அறிவியல் என்பது பொதுவாக அறிவின் அடிப்படையில் ஏதொன்றையும் முறைப்படி அணுகி யாரும் சரிபார்த்து உறுதி செய்யும் வண்ணம் உண்மைகளைக் கண்டு நிறுவப்பெறும் அறிவுத்துறையாகும். இது பெரும்பாலும் இரு பெரும் பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. இயற்கையில் உள்ள புறபொருட்களின் அமைப்பு மற்றும் இயக்கங்கள் பற்றியதை, இயற்கைப்பொருள் அறிவியல் என்றும், மக்கள் குழுமங்கள், வாழ்க்கை, அரசியல், மொழியியல் முதலியன குமுக அறிவியல் அல்லது சமூக அறிவியல் என்றும் பிரிக்கப்படுகின்றது. அறிவியலை அடிப்படைத் தூய அல்லது தனி அறிவியல் என்றும் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் என்றும் பிரிப்பதும் உண்டு. கணிதவியலை இயற்கைப்பொருள் அறிவியலில் ஒரு உட்துறையாகக் கருதுவோரும் உண்டு, அதனைத் தனியானதொரு அடிப்படை அறிவியல் துறையாகக் கொள்வாரும் உண்டு.
திண்மம் என்பது இயற்பியலில்பொருள்களின் இயல்பான நான்குநிலைகளில் ஒன்றாகும். திண்மப்பொருள் என்பது திடப்பொருள் என்றும் அழைக்கப்படும். திண்மப்பொருள் தனக்கென ஓருருவம் கொண்டது. இப்பொருளில் உள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று நிலையான தொடர்பு கொண்டுள்ளன. சூழலின் வெப்பநிலையில் அணுக்கள் அதிர்ந்து கொண்டு இருந்தாலும், அணுக்கள் தங்களுக்கிடையே இருக்கும் தொடர்புகள் மாறுவதில்லை. ஒரு திண்மத்தில் உள்ள அணுக்களுக்கு இடையே உள்ள தொலைவும் ஏறத்தாழ அணுவின் விட்டத்திற்கு ஒப்பிடக்கூடியதாக (ஒப்பருகாக) இருக்கும்.ஒரு திண்மத்தில் உள்ள அணுக்கள் எம்முறையில் அமைந்திருக்கின்றன என்பதைப் பொருத்து திண்மங்கள் படிகம், பல்படிகத் திண்மம்,சீருறாத் திண்மம் என பலவாறு பகுக்கப்படுகின்றன.
உயரிய வாயுக்களை ஒரு கண்ணாடிக் குழாயில் அடைத்து அதில் 5 kV மின்னழுத்தத்தில் 20 mA மின்னோட்டத்தை 25 kHz அதிர்வெண்ணில் தரும்போது இதுபோன்ற ஒளிர்தல் நிகழும். இந்நிகழ்வே இந்த வாயுக்கள் பொதுவான குமிழ் விளக்குகளில் பயன்படுத்தப்படக் காரணம் ஆகும். படத்தில் இடமிருந்து வலமாக ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
யோசெப் நிசிபோர் நியெப்சு (1765-1833) என்ற பிரான்சியர்ஒளிப்படத்தைக் கண்டுபிடித்தவர் என்ற வகையிலும், ஒளிப்படவியல் துறையில் முன்னோடி என்ற வகையிலும் இவர் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1820களின் தொடக்கத்தில் உலகின் முதல் சில ஒளிப்படங்களை எடுத்தவர் என்ற வகையிலும் இவர் முக்கியமானவர். இவரது கண்டுபிடிபைப் போலவே இவரும் ஒரு புரட்சியாளர். எனினும், இன்றும் இவர் அதிகம் அறியப்பட்டவராக இல்லை. 1825 இல், ஒரு மனிதனையும் குதிரையொன்றையும் காட்டும் ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்ததன் மூலம் இவர் ஒளிப்படமொன்றை எடுத்த உலகின் முதலாவது நபர் ஆனார். 1829 முதல் இவர் லூயிசு டாகுவேரே என்பவருடன் சேர்ந்து ஒளிப்பட வழிமுறைகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினர். 1833 இல் நியேப்சு இறந்த பின்னர் டாகுவேரே தொடர்ந்தும் சோதனைகளில் ஈடுபட்டு டாகுவேரியோவகை என்ற புதிய முறையைக் கண்டுபிடித்து பிரான்சு அரசுக்கு விற்றார். நியெப்சு 1825 ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் 2002 இல் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு ஏலத்தில் 450,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது.