திருப்புகழ்மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித சனியன்று ஆசீர்வாதப்பர் சபைத் துறவியர் திருப்புகழ் மாலையின் மாலை இறைவேண்டலை செய்கின்றனர்

திருப்புகழ்மாலை அல்லது கட்டளை செபம் (இலத்தீன்: Liturgia Horarum, ஆங்கிலம்:Liturgy of the Hours அல்லது Divine Office அல்லது canonical hours) என்பது கத்தோலிக்க திருச்சபையின் இறைவேண்டல் தொகுப்பு ஆகும். இது துறவிகளாலும், துறவற சபையினராலும், பொது நிலையினராலும் பயன்படுத்தப்படலாம்.[1][2] இதில் பெரும் பகுதி திருப்பாடல்களும், அதனோடு விவிலிய வசனங்களும், பிற பக்திப்பாடல்களும் இடம்பெறுகின்றன. திருப்பலியோடு சேர்ந்து இதுவே கத்தோலிக்க திருச்சபையின் வெளிப்படையான செப வாழ்வாகக் கருதப்படுகின்றது. திருப்புகழ்மாலையை வேண்டுவதில், குறிப்பிட்ட மணிக்கு உரிய உண்மையான நேரத்தை, இயன்றவரைக் கடைப்பிடிக்கவேண்டும்.

ஒருவர் திருப்பட்டம் பெற்றப்பின், கத்தோலிக்க திருச்சபையின் சட்டப்படி கட்டாயம் இச்செபத்தை தினமும் செபிக்க வேண்டும். கத்தோலிக்க குருக்களும் குருத்துவத்தை விரும்பும் திருத்தொண்டர்களும் உரிய மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள திருவழிபாட்டு நூல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் திருப்புகழ்மாலையை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர்; எனினும் நிரந்தர திருத்தொண்டர்கள் ஆயர் பேரவையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவிற்கு அதை நிறைவேற்ற வேண்டும்.[3] இச்செபமே, துறவற இல்லங்களின் அடிப்படை செபமாகக் கருதப்படுகின்றது. அர்ப்பண வாழ்வுச் சபை மற்றும் மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களின் உறுப்பினர்கள், அவர்களின் அமைப்புச்சட்டங்களின் விதிமுறைக்கேற்பக் இச்செபத்தை செபிக்க கடமைப்பட்டுள்ளனர். மற்றக் கத்தோலிக்க விசுவாசிகளும், சூழ்நிலைக்கேற்ப, திருப்புகழ்மாலையில், அது திருச்சபையின் செயல் என்றளவில், பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.

கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம், லூதரனியம் மற்றும் பல திருச்சபைகளிலும் இதனை ஒத்த பழக்கம் உண்டு.

உரோமைத்திருப்புகழ்மாலை மன்றாடப்படும் நேரங்கள்[தொகு]

கீழ்வரும் நேரங்களில் திருப்புகழ்மாலை செபிப்பது வழக்கம்:

  • காலைத் திருப்புகழ் (Lauds - இரவு 3 மணி அல்லது விடியலில் போது)
  • மாலைத் திருப்புகழ் (Vespers - மாலையில் விளக்கேற்றும் நேரத்தில் - பொதுவாக 6 மணிக்கு)
  • இரவுத்திருப்புகழ் (Compline - தூங்கச்செல்லும் முன், அது நள்ளிரவுக்கு பின்னர் இருந்தாலும். பொதுவாக இரவு 9 மணிக்குச்செபிக்கப்படும்)
  • வைகறைத் திருப்புகழ் (Matins - இது சில துறவுமடங்களில் மட்டும் பின்பற்றப்படுகின்றது)
  • முதல் மணித் திருப்புகழ் (Prime - காலை 6 மணி)
  • முற்பகல் மணி (Terce - முற்பகல் 9 மணி)
  • நண்பகல் மணி (Sext - நண்பகலில்)
  • பிற்பகல் மணி (None - பிற்பகல் 3 மணி)

ஆதாரங்கள்[தொகு]

  1. Catechism of the Catholic Church, 1174-1178
  2. Talk by Pope Benedict XVI on St Dominic Guzmán (1170-1221)
  3. "Divine Office" Catholic Encyclopedia


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புகழ்மாலை&oldid=2049505" இலிருந்து மீள்விக்கப்பட்டது