வெள்ளை யானை (விலங்கு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாய்லாந்து ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள அரச வெள்ளை யானை

வெள்ளை யானை (White elephant)(வெளிரிய யானையும் கூட) [1] என்பது ஒரு அரிய வகை யானையாகும். ஆனால் ஒரு தனித்துவமான இனம் அல்ல. இந்து புராணங்களில், இந்திரனிடம் ஒரு வெள்ளை யானை இருந்தது. பெரும்பாலும் பனி போன்ற வெள்ளையாக சித்தரிக்கப்பட்டாலும், அவற்றின் தோல் பொதுவாக மென்மையான சிவப்பு-பழுப்பு நிறமாக இருக்கும். ஈரமாக இருக்கும்போது வெளிர் இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.[2] அவைகள் அழகான கண் இமைகளையும், கால் விரல் நகங்களைக் கொண்டுள்ளன. பாரம்பரியமான "வெள்ளை யானை" பொதுவாக அல்பினோ என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் தாய் மொழிச் சொல்லான சாங் சம்கான், உண்மையில் தூய்மையின் அம்சத்தின் அடிப்படையில் "வெள்ளை"யாக இருப்பதால் 'மங்கலகரமான யானை' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[3]

வெள்ளை யானைகள் பெயரளவில் மட்டுமே வெள்ளை நிறத்தில் இருக்கும். தற்போது மியான்மரின் ஆட்சியாளர்களால் பராமரிக்கப்பட்டவைகளில் - மியான்மார் நாட்டின் தலைவர் தான் சுவே தன்னை மியான்மர் மன்னர்களின் வாரிசாகக் கருதினார் - ஒன்று சாம்பல் நிறத்திலும், மற்ற மூன்றும் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வமாக வெள்ளை நிறத்தில் இருந்தன. தாய்லாந்தின் மன்னரும் பல வெள்ளை யானைகளை வைத்திருந்தார். அவற்றில் பதினொரு யானைகள் இன்னும் உயிருடன் உள்ளன.[4] அமெரிக்க முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் இசுபிரோ அக்னியூ ஒருமுறை கம்போடியாவின் மன்னர் நோரோடோம் சீயனூக்கிற்கு வெள்ளை யானை ஒன்றை பரிசாக வழங்கினார்.

பாரசீகப் புலவர் பெர்தோவ்சி என்பவர் கிபி 1000 ஆவது ஆண்டளவில் எழுதிய மிகப்பெரிய தொகைநூலான சா நாமாவில் வெள்ளை யானை சித்தரிக்கப்பட்டுள்ளது.

பெர்சியா[தொகு]

சாசானிய மன்னன் இரண்டாம் குசுருவின் யானைப் படையில் வெள்ளை யானைகள் இருந்தன. ஈரானின் வரலாற்றாசிரியரான அல்-தபரியின் கூற்றுப்படி, புறாத்து ஆற்றங்கரையில் அபு உபைத் அல்-தகாபி தலைமையிலான அரபு முஸ்லிம்களுக்கும், பஹ்மான் ஜதுயா தலைமையிலான பாரசீக சாசானியப் படைகளுக்கும் இடையே நடந்த போரில் ஒரு வெள்ளை யானை அரபு முஸ்லிம்களின் தளபதி அபு உபைத் அல்-தகாபியைக் கொன்றது.

இந்து சமயம்[தொகு]

இந்திரனும் சச்சியும் ஐந்து தலை தெய்வீக யானையான ஐராவதத்தின் மீது சவாரி செய்யும் ஒரு ஓவியம். ஏறத்தாழ1670-1680, லாஸ் ஏஞ்சல்ஸ் கலை அருங்காட்சியகம் (இது முதலில் ராஜஸ்தானின் ஆம்பெரில் இருந்தது).

வெள்ளை யானை இந்திரனுக்கு சொந்தமானதாக கருதப்படுகிறது. அந்த யானையின் பெயர் ஐராவதம். அதற்கு பறக்கும் சக்தி இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஐராவதம் அனைத்து யானைகளுக்கும் அரசனாக இந்திரனால் ஆக்கப்பட்டது.

பிம்பிசார மன்னன் அத்தகைய ஒரு வெள்ளை யானையை வைத்திருந்தான். யானை தனது முதிர்ந்த காலத்தில் இருந்தபோது அதனை ஒரு காட்டில் பிடித்தான். யானை எந்த முன் பயிற்சியும் இல்லாமல் தானே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதால், ஆண் யானைக்கு "தண்ணீர்" என்று பொருள்படும் "செச்சனகா" என்று பெயரிட்டான். இந்த யானையின் விலை மகதத்தின் பாதியாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அதை தனது மகன் விகல்லகுமாரனிடம் கொடுத்தான். இது அவனது மற்றொரு மகன் அஜாதசத்ருவை பொறாமைப்படுத்தியது. அஜாதசத்ரு அதை பலமுறை திருட முயன்றான். இதன் விளைவாக மகாசிலகண்டகம் & இரத-முசாலம் என்ற இரண்டு பயங்கரமான போர்கள் நடந்தன. (பார்க்க அஜாதசத்ரு ).

தாய்லாந்து[தொகு]

"வெள்ளை யானைக் கொடி", 1855-1916 இல் தாய்லாந்தின் கொடி

"பிராமண நம்பிக்கையின்படி, ஒரு மன்னர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 'வெள்ளை' யானைகளை வைத்திருந்தால், அது ஒரு புகழ்பெற்ற மற்றும் மகிழ்ச்சியான அறிகுறியாகும்." மன்னன் திரைலோக் முதன் முதலில் இவ்வாறான வெள்ளை யானையை வைத்திருந்தான். தாய் மொழியில், அவைகள் அல்பினோ என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை அல்ல, வெள்ளை முடியுடன் "வெளிர் மஞ்சள் கண்களையும், வெள்ளை நகங்களையும்" கொண்டுள்ளது. "கரடுமுரடான தோல் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது அல்லது தலை, தண்டு அல்லது முன்கால்களில் இளஞ்சிவப்புத் திட்டுகள் இருந்தன." அவை யானை என்பதால் வணங்கப்படவில்லை. மன்னரின் மகிமைக்கு ஒரு இணைப்பாக கருதப்பட்டன." [5] :39

தாய்லாந்தில், வெள்ளை யானைகள் (இளஞ்சிவப்பு யானைகள் என்றும் அழைக்கப்படும்) புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மேலும் அவை அரச அதிகாரத்தின் சின்னமாக உள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தும் மன்னனுக்கே வழங்கப்படுகின்றன (இவ்வாறான நிகழ்வு பொதுவாக ஒரு சம்பிரதாயமாக இருந்தாலும் - யானைகள் உண்மையில் சிறைபிடிக்கப்படுவதில்லை). வரலாற்று ரீதியாக, அரசர்களின் நிலை அவர்கள் வசம் உள்ள வெள்ளை யானைகளின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடப்பட்டது. மறைந்த மன்னர் பூமிபால் அதுல்யாதெச் 21 வெள்ளை யானைகளை வைத்திருந்தார் - இது ஒரு முன்னோடியில்லாத சாதனையாகக் கருதப்படுகிறது. தாய்லாந்து வரலாற்றில் மன்னர் சாங் பூயக் அதிக எண்ணிக்கையிலான யானைகளின் உரிமையாளர் ஆவார்.[4] மன்னர் பூமிபால் ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் யானை, முழு இராச்சியத்திலும் மிக முக்கியமான யானையாகக் கருதப்பட்டது. இது அவரது மாட்சிமையின் சொந்த பெயரைக் கொண்ட அரச பட்டத்தைப் பெற்றது: (பிரா சவெத் அதுல்யாதெச் பஹோல் பூமிபால் நவனட்டா-பராமி ).[6] இருப்பினும் மன்னர் தனது வசம் இருந்த அனைத்து வெள்ளை யானைகளுக்கும் அரச பட்டங்களை வழங்கவில்லை. இன்று இந்த பதினொரு யானைகள் இன்னும் உயிருடன் உள்ளன. மேலும், ஐந்து யானைகளுக்கு மட்டுமே அரச பட்டங்கள் உள்ளன.[6]

தாய்லாந்தில் உள்ள ஒரு வெள்ளை யானையானது அல்பினோவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அது வெளிறிய தோலைக் கொண்டிருக்க வேண்டும். கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, யானைகள் மன்னனுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு நான்கு தரப்படுத்தப்பட்ட வகைகளில் ஒன்றுக்கு ஒதுக்கப்படுகின்றன. இருப்பினும் குறைந்த தரங்கள் சில நேரங்களில் மறுக்கப்படுகின்றன.

முற்காலத்தில் அரசனின் நண்பர்களுக்கும், அவனது கூட்டாளிகளுக்கு கீழ்தர வெள்ளை யானைகள் பரிசாக வழங்கப்பட்டன. விலங்குகளுக்கு நிறைய கவனிப்பு தேவைப்பட்டது. புனிதமாக இருப்பதால், வேலை செய்ய அனுமதிப்பதில்லை. எனவே பெறுநருக்கு பெரும் நிதிச் சுமை இருந்தது - மன்னர் மற்றும் பணக்காரர்களால் மட்டுமே அவற்றை வாங்க முடியும். ஒரு கதையின் படி, வெள்ளை யானைகள் சில சமயங்களில் சில எதிரிகளுக்கு (பெரும்பாலும் அரசன் அதிருப்தி அடையும் ஒரு சிறிய பிரபு) பரிசாக வழங்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமான பெறுநர், அதிலிருந்து எந்த லாபத்தையும் ஈட்ட முடியாமல், அதைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், திவால் மற்றும் அழிவுக்கு ஆளாக நேரிடும்.[7]

மியான்மர்[தொகு]

யாங்கோனில் உள்ள ஒரு வெள்ளை யானை

மியான்மரில், வெள்ளை யானைகள் சக்தியாகவும், நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னங்களாகவும் மதிக்கப்படுகின்றன.[8] 2002 [9] 2001லும் 2002லும் வெள்ளை யானைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆளும் இராணுவ ஆட்சியின் அறிவிப்பு எதிரிகளால் அவர்களின் ஆட்சிக்கு ஆதரவை வலுப்படுத்தும் நோக்கமாக பார்க்கப்பட்டது. 2010ன்படி, மியான்மரில் ஒன்பது வெள்ளை யானைகள் உள்ளன. கடைசியாக 2015 பிப்ரவரி 27 அன்று மியான்மரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பேசின் பகுதியில் வெள்ளை யானை கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று வெள்ளை யானைகள் தற்போது யங்கோன் புறநகரில் உள்ள ஒரு இடத்தில் [10] வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை புதிய மியான்மர் நிர்வாக தலைநகரான நைப்பியிதோவிலுள்ள உப்பதசாந்தி பகோடாவில் வைக்கப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்கா[தொகு]

தென்னாப்பிரிக்காவின் குருகர் தேசிய பூங்காவில் காணப்படும் அல்பினோ யானை

ஆசியாவை விட ஆப்பிரிக்க யானைகளில் அல்பினோக்கள் மிகவும் அரிதானவை. அவை சிவப்பு-பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. மேலும் சூரிய ஒளியில் இருந்து குருட்டுத்தன்மை அல்லது தோல் பிரச்சனைகள் ஏற்படலாம்.[11]

மேற்கத்திய கலாச்சாரக் குறிப்புகள்[தொகு]

ஆங்கிலத்தில், "வெள்ளை யானை" என்பது ஒரு கண்கவர் மற்றும் மதிப்புமிக்க பொருளைக் குறிக்கிறது. அது மதிப்புக்குரியதை விட அதிக சிக்கலை ஏற்படுத்துகிறது அல்லது அதை வைத்திருப்பவருக்கு அதன் பயனை விட செலவு அதிகமாக உள்ளது. இந்த உருப்படி மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், அதன் தற்போதைய உரிமையாளர் பொதுவாக அதை அகற்றுவதில் மகிழ்ச்சி அடைவார்.

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Why do we say 'white elephant'? History Extra. Retrieved 5 October 2021
  2. Men ride albino elephants, Reuters via The Atlantic, 1 March 2012.
  3. "Royal Elephant Stable". Thai Elephant Conservation Center. Archived from the original on 9 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 7 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "งดงามยิ่งนัก !! ชมประวัติช้างเผือกคู่พระบารมีพระบาทสมเด็จพระเจ้าอยู่หัวในพระบรมโกศ (รายละเอียด)". www.tnews.co.th.
  5. Chakrabongse, C., 1960, Lords of Life, London: Alvin Redman Limited
  6. 6.0 6.1 Ibid
  7. "Home : Oxford English Dictionary". Oed.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-07.
  8. 'Lucky' white elephant for Burma, BBC, 9 November 2001.
  9. "Second White Elephant Found". Archived from the original on June 23, 2002. பார்க்கப்பட்ட நாள் 2007-03-11.
  10. "White Elephants Snubbed by Junta". Archived from the original on June 6, 2011. பார்க்கப்பட்ட நாள் 2010-06-07.
  11. Rebecca Morelle. Pink elephant is caught on camera, BBC News, 20 March 2009

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_யானை_(விலங்கு)&oldid=3617873" இலிருந்து மீள்விக்கப்பட்டது