பங்கோர் டச்சு கோட்டை

ஆள்கூறுகள்: 4°12′2″N 100°34′32″E / 4.20056°N 100.57556°E / 4.20056; 100.57556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கோர் டச்சு கோட்டை
Dutch Fort Pangkor
மலேசியா, பேராக், பங்கோர் தீவு
பங்கோர் டச்சு கோட்டை
ஆள்கூறுகள் 4°12′2″N 100°34′32″E / 4.20056°N 100.57556°E / 4.20056; 100.57556
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது டச்சு அரசு
17-ஆம் நூற்றாண்டு
மக்கள்
அனுமதி
உண்டு
நிலைமை சில கட்டமைப்புகள் அழிவு
இட வரலாறு
கட்டிய காலம் 1670
பயன்பாட்டுக்
காலம்
1670 - 1748
கட்டியவர் டச்சு கிழக்கிந்திய கம்பெனி

பங்கோர் டச்சு கோட்டை (ஆங்கிலம்: Dutch Fort Pangkor; மலாய் மொழி: Kota Belanda; டச்சு மொழி: Hollandse stad அல்லது Fort Dindingh) என்பது 1670-ஆம் ஆண்டில் மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டம், பங்கோர் தீவில் கட்டப்பட்ட ஒரு டச்சுக் கோட்டையாகும்.[1]

டச்சு கிழக்கிந்திய நிறுவனம், (ஆங்கிலம்: Dutch East India Company; மலாய் மொழி: Syarikat Hindia Timur Belanda; டச்சு மொழி: Vereenigde Oostindische Compagnie (VOC) மலாக்காவுடன் வர்த்தகம் செய்வதற்கான நோக்கத்தில் இந்தக் கோட்டையைக் கட்டியது.

பொது[தொகு]

இடச்சுக்காரர்கள் இந்தக் கோட்டைக்கு டிண்டிங்சு கோட்டை (டச்சு மொழி: Fort Dindingh) என பெயர் வைத்தார்கள். இந்தக் கோட்டைக்கு எதிர்ப்புறமாய்த் மலேசியப் பெருநிலம் உள்ளது. அங்கு ஓர் ஆறு உள்ளது.

மலாக்கா நீரிணையில் பாயும் அந்த ஆற்றின் பெயர் டிண்டிங்சு ஆறு (Dinding River). அந்த ஆற்றின் பெயரையே இடச்சுக்காரர்கள் இந்தக் கோட்டைக்கும் வைத்தார்கள்.

இந்தக் கோட்டை கம்போங் தெலுக் கெடுங் (Kampung Teluk Gedung) எனும் ஓர் அழகிய கடற்கரையோர மீன்பிடி கிராமத்தில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பங்கோர் டச்சு கோட்டை கட்டப்பட்ட நேரத்தில், டச்சுக்காரர்கள் மலாக்காவை ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் அவர்கள் மலாயா தீவுக் கூட்டத்தின் பிற பகுதிகளுக்கும் தங்கள் அதிகாரங்களை விரிவு படுத்தி வந்தனர். மேலும் அவர்கள் மலாயாவின் ஈய வர்த்தகத்தைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் அதிகமாய்த் தீவிரம் காட்டி வந்தனர்.[2]

பேராக் சுல்தானகத்தில் (Sultanate of Perak) இருந்து கிடைக்கும் ஈயக் கனிமப் பொருட்களை சேமிப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் 1670-இல் இடச்சுக்காரர்களால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது.[3] முதலில் இந்தக் கோட்டை மரத் தூண்களால் கட்டப்பட்டது. பின்னர் ஒரு செங்கல் கட்டமைப்பில் பலப்படுத்தப்பட்டது.[2]

பாதுகாப்புப் படை[தொகு]

ஈயக் கனிமங்களைப் பெறுவதில் இடச்சுக்காரர்கள் பயன்படுத்திய செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த மலாய்க்காரர்கள், 1690-ஆம் ஆண்டில், பாங்லிமா குலுப் (Panglima Kulup) என்பவரின் தலைமையில் இந்தக் கோட்டையின் பெரும் பகுதிகளை உடைத்து விட்டார்கள்.[2]

இருப்பினும் 1743-ஆம் ஆண்டில் இடச்சுக்காரர்களால் மீண்டும் கட்டப்பட்டது. மேலும் 1748-ஆம் ஆண்டு வரை கோட்டையின் பாதுகாப்பிற்காக 60 வீரர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டனர். அவர்களில் 30 பேர் ஐரோப்பியர்கள். ஒரு கட்டத்தில் டச்சுக்காரர்கள் இங்கு ஒன்பது பீரங்கிகளை வைத்து இருந்தனர். பின்னர் அந்தப் பாதுகாப்புப் படை கலைக்கப்பட்டது.[4]

1784-ஆம் ஆண்டில் பேராக் ஆற்றுக்கு அருகே டச்சுக்காரர்கள் மற்றொரு கிடங்கைக் கட்டினார்கள். பழைய பங்கோர் டச்சுக் கோட்டையும் கைவிடப்பட்டது. அப்போது பாதுகாப்பில் இருந்த வீரர்கள் ஒரு பெரிய பாறையில் '1743' என்று செதுக்கி இருக்கின்றனர். இப்போது அந்தப் 'பாறை பத்து பெர்சுராட் பெலாண்டா' (மலாய் மொழி: Batu Bersurat Belanda; ஆங்கிலம்: Sacred Written Rock) என்று அழைக்கப் படுகிறது.

புனரமைப்பு[தொகு]

1973-ஆம் ஆண்டு மலேசியாவின் அருங்காட்சியகத் துறையால் இந்தக் கோட்டை புனரமைப்பு செய்யப் பட்டது. மற்றும் மலேசியாவின் 1976 பழங்காலச் சட்டம்: எண். 242 பேராக்; 21 மார்ச் 1978-இன் கீழ் (Antiquities Act 1976 No. 242 Perak Gazette); இந்தக் கோட்டை ஒரு புராதன நினைவுச் சின்னமாகவும், வரலாற்றுத் தளமாகவும் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி, பழங்கால நினைவுச்சின்னம் மற்றும் வரலாற்றுத் தளத்தை யாரேனும் சேதப் படுத்தினால், அந்தக் குற்றத்திற்காக மூன்று மாதங்களுக்கு மிகாமல் சிறைத் தண்டனை அல்லது ஐந்நூறு மலேசிய ரிங்கிட்டிற்கு மிகாமல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.

இந்தக் கோட்டை இப்போது பங்கோர் தீவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.[5]

பங்கோர் டச்சு கோட்டை காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kota Belanda - Malaysia Attractions". Lonely Planet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
  2. 2.0 2.1 2.2 "At the time the 'fort' was built, the Dutch had occupied Malacca and they were extending their tentacles to other parts of the Malay Archipelago and they had their eyes on exploiting the tin trade". Malaysia Traveller.
  3. "Visit Dutch Fort on your trip to Pulau Pangkor or Malaysia • Inspirock". www.inspirock.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
  4. "On 20 November 1745 Governor-General Gustraaf Willem, Baron van Imhoff ordered the rebuilding of the fort at Pulau Dinding: it was to have a garrison of 30 Europeans and 30 Asiatics". www.sabrizain.org. பார்க்கப்பட்ட நாள் 15 August 2022.
  5. "Dutch Fort Pangkor Island - The site of the fort has been enhanced with a patterned lawn, a view tower (closed during my visit), toilets and a row of souvenir/snack shops built with a hint of Dutch-style architecture". Malaysia Traveller.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dutch Fort
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கோர்_டச்சு_கோட்டை&oldid=3494916" இலிருந்து மீள்விக்கப்பட்டது