ஆயிரத்தொரு இரவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆயிரத்தொரு இரவுகள் என்பது, மையக்கிழக்கு நாடுகளிலும், தெற்காசியாவையும் சேர்ந்த எழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். இந்நூலிலுள்ள கதைகளின் மூலங்கள், பண்டைய அரேபியா, யேமன், பண்டைக்கால இந்திய இலக்கியங்கள், பாரசீக இலக்கியங்கள், பழங்கால எகிப்திய இலக்கியங்கள், மெசொப்பொத்தேமியத் தொன்மங்கள், பண்டைச் சிரியா, சின்ன ஆசியா, கலீபாக்கள் காலத்து மத்தியகால அராபிய நாட்டார் கதைகள் என்பவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை. மிகப்பழைய அரபு மொழிக் கையெழுத்துப் பிரதிகள் 14 ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றன ஆயினும், இவற்றின் காலம் கிபி 800-900 என அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்நூலின் எல்லாப் பதிப்புக்களிலும் உள்ள பொதுவான அம்சம் அரசர் ஷஹர்யாரினதும், ஷஹர்சாடேயினதும் முதன்மைக் கதையாகும். ஏனைய கதைகள் இம் முதன்மைக் கதையில் இருந்தே நகர்கின்றன. சில கதைகள் தனிக் கதைகளாகவும் வேறு சில கதைகள் பிற கதைகளில் கதைக்குள் கதையாகவும் அமைக்கப்பட்டுள்ளன. சில பதிப்புக்கள் 1001 இரவுகளை உள்ளடக்கியிருந்தாலும் வேறு சில பதிப்புக்களில் சில நூறு இரவுகள் மட்டுமே காணப்படுகின்றன.

இத் தொகுப்பு அல்லது இதிலுள்ள சில கதைகளாவது 19 ஆம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டபோது ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகின. இக்கதைகள் முதலில் பிரெஞ்சு மொழியிலும், பின்னர் ஆங்கிலத்திலும், தொடர்ந்து பிற ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன.

இந்நூலிலுள்ள கதைகளுள் பெரிதும் அறியப்பட்டவை "அலாவுதீனும் அற்புத விளக்கும்", "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்", "சிந்துபாத்" ஆகியவையாகும். இக்கதைகள் உண்மையான அரேபிய நாட்டார் கதைகளாக இருந்திருக்கக் கூடியன ஆயினும், இவை ஆயிரத்தொரு இரவுகள் கதைத்தொகுதியின் பகுதிகள் அல்ல. ஆனால் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டபோது இடைச் செருகல் செய்யப்பட்டவை.

கதைச் சுருக்கம் [தொகு]

முதன்மைக் கதை பாரசீக அரசனையும் அவன் புதிய மனைவியையும் பற்றியது. அரசன் ஷகர்யர், தனது முதல் மனைவி தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததை அறிந்து அவளுக்கு மரணதண்டனை விதிக்கிறான். பின்னர் எல்லாப் பெண்களுமே நன்றிகெட்டவர்கள் என அறிவிக்கிறான். அவன் ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்துப் பல கன்னிகளை மணம் செய்து அடுத்த நாள் காலையில் கொன்று விடுவதை வழமையாகக் கொண்டான். நாளடைவில் அரசன் மணம் செய்வதற்குப் பெண்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அரசனுக்குப் பெண்தேடும் பொறுப்பைக் கொண்டிருந்த அமைச்சனின் மகள் தான் அரசனை மணம் செய்வதாகக் கூறினாள். தயக்கத்துஅன் ஒப்புக்கொண்ட அமைச்சன் தனது மகளை அரசனுக்கு மணம் முடித்து வைத்தான். மணநாள் இரவில் ஷஹராசாடே என்னும் அப்பெண் அரசனுக்குக் கதை சொல்லத் தொடங்கினாள். ஆனால் அக்கதையை முடிக்கவில்லை. அக்கதையின் முடிவை அறிவதற்காக அரசன் அவளைக் கொல்லாமல் வைத்திருக்க வேண்டியதாயிற்று. அடுத்த நாள் இரவும் முதல் கதையை முடித்தபின் இன்னொரு கதையைத் தொடங்கி இடையில் நிறுத்திவிட்டாள். இவ்வாறு 1001 இரவுகள் சொல்லப்பட்ட கதைகளே இந் நூலில் காணும் கதைகளாகும்.

இதிலுள்ள கதைகள் பல்வேறு விதமானவை. இவை, வரலாற்றுக் கதைகள், காதல் கதைகள், துன்பியல் கதைகள், நகைச்சுவைக் கதைகள், கவிதைகள் எனப் பலவாறானவையாக உள்ளன. ஏராளமான கதைகள், கற்பனை மனிதர்கள், இடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருப்பதோடு, இடையிடையே உண்மையான மனிதர்கள், இடங்களைப் பற்றியவையாகவும் இருக்கின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிரத்தொரு_இரவுகள்&oldid=1387706" இருந்து மீள்விக்கப்பட்டது