உ. வே. சாமிநாதையர்
| உ.வே. சாமிநாதையர் | |
|---|---|
![]() |
|
| பிறப்பு | பெப்ரவரி 19,1855 உத்தமதானபுரம், கும்பகோணம், தமிழ் நாடு |
| இறப்பு | ஏப்ரல் 28 1942 (அகவை 87) |
| பணி | பதிப்பாளர் |
| அறியப்படுவது | அழிநிலை நூல்களைப் பதிப்பித்தமை |
| சமயம் | இந்து சமயம் |
உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 28, 1942, உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.
பொருளடக்கம் |
வாழ்க்கை [தொகு]
சாமிநாதன் பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள "உத்தமதானபுரம்" எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.
ஏட்டுச்சுவடி மீட்பு [தொகு]
உ.வே.சா கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே சேலம் இராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்து நட்பு கொண்டார். ஒருநாள் வழக்கம் போல் இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் சீவக சிந்தாமணியைப் பற்றித் தெரியுமா என முதலியார் வினவினார். தனது ஆசிரியரிடம் சிற்றிலக்கியங்கள் பெரும்பாலானவற்றை மட்டுமே கற்றிருந்த உ.வே.சா சிற்றிலக்கியங்களைத் தவிர வேறு பல தமிழ் இலக்கியங்களும் இருப்பதை அன்று அறிந்தார்.[1] இராமசாமி முதலியார் உ.வே.சா வுக்கு அளித்த சமண சமய நூலான சீவக சிந்தாமணியின் ஓலைச்சுவடிப் பகுதி அக்காலகட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் உ.வே.சா வினுள் தூண்டியது. சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார். பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப் பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில் இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.
சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
பேச்சுத்திறன் [தொகு]
உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.
அச்சு பதித்த நூல்களின் பட்டியல் [தொகு]
சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டை மணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4[2]
உ.வே.சா அவர்கள் பதிப்பித்த நூல்கள்[3]
| புத்தகத்தின் பெயர் | பதிப்பித்த ஆண்டு |
|---|---|
| நீலி இரட்டை மணிமாலை | 1874 |
| வேணுவனலிங்க விலாசச் சிறப்பு | 1878 |
| திருக்குடந்தைப் புராணம் | 1883 |
| மத்தியார்ச்சுன மான்மியம் | 1885 |
| சீவக சிந்தாமணி | 1887 |
| கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது | 1888 |
| திருமயிலைத் திரிபந்தாதி | 1888 |
| பத்துப் பாட்டு மூலமும் உரையும் | 1889 |
| தண்டபாணி விருத்தம் | 1891 |
| சிலப்பதிகாரம் | 1892 |
| திருப்பெருந்துறைப் புராணம் | 1892 |
| புறநானூறு | 1894 |
| புறப்பொருள் வெண்பா மாலை | 1895 |
| புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் | 1898 |
| மணிமேகலை | 1898 |
| மணிமேகலைக் கதைச் சுருக்கம் | 1898 |
| ஐங்குறு நூறு | 1903 |
| சீகாழிக் கோவை | 1903 |
| திருவாவடுதுறைக் கோவை | 1903 |
| வீரவனப் புராணம் | 1903 |
| சூரைமாநகர்ப் புராணம் | 1904 |
| திருக்காளத்தி நாதருலா | 1904 |
| திருப்பூவண நாதருலா | 1904 |
| பதிற்றுப் பத்து | 1904 |
| திருவாரூர்த் தியாகராச லீலை | 1905 |
| திருவாரூருலா | 1905 |
| திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் | 1906 |
| தனியூர்ப் புராணம் | 1907 |
| தேவையுலா | 1907 |
| மண்ணிப்படிக்கரைப் புராணம் | 1907 |
| திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் | 1908 |
| மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு | 1910 |
| திருக்காளத்திப் புராணம் | 1912 |
| திருத்தணிகைத் திருவிருத்தம் | 1914 |
| பரிபாடல் | 1918 |
| உதயணன் சரித்திரச் சுருக்கம் | 1924 |
| பெருங்கதை | 1924 |
| நன்னூல் சங்கர நமச்சிவாயருரை | 1925 |
| நன்னூல் மயிலை நாதருரை | 1925 |
| சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் | 1928 |
| தக்கயாகப் பரணி | 1930 |
| தமிழ்விடு தூது | 1930 |
| பத்துப் பாட்டு மூலம் | 1931 |
| மதுரைச் சொக்கநாதர் உலா | 1931 |
| கடம்பர் கோயிலுலா | 1932 |
| களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை | 1932 |
| சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் | 1932 |
| பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது | 1932 |
| பழனி பிள்ளைத் தமிழ் | 1932 |
| மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை | 1932 |
| வலிவல மும்மணிக் கோவை | 1932 |
| சங்கரலிங்க உலா | 1933 |
| திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா | 1933 |
| பாசவதைப் பரணி | 1933 |
| மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 1 | 1933 |
| சங்கர நயினார் கோயிலந்தாதி | 1934 |
| மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 2 | 1934 |
| விளத்தொட்டிப் புராணம் | 1934 |
| ஆற்றூர்ப் புராணம் | 1935 |
| உதயண குமார காவியம் | 1935 |
| கலைசைக் கோவை | 1935 |
| திரு இலஞ்சி முருகன் உலா | 1935 |
| பழமலைக் கோவை | 1935 |
| பழனி இரட்டைமணி மாலை | 1935 |
| இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை | 1936 |
| கனம் கிருஷ்ணயைர் | 1936 |
| கோபால கிருஷ்ண பாரதியார் | 1936 |
| திருநீலகண்டனார் சரித்திரம் | 1936 |
| திருமயிலை யமக அந்தாதி | 1936 |
| திருவள்ளுவரும் திருக்குறளும் | 1936 |
| நான் கண்டதும் கேட்டதும் | 1936 |
| புதியதும் பழையதும் | 1936 |
| புறநானூறு மூலம் | 1936 |
| பெருங்கதை மூலம் | 1936 |
| மகாவைத்தியநாதையைர் | 1936 |
| மான் விடு தூது | 1936 |
| குறுந்தொகை | 1937 |
| சிராமலைக் கோவை | 1937 |
| தமிழ்நெறி விளக்கம் | 1937 |
| திருவாரூர்க் கோவை | 1937 |
| நல்லுரைக் கோவை பகுதி 1 | 1937 |
| நல்லுரைக் கோவை பகுதி 2 | 1937 |
| நினைவு மஞ்சரி - பகுதி 1 | 1937 |
| அழகர் கிள்ளை விடு தூது | 1938 |
| சிவசிவ வெண்பா | 1938 |
| திருக்கழுக்குன்றத்துலா | 1938 |
| திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை | 1938 |
| திருமலையாண்டவர் குறவஞ்சி | 1938 |
| நல்லுரைக் கோவை பகுதி 3 | 1938 |
| குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு | 1939 |
| தணிகாசல புராணம் | 1939 |
| நல்லுரைக் கோவை பகுதி 4 | 1939 |
| புகையிலை விடு தூது | 1939 |
| மகரநெடுங் குழைக்காதர் பாமாலை | 1939 |
| கபாலீசுவரர் பஞ்சரத்தினம் | 1940 |
| திருக்குற்றாலச் சிலேடை வெண்பா | 1940 |
| வில்லைப் புராணம் | 1940 |
| செவ்வைச் சூடுவார் பாகவதம் | 1941 |
| நினைவு மஞ்சரி - பகுதி 2 | 1942 |
| வித்துவான் தியாகராச செட்டியார் | 1942 |
பட்டங்கள் [தொகு]
உ. வே. சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு பெப்ரவரி 18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
நினைவு இல்லம் [தொகு]
- உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.[4]
- 1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ. வே. சா நூல்நிலையம்
அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தன் வரலாறு [தொகு]
உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரிதம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950 ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது.
இது தவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ் தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தாரால் (தூர்தர்சன்) ஒளிபரப்பப்பட்டது.
உசாத்துணை [தொகு]
- பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் - மயிலை சீனி.வேங்கடசாமி.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி
- ↑ ஆறாம் வகுப்பு சமச்சீர்கல்வி தமிழ்ப்பாடநூல். பக்கம் 7
- ↑ அரிகிருட்டினன் தொகுத்தது
- ↑ தமிழக அரசு நிதிநிலை அறிக்கை

