அதிபத்த நாயனார்
அதிபத்த நாயனார் 63 நாயன்மார்களுள் ஒருவர். "விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்" என்று திருத்தொண்டத் தொகை இவரைக் குறிப்பிடுகிறது.
[தொகு] வாழ்க்கைப் புராணம்
சோழ நாட்டின் துறைமுகனான நாகபட்டினம் நகரில் நுழைபாடியிலே பரதவர் வாழ்ந்தனர். அப்பரதவர்களுகுத்து தலைவரரக இருந்தவர் அதிபத்தர். அவர் சிவபெருமானிடத்தே மிகுந்த பக்தியுடையவர். நாள்தோறும் பிடிபடும் மீன்களுள் தலையாய ஒரு மீனை ‘இது நட்டமாடிய நம்பர்க்கு’ என்று கடலில் விடுவது அவர்தம் வழக்கம். ஒரு நாளில் ஒரு மீனே பிடிபடினும் அம்மீனைச் சிவனடிக்கென்று விடுவதை அவர் விடாது செய்து வந்தார். இப்படி அநேக நாள்கள் ஒரு மீனே பிடிபட அவரை வறுமை பீடித்தது. சுற்றத்தவர் உணவின்றி வருந்தினர். அப்பொழுதும் தாம் வருந்தாது தம் பணியினை மகிழ்வோடு செய்து வந்தார். இப்படியே தொடர்ந்து நாளெல்லாம் நிகழ் அவரும் பசியால் தளர்ந்தார். ஆயினும் தமது தலைமீன் அளிக்கும் சீலத்தில் தவறாதிருந்தார். இத்தகைய அதிபத்தரின் தலையாய அன்பெனும் ஆரமுதம் அருந்தத் திருவுளம் பற்றினர் ஆலமுண்ட பெருமான்.
ஒரு நாள் ஒரு மீனுக்குப் பதிலாக மீனுறுப்பெல்லாம் அமைந்த அற்புதப் படைப்பொன்று பிடிபட்டது. அது மணிகள் பதித்த பொன்மீன். அம்மீன் கடலில் உதிக்கும் சூரியன்போல் கரையில் இழுத்த வலையிலே ஒளிர்ந்தது. வலைஞர் அதிசயமிகுதியோடு “மீன் ஒன்று பிடித்தோம்” என்று அதிபத்தரிடம் கூறினார். அதிபத்தர் உலகம் யாவும் பெறும் என்று மதிக்கத்தக்க அம்மீனைப் பார்த்து மகிழ்ந்தார். “இப்பொன்மீன் என்னை ஆளுடைய நாயகனின் பொற்கழல் சேர்க” என்று அலைமீது விட்டார். பொருளை முதலெனக் கொள்ளும் இவ்வுலகிலே பொருட்பற்றை முற்றும் துறந்த அதிபத்தரின் முன் இறைவன் ஆகாயத்திலே தோன்றினார். அதிபத்தர் சிரங்குவித்து வணங்கி நின்றார். அவரைச் சிவலோகத்திற் சிறப்புற்றிருக்கும் வண்ணம் தளைளித்தாண்டார் சிவபெருமான்.
[தொகு] வெளியிணைப்பு
[தொகு] உசாத்துணைகள்
- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்
