ஷா வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷா வம்சம்
நாடுகோர்க்கா நாடு
விருதுப்
பெயர்கள்
காஸ்கி இளவரசர்
கோர்க்கா மன்னர்
நேபாள இராச்சிய மன்னர்
நேபாளத்தின் மன்னர்
நிறுவிய
ஆண்டு
1768
நிறுவனர்பிரிதிவி நாராயணன் ஷா
இறுதி ஆட்சியர்மன்னர் ஞானேந்திரா
தற்போதைய
தலைவர்
முடியாட்சி ஒழிக்கப்பட்டது
முடிவுற்ற ஆண்டு28 மே 2008

ஷா வம்சம் (Shah dynasty), கோர்க்கா நாட்டின் கஸ் குல ராசபுத்திர அரச வம்சத்தினர் ஆவார். இவ்வம்சத்தினர் பின்னர் நேபாள இராச்சியத்தையும், நேபாள நாட்டையும் கிபி 1768 முதல் 28 மே 2008 முடிய ஆண்டனர்.

நேபாள இராச்சியத்தை ஆண்ட ஷா வம்ச மன்னர்களுக்கு, தாபா வம்சத்தினரும், ராணா வம்சத்தினரும் பரம்பரை பிரதம அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாகவும் பணியாற்றினர்.

தோற்றம்[தொகு]

நேபாள ஷா வம்சத்தினர் இராஜஸ்தானின் சித்தோர்கார் இராச்சியத்தை ஆண்ட சந்திர குல இராசபுத்திரர்களின் கஸ் குலத்தினர் ஆவார். துவக்கத்தில் இவ்வம்சத்தினர் நேபாளத்தின் லம்ஜுங் மற்றும் காஸ்கி பகுதிளின் சிற்றரசர்களாக இருந்தனர். இவ்வம்சத்தினை தோற்றுவித்தவர் திரவிய ஷா ஆவார்.

நேபாள இராச்சியத்தை நிறுவி விரிவுபடுத்துதல்[தொகு]

ஷா வம்சத்தை நிறுவிய திரவிய ஷாவின் வழிவந்த பிரிதிவி நாராயணன் ஷா, 1743ல் கோர்க்கா நாட்டின் மன்னராக விளங்கினார். பின் காத்மாண்டு சமவெளியின் மல்ல வம்ச மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லாவை, கீர்த்திப்பூர் போர், பக்தபூர் போர் மற்றும் காட்மாண்டுப் போர்களில் வென்று, 1768ல் நேபாள இராச்சியத்தை நிறுவினார். அவரது மகன் ராணா பகதூர் ஷா ஆட்சிக் காலத்தில், நேபாளத்தின் மேற்கில் உள்ள கார்வால், குமாவுன் மற்றும் சிர்முர் பகுதிகளையும்; கிழக்கில் உள்ள மொரங், சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளை வென்று நேபாள இராச்சியத்தை விரிவுபடுத்தினர்.

ஆங்கிலேய-நேபாளப் போர்[தொகு]

4 மார்ச் 1816 அன்று சுகௌலி போர் உடன்படிக்கையின் படி, நேபாள நாட்டினர் ஆங்கிலேயர்களுக்கு விட்டுக் கொடுத்த மொரங், சிக்கிம், டார்ஜிலிங், கார்வால், சிர்மூ, குமாவுன் பகுதிகளைக் காட்டும் வரைபடம்

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவாக்கும் நோக்கில், நேபாள இராச்சியத்திற்கு எதிராக, கிபி 1814 - 1846 ஆண்டுகளில் போர் தொடுத்தனர். போரின் முடிவில், இருதரப்பினரும் மார்ச், 1816ல் சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சியத்தினர், தான் பிற இராச்சியத்தினரிடமிருந்து கைப்பற்றியிருந்த கார்வால், குமாவுன், மொரங், சிக்கிம், டார்ஜிலிங் மற்றும் மேற்கு தராய் சமவெளிப் பகுதிகளை ஆங்கிலேயர்களுக்கு விட்டுத் தரப்பட்டது.

வளமான மேற்கு தராய் பகுதி ஆங்கிலேயருக்கு விட்டுத் தரப்பட்டதால், ஆண்டு ஒன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய், நேபாள இராச்சியத்திற்கு, நட்ட ஈடு வழங்க கம்பெனி ஆட்சியினரால் ஒப்புக் கொள்ளப்பட்டது.

பரம்பரை தலைமை அமைச்சர்கள் & படைத்தலைவர்கள் (1846 – 1951)[தொகு]

நேபாள இராச்சியத்தின் பரம்பரை தலைமை அமைச்சர்களும், தலைமைப் படைத்தலைவர்களுமான ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா, 1846ல் ஷா வம்சத்தினரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ராணா வம்ச தலைமை அமைச்சர்கள், ஷா வம்ச மன்னர்களை ஒரு கைப்பாவை மன்னர்களாகக் கொண்டு ஆட்சி நடத்தினர்.

1950ல் ஷா வம்ச நேபாள மன்னர் திருபுவன் ஷா குடும்பத்துடன், இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். 1951ல் நேபாள ராணா வம்சத்தின் முடிவுற்ற போது, இந்தியரான மாத்திரிக பிரசாத் கொய்லாரா, நேபாளத்தின் பிரதம அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

கொய்லாராவின் உதவியால் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நேபாள மன்னர் திரிபுவன் ஷா மீண்டும் நேபாளத்திற்கு திரும்பி, நேபாளத்தின் மன்னராக பட்டம் சூட்டுக் கொண்டு, 1955 முடிய நேபாளத்தை ஆண்டார்.

அரசியல் சட்ட முடியாட்சி (1990–2008)[தொகு]

1990ல் ஷா வம்ச மனனர் பிரேந்திராவின் ஆட்சியின் போது, நேபாள நாடு, நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்ட, அரசியல் சட்ட முடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டது.

நேபாள அரசுப் படுகொலைகள்[தொகு]

1 சூன் 2001 அன்று நேபாள ஷா வம்ச அரச குடும்பத்தினர் கத்மந்துவில் உள்ள அமைந்த நாராயண்ஹிதி அரண்மனையில் நடந்த விருந்தின் போது, மன்னர் பிரேந்திராவின் மகன் இளவரசர் திபேந்திரன், துப்பாக்கியால் விருந்தில் கலந்து கொண்டவர்களை நோக்கி சுட்டதில், மன்னர் பிரேந்திரா, அரசி ஐஸ்வரியா உள்ளிட்ட 10 பேர் உயரிழந்தனர். பிறகு திபேந்திரா தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார். நான்கு நாட்களுக்கு பிறகு இறந்தார். பின்னர் பிரேந்திராவின் இளைய சகோதரர் இளவரசர் ஞானேந்திரா மன்னர் பதவிக்கு வந்தார். இவர் 2005ல் நாடாளுமன்றத்தை கலைத்து அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் வைத்துக் கொண்டார்.

ஷா வம்ச முடியாட்சியை ஒழித்தல்[தொகு]

24 டிசம்பர் 2007ல் நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம் கூடி ஆலோசனைகள் செய்தது. அரசியல் நிர்ணய மன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் வாக்குகளின் படி, 2008ல் நேபாளத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, நேபாள தேசிய நாடாளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. [1]

28 மே 2008ல் நேபாள நாடாளுமன்றம், நேபாள மன்னர் அரசை, நேபாள கூட்டாச்சி ஜனநாயகக் குடியரசு என்று அறிவித்து, நேபாளத்தில் மன்னர் ஆட்சி முறை அடியோடு நீக்கி தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் ஷா வம்சத்தின் இறுதி மன்னர் ஞானேந்திரா நேபாள மன்னர் பதவியிலிருந்து நீக்கப்ப்பட்டார். நேபாள ஷா வம்ச மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டது.

ஷா வம்ச மன்னர்களும், ஆட்சிக் காலங்களும் (1768–2008)[தொகு]

நேபாள மன்னர் பிரேந்திரா
தெற்காசியாவில் நேபாளத்தின் அமைவிடம்

1768 முதல் 2008 முடிய நேபாளத்தை ஆட்சி செய்த ஷா வம்ச மன்னர்கள் பட்டியல்[2]:

  1. பிரிதிவி நாராயணன் ஷா - (ஆட்சிக் காலம்), (25 செப்டம்பர் 1768 - 11 சனவரி 1775)
  2. பிரதாப் சிங் ஷா - (11 சனவரி 1775 - 17 நவம்பர் 1777)
  3. ராணா பகதூர் ஷா - (17 நவம்பர் 1777 - 8 மார்ச் 1799)
  4. கீர்வான் யுத்த விக்ரம் ஷா - (8 மார்ச் 1799 - 20 நவம்பர் 1816)
  5. ராஜேந்திர விக்ரம் ஷா - (20 நவம்பர் 1816 - 12 மே 1847)
    (பதவி துறந்தார்)
  6. சுரேந்திர விக்ரம் ஷா - (12 மே 1847 - 17 மே 1881)
  7. பிரிதிவி வீர விக்ரம் ஷா - (17 மே 1881 - 11 டிசம்பர் 1911)
  8. திரிபுவன் வீர விக்ரம் ஷா
    (முதலாம் ஆட்சிக் காலம்) (11 டிசம்பர் 1911 - 7 நவம்பர் 1950)
    (நாடு கடத்தப்படல்)
  9. ஞானேந்திரா (7 நவம்பர் 1950 - 7 சனவரி 1951)
    (பதவி இறக்கப்பட்டார்)
  10. திரிபுவன் வீர விக்ரம் ஷா
    (இரண்டாம் ஆட்சிக் காலம்) (7 சனவரி 1951 - 13 மார்ச் 1955)
  11. மகேந்திரா - (14 மார்ச் 1955 - 31 சனவரி 1972- 1 சூன் 2001)
    (கொல்லப்படுதல்)
  12. திபெந்திரா (தற்கொலை முயற்சியில் நினைவின்றி இறத்தல்) (1 சூன் 2001 - 4 சூன் 2001)
  13. ஞானேந்திரா - (4 சூன் 2001 - 28 மே 2008)
    (நேபாளத்தில் முடியாட்சி முறை ஒழிக்கப்படல்)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nepalese monarchy to be abolished." BBC 24 December 2007 Accessed 25 December 2007.
  2. "Shah Dynasty". Archived from the original on 2017-11-09. பார்க்கப்பட்ட நாள் 2017-11-12.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷா_வம்சம்&oldid=3712836" இலிருந்து மீள்விக்கப்பட்டது