிங்கம், பொ., இந்துக் கலைக்களஞ்சியம், கொழும்பு, 1990
  2. தம்மில்: தம் வீட்டில் உள்ள. தம்மிடமுள்ள

[தொகு] உசாத்துணைகள்

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

[தொகு] வெளி இணைப்புகள்

நாயன்மார்கள் Tamil Om4.JPG
அதிபத்த நாயனார் | அப்பூதியடிகள் நாயனார் | அமர்நீதி நாயனார் | அரிவாட்டாய நாயனார் | ஆனாய நாயனார் | இசைஞானியார் நாயனார் | இடங்கழி நாயனார் | இயற்பகை நாயனார் | இளையான்குடி மாறநாயனார் | உருத்திர பசுபதி நாயனார் | எறிபத்த நாயனார் | ஏயர்கோன் கலிக்காம நாயனார் | ஏனாதி நாத நாயனார் | ஐயடிகள் காடவர்கோன் நாயனார் | கணநாத நாயனார் | கணம்புல்ல நாயனார் | கண்ணப்ப நாயனார் | கலிய நாயனார் | கழறிற்றறிவார் நாயனார் | கழற்சிங்க நாயனார் | காரி நாயனார் | காரைக்கால் அம்மையார் | குங்கிலியக்கலய நாயனார் | குலச்சிறை நாயனார் | கூற்றுவ நாயனார் | கலிக்கம்ப நாயனார் | கோச் செங்கட் சோழ நாயனார் | கோட்புலி நாயனார் | சடைய நாயனார் | சண்டேஸ்வர நாயனார் | சத்தி நாயனார் | சாக்கிய நாயனார் | சிறப்புலி நாயனார் | சிறுத்தொண்ட நாயனார் | சுந்தரமூர்த்தி நாயனார் | செருத்துணை நாயனார் | சோமாசிமாற நாயனார் | தண்டியடிகள் நாயனார் | திருக்குறிப்புத் தொண்ட நாயனார் | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் | திருநாவுக்கரசு நாயனார் | திருநாளைப் போவார் நாயனார் | திருநீலகண்ட நாயனார் | திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் | திருநீலநக்க நாயனார் | திருமூல நாயனார் | நமிநந்தியடிகள் நாயனார் | நரசிங்கமுனையரைய நாயனார் | நின்றசீர் நெடுமாற நாயனார் | நேச நாயனார் | புகழ்ச்சோழ நாயனார் | புகழ்த்துணை நாயனார் | பூசலார் நாயனார் | பெருமிழலைக் குறும்ப நாயனார் | மங்கையர்க்கரசியார் நாயனார் | மானக்கஞ்சாற நாயனார் | முருக நாயனார் | முனையடுவார் நாயனார் | மூர்க்க நாயனார் | மூர்த்தி நாயனார் | மெய்ப்பொருள் நாயனார் | வாயிலார் நாயனார் | விறன்மிண்ட நாயனார்
பா    தொ
"http://ta.wikipedia.org/w/index.php?title=அமர்நீதி_நாயனார்&oldid=1036383" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்