ஜானி (1980 திரைப்படம்)
| ஜானி | |
|---|---|
| இயக்கம் | மகேந்திரன் |
| தயாரிப்பு | வி. கோபிநாத் கே. ஆர். ஜி. ஆர்ட் பிலிம்ஸ் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | ரஜினிகாந்த் ஸ்ரீதேவி |
| ஒளிப்பதிவு | அசோக் குமார் |
| வெளியீடு | ஆகத்து 15, 1980 |
| நீளம் | 3986 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஜானி 1980-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் இயக்கத்தில் [1][2][3] வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கதைச்சுருக்கம்
[தொகு]இந்தப் படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். ஒன்று ஜானி என்ற திருடன் வேடம், அடுத்து வித்யாசாகர் என்னும் நாவிதன் வேடம் ஆகும். ஜானி ஒரு நூதனத் திருடன். தடயங்கள் இல்லாமல் திருடுவதில் வல்லவன். பிரபலப் பாடகி அர்ச்சனாவின் (ஸ்ரீதேவி) இரசிகனாகவும் இருக்கிறார். எதிர்பாராமல் இருவரும் சந்தித்து பழகுகின்றனர். ஜானியின் அன்பால் ஈர்க்கப்படும் அர்ச்சனா அவரை விரும்புகிறார். அதை அவரிடம் கூறி திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்கிறார். இதை எதிர்பார்க்காத ஜானி தன் மறுபக்கத்தைக் கூற முடியாமல், அர்ச்சனாவின் காதலை ஏற்கும் தகுதி தனக்கு இல்லை எனக் கூறி வெளியேறுகிறார். இதனால் மனம் வெதும்பிய அர்ச்சனா பாடுவதை நிறுத்திவிடுகிறார்.
ஜானியைப் போன்ற தோற்றம் கொண்ட வித்யாசாகர் தன் வேலைக்காரியான பாமாவை விரும்பி அவரை வீட்டுக்காரியாக்க முடிவெடுக்கிறார். இந்நிலையில் பாமா வித்தியாசாகரை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பணக்காரனுடன் ஓட திட்டமிடுகிறார். இதை கண்டுபிடிக்கும் வித்தியாசாகர் பாமாவைக் கொன்றுவிடுகிறார். இந்தக் கொலைப் பழி ஜானிமீது விழுகிறது. இதற்கிடையில் ஜானியால் பாதிக்கப்பட்டோர் வித்தியாசாகரை ஜானி என நினைத்து அவனுக்கு தொல்லை தருகின்றனர். காயமுற்ற வித்தியாசாகர் காவலரிடமிருந்து தப்பி அர்ச்சனா வீட்டுக்கு வந்து ஜானிபோல நடிக்கிறார். அர்ச்சனாவின் உண்மை அன்பை உணர்ந்த வித்தியாசாகர் தான் ஜானி அல்ல என்ற உண்மையைக் கூறுகின்றார். மேலும் ஜானியை மீண்டும் வரவழைக்க அர்ச்சனா பாடும் கடைசி நிகழ்ச்சி என விளம்பரப்படுத்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் ஜானி நிச்சயம் வருவார் என வித்யாசாகர் ஆலோசனை கூறுகிறார். அதனை ஏற்ற அர்ச்சனா அவ்வாறே செய்ய திட்டமிடுகிறார். பாடல் நிகழ்ச்சியின்போது மோசமான வானிலையால் கடும் மழை பொழிவதால் அர்ச்சனாவின் பாடலைக் கேட்க யாரும் வராத நிலை ஏற்படுகிறது. இருந்தும் ஜானி வருவார் என்ற நம்பிக்கையில் அர்ச்சனா பாடலைப் பாடுகிறார். வித்யாசாகர் கூறியதைப்போலவே பாடலைக் கேட்க மேடை அருகே ஜானி தோற்றத்தில் வித்தியாசாகர் வருகிறார். அவரைப் பிடிக்க காவலர்கள் விரட்டி வருகின்றனர். காவலர்களிடம் தான்தான் பாமாவைக் கொன்றதாகவும், பலரை ஏமாற்றியதாகவும், ஆனால் தன்னைப் போன்ற தோற்றமுடைய ஜானியை இதில் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்கிறார். பின்னர் அர்ச்சனாவிடம் வந்து ஜானி செய்த தவறுகளைத் தானே ஏற்றுக் கொள்வதாகவும் இருவரும் நிம்மதியாக வாழுங்கள் என கூறுகிறார். ஜானி நிச்சயம் வருவார் எனவும் கூறுகிறார். அவ்வாறே ஜானியும் அங்கு வந்து சேர்கிறார்.
நடிகர், நடிகையர்
[தொகு]- இரசினிகாந்து - ஜானி/வித்யாசாகர்[4]
- ஸ்ரீதேவி - அர்ச்சனா[4]
- உன்னி மேரி - பாமா[5]
- கே. பாலாஜி - காவலர்[4]
- சுருளி ராஜன் - ஜானியின் நண்பர்[4]
- சாமிக்கண்ணு - நாயுடு[5]
- எம். பிரபாகர் ரெட்டி - ஜானியின் தந்தை [5]
- குமரிமுத்து - முடி திருத்தும் கடை உதவியாளர்
- வி. கோபாலகிருட்டிணன் - காவலர்[4]
- சுபாசினி [4]
- காஞ்சனா - ஜானியின் தாய்[5]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
|---|---|---|---|---|
| 1. | "என் வானிலே" | ஜென்சி அந்தோனி | 4:48 | |
| 2. | "காற்றில் எந்தன் கீதம்" | எஸ். ஜானகி | 4:29 | |
| 3. | "ஆசைய காத்துல" | எஸ். பி. சைலஜா | 4:40 | |
| 4. | "சென்யுரீடா, ஐ லவ் யூ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:21 | |
| 5. | "ஒரு இனிய மனது" | 4:21 | ||
| 6. | "இசை மட்டும்" (இசைக்கருவிகள்) | — | 4:23 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010". Archived from the original on 2010-08-09. Retrieved 2016-06-17.
- ↑ மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Shivakumar, Vivek (2018-12-11). "A Superstar Career Through Titles". www.filmcompanion.in (in ஆங்கிலம்). Retrieved 2025-10-07.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Dhananjayan 2011, ப. 40.