சேக்கிழார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேக்கிழார் நாயனார்

சேக்கிழார் என்பவர் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவனடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலைப் படிப்பதனால், சோழனையும் மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.

பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டர் சீர் பரவுவார், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

சே என்பதற்குக் காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். காளையை வைத்து உழவுத்தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது.[சான்று தேவை]

வரலாறு[தொகு]

கீழ்வருகின்ற சேக்கிழார் வரலாறு சேக்கிழார் புராணம் எனும் உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பெற்ற நூலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்நூலில் வருகின்ற சில செய்திகளையும், இந்த நூலின் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார் என்பதையும், மா. இராசமாணிக்கனார் எனும் ஆய்வாளர் மறுத்துள்ளார்.

பிறப்பு[தொகு]

பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர்[1] மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாகச் சேக்கிழார் பிறந்தார்.[சான்று தேவை] இவருக்குப் பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர்.[1] இவருக்குப் பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.[1]

இளமைப் பருவம்[தொகு]

சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாயசோழருக்குக் கடலினும் பெரியது எது? உலகினும் பெரியது எது? மலையினும் பெரியது எது? என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.

சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்புப் பட்டத்தினைத் தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார்.

அமைச்சர் பணி[தொகு]

இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினைச் செலுத்தியதாகவும், அதன் காரணமாகச் சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலைப் படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணிச் சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.

மறுமைக்குத் துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றைச் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்குச் சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கும்படி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாகச் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபது சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை சடையனார்,தாயார் இசைஞானியார் வரலாற்றையும் ஊர் ஊராகச் சென்று அதிக தகவல்களைத் திரட்டினார் சேக்கிழார். எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.

திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்[தொகு]

புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்குச் சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.

பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாகப் பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

மன்னன் சிறப்பு செய்தமை[தொகு]

சேக்கிழார் பெரியபுராணத்தினைத் திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரைத் தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறிச் சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினைச் சிவபெருமானாகக் கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.

இராசமாணிக்கனார் ஆய்வு[தொகு]

சேக்கிழார் வரலாறு குறித்தும், அவருடைய காலம் குறித்தும் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். மா. இராசமாணிக்கனார் அவரது பெரியபுராண ஆய்வு நூலில் பல்வேறு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.[2]

அதன்படி சேக்கிழாரின் இயற்பெயர் இராமதேவன் என இருக்கலாம் என்று கூறுகிறார்.[2] மேலும் சேக்கிழார் வரலாற்றில் கூறப்படும் அரசன் சீவக சிந்தாமணியைப் படித்ததும், அதற்குச் சேக்கிழார் மறுப்பு தெரிவித்து பெரியபுராணம் இயற்றியது குறித்தான கருத்துரு தவறானது என்றும், சேக்கிழார் சீவக சிந்தாமணியைப் படித்து, அதிலிருக்கும் கருத்துகளைப் பெரியபுராணத்தில் எடுத்தாண்டுள்ளார் என்றும் கூறுகிறார்.[2]

சேக்கிழார் பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணத்தினை இரண்டாம் இராசராசன் காலத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருவொற்றியூர்க் கோயிலில் இயற்றியுள்ளார்.[2] இக்காலம் பொ.ஊ. 1174 ஆக இருக்கலாம் என்பது அவரது ஆய்வு.[2]

இயற்றியுள்ள நூல்கள்[தொகு]

  1. பெரியபுராணம்
  2. திருத்தொண்டர் புராண சாரம்
  3. திருப்பதிக் கோவை என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள்.[3]

தனிச் சன்னிதி[தொகு]

உலகிலேயே சேக்கிழாருக்கு இரண்டு கோயில்களில் மட்டுமே தனிச் சன்னிதி உண்டு, முதலாவது சேக்கிழார் பிறந்த ஊரான திருக்குன்றத்தூர் சிவன் கோயில், இரண்டாவது தேவகோட்டை நகரச் சிவன் கோயில்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 https://web.archive.org/web/20160910051823/http://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01121p4.htm
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 https://web.archive.org/web/20160910051348/http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1186
  3. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 74. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேக்கிழார்&oldid=3772529" இலிருந்து மீள்விக்கப்பட்டது