வர்ணம் (இந்து சமயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வர்ணங்கள் (சமஸ்கிருதம்: वर्ण, varṇa,வர்ணா ), இந்திய சமயங்களின் சூழலில், சமூகத்தை வகுப்புகளாகப் படிநிலைப்படுத்தும் கருத்தியலைக் குறிக்கிறது. சமூகத்தை நான்கு வர்ணங்களாக வகைப்படுத்தும் மனுதரும சாத்திரம் போன்ற நூல்களில் சித்தாந்தம் உள்ளது.

வரலாற்றையொற்றி வழிவழியாய் வந்த கூற்றின்படி வர்ணமும், சாதியும் வெவ்வேறானவை அல்ல அவை ஒன்றொக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு சாதிகளைக் குறிக்கிறது.

இந்து மக்களை அதன் இறையியல் கூற்றுப்படி மனிதனை குறிக்கும் புருஷா எனும் சொல் (ரிக் வேதக் 10.90 கூற்றுப்படி) மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரிக்கின்றது. இவைகள் அவர்களின் தொழில் சமூகத்தைச் சார்ந்து தொழிலுக்கேற்ப வர்ணங்களாகப் பிரிக்கப்படுகின்றது.

இது பிறப்பினால் நிர்ணயிக்கப்படுவதில்லை என்றும் உதாரணத்திற்கு இராமாயணம் எழுதிய வால்மீகி பிறப்பினால் ஒரு வேடர் மற்றும் மீனவரான வேதவியாசர் மகாபாரதத்தையும் எழுதி, வேதங்களை தொகுத்தார் என்று கூறப்படுகின்றது. ஆகையால் அவரவர் அறிவுத்திறனாலும், தெய்வாதீனத்தாலும் முயல்பவர்கள் எவராயினும் மகரிஷி ஆகலாம் என்றும் கூறப்படுகின்றது.

பின்னணி[தொகு]

இந்த மரபுவழியாக ஏற்படுத்தப்பட்டக் குழுவால் அல்லது குழுவின் மேல் அமைக்கப்பெற்றவைத்தான் இராச்சியங்களும் இதர அமைப்புகளும் இவற்றின்படி மக்களை குழுக்களாகப் பயன்படுத்த , பொறுப்புணர்வுடன் அவரவர் செயல்பட வழிவகுக்கும் என நம்பப்பட்டது.

இம்மாதிரி வர்ண பிரிவுகளால் பிராமணர்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக, சமயப் பற்றுள்ளவர்களாக, மேம்பட்ட நிலையில் உள்ளவர்களாக காட்டப்பட்டது. வர்ணம் ஒரு புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அவருடைய தந்தையைக் கொண்டும் அவரின் சாதியைக் கொண்டும் நிர்ணயிக்கப்பட்டது..

பிராமணர், சத்திரியர், வைசியர் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உபநயனம் என்ற சடங்கின் மூலமும் அதை ஒரு விழாப் போன்ற நிகழ்வாக நடத்தி வர்ணங்களை சூட்டினர்.

உடல் அங்கங்களை வைத்துப் பிரித்தல்[தொகு]

வர்ணம் ரிக்வேதகாலத்திற்குப் பிறகும், யசூர் வேதம் மற்றும் பிராமண காலத்திலும் முக்கிய சமய செயலாக கருதப்பட்டது. அதற்குப்பின் இந்திய சமூகத்தில் இது ஒரு குழுக்களாக சாதி வாரியாக மாறியது. மேலும் ரிக்வேதத்தில் 10.90.12 ல் புருச சூக்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

  • பிராமணர்களின் வாய் புருஷா என்றும் அவர்களுடைய இரு கைகள் இராச்சியத்தையும் அதனை இராச்சியம் புரிபவர்களையும் உருவாக்கும் என்றும்,
  • அவர்களின் இரண்டு கால்கள் சூத்திரர்களை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பின்னாளில் வர்ணாசிரம தர்மம் என்ற கோட்பாட்டின்பாடி இனம் பிரித்து அழைக்க பிரிவுகாளாக வகுத்தனர்.

  • அந்தணர்-புலமை வாயந்த சமூகத்தவர்- அர்ச்சகர், புலவர், சட்ட ஆலோசர், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் இவர்களை உள்ளடக்கியது. சத்துவ குணம் மிக்கவர்கள்.
  • சத்திரியர்- உயர்வான குறை பண்புடையோர்-அரசர், மரியாதைக்குரியவர், வீரர்கள் மற்றும் ஆளுமையுடையோர்களை உள்ளடக்கியது.இராட்சத குணம் மிக்கவர்கள்.
  • வைசியர்- வணிகர் மற்றும் தொழில் முனைவோர் சமூகத்தார்-வணிகர், சிறு வியாபாரிகள், தொழிலதிபர் மற்றும் பண்ணையார் இவர்களை உள்ளடக்கியது. இராட்சத குணம் மற்றும் தாமச குணம் மிக்கவர்கள்.
  • சூத்திரர்- சேவகப் புரியும் சமூகத்தார்-கடின உழைப்பாளர், கூலித் தொழிலாளர்களை உள்ளடக்கியது. தாமச குணம் குணம் உடையவர்கள்.

வர்ணத்தின்படி குணங்கள்[தொகு]

வேத காலத்தில் வர்ணங்கைளை அடிப்படையாகக் கொண்டு முக்குணங்களும் வகுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன்படி சத்துவ குணம்- அமைதி, இராட்சத குணம்- மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். தாமச குணம்-சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.

மனித வாழ்கையில் நான்கு ஆசிரமங்கள்[தொகு]

வேதாந்தக்காலத்திற்குப்பின் மனிதனின் வாழ்க்கை நிலை நான்காகப் பிரிக்கப்பட்டது.

பின்பற்றுபவர்கள்[தொகு]

வர்ணம் மற்றும் சாதிகள் மிகவும் ஆழமாக இந்துக்களால் குறிப்பிடும்படியாக இந்தியா, பாலி மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பாரம்பரியமாக இந்த முறையை கடைப்பிடித்துக் கொண்டு வருகின்றனர். இதன் செயல்பாடுகளின் கூடுதலாக ஒரு வர்ணமும் சேர்க்கப்பட்டது அது ஐந்தாவது வர்ணமாக சாதியிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் , தீண்டப்படாதவர்கள் என்றவர்கள் சேர்க்கப்பட்டனர் இவர்களை பஞ்சமர்கள் எனப்பட்டனர். சப்பானில் புராகுமின் எனும் சமுகத்தவரை இன்றளவும் அரசுக்கு தெரியாமல் தீண்டத்தகாதவராக நடத்துகின்றனர்.

இதர பிரிவினர்[தொகு]

  • பிராமணர் தன்னில் தாழ்த்தப்பட்ட மூன்று வர்ணத்துப் பெண்களையும்,சத்திரியர் தன்னில் தாழ்ந்த இரண்டு வர்ணத்துப் பெண்களையும் வைசியர் தன்னில் தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணையும் திருமணம் செய்து பெற்ற குழந்தை கள் அறுவரும் "அநுலோமர்" எனப்பட்டனர்.
  • சத்திரியர் தன்னில் உயர்ந்த ஒரு வர்ணத்துப் பெண்ணையும் , வைசியர் தன்னில் உயர்ந்த இரு வர்ணத்துப் பெண்களையும்,சூத்திரர் தன்னில் உயர்ந்த மூன்று வர்ணத்துப் பெண்களையும் கூடிப் பெற்ற பிள்ளைகள் அறுவரும் "பிரதிலோமர்" எனப்பட்டனர்.
  • பிராமணர் முதலிய நான்கு வர்ணத்தவர்களும் பிறர் மனைவியுடன் தவறுதலாகச் சேர்ந்து பெற்ற பிள்ளைகள் "அந்தராளர்" என்று அழைக்கப்பட்டனர்.
  • அநுலோமர் முதலாயினர் நான்கு வர்ணத்துப் பெண்கள் முதலியவர்களோடு பெற்ற பிள்ளைகள் "விராத்தியர்" என்றழைக்கப்பட்டனர்[1].

வர்ணாசிரமம்[தொகு]

வர்ணாசிரமம் என்பதன் பொருள், வர்ணம் என்பதற்கு சமுதாய மக்கள் செய்யும் தொழிலையும், ஆசிரமம் என்பதற்கு வாழும் வாழ்வியல் முறையை விளக்குவதே ஆகும். விராட் புருசனின் முகம், கைகள், தொடைகள் மற்றும் கால்களிலிருந்து முறையே வேதியர், சத்திரியர், வணிகர் மற்றும் சூத்திரர் எனும் நால்வகை வர்ணத்தினர் தோன்றினர்.

விராட் புருசனின் இடுப்புக்குக் கீழுள்ள முன்புறப் பகுதியிலிருந்து கிரகஸ்த ஆசிரமமும் (இல்லறம்), இருதயத்திலிருந்து பிரம்மச்சரியம் (மாணவப் பருவம்) ஆசிரமமும், மார்பிலிருந்து வனப் பிரஸ்த ஆசிரமமும் (காடுறைந்து வாழும் முறை), தலையிலிருந்து சந்நியாச ஆசிரமமும் (துறவறம்) தோன்றின.

நால்வகை வர்ண தர்மங்கள்[தொகு]

வேதியர் வர்ண இயல்புகள் மற்றும் கடமைகள்[தொகு]

வேதியர் இயல்புகள்:- புலனடக்கம், மன அடக்கம், விவேகம், வைராக்கியம், தவம், பொறுமை, நேர்மை, பக்தி, இரக்கம், அறிவு, தானம் பெறுதல், சத்தியம், தர்ம நெறிப்படி வாழ்தல் இவையே வேதியர் இயல்புகள்.

வேதியர் கடமைகள் :- வேள்வி செய்தல்-செய்வித்தல், வேதம் ஓதுதல்-ஓதுவித்தல், தானம் பெறுதல். தவம் இயற்றுதல், மக்களுக்கும், நாட்டை ஆளும் அரசனுக்கும் தர்ம-கர்ம-மோட்ச விசயங்களில் அறிவுரை கூறுதல். வேதியர்கள், மீள முடியாத துன்ப காலங்கள் நீங்கும் வரை, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத பட்டு நூல் கொண்டு நெசவுத்தொழில் செய்தல் மற்றும் சத்திரியர் மற்றும் வைசியர்களின் (வணிகம் செய்தல்) தொழிலை மேற்கொள்ளலாம். பகை நாட்டவர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள, உயிருக்கு ஆபத்தான காலங்களில் வாள் ஏந்தி சத்திரியர் தர்மத்தை பின்பற்றி உயிர் வாழலாம். ஆனால் எத்தகைய துயரக் காலத்திலும் பிறரிடம் கைகட்டி பணி செய்து வாழக் கூடாது.

சத்திரியர் வர்ண இயல்புகள் மற்றும் கடமைகள்[தொகு]

சத்திரியர் இயல்புகள் :- ஒளி மிக்க முகம், உடல் வலிமை, வீரம், துயரங்களைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை,எந்நிலையிலும் பொய்யுரையாமை, கொடைத்திறன், விடாமுயற்சி, தளராத மன உறுதி, மக்களுக்குத் தலைமை தாங்கும் ஆளுமைத் திறன்.

சத்திரியர் கடமைகள் :- மக்களை துயரங்களிலிருந்து காக்க வேண்டும். சத்திரியன் தனது தர்மங்களை கடைப் பிடிக்க முடியாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, பஞ்சுநூல் கொண்டு நெசவுத்தொழில் மேற்கொள்தல், வைசிய தர்மத்தை கைக்கொண்டு வாணிபம் செய்யலாம். மேலும் வேட்டையாடி உயிர் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு போதும் பிறரிடம் கைக்கட்டி வேலை செய்து பிழைக்கக் கூடாது.

வைசியர் வர்ண இயல்புகள் மற்றும் கடமைகள்[தொகு]

வைசியர் வர்ண இயல்புகள் :-வாணிபம் செய்தல், பயிரிடுதல், வள்ளல் தன்மை, ஏமாற்றாமை, கிடைத்த பொருளைக் கொண்டு மன நிறைவு அடைதல்.

வைசிய வர்ண கடமைகள் :- வைசியர்கள் வாணிபம் நடத்த இயலாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, நெசவுத் தொழில் செய்தல் மற்றும் வேளாளர்களின் கடமைகளைப் பின் பற்றி, பாய் முடைதல் போன்ற சிறு தொழில்கள் செய்து பிழைத்துக்கொள்ளலாம்.

சூத்திரர் வர்ண இயல்புகளும் கடமைகளும்[தொகு]

சூத்திரர்கள் முதல் மூன்று வர்ணத்தவர்களுக்கும், பசு மற்றும் தேவர்களுக்கு வஞ்சனையின்றி பணி செய்வதின் மூலம் கிடைக்கும் பொருளில் மன நிறைவடைதல்.

அனைத்து வர்ணத்தினருக்கான பொதுவான இயல்புகளும் கடமைகளும்[தொகு]

மனம்-மொழி-மெய்களால் பிறர்க்குத் தீங்கு செய்யாமை, வாய்மையில் உறுதியுடன் நிற்பது, திருடாமை, விருப்பு-வெறுப்பு, பேராசை, பழி தீர்க்கும் உணர்வு, கருமித்தனம் இன்றி வாழ்தல்.

நால்வகை ஆசிரமங்களும் கடமைகளும்[தொகு]

பிரம்மச்சர்யம் (மாணவப் பருவம்) ஆசிரம கடமைகள்[தொகு]

பிரம்மச்சாரி குருவை சாதாரண மனிதராக பார்க்காமல், குருகுலத்தில் குருவிடம் குற்றம் குறைகள் கண்டு அலட்சியம் செய்யாது, இறைவனாக நினைக்க வேண்டும். ஏனெனில் குரு என்பவர் அனைத்து தெய்வத்தன்மை வாய்ந்தவர். குருவின் மனம் விரும்பும்படி பணிவிடை செய்வதே ஒரு பிரம்மச்சாரிக்கு இலக்கணம். இல்லற சுக போகங்களில் ஈடுபடாது, குருவிடம் தன் உடல்-மனம் ஒப்படைத்து, தர்ம சாத்திர நூல்களை கற்றுத் தெளிய வேண்டும். பிரம்மச்சாரி, குருகுல கல்வி முடிக்கும் போது, கல்விக் கற்றுக் கொடுத்த குருவுக்கு குருதட்சணை வழங்கியபின் “சமாவர்த்தனம்” எனும் சடங்கு செய்து கொண்டு கிரகஸ்த ஆசிரமத்திற்கு (இல்லற வாழ்விற்கு) நுழையலாம்.

இல்லற தர்ம கடமைகள்[தொகு]

இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். இவர்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் செய்வது சிறந்தது என இந்து சமய வேத வேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது. யக்ஞம் ஐந்து வகைப்படும்.

1. தேவ யக்ஞம்:- வேத மந்திரங்களினால் வேள்விகள் வளர்த்து தேவர்களுக்கு ஹவிஸ் அளித்து மகிழ்விப்பது.

2. ரிஷி யக்ஞம்:- உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இதிகாசங்கள், திருமுறைகள், திருக்குறள் போன்ற தெய்வீக நூல்களை கேட்டல், படித்தல் மற்றும் அவைகளை சிந்தித்தலே ரிஷி யக்ஞம் ஆகும்.

3. பித்ரு யக்ஞம்:- . நீத்தார் வழிபாட்டின் மூலம் நமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் இறந்த முன்னோர்களை மகிழ்விப்பது.

4. மனுஸ்ய யக்ஞம்:- வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அமுது படைத்து விருந்தோம்புவது.

5. பூத யக்ஞம்:- பசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு படைத்தல்.

இல்லற தர்மத்தில் இருந்தாலும், பகவானிடம் பக்தி செலுத்த வேண்டும். படைக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு காலாத்தில் அழியும் தன்மை உடையதோ அவ்வாறே கண்ணுக்குப் புலப்படாத சொர்க்கம் முதலிய லோகங்களும் அழியும் தன்மை உடையது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

உடல் மற்றும் வீடு போன்ற பொருட்களில் “ நான் - எனது ” (அகங்காரம் - மமகாரம்) என்ற கர்வம் இன்றி வாழ வேண்டும். பொறுப்புணர்வு பெற்ற மகன்களிடம், குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, கிரகஸ்தன் (இல்லறத்தான்), தன் மனைவியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது தன்னுடன் அழைத்துக் கொண்டு வானப்பிரஸ்த ஆசிரம (காட்டில் வாழ்தல்) தர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வனப் பிரஸ்தர்களின் (காடுறை வாழ்வு) கடமைகள்[தொகு]

வனப் பிரஸ்தனின் முதன்மையான தர்மம் தவம், இறைபக்தி மட்டுமே. வானப் பிரத்த தர்மத்தில் வாழ்பவர்கள், மரவுரி, இலைகள், புற்கள், மான் தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, காட்டில் கிடைக்கும் கிழங்குகள்-வேர்கள்-பழங்கள் உண்டு வாழவேண்டும். தாடி, மீசை முடிகளை நீக்கக் கூடாது. தினமும் மூன்று முறை குளிக்க வேண்டும். தரையில் படுக்க வேண்டும். கோடை காலத்தில் நாற்புறமும் நெருப்பு மூட்டிக் கொண்டு, கண்களால் சூரியனை நோக்கிக் கொண்டும், மழைக்காலத்தில் வெட்டவெளியில் நின்றும், குளிர் காலத்தில் கழுத்துவரை நீரில் நின்று கொண்டும் தவம் செய்ய வேண்டும். மிருகங்களை கொன்று உண்ணக் கூடாது. காட்டில் கிடைக்கும் நீவாரம் போன்ற சரு, புரோடாசம் முதலிய ’ஹவிஸ்’ (தேவர்களுக்கான உணவு) செய்து அந்தந்தக் காலத்திற்குரிய இஷ்டிகள் (யாகங்கள்) செய்ய வேண்டும். மேலும் அக்னி ஹோத்திரம், தர்சபூர்ணமாஸங்கள், சாதுர்மாஸ்ய விரதம் போன்ற விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தவம் செய்வதால் அதன் பலனாக, அந்த வனப்பிரஸ்தன் மகர் லோகத்தை அடைந்து, பின்னர் இறைவனை வந்தடைவான்.

சந்நியாச தர்ம(துறவறம்) கடமைகள்[தொகு]

கர்மங்களினால் (சாத்திரத்தில் கூறிய செயல்களால்) கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத் துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள், செயல்களைத் துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். துறவி கௌபீனம் (கோவணம்) அணிந்து கொண்டு, கையில் கமண்டலம், தண்டு வைத்து கொள்ளலாம்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய பாலபாடம் நான்காம் புத்தகம் (பதிப்பு எண்-32 (1998) (முதல் பதிப்பு ஆண்டு - 1865) - பக்:76, வெளியீடு: ஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச அறக்கட்டளை சிதம்பரம்-608 001)

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்ணம்_(இந்து_சமயம்)&oldid=3880238" இலிருந்து மீள்விக்கப்பட்டது