உள்ளடக்கத்துக்குச் செல்

தருமபுரி மாவட்ட வனவளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒகேனக்கல் வனப்பகுதி
வாணியாறு அணைப்பகுதியை ஒட்டி உள்ள மலைக்காடு

தருமபுரி மாவட்ட வனவளம் தருமபுரி மாவட்டம் 3280 சதுர கிலோ மீட்டர் வனக் காப்புக் காடுகளைக் கொண்டுள்ளது, இம்மாவடட்டக் காடுகள் இரண்டு மாநிலங்களான கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் காடுகள் காவிரி, சனத்குமார நதி, வாணியாறு, தென்பெண்ணை ஆறு கம்பையநல்லூர் ஆறு, ஆகிய ஆறுகளுக்கு நீர் பிடிப்புப் பகுதியாக உள்ளன.

நிலவியல்

[தொகு]

இம்மாவட்டத்தில் அமைந்துள்ளவை கிழக்குத் தொடர்ச்சி மலைகளாகவும் அதைச்சார்ந்த காடுகளாகவும் உள்ளன. தென்மேற்கு,வடகிழக்கு மழைக்காலங்களில் மழையைப் பெறும் இம்மாவட்டம் சராசரியாக 902.1 மில்லி மீட்டர் மழையைப் பெறுகிறது.[1] தருமபுரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக தருமபுரி சரகம் ஏலகிரி காப்புக் காடு, பென்னாகரம் சரகம் பதனவாடி காப்புக்காடு, பாலக்கோடு சரகம் திருமால்வாடி, ஒகேனக்கல் சரகம் குத்திராயன் காப்புக் காடு ஆகிய பகுதிகள் உள்ளன.[2]

காட்டு வகைகள்

[தொகு]

தருமபுரி மாவட்ட வனங்கள் பெரும்பான்மையும் இலையுதிர் காடுகளாகவே உள்ளன. ஓரிரு இடங்களில் வறண்ட பசுமை மாறாக் காடுகளும் காணப்படுகின்றன. காவிரி ஆற்றங்கரையையொட்டி ஆற்றோரக் காடுகள் அமைந்துள்ளன.

காடுகளில் காணப்படும் தாவரங்கள்

[தொகு]

தர்மபுரி காடுகளில் காணக்கூடிய முக்கிய மரங்கள் தேக்கு, சந்தனம், வேம்பு, அசோகு, புளிய மரம், துரிஞ்சை, ஆல், வேலம், நீலகிரி, எட்டி மரம், நாகமரம், அரசு, வில்வம், வெப்பாலை, மூங்கில், கருங்காலி, புங்கம் ஆகிய மரங்களும் வேளிக்காத்தான், வெடத்தாரை, துளசி, மருதாணி, ஆவாரம், நொச்சி, நச்சட்டன் காரை ஆகிய செடிவகைகளும், காட்டுவள்ளிக் கொடி, கட்டுக்கொடி, சுரட்டைக் கொடி, ஊணாங்கொடி ஆகிய கொடிவகைகளும் காணப்படுகின்றன.

உயிரினங்கள்

[தொகு]

இக்காடுகளில் யானை, சிறுத்தை, காட்டுப் பன்றிகள், கரடி, காட்டெருமை, கடமை, புனுகுப்பூனை, நரி, குரங்கு, கீரிப்பிள்ளை, மான், காட்டுப் பன்றி, போன்ற விலங்குகளும், கிளி, குயில், புறா, காடை, கௌதாரி, மயில், காட்டுக்கோழி, பெருங்கழுகு, பருந்து உள்ளிட்ட பறவைகளும், மலைப்பாம்பு, விரியன், நாகப்பாம்பு, பச்சைப் பாம்பு, சாரைப்பாம்பு, ஓணான், அரனை, தேரை, தேள், பச்சோந்தி, மரவட்டை, காட்டுப்பூரான் உள்ளிட்ட ஊர்வணவும் காணப்படுகின்றன.[3]

வன உயிரினங்களில் மிகப் பெரியதான யானை இக்காடுகளில் 150 முதல் 200 வரை காணப்படுகின்றன.[4] கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து அக்டோபர்-மார்ச் மாதங்களில் யானைகள் இடம் பெயர்ந்து இக்காடுகளுக்கு வலசை வருகின்றன. இதனால் வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படுகிறது.[5] மேலும் இவை வலசை போகும்போது தொடர்வண்டி பாதை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றைக் கடக்கும்போது வாகனங்களில் அடிப்பட்டு இறக்கின்றன.

குறிப்புகள்

[தொகு]
  1. "Rainfall" (PDF). dharmapuri.tn.nic.in/pdf/shb201314.pdf. Archived from the original (PDF) on 2017-05-17. Retrieved 13 ஆகத்து 2016.
  2. "காட்டுத் தீயை தடுக்க தீ தடுப்பு கோடு கோடைக்கு முன்பாக வனத்துறை தீவிரம்". தி இந்து: 5. பெப்ரவரி 2017. doi:22. 
  3. இரா இராமக்கிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம்தமிழர் பதிப்பகம். pp. 117–120.
  4. "உலக யானைகள் தின விழாவையொட்டி தருமபுரியில் கலை இலக்கிய போட்டி:வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு". tamil.worldtvnews.co. 13 ஆகத்து 2016. Retrieved 13 ஆகத்து 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "தர்மபுரியில் யானைகள் அட்டகாசம்!". ஜன்னல். 21 மார்ச் 2015. Retrieved 13 ஆகத்து 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமபுரி_மாவட்ட_வனவளம்&oldid=4084260" இலிருந்து மீள்விக்கப்பட்டது