வானவர் கீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானவர் கீதம் அல்லது வானவர் புகழ் கீதம் என்பது கத்தோலிக்க திருச்சபையில் திருநாட்களின் திருப்பலியில் பாடப்படும் அல்லது செபமாக செபிக்கப்படும் புகப்பா ஆகும். இப்பாடலானது இது பெரிய புகப்பா (Greater Doxology) என்றும் திரித்துவப் புகழ் சிறிய புகப்பா (Minor Doxology) எனவும் அழைக்கப்படுகின்றது. விவிலியத்தின்படி இடையர்கள் குழந்தை இயேசுவைக் காணும்படி அவர்களுக்கு வானதூதர் அளித்த அறிவிப்பின் இருதியில் அவர்கள் பாடிய பாடல் இப்பாடலில் துவக்க வரிகளாய் அமைந்துள்ளதால் இது வானவர் கீதம் எனப்பெயர் பெற்றது.

மரபுப்படி தவக்காலம் மற்றும் திருவருகைக்கால ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் நீத்தார் இறுதி திருப்பலி ஆகியவற்றில் இப்பாடல் பாடப்படாது. விழாக்கள், பெருவிழாக்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிகளில் இப்பாடல் பாடப்படும். இது மன்னிப்பு வழிபாட்டுக்கு பின் சபை மன்றாட்டுக்கு முன் பாடப்படும்.

இவ்வகைப்பாடல்கள் விவிலியத்தின் திருப்பாடல்களின் நடையில் இருப்பதால் இவை தனிநபர் திருப்பாடல்கள் (private psalms) வகையினைச் சேர்ந்தவை ஆகும். தே தேயும் இவ்வகைப்பாடலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.[1]

திருப்பலியில் பயன்படுத்தப்படும் வடிவம்[தொகு]

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நல் மனத்தோருக்கு அமைதி ஆகுக. என்னும் பதாகையினை தாங்கிய வானதூதர். இவ்வகை சித்தரிப்புகள் கிறித்துவ ஆலயங்களிலும் குடிலிலும் அதிகமாக காணலாம்

இப்பாடலின் பல வடிவங்கள் வழக்கில் உள்ளன. பொதுவான வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நல் மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம். உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மாட்சிப்படுத்துகின்றோம். உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா, ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறித்துவே, ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,
தந்தையின் திருமகனே, உலகின் பாவங்களை போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும். உலகின் பாவங்களை போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும். ஏனெனில் இயேசுகிறித்துவே, நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர். தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே - ஆமென்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Catholic Encyclopedia: ''Gloria in Excelsis Deo''". Newadvent.org. 1909-09-01. பார்க்கப்பட்ட நாள் 2012-03-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானவர்_கீதம்&oldid=3170572" இலிருந்து மீள்விக்கப்பட்டது