லியோ டால்ஸ்டாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலியோ இடால்ஸ்டாய்
Leo Tolstoy
யாசுனயா பொல்யானாவில் 1908 மே 23 இல் தால்சுதாய்,[1] செர்கே புரொக்கூதின்-கோர்சுக்கியினால் வரையப்பட்ட கல்லச்சு
யாசுனயா பொல்யானாவில் 1908 மே 23 இல் தால்சுதாய்,[1] செர்கே புரொக்கூதின்-கோர்சுக்கியினால் வரையப்பட்ட கல்லச்சு
பிறப்புஇலியோவ் நிக்கொலாயவிச் தல்சுத்தோய்
(1828-09-09)9 செப்டம்பர் 1828
யாசுனயா பொல்யானா, தூலா மாகாணம், உருசியப் பேரரசு
இறப்பு20 நவம்பர் 1910(1910-11-20) (அகவை 82)
அசுத்தோப்பவா, ரியாசன் மாகாணம், உருசியப் பேரரசு
அடக்கத்தலம்யாசுனயா பொல்யானா, தூலா
தொழில்புதின, சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர், கட்டுரையாளர்
மொழிஉருசியம்
காலம்1847–1910
இலக்கிய இயக்கம்இலக்கிய யதார்த்தவாதம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
துணைவர்சோஃபியா பெர்சு (தி. 23 செப்டம்பர் 1862)
பிள்ளைகள்13
குடும்பத்தினர்
  • நிக்கொலாய் தல்சுத்தோய் (தந்தை)
  • மரியா தல்சுத்தாயா (தாய்)
கையொப்பம்
இலியோ இடால்ஸ்டாய் உருவப்படம். ஓவியர் இவான் கிராம்ஸ்கோயி, ஆண்டு 1873.

கோமகன் இலியோ இடால்ஸ்டாய் (Leo Tolstoy) எனப் பரவலாக அழைக்கப்படும் இலெவ் நிக்கோலயேவிச் இடால்ஸ்டாய் (Lev Nikolayevich Tolstoy[note 1][2] உருசியம்: Лев Николаевич Толстой,[note 2] பஒஅ[ˈlʲef nʲɪkɐˈla(j)ɪvʲɪtɕ tɐlˈstoj]( கேட்க); இலியெவ் நிக்கலாயெவிச் தல்ஸ்தோய்; 9 செப்டம்பர் [யூ.நா. 28 ஆகத்து] 1828 – 20 நவம்பர் [யூ.நா. 7 நவம்பர்] 1910) என்பவர் ஓர் உருசிய எழுத்தாளர் ஆவார். எக்காலத்திலும் மிகச் சிறந்த நூலாசிரியர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.[3] இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்காக 1902 முதல் 1906 வரை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுக்காக 1901, 1902, மற்றும் 1909 ஆகிய ஆண்டுகளிலும் முன்மொழியப்பட்டுள்ளார்; இவர் ஒரு முறை கூட நோபல் பரிசை வெல்லாதது மிகுந்த சர்ச்சைக்குரியதாக உள்ளது.[4][5][6][7]

இவர் ஓர் உருசிய உயர்குடிக் குடும்பத்தில் 1828ஆம் ஆண்டு பிறந்தார்.[3] போரும் அமைதியும் (1869) மற்றும் அன்னா கரேனினா (1878)[8] ஆகிய புதினங்கள் இவரின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவாகும். இவை மெய்மையியல் புனைவின் இமயங்களாகக் கருதப்படுகின்றன.[3] இவர் தன் 20களில் தன் பகுதியளவு சுய சரிதை முப்புதினங்களான குழந்தைப் பருவம், சிறு வயதுப் பருவம், மற்றும் இளமைப் பருவம் (1852–1856), மற்றும் தன் கிரிமியப் போர் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட செவசுதபோல் படங்கள் (1855) ஆகியவற்றிற்காக முதன் முதலில் இலக்கிய ரீதியான பாராட்டைப் பெற்றார். இவரது புனைவுகளில் பல பன்னிரு சிறுகதைகள், இவான் இலியிச்சின் இறப்பு (1886), குடும்ப மகிழ்ச்சி (1859), "நடன நிகழ்ச்சிக்குப் பிறகு" (1911), மற்றும் காஜி முராத் (1912) போன்ற பல குறும் புதினங்களும் அடங்கும். .

1870களில் டால்ஸ்டாய் ஓர் ஆழ்ந்த அறநெறி சார்ந்த பிரச்சனைகளை உணர்ந்தார். அதற்குப் பிறகு இவர் அதற்குச் சமமாகக் கருதிய ஆழ்ந்த ஆன்மீக விழிப்பையும் உணர்ந்தார். இது இவரது மெய்மையியல் படைப்பான ஒப்புக் கொள்ளுதல் (1882) நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு நாதரின் மலைச் சொற்பொழிவை மையமாகக் கொண்ட நன்னெறிக் கருத்துக்கள் குறித்த இவரது இலக்கிய விரிவுரையானது இவரை ஓரொ உள்ளார்வம் மிக்க அரசு வேண்டாக் கொள்கையுடைய கிறித்தவராகவும், அமைதிவாதியாகவும் மாற்றியது[3]. இவரது தெய்வத்தின் இராச்சியம் உனக்குள் உள்ளது (1894) போன்ற படைப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள வன்முறையற்ற எதிர்ப்பு குறித்த இவரது யோசனைகள் 20ஆம் நூற்றாண்டின் முக்கியத் தலைவர்களான மோகன்தாசு கரம்சந்த் காந்தி[9] மற்றும் மார்ட்டின் லூதர் கிங்[10] ஆகியோர் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. ஹென்றி ஜார்ஜ் என்பவரின் ஜார்ஜியம் என்று அழைக்கப்பட்ட பொருளாதாரத் தத்துவத்தின் ஈடுபாடு கொண்ட பரிந்துரையாளராகவும் இவர் மாறினார். இத்தத்துவங்களைத் தனது படைப்புகளில், முக்கியமாக உயிர்த்தெழல் (1899) நூலில் இவர் ஒருங்கிணைத்து வெளியிட்டார்.

பூர்வீகம்[தொகு]

பழைய உருசிய உயர்குடியினரில் நன்றாக அறியப்பட்ட குடும்பமாக டால்ஸ்டாய்கள் திகழ்ந்தனர். இவர்கள் தங்களுடைய முன்னோராக தொன்மவியல் உயர்குடியினரான இத்ரீசு என்பவரைக் குறிப்பிடுகின்றனர். இத்ரீசு என்பவர் பியோதர் டால்ஸ்டாய் என்பவரால் குறிப்பிடப்பட்டுள்ளார். இத்ரீசு "நெமெக்கில் இருந்து, சீசரின் நிலங்களிலிருந்து" செர்னிகிவ்விற்கு 1353ஆம் ஆண்டு தனது இரு மகன்களான லித்வினோசு (அல்லது லித்வோனிசு) மற்றும் சிமோந்தென் (அல்லது சிக்மோந்து) மற்றும் 3,000 மக்களைக் கொண்ட ஒரு குழுவுடன் வந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[11][12] "நெமெக்" என்ற சொல்லானது நீண்ட காலமாகச் செருமானியர்களைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், உருசிய மொழி பேசாத எந்த ஓர் அயல் நாட்டவரையும் குறிப்பிட அக்காலத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. நெமோய் என்ற சொல்லுக்கு பேசாத என்று பொருள்.[13] பிறகு இத்ரீசு கிழக்கு மரபுவழித் திருச்சபைக்கு மதம் மாறினார். தன்னுடைய பெயரை லியோந்தி என்றும், தன்னுடைய மகன்களின் பெயரை கான்ஸ்டன்டைன் மற்றும் பியோதோர் என்றும் மாற்றினார். கான்ஸ்டன்டைனின் பேரனான ஆந்த்ரேயி கரிதோனோவிச்சுக்கு டால்ஸ்டிய் என்ற செல்லப் பெயரை அவர் செர்னிகிவ்வில் இருந்து மாஸ்கோவுக்குக் குடிபெயர்ந்த பிறகு மாஸ்கோவின் இரண்டாம் வாசிலி வழங்கினார். டால்ஸ்டிய் என்ற பெயரின் பொருளானது குண்டான என்பதாகும்.[11][12]

டால்ஸ்டாய் என்பது கிறித்தவம் சாராத பெயராக இருந்தது மற்றும் அந்நேரத்தில் செர்னிகிவ்வானது லித்துவேனியாவின் திமேத்ரியசு முதலாம் இசுடார்சையால் ஆளப்பட்டது ஆகிய காரணங்களினால், சில ஆய்வாளர்கள் டால்ஸ்டாய்கள் லித்துவேனியாவின் மாட்சிமிக்க வேள் பகுதியில் இருந்து வந்த லித்துவேனியர்கள் என்று முடிவு செய்தனர்.[11][14][15] அதே நேரத்தில் இத்ரீசு 14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை எந்த ஒரு நூலிலும் குறிப்பிடப்படவில்லை. பியோதர் டால்ஸ்டாயால் பயன்படுத்தப்பட்ட செர்னிகிவ் நூலும் தொலைந்து விட்டது.[11] முதலில் பதியப்பட்ட டால்ஸ்டாய் குடும்ப உறுப்பினர்கள் 17ஆம் நூற்றாண்டின் போது வாழ்ந்தனர். எனவே பியோதர் டால்ஸ்டாய் பொதுவாக டால்ஸ்டாய் உயர்குடிக் குடும்பத்தைத் தோற்றுவித்தவராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். பியோதர் டால்ஸ்டாய்க்குக் கோமகன் என்ற பட்டத்தை உருசியாவின் முதலாம் பேதுரு வழங்கினார்.[16][17]

வாழ்க்கையும் தொழிலும்[தொகு]

தன் 20ஆம் அகவையில் லியோ டால்ஸ்டாய், அண். 1848
டால்ஸ்டாயின் தாய் மரியா வோல்கோன்சுகயாவின் ஒரே திண்ணிழலுருவம், 1810கள்.
டால்ஸ்டாயின் தந்தை கோமகன் நிக்கோலாய் இலியிச் டால்ஸ்டாய் (1794–1837)

டால்ஸ்டாய் குடும்பப் பண்ணயான எசுனாயா போல்யானவில் பிறந்தார். இது மாஸ்கோவுக்குத் தெற்கில் 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, துலாவிற்குத் தென் மேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இவரது தந்தை கோமகன் நிக்கோலாய் இலியிச் டால்ஸ்டாய் (1794–1837) ஆவார். இவரது தாய் இளவரசி மரியா டால்ஸ்டாயா (குடும்பப் பெயர்: வோல்கோன்சுகயா, 1790–1830) ஆவார். தன் பெற்றோருக்குப் பிறந்த 5 குழந்தைகளில் இவர் 4வது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை உருசியா மீது நெப்போலியன் படையெடுத்த 1812ஆம் ஆண்டுப் போரில் பணியாற்றிய ஒரு அனுபவசாலியாவார். இவருக்கு 2 வயதாகிய பொழுது இவரது தாய் இறந்து விட்டார். இவருக்கு 9 வயதாகிய பொழுது இவரது தந்தை இறந்து விட்டார்.[18] டால்ஸ்டாயையும் அவரது உடன் பிறப்புகளையும் உறவினர்கள் தான் வளர்த்தனர்.[3] 1844ஆம் ஆண்டு கசன் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் கிழக்கத்திய மொழிகளை டால்ஸ்டாய் படிக்க ஆரம்பித்தார். "இவரால் படிக்கவும் இயலவில்லை, படிக்கும் எண்ணமும் இவருக்கு இல்லை" என்று ஆசிரியர்கள் இவரைப் பற்றிக் கூறினர்.[18] தனது படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு டால்ஸ்டாய் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறினர்.[18] எசுனாயா போல்யானவுக்குத் திரும்பினார். பிறகு பெரும்பாலான காலத்தை மாஸ்கோ, துலா மற்றும் சென் பீட்டர்சுபெர்கு ஆகிய நகரங்களில் கழித்தார். அங்கு கண்டிப்பற்ற, பரபரப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தார்.[3] இக்காலத்தில்தான் டால்ஸ்டாய் எழுத ஆரம்பித்தார்.[18] இவரது முதல் புதினமான குழந்தைப்பருவத்தையும் இங்கு தான் எழுதினார். இப்புதினம் இவரது சொந்த குழந்தைப் பருவம் பற்றிய ஒரு புனைவாகும். இது 1852ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.[3] 1851ஆம் ஆண்டு கடுமையான சூதாட்டக் கடன்களை அடைந்த பிறகு, காக்கேசியாவிற்குத் தனது அண்ணனுடன் சென்றார். இராணுவத்தில் இணைந்தார். கிரிமியப் போரின் போது ஓர் இளம் பீரங்கிப் படை அதிகாரியாக டால்ஸ்டாய் சேவையாற்றினார். 1854-55ஆம் ஆண்டின் 11 மாத நீண்ட செவசுதபோல் முற்றுகையின்போது டால்ஸ்டாய் செவசுதபோலில் இருந்தார்.[19] செர்னயா யுத்தத்திலும் பங்கேற்றார். போரின்போது இவர் தனது வீரத்திற்காக அங்கீகரிக்கப்பட்டார். படைத் துணைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.[19] போரில் ஏராளமானவர்கள் இறப்பதைக் கண்டு வெறுப்புற்றார்.[18] கிரிமியப் போரின் முடிவுக்குப் பிறகு இராணுவத்திலிருந்து விலகினார்.[3]

இராணுவத்தில் இவரது அனுபவம் மற்றும், 1857 மற்றும் 1860-61ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவைச் சுற்றி வந்த இரண்டு பயணங்கள் ஆகியவை இவரை ஒரு சீர்கெட்ட, தனிச்சலுகை பெற்ற சமூக எழுத்தாளரில் இருந்து, வன்முறையற்ற ஆன்மிக அரசின்மையாளராக மாற்றின. இதே வழியைப் பின்பற்றிய பிறர் அலெக்சாந்தர் கெர்சென், மிகைல் பக்கூனின் மற்றும் பேதுரு குரோபோத்கின் ஆகியோர் ஆவர். இவரது 1857ஆம் ஆண்டுப் பயணத்தின்போது, பாரிசில் ஒரு பொது இடத்தில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை டால்ஸ்டாய் கண்டார். இது இவருக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய அனுபவமாக இருந்தது. இந்நிகழ்வை இவர் தன் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. தனது நண்பன் வாசிலி போத்கினுக்கு எழுதிய மடலில் டால்ஸ்டாய் பின்வருமாறு எழுதினார்: "உண்மை யாதெனில், அரசு என்பது தன் சொந்த ஆதாயத்திற்காகப் பிறரை நலமற்ற முறையில் நடத்துகிற ஒரு சூழ்ச்சி மட்டுமல்லாமல், அதையும் தாண்டி குடிமக்களை ஊழல்வாதிகளாக மாற்றக்கூடியது … எனவே நான் எங்கும் எந்த அரசாங்கத்திலும் சேவையாற்ற மாட்டேன்.[20]" திருக்குறளின் ஒரு செருமானிய மொழிப் பதிப்பைப் படித்தபோது அறப் போராட்டம் அல்லது அகிம்சை குறித்த டால்ஸ்டாயின் தத்துவமானது ஊக்கம் பெற்றது.[21][22] பிறகு இந்தத் தத்துவத்தை எ லெட்டர் டு எ இந்து என்ற மடலில் குறிப்பிட்டார். இம்மடலின் நகலை ஒருமுறை படித்த இளவயது காந்தி டால்ஸ்டாயின் அறிவுரையைக் கேட்டார்.[22][23][24]

எசுனாயா போல்யானா கிராமத்தில் மாஸ்கோ கல்வியறிவு மன்றத்தின் மக்கள் நூலகத்தைத் திறந்து வைக்கும் டால்ஸ்டாய், ஆண்டு 1910

1860-61இல் இவரது ஐரோப்பியப் பயணமானது இவரின் அரசியல் மற்றும் இலக்கிய முன்னேற்றத்தை வடிவமைத்தது. அங்கு இவர் விக்டர் ஹியூகோவைச் சந்தித்தார். ஹியூகோவின் புதிதாக முடிக்கப்பட்டிருந்த லெசு மிசெரபுல்சு புதினத்தை டால்ஸ்டாய் படித்தார். ஹியூகோவின் புதினம் மற்றும் டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நூலில் யுத்த காட்சிகள் ஒத்துள்ளது போல் இருப்பது இந்தத் தாக்கத்தை நமக்குக் காட்டுகிறது. 1861ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரெஞ்சு அரசின்மையாளரான பியர்ரி யோசப்பு புரோவுதோனை டால்ஸ்டாய் சந்தித்தார். டால்ஸ்டாயின் அரசியல் தத்துவத்தின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தியது. புரோவுதோன் புரூசெல்சில் மாற்றுப் பெயரில் நாடு கடந்து வாழ்ந்து வந்தார். புரோவுதோனின் எதிர்காலப் பதிப்பான லா குவேரே எட் ல பைக்சு என்ற நூலை டால்ஸ்டாய் மறு ஆய்வு செய்தார். இந்த நூலின் தலைப்பிற்குப் பிரெஞ்சு மொழியில் "போரும் அமைதியும்" என்று பொருள். இதே தலைப்பைத் தன்னுடைய தலைசிறந்த படைப்பின் தலைப்பாகப் பின்னர் டால்ஸ்டாய் பயன்படுத்தினார். இருவரும் கல்வி பற்றியும் விவாதித்தனர். டால்ஸ்டாய் தன்னுடைய கல்விக் குறிப்புகளில் பின்வருமாறு எழுதினார்: "புரோவுதோனுடனான என்னுடைய உரையாடலை நான் விவரித்தால், நான் கூறுவது யாதெனில், என்னுடைய சொந்த அனுபவத்தில், கல்வி மற்றும் அச்சுப் பதிப்பின் முக்கியத்துவத்தை நமது காலத்தில் உணர்ந்த ஒரே ஒரு மனிதன் அவர்தான்."

ஆர்வம் கொண்ட டால்ஸ்டாய் எசுனாயா போல்யானவுக்குத் திரும்பினார். உருசிய விவசாயிகளின் குழந்தைகளுக்காக 13 பள்ளிகளைத் தோற்றுவித்தார். 1861ஆம் ஆண்டின் போது தான் விவசாயிகளுக்குப் பண்ணை முறையிலிருந்து விடுதலை அளிக்கப்பட்டு சம உரிமை அளிக்கப்பட்டிருந்தது. இப்பள்ளிகளின் கொள்கைகளைத் தனது 1862ஆம் ஆண்டுக் கட்டுரையான "எசுனாயா போல்யானாவில் உள்ள பள்ளி" என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார்.[25] இவரது கல்வி ஆய்வுகள் சிறிது காலமே நீடித்தன. இதற்கு ஒரு பங்குக் காரணமானது ஜாராட்சியின் இரகசியக் காவலர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்ததுமாகும். இருந்தும் இது ஏ. எஸ். நீல் தோற்றுவித்த சம்மர்கில் பள்ளிகளின் நேரடி முன் மாதிரியாகும். எசுனாயா போல்யானாவில் இருந்த பள்ளியை[26] மக்களாட்சிக் கல்வி எனும் ஒரு தெளிவான கோட்பாட்டின் முதல் எடுத்துக்காட்டு என்று பொருத்தமாகக் குறிப்பிடலாம்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1860ஆம் ஆண்டு இவரது அண்ணன் நிக்கோலாய் இறந்தது டால்ஸ்டாயின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. டால்ஸ்டாய் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.[18] 23 செப்டம்பர் 1862 அன்று டால்ஸ்டாய் சோபியா ஆந்த்ரீவினா பெகர்சு என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். டால்ஸ்டாயை விட சோபியாவுக்கு 16 வயது குறைவாகும். சோபியா ஒரு அரசவை மருத்துவரின் மகள் ஆவார். இவரை சோனியா என்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அழைத்தனர்.[27] சோபியா என்ற பெயர் உருசியாவில் சோனியா என்று குறிப்பிடப்படுகிறது. இவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. இதில் 8 குழந்தைகள் மட்டுமே குழந்தைப் பருவத்தைத் தாண்டின:[28]

டால்ஸ்டாயின் மனைவி சோபியா மற்றும் அவர்களது மகள் அலெக்சாந்திரா
  • கோமகன் செர்கீ இலாவோவிச் டால்ஸ்டாய் (1863–1947), இசையமைப்பாளர் மற்றும் உலக இசை ஆய்வாளர்
  • கோமாட்டி ததியானா இலாவோவினா டால்ஸ்டாயா (1864–1950), மிக்கைல் செர்கீவிச் சுகோதினின் மனைவி
  • கோமகன் இலியா இலாவோவிச் டால்ஸ்டாய் (1866–1933), எழுத்தாளர்
  • கோமகன் லெவ் இலாவோவிச் டால்ஸ்டாய் (1869–1945), எழுத்தாளர் மற்றும் சிற்பி
  • கோமாட்டி மரியா இலாவோவினா டால்ஸ்டாயா (1871–1906), நிக்கோலாய் லியோனிதோவிச் ஓபோலென்சுகியின் மனைவி
  • கோமகன் பேதுரு இலாவோவிச் டால்ஸ்டாய் (1872–1873), குழந்தைப் பருவத்திலேயே இறப்பு
  • கோமகன் நிக்கோலாய் இலாவோவிச் டால்ஸ்டாய் (1874–1875), குழந்தைப் பருவத்திலேயே இறப்பு
  • கோமாட்டி வர்வரா இலாவோவினா டால்ஸ்டாயா (1875–1875), குழந்தைப் பருவத்திலேயே இறப்பு
  • கோமகன் ஆந்த்ரேயி இலாவோவிச் டால்ஸ்டாய் (1877–1916), உருசிய-சப்பானியப் போரில் சேவையாற்றினார்
  • கோமகன் மைக்கேல் இலாவோவிச் டால்ஸ்டாய் (1879–1944)
  • கோமகன் அலெக்சீ இலாவோவிச் டால்ஸ்டாய் (1881–1886)
  • கோமாட்டி அலெக்சாந்திரா இலாவோவினா டால்ஸ்டாயா (1884–1979)
  • கோமகன் இவான் இலாவோவிச் டால்ஸ்டாய் (1888–1895)

இவர்களின் ஆரம்பத் திருமண வாழ்வு மகிழ்ச்சியாகவே இருந்தது. இது போரும் அமைதியும் மற்றும் அன்னா கரேனினா ஆகிய நூல்களைப் படைப்பதற்கு அதிகப்படியான சுதந்திரத்தையும், ஆதரவு அமைப்பையும் டால்ஸ்டாய்க்குக் கொடுத்தது. சோனியா இவரது செயலாளராகவும், பதிப்பாசிரியராகவும், நிதி மேலாளராகவும் செயல்பட்டார். ஒன்றன் பின் ஒன்றாக இவரது காவியப் படைப்புகளைச் சோனியா பிரதியெடுத்தும், கையால் எழுதியும் வந்தார். பிறகு போரும் அமைதியும் நூலைத் தொடர்ந்து டால்ஸ்டாய் மறு ஆய்வு செய்வார். பதிப்பகத்தாரிடம் கொடுப்பதற்காகத் தெளிவான இறுதி வடிவத்தைக் கொடுப்பார்.[27][29]

தன் பேத்தியுடன் டால்ஸ்டாய், ஆண்டு 1906

ஆங்கில எழுத்தாளர் ஏ. என். வில்சனால் விளக்கப்பட்டதன்படி, இவர்களது பிற்கால வாழ்வானது இலக்கிய வரலாற்றில் மகிழ்ச்சியற்ற ஒன்றாக அமையவில்லை. டால்ஸ்டாயின் நம்பிக்கைகளில் தீவிரவாதமானது அதிகமாகத் தொடங்கியபோது, இவரது மனைவியுடனான இவரது உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாகத் தன் பாரம்பரிய மற்றும் ஈட்டிய செல்வத்தை டால்ஸ்டாய் துறந்தார். தன்னுடைய ஆரம்ப நூல்களின் பதிப்புரிமைகளையும் துறந்தார்.

1905ஆம் ஆண்டு உருசியப் புரட்சி மற்றும் இறுதியில் சோவியத் ஒன்றியம் நிறுவப்பட்டது ஆகியவற்றுக்குப் பிறகு, டால்ஸ்டாய் குடும்பத்தின் சில உறுப்பினர்கள் உருசியாவில் இருந்து வெளியேறினர். லியோ டால்ஸ்டாயின் உறவினர்கள் மற்றும் வழித்தோன்றல்களில் பலர் இன்று சுவீடன், செருமனி, ஐக்கிய இராச்சியம், பிரான்சு மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். டால்ஸ்டாயின் மகனான கோமகன் லெவ் இலாவோவிச் டால்ஸ்டாய் சுவீடனில் குடியேறினார். ஒரு சுவீடியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். லியோ டால்ஸ்டாயின் கடைசி உயிர் வாழ்ந்த பேத்தியான கோமாட்டி ததியானா டால்ஸ்டாய் பவுஸ் 2007ஆம் ஆண்டு சுவீடனில் அரேஸ்தா பண்ணை மாளிகையில் இறந்தார். இந்த வீடு தற்போது டால்ஸ்டாயின் வழித்தோன்றல்களின் பெயரில் உள்ளது.[30] சுவீடன் ஜாஸ் பாடகரான விக்டோரியா டால்ஸ்டாய் லியோ டால்ஸ்டாயின் வழித்தோன்றல் ஆவார்.[31]

இவரது 4ஆம் தலை முறை வழித்தோன்றல்களில் ஒருவரான விளாதிமிர் டால்ஸ்டாய் (பிறப்பி 1962) எசுனாயா போல்யானா அருங்காட்சியகத்தின் இயக்குனராக 1994ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். 2012ஆம் ஆண்டு முதல் உருசிய அதிபரிடம் கலாச்சார விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.[32][33] இலியா டால்ஸ்டாயின் 3ஆம் தலை முறை வழித்தோன்றலான பியோதர் டால்ஸ்டாய் பரவலாக அறியப்பட்ட உருசியப் பத்திரிகையாளரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். பியோதர் டால்ஸ்டாய் 2016ஆம் ஆண்டு முதல் உருசியப் பாராளுமன்றத்தின் கீழவையின் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். பியோதர் டால்ஸ்டாயின் உறவினரும், புகழ் பெற்ற சோவியத் இசுலாவியளாளரான நிகிதா டால்ஸ்டாயின் (ru) மகளுமான பியோகிலா டால்ஸ்டாயாவும் (பிறப்புப் பெயர் அன்னா டால்ஸ்டாயா, பிறப்பு 1971) ஓர் உருசியப் பத்திரிகையாளர், தொலைக்காட்சி மற்றும் வானொலித் தொகுப்பாளர் ஆவார்.[34]

புதினங்களும் புனைவுகளும்[தொகு]

1906இல் டால்ஸ்டாய்

உருசிய இலக்கியத்தின் இமயங்களில் ஒருவராக டால்ஸ்டாய் கருதப்படுகிறார். இவரது புதினங்களான போரும் அமைதியும் மற்றும் அன்னா கரேனினா மற்றும் குறும் புதினங்களான காசி முராத் மற்றும் இவான் இலியிச்சின் இறப்பு ஆகியவை இவரது படைப்புகளில் சிலவாகும்.

டால்ஸ்டாயின் ஆரம்ப காலப் படைப்புகளான பகுதியளவு சுய சரிதைப் புதினங்களான குழந்தைப்பருவம், சிறுவயது பருவம் மற்றும் இளமைப்பருவம் (1852–1856) ஆகியவை ஒரு பணக்கார நில உடைமையாளரின் மகன் மற்றும், அவருக்கும் அவரது விவசாயிகளுக்கும் இடையிலான உள்ளுணர்வை அவர் மெதுவாக உணர்தல் ஆகியவற்றைப்பற்றிக் கூறுகின்றன. டால்ஸ்டாய் பிற்காலத்தில் இவற்றை உணர்ச்சிவசப்பட்டவையாகக் கூறியபோதிலும் டால்ஸ்டாயின் சொந்த வாழ்க்கை பற்றி பெரும்பாலான தகவல்களை இப்புதினங்கள் வெளிப்படுத்தின. உலகம் முழுவதும் உள்ளவர்களின் வளரும் பருவத்துடன் ஒத்துப் போவதன் மூலம் அவற்றின் முக்கியத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றன.

டால்ஸ்டாய் கிரிமியா போரின்போது ஒரு பீரங்கிப் படைப்பிரிவின் இரண்டாவது படை துணைத் தலைவராகச் சேவையாற்றினார். இவரது செவசுதபோல் படங்கள் நூலில் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்தத்தில் இவர் பெற்ற அனுபவங்கள் இறுதியாக இவரது அமைதிவாதத் தத்துவத்தைத் தூண்டுவதற்கு உதவியாக இருந்தன. தன்னுடைய பிந்தைய நூல்களில் போரின் கொடூரங்களைத் தத்ரூபமாகச் சித்தரிப்பதற்குத் தேவையான தகவல்களை வழங்கின.[35]

இவர் வாழ்ந்த உருசிய சமூகத்தைத் தத்ரூபமாகப் பிரதிபலிக்க இவரது புனைவுகள் தொடர்ந்து முயற்சித்தன.[36] ஓர் உருசிய உயர்குடி ஆண், ஒரு கொசக் பெண்ணை விரும்பிய கதையின் மூலம் கொசக்குகளின் வாழ்க்கை மற்றும் மக்களை இவரது கொசக்குகள் (1863) என்ற நூல் விவரித்தது. அன்னா கரேனினா (1877) சமுதாயத்தின் மரபொழுங்கு மற்றும் போலித்தனங்களில் மாட்டிக் கொண்ட ஒரு பெண் மற்றும் விவசாயிகளுடன் விளைநிலத்தில் உழைக்கும், அவர்களின் வாழ்வைச் சீரமைக்க முயலும் ஒரு தத்துவவாதி நில உடைமையாளர் (டால்ஸ்டாயைப் போன்ற ஒருவர்) ஆகியோரின் இணை நிலையான கதைகளைக் கூறியது. தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிலிருந்து டால்ஸ்டாய் கதைகளைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய பண்புகளைக் கொண்ட கதாபாத்திரங்களையும் உருவாக்கினார். போரும் அமைதியும் நூலின் பியர்ரி பெசுகோவ் மற்றும் இளவரசன் ஆந்த்ரேயி, அன்னா கரேனினா நூலின் லெவின், ஓரளவுக்கு உயிர்த்தெழல் நூலின் இளவரசன் நெக்லையுதோவ் ஆகிய கதாபாத்திரங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். டால்ஸ்டாயின் பெரும்பாலான படைப்புகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த ரிச்சர்ட் பேவியர் டால்ஸ்டாயின் பொதுவான பாணியைப் பற்றிக் கூறியதாவது, "இவரது படைப்புகள் முழுவதுமாக உணர்ச்சித் தூண்டல் மற்றும் முரண் நகைச் சூழல்களைக் கொண்டிருந்தன. பரந்த மற்றும் விரிவாக மேம்படுத்தப்பட்ட சொல்லணி உத்திகளையும் கொண்டிருந்தன."[37]

இருளின் சக்தி
2015ஆம் ஆண்டு வியன்னாவின் நிலையத் திரையரங்கில் இருளின் சக்தி நாடகம்

பொதுவாகப் போரும் அமைதியும் நூலானது இதுவரை எழுதப்பட்ட புதினங்களிலேயே தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. கவனத்தை ஈர்க்க கூடிய வகையில் இது மிக நீண்டதாக உள்ளபோதிலும். நேர்த்தியான அமைப்பிற்காக வியப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. இப்புதினத்தில் 580 கதாபாத்திரங்கள் உள்ளன. இவற்றில் பல கதாபாத்திரங்கள் வரலாற்றைச் சேர்ந்தவையாகும். மற்ற பிற புனைவுகளாகும். இக்கதையானது குடும்ப வாழ்க்கையிலிருந்து நெப்போலியனின் தலைமையகத்திற்கும், உருசியாவின் முதலாம் அலெக்சாந்தரின் அவையிலிருந்து ஆசுத்தர்லிச்சு மற்றும் போரோதினோ யுத்த களங்களுக்கும் நகர்கிறது. இப்புதினத்துக்கான டால்ஸ்டாயின் உண்மையான எண்ணமானது திசம்பர் புரட்சியின் காரணங்களை ஆராய்வதாகும். எனினும் இதன் கடைசிப் பகுதிகளில் தான் திசம்பர் புரட்சியைப் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது. இதன் கடைசிப் பகுதிகளிலிருந்து ஆந்த்ரேயி போலகோன்சுகியின் மகன் திசம்பரியவாதிகளிலே ஒருவராகிறார் என்பதை நாம் உணரமுடியும். வரலாற்றின் மீதான டால்ஸ்டாயின் கோட்பாட்டை இப்புதினம் ஆராய்கிறது. குறிப்பாக நெப்போலியன் மற்றும் அலெக்சாந்தர் போன்ற தனி நபர்களின் முக்கியத்துவமற்ற நிலையை ஆராய்கிறது. ஓரளவுக்கு வியப்பூட்டக்கூடிய வகையில் டால்ஸ்டாய் போரும் அமைதியும் நூலைப் புதினமாகக் கருதவில்லை. மேலும் அந்த நேரத்தில் எழுதப்பட்ட பல சிறந்த உருசியப் புனைவுகளை இவர் புதினங்களாகக் கருதவில்லை. டால்ஸ்டாயை மெய்மையியல் பள்ளியைச் சேர்ந்த, ஒரு புதினத்தை 19ஆம் நூற்றாண்டின் சமுதாய மற்றும் அரசியல் விவகாரங்களை ஆராய்வதற்கான ஒன்றாகக் கருதுபவர் என்பதை ஒருவர் எண்ணும் போது, இப்பார்வையின் வியப்புத் தன்மையானது குறைகிறது.[38] இவ்வாறாகப் போரும் அமைதியும் நூலானது புதினத்திற்கான தகுதியை அடையவில்லை. டால்ஸ்டாயைப் பொறுத்தவரை போரும் அமைதியும் நூலானது வசனங்களை உடைய ஒரு இதிகாசம் ஆகும். அன்னா கரேனினாவைத் தான் டால்ஸ்டாய் தனது உண்மையான முதல் புதினமாகக் கருதினார்.[39]

அன்னா கரேனினாவுக்குப் பிறகு டால்ஸ்டாய் கிறித்தவக் கருத்துகளின் மீது கவனம் செலுத்தினார். இவரது பிந்தைய புதினங்களான இவான் இலியிச்சின் இறப்பு (1886) மற்றும் எதைச் செய்ய வேண்டும்? ஆகியவை ஒரு தீவிரவாத அரசின்மை-அமைதிவாத கிறித்தவத் தத்துவத்தை உருவாக்கின. இது 1901ஆம் ஆண்டு உருசிய மரபுவழித் திருச்சபையிலிருந்து இவர் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது.[40] அன்னா கரேனினா மற்றும் போரும் அமைதியும் ஆகிய நூல்கள் போற்றப்பட்ட போதிலும், தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இந்த இரண்டு படைப்புகளையும் யதார்த்தத்தை உண்மையாகக் கூறவில்லை என டால்ஸ்டாய் நிராகரித்தார்.[41]

தன் உயிர்த்தெழல் புதினத்தில், மனிதன் இயற்றிய சட்டங்களின் அநீதி மற்றும் அமைப்புமுறைக்குட்படுத்திய கிறித்தவ சமய மைப்பின் பாசாங்கு ஆகியவற்றின் இரகசியங்களை வெளிக்காட்ட டால்ஸ்டாய் முயற்சித்தார். டால்ஸ்டாய், ஜார்ஜியத்தின் பொருளாதாரத் தத்துவத்தை ஆய்வு செய்யவும், விவரிக்கவும் செய்தார். தன் வாழ்நாளின் இறுதியில் இத்தத்துவத்தின் ஒரு தீவிர பரிந்துரையாளராகவும் டால்ஸ்டாய் மாறினார்.

கவிதைகள் எழுதுவதிலும் டால்ஸ்டாய்க்கு ஆர்வம் இருந்தது. தன் இராணுவச் சேவையின் போது போர்வீரர்களுக்கான பல பாடல்களை எழுதினார். தேசிய நாட்டுப்புறப் பாடல்களாக வகைமை செய்யப்பட்ட, கவிதை வடிவ கற்பனைக் கதைகளான வோல்கா பகதூர் மற்றும் ஓஃப் ஆகியவற்றை எழுதினார். இவை 1871 மற்றும் 1874க்கு இடையில் இவரது படிப்பதற்கான உருசிய நூல் என்ற நூலுக்காக எழுதப்பட்டன. இந்நூல் 4 தொகுதிகளாக எழுதப்பட்ட சிறு கதைகளின் தொகுப்பு ஆகும். இதில் பல்வேறு வகைகளின் கீழ் எழுதப்பட்ட மொத்தம் 629 கதைகள் இருந்தன. இந்நூல் புதிய அசுபுகா பள்ளி நூலுடன் ஒன்றாகப் பதிப்பிக்கப்பட்டது. இந்நூல் பள்ளிக் குழந்தைகளுக்காக இயற்றப்பட்டது ஆகும். இது தவிர, டால்ஸ்டாய்க்கு கவிதை மீது ஒரு வகை இலக்கியம் என்ற முறையில் பெரிதாக நம்பிக்கை இல்லை. இதை இவர் தன் "கவிதை எழுதுவது என்பது ஒரே நேரத்தில் உழுது கொண்டு நடனமாடுவதைப் போன்றது" என்ற பிரபலமான சொற்றொடர் மூலம் குறிப்பிட்டுள்ளார். வாலென்டின் புல்ககோவின் கூற்றுப்படி, "வெறுமனே ஒலியியைபு கொண்டதாக இருக்க வேண்டும்" என்பதற்காகத் தங்களது "பொய்யான" சொற்றொடர்களைப் பயன்படுத்துபவர்கள் என அலெக்சாந்தர் பூஷ்கின் உள்ளிட்ட கவிஞர்களை டால்ஸ்டாய் சாடினார்.[42][43]

மற்ற எழுத்தாளர்களின் மதிப்பீடுகள்[தொகு]

ஆன்டன் செக்கோவுடன் டால்ஸ்டாய்

டால்ஸ்டாயின் சமகால எழுத்தாளர்கள் டால்ஸ்டாய்க்கு மேன்மை வாய்ந்த புகழுரையைத் தெரிவித்துள்ளனர். டால்ஸ்டாய்க்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த பியோதர் தஸ்தயெவ்ஸ்கி டால்ஸ்டாயைப் போற்றினார். டால்ஸ்டாயின் புதினங்களைக் கண்டு மகிழ்ந்தார். இதேபோல் டால்ஸ்டாயும் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளைப் பாராட்டினார்.[44] குஸ்தாவே பிலாவுபெர்ட் என்பவர் போரும் அமைதியும் நூலின் ஒரு மொழிபெயர்ப்பைப் படித்தபோது, "என்ன ஒரு கலைஞர், என்ன ஒரு உளவியலாளர்!" என்று ஆச்சரியமடைந்தார். டால்ஸ்டாயின் நாட்டுப்புறப் பண்ணையில் அவரை அடிக்கடிச் சென்று சந்தித்து ஆன்டன் செக்கோவ், "இலக்கியத்திற்கு என்று ஒரு டால்ஸ்டாய் இருக்கும் போது, ஓர் எழுத்தாளராக இருப்பது எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. நீங்கள் ஒன்றுமே சாதிக்கவில்லை என்று தெரிந்த போதும், மேலும் நீங்கள் தொடர்ந்து ஒன்றுமே சாதிக்காமல் இருக்கும்போதும் கூட, அவை எந்த அளவுக்கு மோசமாக இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மோசமாக இல்லை. ஏனெனில் டால்ஸ்டாய் ஒவ்வொருவருக்காகவும் சாதிக்கிறார். இலக்கியத்தில் ஆற்றலைச் செலவிடும் அனைவரின் நம்பிக்கைகள் மற்றும் முனைப்புகளை டால்ஸ்டாயின் செயல்கள் நியாயமாக்குகின்றன. 19ஆம் நூற்றாண்டு பிரித்தானியக் கவிஞரும் விமர்சகருமான மேத்யு அர்னால்ட், "டால்ஸ்டாயால் படைக்கப்பட்ட ஒரு புதினம் என்பது ஒரு கலை வேலைப்பாடு கிடையாது, மாறாக அது வாழ்வின் ஓர் அங்கமாகும்" என்று தனது கருத்தைத் தெரிவித்தார். ஐசக் பாபெல், "இந்த உலகம் ஒரு மனிதனாக மாறி அது எழுத ஆரம்பித்தால், அது டால்ஸ்டாயைப் போல எழுதும்" என்று கூறினார்.[3]

டால்ஸ்டாயையும் நவீன எழுத்தாளர்களையும் ஒப்பிடும் சித்திரம்

பிந்தைய புதின எழுத்தாளர்கள் டால்ஸ்டாயின் கலையைத் தொடர்ந்து பாராட்டினர். ஆனால் சில நேரங்களில் விமர்சனமும் செய்தனர். ஆர்தர் கொனன் டொயில், "டால்ஸ்டாய்க்கு அவர் படைப்புகளின் மேல் உள்ள அக்கறையாலும், அவர் கொடுக்கும் நுணுக்கமான தகவல்களாலும் நான் ஈர்க்கப்படுகிறேன். ஆனால் நூல் கட்டமைப்பில் இவரது தளர்ந்த நிலையாலும், கண்டபடியான மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத இறையுணர்வாலும் வெறுக்கிறேன்." என்றார்[45] வெர்ஜீனியா வூல்ஃப் "அனைத்து புதின எழுத்தாளர்களிலும் சிறந்தவர்" என டால்ஸ்டாயைத் தெரிவித்தார்.[3] ஜேம்ஸ் ஜோய்ஸ் "டால்ஸ்டாய் என்றுமே சலிப்படைவதில்லை, முட்டாள் தனமாக இருந்ததில்லை, சோர்வடைவதில்லை, மிகைப்படியான தகவல்களைத் தெரிவிப்பதில்லை, நாடகத்தனமாக இருந்ததில்லை!" என்றார். தாமசு மாண், டால்ஸ்டாயின் கள்ளமற்ற கலைத்திறனை: "டால்ஸ்டாயின் கலையானது இயற்கையைப் போல் வேலை செய்கிறது. மற்ற யாரிடமும் கலை என்றுமே இவ்வாறு வேலை செய்ததில்லை" என்றார். விளாதிமிர் நபோக்கோவ் இவான் இலியிச்சின் இறப்பு மற்றும் அன்னா கரேனினா ஆகிய படைப்புகளைப் புகழ்ந்தார். ஆனால் போரும் அமைதியும் நூலின் பொது மதிப்பீட்டைக் கேள்விக்கு உள்ளாக்கினார். உயிர்த்தெழல் மற்றும் த கிரெவுச்சர் சொனாதாவைக் கூர்மையாக விமர்சித்தார். விமர்சகர் அரால்டு புளூம் காசி முராத் நூலை "என் எண்ணப்படி புனைவு வசனங்களின் உயர் தரத்தை அளவிட ஓர் அளவீடு, உலகின் மிகச் சிறந்த கதை" என்றார்.[46]

சமய மற்றும் அரசியல் நம்பிக்கைகள்[தொகு]

சோபெனவேரின் மன உறுதி மற்றும் பிரதிநிதித்துவமாக உலகம் நூலைப் படித்த பிறகு, உயர் வகுப்பினருக்குப் பொருத்தமான ஆன்மிக வழி என அந்நூலில் குறிப்பிடப்பட்ட துறவு ஒழுக்க முறைகளுக்குப் படிப்படியாக டால்ஸ்டாய் மாற ஆரம்பித்தார். 1869 இல் பின்வருமாறு எழுதினார்: "இக்கோடை காலம் எனக்கு எவ்வளவு முக்கியமானது என உனக்குத் தெரியுமா? சோபெனவேர் குறித்து அடிக்கடி ஏற்பட்ட மகிழ்வுணர்வு. நான் இதற்கு முன்னர் உணர்ந்திராத தொடர்ச்சியான ஆன்மிகப் பேரின்பம்.... இக்கோடையில் நான் நிறைய கற்றதைப் போல், இப்பாடத்தைப் பற்றி எந்த ஒரு மாணவனும் இந்த அளவுக்கு ஆய்ந்திருக்க மாட்டான்."[47]

லியோ டால்ஸ்டாய் நரகத்தில் உள்ளதாகச் சித்தரிக்கும், சமய மற்றும் நாத்திக வரலாறு அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு நகல் ஓவியம். புனித தசோவ் குருசுகு ஆளுநரகத்தில் உள்ள தேவாலயத்தின் சுவற்றுப் பகுதியில் உண்மையான ஓவியம் உள்ளது. ஆண்டு 1883. சாத்தானின் கைகளில் டால்ஸ்டாய் இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தனது ஒப்புக் கொள்ளுதல் நூலின் 4 ஆம் உட்பிரிவில் சோபெனவேரின் நூலின் கடைசிப் பத்தியை டால்ஸ்டாய் குறிப்பிட்டார். ஒரு முழுமையான சுய மறுப்பானது ஒப்பீட்டளவில் ஒரு சிறிய இல்லாமையையே கொடுக்கிறது என்பதை இது விளக்கியது. அதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்றது. புனிதமடைவதற்கான வழியாகத் துறவை கிறித்தவம், பௌத்தம் மற்றும் இந்து சமயங்கள் குறிப்பிடுவதைக் கண்டு தாக்கம் பெற்றார். சோபெனவேரின் அறநெறி சார்ந்த உட்பிரிவுகளைக் கொண்ட, கீழ்க்கண்ட பத்தி போன்றவற்றைப் படித்த பிறகு, உருசிய உயர்குடியினரான டால்ஸ்டாய் தான் கடைபிடிப்பவையாக வறுமை மற்றும் முறையான சுய மறுப்பைத் தேர்ந்தெடுத்தார்:

எல்லையற்ற பாவ விமோசனத்துக்கு, இவ்வாறு (ஏழைகளுக்கு) தானாக நடக்கும் துன்பத்தின் தேவையானது இரட்சகராலும் கூறப்பட்டுள்ளது (மத்தேயு 19:24): "ஒரு செல்வந்தன் தெய்வத்தின் இராச்சியத்துக்குள் நுழைவதை விட, ஓர் ஊசியின் கண் வழியே ஓர் ஒட்டகம் செல்வது என்பது எளிதானதாகும்." இவ்வாறாக, தமது எல்லையற்ற பாவ விமோசனத்துக்காக மிகவும் முனைப்பாயிருப்பவர்கள், செல்வந்தர்களாகப் பிறந்தவர்கள், விதி தங்களுக்குக் கொடுக்காத வறுமையைத் தாமாக முன்வந்து தேர்ந்தெடுத்தனர். இவ்வாறாகச் சாக்கியமுனி புத்தர் ஓர் இளவரசனாகப் பிறந்தார், தானாக முன்வந்து யாசக வாழ்வைத் தேர்ந்தெடுத்தார்; யாசகர்களின் வரிசையைத் தோற்றுவித்த அசிசியின் பிரான்சிசு ஒரு விழாவில் இளைஞனாக அமர்ந்திருந்தபோது, அங்கு அனைத்து முக்கியமானவர்களின் மகள்களும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அங்கு அவரிடம்: "பிரான்சிசு, இப்போது நீ இந்த அழகுடைய பெண்களில் ஒருவரைச் சீக்கிரம் தேர்ந்தெடுக்கமாட்டாயா?" எனக் கேட்கப்பட்டது. அவர் பதிலளித்தார்: "நான் இதைவிட ஒரு படி மேலான அழகான ஒன்றைத் தேர்ந்தெடுத்துள்ளேன்!" "யார்?" "லா பாவர்ட்டா (வறுமை)": இதற்குப் பிறகு தன்னிடம் இருந்த அனைத்தையும் அவர் துறந்தார். நிலப்பகுதி வழியாக ஒரு யாசகனாகத் திரிந்தார்.[48]

எசுனாயா போல்யானாவில் ஒரு குளக் கரையில் டால்ஸ்டாய்
டால்ஸ்டாய், மே 19, 1910.

1884ஆம் ஆண்டு நான் எதை நம்புகிறேன் என்ற நூலை டால்ஸ்டாய் எழுதினார். அதில் வெளிப்படையாகத் தன் கிறித்தவ நம்பிக்கைகளை ஒப்புக் கொண்டார். இயேசு கிறித்துவின் போதனைகள் மீது தனக்கிருந்த நம்பிக்கையை உறுதி செய்தார். குறிப்பாக மலைச் சொற்பொழிவு இவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டு என்ற கட்டளையை, "வலிமையால் தீமையை எதிர்க்கக் கூடாது என்ற கட்டளை", அமைதிவாத மற்றும் அறப் போராட்ட போதனை என உணர்ந்தார். இயேசுவின் அறிவுரைகளை நெறி பிறழ வைத்ததாலேயே, கிறித்தவ சமய அமைப்பின் போதனைகளைத் தவறாகக் கருதியதாகத் தன் தெய்வத்தின் இராச்சியம் உனக்குள் உள்ளது என்ற நூலில் விவரித்துள்ளார். அமெரிக்க நண்பர்களின் சமய சமூகத்திடம் இருந்தும் டால்ஸ்டாய் மடல்களைப் பெற்றார். அவர்கள் நண்பர்களின் சமய சமூக கிறித்தவர்களான ஜார்ஜ் பாக்சு, வில்லியம் பென் மற்றும் ஜோனதன் டைமண்ட் ஆகியோர் எழுதிய அறப் போராட்ட நூல்களை டால்ஸ்டாய்க்கு அறிமுகப்படுத்தினர். தான் ஒரு கிறித்தவராக இருப்பதால் தான் ஓர் அமைதிவாதியாக இருக்க வேண்டியதும் அவசியம் என டால்ஸ்டாய் நம்பினார். அரசாங்கங்களால் தவிர்க்க முடியாமல் நடத்தப்படும் போர்களாலேயே தான் தன்னை ஒரு தத்துவ அரசின்மையாளராகக் கருதுவதாக நம்பினார்.

பிற்காலத்தில் "டால்ஸ்டாயின் விவிலியத்தின்" பல்வேறு தலுவல்கள் பதிப்பிக்கப்பட்டன. டால்ஸ்டாய் அதிகம் சார்ந்திருந்த பத்திகளை, குறிப்பாக, இயேசு பேசியதாகக் குறிப்பிடப்பட்ட சொற்களைச் சுட்டிக் காட்டின.[49]

தென் ஆப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணையில் காந்தி மற்றும் பிற வசிப்பாளர்கள், 1910

கிறித்தவ சமய அமைப்பு அல்லது அரசின் வழிகாட்டலுக்கு மாறாக, ஒருவரின் அண்டையவர் மற்றும் தெய்வத்தின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற மகா கட்டளையைப் பின்பற்றுவதன் மூலம், உள்ளத்தில் முழு நிறைவைப் பெற்று ஒரு உண்மையான கிறித்தவன் நீடித்திருக்கும் மகிழ்ச்சியைப் பெறலாம் என டால்ஸ்டாய் நம்பினார். இயேசுவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட இவரது தத்துவத்தின் மற்றுமொரு தனித்துவமான இயல்பானது சண்டையின் போது எதிர்ப்புக் காட்டக் கூடாது என்பதாகும். டால்ஸ்டாயின் தெய்வத்தின் இராச்சியம் உனக்குள் உள்ளது என்ற நூலில் உள்ள இந்த யோசனையானது காந்தி மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அற வழியில் எதிர்ப்புத் தெரிவிக்கும் இயக்கங்களின் மீதும் இன்றும் கூடத் தாக்கம் ஏற்படுத்துகிறது.

உயர்குடியினர் ஏழைகளுக்கு ஒரு சுமையாக உள்ளனர் என்று டால்ஸ்டாய் நம்பினார்.[50] தனி நபர் நில உரிமையையும் திருமண அமைப்பையும் எதிர்த்தார். கற்பையும் பிரம்மச்சாரியத்தையும் மதித்தார். பாதிரியார் செர்கியசு மற்றும் கிரெவுச்சர் சொனாதாவில் தன் முகப்புரை ஆகியவற்றில் பிரம்மச்சாரியத்தைப் பற்றி டால்ஸ்டாய் விவாதித்துள்ளார். இதே கருத்துக்களை இளம் காந்தியும் கொண்டிருந்தார். டால்ஸ்டாயின் எளிமையான நல்லொழுக்கக் கருத்துக்களின் ஆழத்தில் இருந்து வெளிப்படும் இவரது அழுத்தமான உணர்வானது பிந்தைய நூல்களில் பிரதிபலித்தன.[51] பாதிரியார் செர்கியசு நூலில் செர்கியசின் சலனத்தின் தொடர்ச்சியைக் குறிப்பிடுவதை இதற்கு ஓர் உதாரணமாகக் கருதலாம். இப்பத்தியை டால்ஸ்டாய் ஒருமுறை மாக்சிம் கார்க்கி மற்றும் ஆன்டன் செக்கோவிடம் வாசித்துக் காட்டினார். இதை வாசித்து முடித்தபோது டால்ஸ்டாயின் கண்கள் கலங்கின. இவான் இலியிச்சின் இறப்பு மற்றும் எசமானனும் பணியாளும் ஆகிய நூல்களின் முதன்மைக் கதாப்பாத்திரங்கள் எதிர் கொள்ளும் தனி வாழ்க்கைப் பிரச்சனைகள் உள்ளிட்டவை அரிதான சக்தியைப் பற்றிய பிந்தைய பத்திகள் ஆகும். இந்நூல்களின் முதன்மைக் கதாப்பாத்திரங்களின் வாழ்வின் முட்டாள் தனத்தை, முதல் நூலின் முக்கியக் கதாப்பாத்திரமும், இரண்டாம் நூலின் வாசிப்பாளரும் அறியுமாறு செய்யப்படுகிறது.

1886ஆம் ஆண்டு டால்ஸ்டாய் உருசிய நாடுகாண் பயணியும், மானிடவியலாளரான நிக்கோலசு மிக்லோவுகோ மக்லேவுக்கு ஒரு மடல் எழுதினார். மனிதர்கள் பல்வேறு இனங்களிலிருந்து தோன்றினர் என்பதை மறுத்த முதல் மானிடவியலாளர்களில் மக்லேவும் ஒருவர் ஆவார். வெவ்வேறு இனங்கள் வெவ்வேறு உயிரினங்களிலிருந்து தோன்றின என்ற பார்வை பற்றி டால்ஸ்டாய் எழுதியதாவது: "உங்கள் அனுபவத்தின் மூலம் சந்தேகமின்றி மனிதன் எங்கும் மனிதானக இருக்கிறான் என்பதை தெளிவுபடுத்திய முதல் மனிதர் நீங்கள் தான். அதாவது, ஓர் இன உயிரினமாக அவனுடன் நம்மால் கருணை மற்றும் உண்மையின் மூலம் தொடர்பு ஏற்படுத்த முடியும், மற்றும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். அவனுடன் நாம் தொடர்பை துப்பாக்கிகள் மற்றும் பானங்களைக் கொண்டு ஏற்படுத்தக் கூடாது."[52]

கிறித்தவ அரசின்மை சிந்தனையின் வளர்ச்சி மீது டால்ஸ்டாய் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தினார்.[53] டால்ஸ்டாயன் இயக்கங்கள் என்பவை டால்ஸ்டாயின் தோழர் விளாதிமிர் செர்த்கோவால் (1854–1936) டால்ஸ்டாயின் சமய போதனைகளைப் பரப்ப உருவாக்கப்பட்ட ஒரு சிறிய கிறித்தவ அரசின்மை குழுக்களாகும். 1892 முதல் டால்ஸ்டாய் மாணவச் செயற்பாட்டாளரான வாசிலி மக்லகோவுடன் அடிக்கடி சந்திப்பை ஏற்படுத்தினார். மக்லகோவ் பல டால்ஸ்டாயன்களை ஆதரித்தார்; டுகோபார்களின் விதியைப் பற்றி இவர்கள் விவாதித்தனர். பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பில் தத்துவவாதி பேதுரு குரோபோதகின் அரசின்மை குறித்த கட்டுரையில் டால்ஸ்டாயைக் குறித்து எழுதினார்:

15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளின் பிரபல சமய இயக்கங்களைச் சேர்ந்த தனக்கு முன்னிருந்தவர்களான சோசேக்கி, தெங் மற்றும் பல பிறரைப் போல் லியோ டால்ஸ்டாய் தன்னை ஓர் அரசின்மையாளர் என்று குறிப்பிடாமல் அரசு மற்றும் சொத்துரிமை குறித்து அரசின்மை நிலையை எடுத்தார். இயேசுவின் போதனைகள், மற்றும் நடைமுறைத் தேவைகளின் பொதுவான உணர்விலிருந்து தன் முடிவுகளை எடுத்தார். தன் திறமையின் வலிமையைக் கொண்டு, கிறித்தவ சமய அமைப்பு, அரசு மற்றும் சட்டம், குறிப்பாகத் தற்போதைய உடைமைச் சட்டங்களை, டால்ஸ்டாய் கடுமையாக, குறிப்பாக தெய்வத்தின் இராச்சியம் உனக்குள் உள்ளது நூலில், விமர்சித்தார். மிருகத்தனமான வலிமையால் ஆதரவளிக்கப்படுகிற ஒழுக்கங்கெட்டவர்களின் ஆதிக்கம் கொண்ட இடம் என அரசை இவர் விவரித்தார். நன்றாகக் கட்டமைக்கப்பட்ட அரசை விட கொள்ளைக்காரர்கள் குறைந்த அளவே ஆபத்தானவர்கள் என இவர் கூறினார். கிறித்தவ சமய அமைப்பு, அரசு மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள சொத்துப் பகிர்ந்தளிப்பு ஆகியவை மனிதர்களுக்கு வழங்கும் பயன்கள் சார்ந்த நம்பாமை உணர்வு குறித்து ஒரு தேடல் விமர்சனத்தை இவர் முன்வைக்கிறார். இயேசுவின் போதனைகளிலிருந்து அற வழிப் போராட்டம் மற்றும் அனைத்துப் போர்களின் மீதும் முழுமையான கண்டனம் ஆகியவற்றை இவர் முன் வைக்கிறார். தற்காலத் தீமைகள் மீது ஓர் உணர்ச்சிவயப்படாத கவனிப்புச் செய்ததன் மூலம் பெற்ற இவரது வாதங்களுடன், இவரது சமய வாதங்கள் நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசின்மை குறித்த இவரது நூல் பகுதிகள் சமயம் சார்ந்த மற்றும் சமயம் சாராத வாசிப்பாளர்கள் ஆகிய அனைவராலும் விரும்பப்படுகின்றன.[54]

சமாராவில் வறட்சிக் கால உதவிகளை ஒருங்கமைக்கும் டால்ஸ்டாய், ஆண்டு 1891

சீனாவின் பாக்சர் புரட்சியில் எட்டு நாடுகளின் கூட்டணி தலையிட்டது,[55][56] பிலிப்பைன்-அமெரிக்கப் போர், மற்றும் இரண்டாம் பூவர் போர்[57] ஆகியவற்றுக்கு டால்ஸ்டாய் கண்டனம் தெரிவித்தார்.

டால்ஸ்டாய் பாக்சர் புரட்சியைப் பாராட்டினார். எட்டு நாடுகள் கூட்டணியின் உருசிய, செருமானிய, அமெரிக்க, யப்பானிய, மற்றும் பிற நாட்டுத் துருப்புக்கள் செய்த அட்டூழியங்களை கடுமையாக விமர்சித்தார். இத்துருப்புக்களின் சூறையாடல், கற்பழிப்பு, மற்றும் கொலைகள் குறித்த செய்திகளை அறிந்தார். துருப்புக்கள் மீது படுகொலை மற்றும் "கிறித்தவ மிருகத்தனம்" ஆகிய குற்றச்சாட்டுகளைக் கூறினார். இந்த அட்டூழியங்களுக்கு முக்கியப் பொறுப்பை ஏற்க வேண்டிய மன்னர்கள் என உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு மற்றும் இரண்டாம் வில்லியம் ஆகியவர்களைப் பெயரிட்டார்.[58][59] இந்தத் தலையீட்டை "அதன் அநியாயம் மற்றும் கொடூரம் காரணமாக மோசமானது" என விவரித்தார்.[60] லியோனிடு ஆந்த்ரேயேவ் மற்றும் கோர்கி ஆகிய சிந்தனையாளர்களாலும் இப்போரானது விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனத்தின் ஒரு பகுதியாக, சீன மக்களுக்கு என்ற மடல்களை டால்ஸ்டாய் எழுதினார்.[61] 1902ஆம் ஆண்டு, சீனாவில் இரண்டாம் நிக்கலாசின் நடவடிக்கைகளை விவரிக்கவும், கண்டனம் தெரிவிக்கவும் டால்ஸ்டாய் ஒரு வெளிப்படையான மடலை எழுதினார்.[62]

பாக்சர் புரட்சியானது சீனத் தத்துவங்கள் மீதான டால்ஸ்டாயின் ஆர்வத்தைத் தூண்டியது.[63] இவர் சீனா மீது ஆர்வம் கொண்ட ஒரு பிரபலமானவர் ஆவார். கன்பூசியஸ்[64][65][66] மற்றும் லாவோ சி ஆகியவர்களின் நூல்களைப் படித்தார். சீனா குறித்த சீன ஞானம் மற்றும் பிற நூல்களை டால்ஸ்டாய் எழுதினார். சீன சிந்தனையாளர் கு கோங்மிங்குடன் டால்ஸ்டாய்க்குக் கடிதப் பரிமாற்றம் இருந்தது. யப்பானைப் போல் மாற்றம் செய்யாமல், சீனா தொடர்ந்து ஒரு வேளாண்மைத் தேசமாக இருக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தார். காங் யூவேயியின் நூறு நாள்கள் சீர்திருத்தத்தை டால்ஸ்டாயும், குவும் எதிர்த்தனர். இந்தச் சீர்திருத்த இயக்கமானது பெரும் இடர்ப்பாடுகளை விளைவிக்கக் கூடியது என நம்பினர்.[67] சீன அரசின்மைக் குழுவான "பொதுவுடைமை ஆய்வுக்கான சமூகத்தின்" சிந்தனைகளை டால்ஸ்டாயின் அகிம்சைச் சித்தாந்தமானது வடிவமைத்தது.[68]

எசுனாயா போல்யானாவில் டால்ஸ்டாயின் 80வது பிறந்த நாளில் (1908) அலெக்சாந்தர் ஒசிபோவிச் திரங்கோவால் எடுக்கப்பட்ட இயங்கு படம். இவரது மனைவி சோபியா (தோட்டத்தில் பூக்களைப் பறிப்பவர்), மகள் அலெக்சாந்திரா (வெள்ளை ஆடையில் வண்டியில் அமர்ந்திருப்பவர்); இவரது உதவியாளரும், நம்பிக்கைக்குரியவருமான வி. செர்த்கோவ் (தாடியும், மீசையும் உடைய வழுக்கை மனிதர்); மற்றும் மாணவர்கள்.

தன் வாழ்வின் கடைசி 20 ஆண்டுகளில் எழுதப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில், டால்ஸ்டாய் அரசு மீதான அரசின்மை விமர்சனத்தை மீண்டும் வலியுறுத்தினார். அரசின்மையின் வன்முறையான புரட்சி வழிகளை மேற்கொள்வதைத் தவிர்த்து, குரோபோதகின் மற்றும் புரோவுதோனின் நூல்களைத் தன் வாசகர்களுக்குப் பரிந்துரைத்தார். "அரசின்மை குறித்து" என்ற தன் 1900ஆம் ஆண்டின் கட்டுரையில் இவர் எழுதியதாவது: "அரசின்மையாளர்கள் எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறார்கள்; ஏற்கனவே உள்ள அமைப்பை மறுப்பது, தற்போதைய சூழ்நிலையின் கீழ் அதிகாரத்தை விட மோசமான வன்முறை இருக்க முடியாது என்ற உறுதி. அரசின்மையானது ஒரு புரட்சியின் மூலம் தொடங்கப்படலாம் என்ற ஒரேயொரு சிந்தனையில் மட்டும் அவர்கள் தவறிழைக்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் சக்தியின் பாதுகாப்புத் தேவைப்படாத மக்கள் மேலும், மேலும் அதிகரிப்பதால் மட்டுமே அரசின்மை தொடங்கப்படும் … ஒரேயொரு நிரந்தரப் புரட்சி மட்டுமே இருக்க முடியும் – அது நல்லொழுக்கம்: மனதின் உள்ளே உள்ள மனிதனின் மீளுருவாக்கம்." அரசின்மை வன்முறை குறித்து டால்ஸ்டாய்க்கு ஐயங்கள் இருந்த போதும், உருசியாவில் அரசின்மை சிந்தனையாளர்களின் தடை செய்யப்பட்ட பதிப்புகளைப் பரப்பச் செய்யும் விஷப்பரிட்சைகளையும் டால்ஸ்டாய் மேற்கொண்டார். 1906ஆம் ஆண்டு சென் பீட்டர்சுபெர்க்கில் சட்ட விரோதமாகப் பதிப்பிக்கப்பட்ட குரோபோதகினின் "எதிர்ப்பாளனின் சொற்கள்" நூலின் ஆதாரங்களைச் சரி செய்தார்.[69]

படித்துக் கொண்டிருக்கும் டால்ஸ்டாய், 1908 (அகவை 80)

1908இல், டால்ஸ்டாய் எ லெட்டர் டு எ இந்து என்ற மடலை எழுதினார்.[70] காலனி ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற அகிம்சையை ஒரு வழியாகப் பின்பற்ற வேண்டும் என்பதில் தனக்கு இருந்த நம்பிக்கையை இதில் கோடிட்டுக் காட்டியிருந்தார். தென் ஆப்பிரிக்காவில் ஒரு செயற்பாட்டாளராகக் காந்தி உருவாகி வந்தபோது, 1909ஆம் ஆண்டு இம்மடலின் ஒரு நகலைப் படித்தார். அம்மடலை எழுதியவர் டால்ஸ்டாய் தான் என்பதற்கான சான்றைக் கேட்டு காந்தி இவருக்கு மடல் எழுதினார். இது இருவருக்குமிடையே மேற்கொண்ட மடல் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது.[21] அகிம்சை வழி எதிர்ப்பின் மீது காந்தி நம்பிக்கை கொள்ள டால்ஸ்டாயின் தெய்வத்தின் இராச்சியம் உனக்குள் உள்ளது நூலும் உதவியது. டால்ஸ்டாயிடம் தான் பெற்ற இக்கடனைக் காந்தி தனது சுயசரிதையில், "தற்காலம் உருவாக்கிய அகிம்சையின் மகா திருத்தூதர்" என டால்ஸ்டாயை அழைத்ததன் மூலம் குறிப்பிட்டுள்ளார். இருவருக்குமிடையிலான பரிமாற்றமானது அக்டோபர் 1909 முதல் நவம்பர் 1910இல் டால்ஸ்டாய் இறக்கும் வரை ஓர் ஆண்டு மட்டுமே நீடித்தது. ஆனால், தென் ஆப்பிரிக்காவில் தன் இரண்டாம் ஆசிரமத்துக்கு டால்ஸ்டாய் காலனி எனக் காந்தி பெயரிடும் அளவுக்கு இது இட்டுச் சென்றது.[71] புலால் உண்ணாமையின் நன்னெறிகள் மீதும் இருவரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். புலால் உண்ணாமையின் நன்னெறியைத் தன் பல கட்டுரைகளின் தலைப்பாக டால்ஸ்டாய் வைத்தார்.[72]

எஸ்பெராண்டோ இயக்கத்தின் ஒரு முதன்மையான ஆதரவாளராக டால்ஸ்டாய் உருவானார். டுகோபார் குழுவினரின் அமைதிவாத நம்பிக்கைகள் மீது டால்ஸ்டாய் பாராட்டுணர்வு கொண்டார். 1895ஆம் ஆண்டு அமைதியான போராட்டத்தில் அவர்கள் தமது ஆயுதங்களை எரித்த பிறகு, அவர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதைப் பன்னாட்டுச் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். டுகோபார்கள் கனடாவிற்குப் புலம்பெயர டால்ஸ்டாய் உதவினார்.[73] அரசு மற்றும் போர் உணர்வை எதிர்த்த மற்றொரு சமயக் குழுவான மென்னோனைட்டுகளுக்கு அகத் தூண்டுதலாகவும் டால்ஸ்டாய் திகழ்ந்தார் .[74][75] 1904ஆம் ஆண்டின் உருசிய-சப்பானியப் போருக்கு டால்ஸ்டாய் கண்டனம் தெரிவித்தார். யப்பானியப் பௌத்தத் துறவியான சோயேன் சாகுவிற்கு இருவரும் இணைந்து ஒரு அமைதிவாத அறிக்கையை வெளியிடுவதற்கான முயற்சியாக, டால்ஸ்டாய் மடல் எழுதினார். எனினும் இம்முயற்சி தோல்வியில் முடிந்தது.

தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், ஜார்ஜியத்தின் பொருளாதாரக் கோட்பாடு மற்றும் சமூகத் தத்துவத்தில் டால்ஸ்டாய் ஈடுபாடு கொண்டார்.[76][77][78] இத்தத்துவத்தை ஆதரவு தெரிவித்துத் தன் உயிர்த்தெழல் (1899) போன்ற நூல்களில் இக்கருத்துக்களை எழுதினார். இந்நூலே இவர் கிறித்தவ சமயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட முக்கியக் காரணமாக அமைந்தது.[79] ஹென்றி ஜார்ஜ் குறித்து அதிக மதிப்புடன் டால்ஸ்டாய் கூறினார், ஒருமுறை "மக்கள் ஜார்ஜின் கற்பிப்புடன் வாதிடுவதில்லை; உண்மையில் அவர்களுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. இவரது கற்பிப்புடன் வேறு விதமாக நடந்து கொள்ள வாய்ப்பில்லை, ஏனெனில் இதை அறிந்தவர்களுக்கு இதை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழி இருக்க முடியாது."[80] ஜார்ஜின் சமூக பிரச்சனைகள் இதழுக்கு ஒரு முகப்புரையையும் டால்ஸ்டாய் எழுதினார்.[81] தனி நபர் நில உடைமைகள் வைத்திருப்பதை டால்ஸ்டாயும் ஜார்ஜும் ஏற்க மறுத்தனர். டால்ஸ்டாய் கடுமையாக விமர்சித்த உருசிய உயர்குடியினருக்கு மிக முக்கிய வருமான ஆதாரமாக இந்நில உடைமைகள் திகழ்ந்தன. ஒரு மையத் திட்டமிடப்பட்ட சமூகவுடைமைப் பொருளாதாரத்தையும் இருவரும் ஏற்க மறுத்தனர். ஜார்ஜியத்தின் படி, ஒரு நிர்வாகமானது நில வாடகையை வசூலித்து அதை உட்கட்டமைப்பில் செலவிட வேண்டிய தேவை இருந்தது. இப்பின்பற்றலானது தன் அரசின்மைப் பார்வைகளிலிருந்து டால்ஸ்டாய் விலகினார் எனச் சிலர் நம்புவதற்கு இட்டுச் சென்றது. எனினும், இதற்குப் பிறகு ஜார்ஜியத்தின் அரசின்மைத் தலுவல்களும் முன் மொழியப்பட்டன.[82] டால்ஸ்டாயின் 1899ஆம் ஆண்டுப் புதினமான உயிர்த்தெழல் ஜார்ஜியம் மீதான டால்ஸ்டாயின் கருத்துகளை ஆய்வு செய்கிறது. டால்ஸ்டாய்க்கும் அப்படி ஒரு பார்வை இருந்ததென்பதற்கான அறிகுறிகளைக் கொடுக்கிறது. உள்ளூர் ஆட்சிமை கொண்ட சிறு சமுதாயக் குழுக்கள், பொதுவான பொருட்களுக்காக நில வாடகைகளை வசூலித்து நிர்வாகம் செய்ய வேண்டுமென இது பரிந்துரைத்தது. அதேநேரத்தில், நீதித் துறை போன்ற அரசின் அமைப்புகளையும் கடுமையாக விமர்சித்தது.

மறைவு[தொகு]

"போய் வருகிறேன்!" என தன் மகள் அலெக்சாந்திராவிடம் கூறும் டால்ஸ்டாய். ஓவிய ஆண்டு 1911.

டால்ஸ்டாய் 20 நவம்பர் 1910 அன்று தன் 82ஆம் அகவையில் மறைந்தார். இவரது இறப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர், இவரது உடல்நலத்தின் மீது இவரது குடும்பத்தினர் அக்கறை செலுத்தி வந்தனர். இவரது அன்றாடத் தேவைகளை நாள்தோறும் பூர்த்தி செய்து வந்தனர். இவரது கடைசி நாட்களில், இறப்பைப் பற்றி பேசியும் எழுதியும் வந்தார். தன் உயர்குடியின வாழ்க்கை முறையைத் துறந்து, குளிர் காலத்தின் ஓர் இரவின் போது தன் வீட்டை விட்டு வெளியேறினார்.[83] தன் மனைவியின் வசை மாரிகளிலிருந்து தப்பிக்கும் ஒரு முயற்சியாகவே இவர் இரகசியமாக வெளியேறினார் எனத் தெரிகிறது. இவரது பல போதனைகளுக்கு எதிராக இவரது மனைவி பேச ஆரம்பித்தார். கடைசி ஆண்டுகளில் டால்ஸ்டாயன் இயக்கச் சீடர்கள் மீது இவர் செலுத்திய கவனம் காரணமாக இவரது மனைவிக்குப் பொறாமை அதிகரித்தது.

தெற்கு நோக்கி ஒரு நாள் தொடர்வண்டிப் பயணத்திற்குப் பிறகு,[84] நுரையீரல் அழற்சி[85] காரணமாக அசுதபோவோ தொடர்வண்டி நிலையத்தில் டால்ஸ்டாய் இறந்தார். நிலைய அதிகாரி டால்ஸ்டாயைத் தன் அறைக்குக் கூட்டிச் சென்றார். அவரது சொந்த மருத்துவர்கள் மார்ஃபீன் மற்றும் கற்பூர ஊசிகளை டால்ஸ்டாய்க்குச் செலுத்தினார்.

இவரது இறுதி ஊர்வலத்திற்குச் செல்வதற்குக் காவல் துறை தடை விதிக்க முயன்றது. ஆனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தெருக்களில் வரிசையாக நின்றனர்.[86]

டால்ஸ்டாயின் இறுதிச் சடங்கில் மரியாதை செலுத்துபவர்கள்
எசுனாயா போல்யானாவில் டால்ஸ்டாயின் சமாதியானது பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

சில நூல் ஆதாரங்கள், தான் பயணம் செய்த தொடர் வண்டியில் இருந்த சக பயணிகளுக்கு அன்பு, அகிம்சை, மற்றும் ஜார்ஜியம் ஆகியவற்றைப் போதித்ததன் மூலம் தன் வாழ்வின் கடைசி நேரத்தை டால்ஸ்டாய் கழித்தார் எனக் குறிப்பிடுகின்றன.[87]

மரபு[தொகு]

டால்ஸ்டாய் சிலை, கசுதலேகர், பிரித்தானிய கொலம்பியா, கனடா
டால்ஸ்டாயின் மார்பளவுச் சிலை, மரியுபோல் நகரம், உக்ரைன், 2011
டால்ஸ்டாயின் மார்பளவுச் சிலை, மொண்டேவீடியோ, உருகுவே

டால்ஸ்டாய் ஒரு சமதர்மவாதியாக அல்லாமல் ஒரு கிறித்தவ அரசின்மையாளராகக் கருதப்பட்டாலும், இவரது சிந்தனைகளும் நூல்களும் வரலாறு முழுவதும் சமதர்மச் சிந்தனையாளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. அரசு அதிகாரத்தின் அச்சுறுத்தல், அதிகாரிகள் சார்ந்த ஊழல், சிறு வயதிலிருந்தே மக்களைப் பயிற்றுவித்தல் ஆகியவற்றை, அடிப்படையில் வன்முறை சக்திகளினால் ஒன்றிணைத்தவை என அரசாங்கங்கள் மீது விருப்பற்ற பார்வையை டால்ஸ்டாய் கொண்டிருந்தர்.[88] தன் பொருளாதாரப் பார்வையைப் பொறுத்த வரையில் வாழ்தகு வேளாண்மைக்கு மீண்டும் திரும்புவதை டால்ஸ்டாய் பரிந்துரைத்தார்.[89] இவரது பார்வையில் ஓர் எளிமையாக்கப்பட்ட பொருளாதாரமே, பொருட்கள் பரிமாற்றத்தின் தேவை குறைவாவதைத் தாங்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறாகத் தொழிற்துறையின் மையங்களான தொழிற்சாலைகளும் நகரங்களும் பயனொழிந்து போகும்.[89]

1944இல் இலக்கிய வரலாற்றாளரும் சோவியத் நடுக்காலவியலாளருமான நிக்கோலை குத்சி 80 பக்கங்கள் கொண்ட டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இரண்டாம் உலகப் போரின் போது டால்ஸ்டாய் உயிர் வாழ்ந்திருந்தால் அவர் தனது அமைதிவாத மற்றும் தேசப்பற்றுக்கு எதிரான உணர்வுகளை மறு பரிசீலனை செய்திருப்பார் என வாசகர்களுக்குக் காட்டுவதற்காக இந்நூல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.[90] அதே காலத்தில், இலக்கிய அறிஞரும் வரலாற்றாளருமான போரிசு எயிக்கென்பம், டால்ஸ்டாய் மீதான தன் முந்தைய நூல்களிலிருந்து வேறுபட்டு, இந்த உருசியப் புதின எழுத்தாளரை இராபர்ட்டு ஓவன் மற்றும் ஹென்றி செயின்ட் சைமன் போன்ற ஆரம்பகால கனவாளி சமதர்மவாதிகளின் சிந்தனைகளுடன் ஒன்றிணைந்த ஒருவராகக் காட்டினார். தனி மனித மகிழ்ச்சி மற்றும் விவசாயிகளின் நலம் ஆகியவற்றுக்கு டால்ஸ்டாய் கொடுக்கும் முக்கியத்துவங்களிலிருந்து இந்தத் தாக்கங்களைக் காணலாம் என எயிக்கென்பம் பரிந்துரைத்தார்.[91] டால்ஸ்டாயை விவரிப்பதில் எயிக்கென்பமின் முரண்பாடுகளுக்குக் காரணமாக அந்நேரத்தில் சோவியத் உருசியாவில் இருந்த அரசியல் அழுத்தத்தைக் காரணமாகக் கூறலாம்: கட்சிக் கொள்கைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென இலக்கிய அறிஞர்களுக்கு அரசு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர் .[91]

சோவியத் உருசியாவில்[தொகு]

டால்ஸ்டாயின் நூல்களிலிலிருந்து டால்ஸ்டாயன் இயக்கம் தோன்றியது. இதன் உறுப்பினர்கள் அகிம்சை, நகர வாழ்க்கை எதிர்ப்பு, அரசு எதிர்ப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க டால்ஸ்டாயின் நூல்களைப் பயன்படுத்தினர்.[92] எந்த அமைப்பு அல்லது குழுவில் இணைவதை டால்ஸ்டாய் எதிர்த்ததால், இந்த இயக்கத்துடன் டால்ஸ்டாய் கூட என்றுமே தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளவில்லை. உருசிய மக்களுக்காகத் தன் நூல்களை தன் 13ஆம் பிள்ளையான மகள் அலெக்சாந்திரா (சாஷா) லிவோவினா டால்ஸ்டாயா பதிப்பிப்பார் என்ற மன எண்ணத்தில் அவரைத் தன் நூல்களுக்கு வாரிசாக டால்ஸ்டாய் நியமித்தார்.[92] இடைப்பட்ட வேளையில், தன் நூல்களின் பல கையெழுத்துப் படிகளை பாதுகாத்து வந்த விளாதிமிர் செர்த்கோவ் என்பவரைத் தன் நூல்களின் பதிப்பாசிரியராக டால்ஸ்டாய் நியமித்தார். உண்மையில் உருசிய மக்களைத் தன் நூல்களுக்கு வாரிசாக நியமிக்க டால்ஸ்டாய் விரும்பினார். ஆனால் அந்நேரத்தில் இருந்த உருசியச் சட்டத்தின் படி சொத்துக்கு வாரிசாக ஒரேயொருவரை மட்டுமே நியமிக்க முடியும் என்ற நிலை இருந்தது.[92]

1917இல் நடைபெற்ற உருசிய உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, நவம்பர் 1918இல் அனைத்து இலக்கிய நூல்களும் நாட்டுடைமையாக்கப்பட்ட பிறகு, முன்னர் தடைசெய்யப்பட்ட நூல்கள் தற்போது பதிப்பிக்கப்படலாம் என்ற நிலை வந்தது.[92] இந்த ஆண்டுகளின் போது டால்ஸ்டாயின் படைப்புகளின் தொகுப்பைப் பதிப்பிக்க அலெக்சாந்திரா பணியாற்றினார். 1917 முதல் 1919 வரை, சத்ருகா பதிப்பகத்துடன் இணைந்து டால்ஸ்டாயின் படைப்புகளிலிருந்து 13 சிறு நூல்களைப் பதிப்பித்தார். உருசிய ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் இவை முன்னர் தடை செய்யப்பட்டிருந்தன. எனினும், டால்ஸ்டாயின் அனைத்துப் படைப்புகளையும் ஒரு தொகுப்பாகப் பதிப்பிப்பது என்பது மிகுந்த கடினமானதாக இருந்தது. திசம்பர் 1918இல், டால்ஸ்டாயின் அனைத்துப் படைப்புகளையும் ஒரு தொகுப்பாகப் பதிப்பிட செர்த்கோவிற்கு மானியமாக 1 கோடி உரூபிளை, கல்விக்கான உருசிய அமைச்சர் குழுவானது வழங்க ஒப்புக் கொண்டது. ஆனால், பதிப்புரிமைகளை அரசு கட்டுப்படுத்தியதால் இது என்றுமே நிகழவில்லை.[92] மேலும் 1921இல் உருசியாவில் கூட்டுறவானது சட்ட விரோதமாக்கப்பட்டது. அலெக்சாந்திரா மற்றும் செர்த்கோவுக்கு இது மேலும் ஒரு தடையை ஏற்படுத்தியது.[92]

டால்ஸ்டாயன் இயக்கத்தவர்களை ஒதுக்கி வைப்பதற்காக சோவியத் ஆட்சி முறை 1920களில் டால்ஸ்டாயின் பண்ணையான எசுனாயா போல்யானாவுக்குக் கட்டுப்பாடுகள் விதித்தது. டால்ஸ்டாயர்கள் போன்ற சமயப் பிரிவுகள் உருசிய விவசாயிகளுக்கு முன் மாதிரியானவை எனக் கருதியதால், சோவியத் ஆட்சி முறையானது இந்த கிறித்தவம் சார்ந்த சமூகத்திற்கு அனுமதியளித்தது.[92] மறைந்த உருசிய எழுத்தாளருக்கு ஒரு நினைவகமாகக் கருதப்பட்ட இப்பண்ணையைச் சோவியத் அரசாங்கம் சொந்தமாக்கிக் கொண்டது. ஆனால் எசுனாயா போல்யானாவில் அளிக்கப்பட்ட கல்வியானது அலெக்சாந்திராவின் அதிகார எல்லைக்குள் இருந்தது. பெரும்பாலான சோவியத் பள்ளிகளைப் போலின்றி, எசுனாயா போல்யானாவில் இருந்த பள்ளியானது இராணுவப் பயிற்சியை அளிக்கவில்லை, ஆனால் நாத்திகப் பரப்புரையைப் பரப்பியது. எனினும் காலப்போக்கில், கல்வி நிறுவனத்திற்கு நிதி ஆதரவு அளித்த அரசின் பார்வைக்கு மாறாக, உள்ளூர்ப் பொதுவுடைமைவாதிகள் அடிக்கடிப் பண்ணைக்குக் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு அழைப்பு விடுத்தனர். 1928க்குப் பிறகு, சோவியத் ஆட்சி முறையின் பண்பாட்டுக் கொள்கையில் கொண்டு வரப்பட்ட ஒரு மாற்றமானது, டால்ஸ்டாயின் பண்ணை உள்ளிட்ட உள்ளூர்க் கல்வி நிலையங்களை சோவியத் ஆட்சி முறை கையகப்படுத்தும் நிலைக்கு இட்டுச் சென்றது. 1929இல் அலெக்சாந்திரா எசுனாயா போல்யானாவின் தலைமைப் பதவியிலிருந்து இறங்கிய போது, கல்வி மற்றும் மருத்துவத்துக்கான அமைச்சர் குழுவானது கட்டுப்பாட்டைக் கையில் எடுத்துக் கொண்டது.[92]

1925இல் சோவியத் அரசாங்கமானது, டால்ஸ்டாய் பிறந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாட ஒரு முதல் விழாக் குழுவை அமைத்தது. உண்மையில் இக்குழுவில் 13 உறுப்பினர்கள் இருந்தனர். 1927இல் இரண்டாம் குழுவை அமைத்த போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்தது.[92] அரசாங்கம் வழங்க இருந்த நிதி குறித்து அலெக்சாந்திராவுக்கு மன நிறைவில்லை. எனவே, சூன் 1928இல் ஸ்டாலினைச் சந்தித்தார். சந்திப்பின் போது, குழு கோரிய 10 இலட்சம் உரூபிளை அரசாங்கம் வழங்க இயலாது என ஸ்டாலின் தெரிவித்தார்.[92] எனினும், டால்ஸ்டாயின் படைப்புகளை ஒரு 92 பிரிவுகளைக் கொண்ட திரட்டாகப் பதிப்பிக்க அரசு பதிப்பகத்துடன் ஏப்ரல் 1928இல் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது.[92] நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது, கல்விக்கான மக்கள் அமைச்சர் குழுவின் தலைவரான அனத்தோலி லுன்சார்சுகி, டால்ஸ்டாய்க்கும் அவரது மரபுக்கும் சோவியத் அரசாங்கம் எதிராக உள்ளது என்ற தகவலை மறுத்தார். சோவியத் ஆட்சி முறைக்கு எதிராக டால்ஸ்டாயை நிறுத்திய டால்ஸ்டாயின் படைப்புகளின் அம்சங்கள் குறித்துப் பேசிவதற்குப் பதிலாக, சமதர்மம் மற்றும் தொழிலாளிகள் மீது டால்ஸ்டாய் கொண்ட அன்பு, அரசு மற்றும் தனி நபர் சொத்துக்களுக்கு எதிரான அவரது எதிர்ப்பு ஆகிய சோவியத் அரசுடன் டால்ஸ்டாயை ஒன்றிணைக்கும் அம்சங்கள் மீது கவனம் செலுத்திப் பேசினார்.[92] சோவியத் ஒன்றியத்தில் 40 கோடிக்கும் மேற்பட்ட டால்ஸ்டாயின் படைப்புகளின் பிரதிகள் பதிப்பிக்கப்பட்டன. சோவியத் உருசியாவில் அதிகப் பிரதிகள் விற்கப்பட்ட எழுத்தாளராக டால்ஸ்டாய் திகழ்ந்தார்.[93]

தாக்கம்[தொகு]

டால்ஸ்டாய் குறித்து பல கட்டுரைகளை விளாதிமிர் லெனின் எழுதினார். உருசியச் சமூகம் குறித்த டால்ஸ்டாயின் விமர்சனங்கள் மீது ஒரு முரண்பாடு உள்ளதெனப் பரிந்துரைத்தார். லெனினைப் பொறுத்தவரை, விவசயிகள் மீது நேசம் கொண்ட மற்றும் ஏகாதிபத்திய உருசியச் சமூகத்தின் மீதான விவசாயிகளின் அதிருப்திக்காகக் குரல் கொடுத்த டால்ஸ்டாய், தன் விமர்சனங்களில் புரட்சியாளராக இருந்திருக்கலாம். ஆனால் அவரது அரசியல் உணர்வு நிலை ஒரு புரட்சிக்கென்று முழுமையாக வளர்ச்சியடையவில்லை என்றார் லெனின்.[94] தான் ஒரு "செல்வப் பெருக்கில் நாட்டமுடைய விவசாயிகளின் புரட்சி" என்றழைத்த 1905ஆம் ஆண்டின் உருசியப் புரட்சி அதன் பிற்போக்குத் தனம் காரணமாகத் தோல்வியடைந்தது என்பதைப் பரிந்துரைக்கப் பின்வரும் சொற்றொடரை லெனின் பயன்படுத்தினார்: ஏற்கனவே இருந்த நடுக்கால ஒடுக்குமுறை அமைப்புகளைத் துண்டாக்கி, அவற்றுக்குப் பதிலாக ஒரு பழைய மற்றும் ஆணாதிக்கக் கிராமச் சமூகத்தை அமைக்கப் புரட்சியாளர்கள் விரும்பினர்.[94] தீமைக்கு எதிராக அறவழிப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற டால்ஸ்டாயின் கோட்பாடானது 1905ஆம் ஆண்டுப் புரட்சியின் வெற்றிக்கு மேலும் தடங்கலாக இருந்ததென லெனின் கருதினார். ஏனெனில், அந்த இயக்கமானது வலிமையைப் பயன்படுத்தவில்லை. எனவே ஏகாதிபத்தியம் அவ்வியக்கத்தை நொறுக்க அவ்வியக்கம் வாய்ப்பு வழங்கிவிட்டது.[94] டால்ஸ்டாயின் விமர்சனங்கள் குறித்த பல முரண்பாடுகள் ஸ்டாலினுக்கு இருந்தன. எவ்வாறாயினும், நிலப் பிரபுத்துவ முறை மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றுக்கெதிரான டால்ஸ்டாயின் அழுத்தமான வெறுப்பு என்பது உழைப்பாளர் சார்ந்த சமதர்மக் கோட்பாட்டின் தொடக்கத்தை குறித்ததென்ற முடிவுக்குத் தன் நூலில் ஸ்டாலின் வந்தார்.[94]

கூடுதலாக, தீமைக்கு எதிராக அறவழிப் போராட்டம் என்ற டால்ஸ்டாயின் தத்துவமானது காந்தியின் அரசியல் சிந்தனை மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. உண்மை குறித்த டால்ஸ்டாயின் கருத்தானது காந்தி மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்தியின் பார்வையில், துன்பத்தைக் குறைக்கும் எந்தக் கோட்பாடும் உண்மை தான்.[95] டால்ஸ்டாய் மற்றும் காந்தி ஆகிய இருவருக்குமே உண்மையே கடவுள், கடவுள் என்பவர் பிரபஞ்ச அன்பாக இருக்கும் போது, உண்மை என்பதும் பிரபஞ்ச அன்பாக இருக்க வேண்டும். காந்தியின் வன்முறையற்ற இயக்கத்திற்கான குசராத்திச் சொல்லானது "சத்தியாக்கிரகா" ஆகும். இது "சதக்கிரகா" என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. "சத்" என்பதன் பொருள் "உண்மை" மற்றும் "கிரகா" என்பதன் பொருள் "உறுதி" ஆகும்.[95] காந்தியின் சத்தியாக்கிரகக் கொள்கையானது, இந்துப் பாரம்பரியத்திலிருந்து தோன்றாமல், கிறித்தவம் குறித்த டால்ஸ்டாயின் புரிதலிலிருந்து தோன்றியது என இசுடூவர்ட் கிரே மற்றும் தாமசு எம். கியூக்சு ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.[95]

திரைப்படங்களில்[தொகு]

ஜேய் பரினி என்பவர் எழுதிய 1990 ஆம் ஆண்டுப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, 2009ஆம் ஆண்டு த லாஸ்ட் ஸ்டேசன் என்ற டால்ஸ்டாயின் கடைசி ஆண்டு குறித்த திரைப்படம் இயக்குனர் மைக்கேல் காப்மன் என்பவரால் எடுக்கப்பட்டது. இதில் டால்ஸ்டாயாக கிறித்தோபர் பிளம்மரும், சோபியா டால்ஸ்டாயாக கெலன் மிரெனும் நடித்தனர். இருவருமே தம் கதாபாத்திரங்களுக்காக அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். இவரது இறப்பிற்கு இரண்டே ஆண்டுகள் கழித்து 1912இல் எடுக்கப்பட்ட டிபார்ச்சர் ஆப் எ கிரான்ட் ஓல்டு மேன், ஹவ் பைன், ஹவ் பிரெஷ் த ரோசஸ் வேர் (1913), மற்றும் 1984 இல் செர்கேய் செராசிமோவ் இயக்கி, நடித்த லெவ் டால்ஸ்டாய் ஆகியவை இவர் குறித்து எடுக்கப்பட்ட மற்ற திரைப்படங்கள் ஆகும்.

டால்ஸ்டாய் இறப்பதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன் இவரைப் பற்றிய ஒரு பிரபலமான இயங்கு படம் எடுக்கப்பட்டது. ஆனால் அது தற்போது இல்லை. 1901இல், அமெரிக்கப் பயண விரிவுரையாளரான பர்ட்டன் ஓம்சு, ஐக்கிய அமெரிக்க செனட் சபை உறுப்பினரும், வரலாற்றாளருமான ஆல்பெர்ட் ஜே. பெவரிட்ஜ் என்பவருடன் எசுனாயா போல்யானாவிற்கு வருகை புரிந்தார். மூவரும் உரையாடிய போது, டால்ஸ்டாயைத் தன் 60 மி.மீ. திரைப்படக் கருவியில் ஓம்சு படம் பிடித்தார். அமெரிக்க அதிபருக்காகப் போட்டியிடும் பெவரிட்ஜின் வாய்ப்புகளுக்கு உருசிய எழுத்தாளரான டால்ஸ்டாயுடனான சந்திப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என பெவரிட்ஜின் ஆலோசகர்கள் அஞ்சினர். இந்த இயங்கு படம் அழிக்கப்படுவதில் வெற்றியும் கண்டனர்.[96]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. தல்ஸ்தோய் தனது முதல் பெயரை [lʲɵf], இலியோவ் என்றே கூறி வந்தார்.(Nabokov, Vladimir. Lectures on Russian literature. பக். 216. )
  2. தல்சுத்தோயின் காலத்தில், இவரது பெயர் உருசிய மொழிச் சீர்திருத்தத்திற்கு முன்னர் Левъ Николаевичъ Толстой என எழுதப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tolstoy in Color", Tolstoy Studies Journal, a publication of the Tolstoy Society of North America, n.d. Retrieved 27 June 2018.
  2. "Tolstoy". Random House Webster's Unabridged Dictionary.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 "Leo Tolstoy". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 
  4. "Nomination Database". old.nobelprize.org. Archived from the original on 6 October 2019. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  5. "Proclamation sent to Leo Tolstoy after the 1901 year's presentation of Nobel Prizes". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  6. Hedin, Naboth (1 October 1950). "Winning the Nobel Prize". The Atlantic (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  7. "Nobel Prize Snubs In Literature: 9 Famous Writers Who Should Have Won (Photos)" (in en-US). Huffington Post. 7 October 2010. https://www.huffingtonpost.com/2010/10/07/nobel-prize-in-literature_1_n_752826.html. 
  8. Beard, Mary (5 November 2013). "Facing death with Tolstoy". The New Yorker.
  9. Martin E. Hellman, Resist Not Evil in World Without Violence (Arun Gandhi ed.), M.K. Gandhi Institute, 1994, retrieved on 14 December 2006
  10. King, Martin Luther Jr. (2005). The Papers of Martin Luther King, Jr., Volume V: Threshold of a New Decade, January 1959 – December 1960. University of California Press. பக். 149, 269, 248. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-24239-5. https://books.google.com/books?id=TU_HozbJSC8C&pg=PA269. 
  11. 11.0 11.1 11.2 11.3 Vitold Rummel, Vladimir Golubtsov (1886). Genealogical Collection of Russian Noble Families in 2 Volumes. Volume 2 – The Tolstoys, Counts and Noblemen. Saint Petersburg: A.S. Suvorin Publishing House, p. 487
  12. 12.0 12.1 Ivan Bunin, The Liberation of Tolstoy: A Tale of Two Writers, p. 100
  13. Nemoy/Немой word meaning from the Dahl's Explanatory Dictionary (உருசியத்தில்)
  14. Troyat, Henri (2001). Tolstoy. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8021-3768-5. https://books.google.com/books?id=7kDJ3s1mcZcC&q=tolstoy+lithuanian&pg=PA8. 
  15. Robinson, Harlow (6 November 1983). "Six Centuries of Tolstoys". The New York Times. https://www.nytimes.com/1983/11/06/books/six-centuries-of-tolstoys.html. 
  16. Tolstoy coat of arms by All-Russian Armorials of Noble Houses of the Russian Empire. Part 2, 30 June 1798 (in Russian)
  17. The Tolstoys article from Brockhaus and Efron Encyclopedic Dictionary, 1890–1907 (in Russian)
  18. 18.0 18.1 18.2 18.3 18.4 18.5 "Author Data Sheet, Macmillan Readers" (PDF). Macmillan Publishers Limited. Archived from the original (PDF) on 7 August 2021. பார்க்கப்பட்ட நாள் 22 October 2010.
  19. 19.0 19.1 "Ten Things You Didn't Know About Tolstoy". BBC.
  20. A.N. Wilson, Tolstoy (1988), p. 146
  21. 21.0 21.1 Rajaram, M. (2009). Thirukkural: Pearls of Inspiration. New Delhi: Rupa Publications. பக். xviii–xxi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-291-1467-9. 
  22. 22.0 22.1 Walsh, William (2018). Secular Virtue: for surviving, thriving, and fulfillment. Will Walsh. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-692-05418-5. 
  23. Tolstoy, Leo (14 December 1908). "A Letter to A Hindu: The Subjection of India-Its Cause and Cure". The Literature Network. பார்க்கப்பட்ட நாள் 12 February 2012. The Hindu Kural
  24. Parel, Anthony J. (2002), "Gandhi and Tolstoy", in M.P. Mathai; M.S. John; Siby K. Joseph (eds.), Meditations on Gandhi: a Ravindra Varma festschrift, New Delhi: Concept, pp. 96–112, பார்க்கப்பட்ட நாள் 8 September 2012
  25. Tolstoy, Lev N. (1904). The School at Yasnaya Polyana – The Complete Works of Count Tolstoy: Pedagogical Articles. Linen-Measurer, Volume IV. Dana Estes & Company. பக். 227. https://books.google.com/books?id=4cQnAAAAYAAJ&pg=PA227. 
  26. Wilson, A.N. (2001). Tolstoy. W.W. Norton. பக். xxi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-393-32122-7. https://books.google.com/books?id=imYmH8myBUsC&pg=PR19. 
  27. 27.0 27.1 Jacoby, Susan (19 April 1981). "The Wife of the Genius". த நியூயார்க் டைம்ஸ்.
  28. Feuer, Kathryn B. Tolstoy and the Genesis of War and Peace, Cornell University Press, 1996, ISBN 0-8014-1902-6
  29. War and Peace and Sonya இம் மூலத்தில் இருந்து 23 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191223070150/https://www.press.uchicago.edu/ucp/books/book/distributed/W/bo20274891.html. பார்த்த நாள்: 8 July 2017. 
  30. "Tanja Paus och Sonja Ceder till minne," Svenska Dagbladet, 11 March 2007
  31. Nikolai Puzin, The Lev Tolstoy House-Museum In Yasnaya Polyana (with a list of Leo Tolstoy's descendants), 1998
  32. Vladimir Ilyich Tolstoy பரணிடப்பட்டது 23 பெப்பிரவரி 2019 at the வந்தவழி இயந்திரம் at the official Yasnaya Polyana website
  33. "Persons ∙ Directory ∙ President of Russia". President of Russia.
  34. "Толстые / Телеканал "Россия – Культура"". tvkultura.ru. Archived from the original on 2020-11-28. பார்க்கப்பட்ட நாள் 2022-10-26.
  35. Leo Tolstoy (1990), Government is Violence: essays on anarchism and pacifism. Phoenix Press.
  36. Edward Crankshaw (1974), Tolstoy: The Making of a Novelist, Weidenfeld & Nicolson.
  37. Tolstoy, L. (2011). War and Peace (Vintage Classic Russians Series). United Kingdom: Random House. பக். xviii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4464-8416-6. 
  38. G. Lukacs. "Tolstoy and the Development of Realism". Marxists on Literature: An Anthology, London: Penguin, 1977.
  39. J. Bayley (1967), Tolstoy and the Novel, Chatto & Windus.
  40. L. Tolstoy, Church and State. – On Life and Essays on Religion, 1934.
  41. R. C. Benson (1973), Women in Tolstoy: the ideal and the erotic, University of Illinois Press.
  42. Leo Tolstoy (1874). Russian Book for Reading in 4 Volumes. Moscow: Aegitas, 381 pages.
  43. Valentin Bulgakov (2017). Diary of Leo Tolstoy's Secretary. Moscow: Zakharov, 352 pages, p. 29. ISBN 978-5-8159-1435-3.
  44. Aimée Dostoyevskaya (1921). Fyodor Dostoyevsky: A Study. Honolulu, Hawaii: University Press of the Pacific. பக். p. 218. 
  45. Doyle, Arthur Conan (January 1898). My Favourite Novelist and His Best Book. London. http://gutenberg.net.au/ebooks13/1306981h.html. பார்த்த நாள்: 6 October 2017. 
  46. Bloom, Harold (1994). The Western Canon. New York: Harcourt Brace. 
  47. Tolstoy's Letter to A.A. Fet, 30 August 1869
  48. Schopenhauer, Parerga and Paralipomena, Vol. II, § 170
  49. Orwin, Donna T. The Cambridge Companion to Tolstoy. Cambridge University Press, 2002
  50. Andrew, Joe (18 June 1982). Russian Writers and Society in the Second Half of the Nineteenth Century. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-349-04418-4. https://books.google.com/books?id=ie2vCwAAQBAJ&pg=PA102. 
  51. Sommers, Aaron (8 September 2009). "Why Leo Tolstoy Wouldn't Supersize It". Coastlinejournal.com. Archived from the original on 23 November 2017. பார்க்கப்பட்ட நாள் 16 May 2010.
  52. "Nicholas Maclay: Russian Polymath". Harbourtrust.gov.au. 29 September 2020. https://www.harbourtrust.gov.au/en/our-story/harbour-history/digitales/nicholas-maclay/. 
  53. The Contemporary Relevance of Leo Tolstoy's Late Political Thought. International Political Science Association. 2009. https://archive.org/details/TheContemporaryRelevanceOfLeoTolstoy. "Tolstoy articulated his Christian anarchist political thought between 1880 and 1910, yet its continuing relevance should have become fairly self-evident already." 
  54.   "Anarchism". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 1. (1911). Cambridge University Press. 914–919; see page 918. 
  55. The Cambridge Companion to Tolstoy. Cambridge University Press. 2002. பக். 37–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-52000-3. https://books.google.com/books?id=SC9suBt-Vm4C&q=Tolstoy+boxers&pg=PA37. 
  56. Tolstoy's Letters: 1880–1910. Continuum International Publishing Group, Limited. 1978. பக். 580. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-485-71172-1. https://books.google.com/books?id=2TVgAAAAMAAJ&q=Boxer. 
  57. Apollon Davidson, Irina Filatova. The Russians and the Anglo Boer War. Cape Town: Human & Rousseau, 1998. p. 181
  58. The Russian review. 19. Blackwell. 1960. பக். 115. https://books.google.com/books?id=k1_iAAAAMAAJ&q=he+praised+the+Chinese+for+their+heroic+patience.+When+he+learned+about+the+%22orgy+of+murder,+raping,+and+looting%22+committed+by+the+Western+powers+in+quelling+the+Boxer+rebellion,+he+raged+against+the+brutality+of+the+Christians.  (Original from the University of Michigan)
  59. An age of progress?: clashing twentieth-century global forces. Anthem Press. 2008. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84331-301-4. https://books.google.com/books?id=MFtDxmZVB7gC&q=tolstoy+boxer+rebellion&pg=PA3. 
  60. For Dirk Struik: Scientific, Historical and Political Essays in Honour of Dirk J. Struik. Springer Science & Business Media. 1974. பக். 606–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-277-0393-4. https://books.google.com/books?id=OvK9orJNezwC&q=Tolstoy+boxers&pg=PA606. 
  61. The Chinese Translation of Russian Literature: Three Studies. Brill. 2008. பக். 14–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-16844-2. https://books.google.com/books?id=ffkU0KocpEYC&q=Tolstoy+boxers&pg=PA14. 
  62. Beyond Suffering: Recounting War in Modern China. UBC Press. 2011. பக். 125–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7748-1957-2. https://books.google.com/books?id=K71PjjQAy6EC&q=Tolstoy+boxers&pg=PA125. 
  63. Tolstoy and China. Johnson Reprint Corporation. 1967. பக். 25, 44, 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-384-04895-9. https://books.google.com/books?id=STFaAAAAYAAJ&q=Boxer. 
  64. The Bear Watches the Dragon. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7656-1026-3. https://books.google.com/books?id=3YPAaFfUp9oC&q=lev+tolstoy+sinophile&pg=PA314. 
  65. The Cambridge companion to Tolstoy. Cambridge University Press. 2002. பக். 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-52000-3. https://books.google.com/books?id=nU2lErM3VgwC&q=tolstoy+boxer+rebellion&pg=PA37. 
  66. Tolstoy and China. Princeton University Press. 1950. பக். 25. https://books.google.com/books?id=UipgAAAAMAAJ&q=tolstoy+boxer+rebellion+confucianism.  (Original from the University of Michigan)
  67. Pioneers of Modern China: Understanding the Inscrutable Chinese. World Scientific. 2005. பக். 10–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-256-618-8. https://books.google.com/books?id=1jlOQc8BumIC&q=Tolstoy+boxers&pg=PA10. 
  68. The Britannica Guide to Political and Social Movements That Changed the Modern World. The Rosen Publishing Group. 2009. பக். 194–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61530-016-7. https://books.google.com/books?id=gWHrWq2Kd-UC&q=Tolstoy+boxers&pg=PA194. 
  69. Peter Kropotkin: From Prince to Rebel. 1990. https://archive.org/details/isbn_9210921689609. 
  70. Parel, Anthony J. (2002), "Gandhi and Tolstoy", in Mathai, M. P.; John, M.S.; Joseph, Siby K. (eds.), Meditations on Gandhi: a Ravindra Varma festschrift, New Delhi: Concept, pp. 96–112
  71. Tolstoy and Gandhi, men of peace: a biography. Basic Books. 1983. https://archive.org/details/tolstoygandhimen00gree. 
  72. Tolstoy, Leo (1892). "The First Step". பார்க்கப்பட்ட நாள் 21 May 2016. … if [a man] be really and seriously seeking to live a good life, the first thing from which he will abstain will always be the use of animal food, because … its use is simply immoral, as it involves the performance of an act which is contrary to the moral feeling – killing. Preface to the Russian translation of Howard William's The Ethics of Diet
  73. Mays, H.G. (October–November 1999). "Resurrection: Tolstoy and Canada's Doukhobors". The Beaver. No. 79. pp. 38–44.
  74. Kropotkin, Peter (March 1898). "Some of the Resources of Canada". revoltlib.com. The Nineteenth Century. pp. 494–514.
  75. "Leo Tolstoy and the Mennonites". Journal of Mennonite Studies. 1 January 1998. https://jms.uwinnipeg.ca/index.php/jms/article/view/532. 
  76. Tolstoy: Principles For A New World Order. 1992. https://archive.org/details/tolstoyprinciple0000redf. 
  77. "Tolstoy". www.wealthandwant.com.
  78. "Leo Tolstoy". Prosper Australia.
  79. "Tolstoy's Georgist Spiritual Political Economy (1897–1910): Anarchism and Land Reform". The American Journal of Economics and Sociology 56 (4, Oct): 639–667. 1997. doi:10.1111/j.1536-7150.1997.tb02664.x. 
  80. “A Great Iniquity,” letter to the London Times (1905)
  81. Tolstoy, Leo. "Preface to the book Social Problems by Henry George". Archived from the original on 15 January 2013. பார்க்கப்பட்ட நாள் 30 May 2015.
  82. Foldvary, Fred E. (15 July 2001). "Geoanarchism". anti-state.com. Archived from the original on 18 October 2017. பார்க்கப்பட்ட நாள் 15 April 2009.
  83. The last days of Tolstoy. VG Chertkov. 1922. Heinemann
  84. Meek, James (22 July 2010). "James Meek reviews 'The Death of Tolstoy' by William Nickell, 'The Diaries of Sofia Tolstoy' translated by Cathy Porter, 'A Confession' by Leo Tolstoy, translated by Anthony Briggs and 'Anniversary Essays on Tolstoy' by Donna Tussing Orwin · LRB 22 July 2010". London Review of Books: pp. 3–8. http://www.lrb.co.uk/v32/n14/james-meek/some-wild-creature. 
  85. Leo Tolstoy. EJ Simmons – 1946 – Little, Brown and Company
  86. "The Last Days of Leo Tolstoy". www.linguadex.com.
  87. Kenneth C. Wenzer, "Tolstoy's Georgist spiritual political economy: anarchism and land reform – 1897–1910", Special Issue: Commemorating the 100th Anniversary of the Death of Henry George, The American Journal of Economics and Sociology, Oct 1997
  88. Higgs, Robert (2015). "Tolstoy's Manifesto on the State, Christian Anarchy, and Pacifism". The Independent Review 19 (3): 471–479. பன்னாட்டுத் தர தொடர் எண்:1086-1653. https://www.jstor.org/stable/24564569. 
  89. 89.0 89.1 McLean, Hugh (2008). "A Clash of Utopias". A Clash of Utopias:: Tolstoy and Gorky. Academic Studies Press. பக். 181–194. doi:10.2307/j.ctt1zxsjx2.15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-934843-02-4. https://www.jstor.org/stable/j.ctt1zxsjx2.15. பார்த்த நாள்: 2020-11-24. 
  90. Emerson, Caryl (2016). "Remarkable Tolstoy, from the Age of Empire to the Putin Era (1894–2006)". The Slavic and East European Journal 60 (2): 252–271. doi:10.30851/60.2.007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0037-6752. https://www.jstor.org/stable/26633177. 
  91. 91.0 91.1 Any, Carol (1990). "Boris Eikhenbaum's Unfinished Work on Tolstoy: A Dialogue with Soviet History". PMLA 105 (2): 233–244. doi:10.2307/462559. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-8129. https://www.jstor.org/stable/462559. 
  92. 92.00 92.01 92.02 92.03 92.04 92.05 92.06 92.07 92.08 92.09 92.10 92.11 Croskey, Robert M. (c. 2008). The legacy of Tolstoy :Alexandra Tolstoy and the Soviet regime in the 1920s /. Donald W. Treadgold studies on Russia, East Europe, and Central Asia. Seattle. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-295-98877-1. http://hdl.handle.net/2027/mdp.39015080856431. 
  93. New York Times February 15, 1987
  94. 94.0 94.1 94.2 94.3 Boer, Roland (2014). "Lenin on Tolstoy: Between Imaginary Resolution and Revolutionary Christian Communism". Science & Society 78 (1): 41–60. doi:10.1521/siso.2014.78.1.41. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8237. https://www.jstor.org/stable/24583606. 
  95. 95.0 95.1 95.2 Gray, Stuart; Hughes, Thomas M. (2015). "Gandhi's Devotional Political Thought". Philosophy East and West 65 (2): 375–400. doi:10.1353/pew.2015.0051. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-8221. https://www.jstor.org/stable/43830813. 
  96. Wallace, Irving, 'Everybody's Rover Boy', in The Sunday Gentleman. New York: Simon & Schuster, 1965. p. 117.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோ_டால்ஸ்டாய்&oldid=3838086" இலிருந்து மீள்விக்கப்பட்டது