பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாம்பன் சுவாமிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாம்பன் ஸ்ரீமத் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்
ஜீவ சமாதியில் வைக்கப்பட்டுள்ள பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் முழு அளவு படிமம்
பிறப்பு1848-50
இராமேசுவரம்
தமிழ் நாடு
இந்தியா
இறப்புமே 30, 1929 (அகவை 80–81)
இயற்பெயர்அப்பாவு
குருமுருகனின் பக்தர்
குறிப்பிடத்தக்க சீடர்(கள்)ஸ்ரீமத் சுப்பிரமணியதாசர்

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (Pamban Gurudasa Swamigal, அண். 1848-50 - மே 30, 1929) தமிழ்நாட்டில் இராமேசுவரம் என்ற ஊரில் பிறந்து வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஒரு தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தம் பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பழந்தமிழ்க் குடியான அகமுடையார் இனத்தில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாகத் தோராயமாக 1848-50 ஆம் ஆண்டு இராமேசுவரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். 1866-ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.

தமது 12, 13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய "கங்கையைச் சடையில் பதித்து" எனத் தொடங்குவது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் ’உபய அருணகிரிநாதர்’ என்ற பெயரும் பெற்றார்.[2]

இவருக்கு அகவை 25-ஐ எட்டிய பொழுது மதுரை சின்ன கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878-ஆம் ஆண்டு வைகாசித் திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர்.

1894-ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப்பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப்பயணங்கள் மேற்கொண்டார். அப்போது அவருடன் பழகிய திரு.வி.க இவ்வாறு கூறுவார்:

"குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துகளைத் தமிழில் விளக்குவார். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவார்" திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்பு பக்கம் 127.

1923-ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை, தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளின் வயது 73. ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறிக் கைவிடப்பட்டார். அங்கு தொடர்ந்து சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததால் அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. சென்னை மருத்துவமனையில் "மன்ரோ வார்டில்" பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படம் மாட்டப்பட்டு நோயாளிகளால் வழிபடப்படுகிறார்.[2]

1926-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டலசபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார்.[2]

மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் சமாதியடைந்தார்கள். பின்னாளில் சுவாமிகள் சீடரால் திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.

சுவாமிகள் இயற்றிய பாடல்கள்[தொகு]

  • சண்முக கவசம்
  • பஞ்சாமிருத வண்ணம்
  • குமரகுருதாச சுவாமிகள் பாடல் - 1266
  • ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) - 1192
  • திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) - 1135
  • திருப்பா (திட்ப உரை) - 1101
  • காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) - 608
  • சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) - 258
  • சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் - புலால் மறுப்பு) - 235
  • பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) - 230
  • செக்கர் வேள் செம்மாப்பு - 198
  • செக்கர் வேள் இறுமாப்பு - 64
  • தகராலய ரகசியம் (சதானந்த சாகர உரை)- 117
  • குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி - 100
  • சேந்தன் செந்தமிழ் (வடமொழி கலவாத் தனித் தமிழ்)- 50
  • குமாரஸ்தவம் 44
  • தென்னாட்டுத் திருத்தலதரிசனம் (கட்டளைக் கலித்துறை) 35
  • பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) 30
  • ஆனந்தக்களிப்பு 30
  • சமாதான சங்கீதம் 1
  • சண்முக சகச்சிர நாமார்ச்சனை 2

ஆகப் பாடல்கள் 6666

மேற்கோள்கள்[தொகு]

  1. "சுவாமிகள் வரலாறு". Archived from the original on 2010-10-28. பார்க்கப்பட்ட நாள் 2010-12-16.
  2. 2.0 2.1 2.2 அமுதசுரபி தீபாவளி மலர் 2004; ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்; பக்கம் 150,151,152

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]