சதாசிவ்காட்

ஆள்கூறுகள்: 14°50′25″N 74°10′55″E / 14.8403°N 74.1819°E / 14.8403; 74.1819
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதாசிவ்காட் (Sadashivgad) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் வடகன்னட மாவட்டத்தில் உள்ள கார்வாரில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். முக்கியத்துவமும் அழகானதுமான இது இப்போது காளி ஆற்றுப் பாலத்தால் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. இந்தப் பாலம் ஆறு மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

புவியியல் & கட்டமைப்பு[தொகு]

காளி ஆற்றின் வடகரையில் கடலில் கலக்கும் இடத்தில் இந்த பழைய கோட்டை கட்டப்பட்டது. இது சுமார் 8 மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்தது. மேலே சுமார் 2 மீட்டர் அகலத்தில் இருந்தன. துப்பாக்கிகளுக்கான கோபுரங்களும் திறப்புகளும் இருந்தன. கோட்டை மிக உயர்ந்த இடத்தில் இருந்தது. மேற்கில், குன்றின் அடிவாரத்தில் கடலுக்கு அருகில் ஒரு வாயிலும் இருந்தது. இது பானி கில்லா என்று அழைக்கப்பட்டது. கிழக்குச் சரிவில் மற்றொரு வாயில் இருந்தது. கோட்டையில் ஒற்றை வளைவு நுழைவாயிலும் இருந்தது.

சதாசிவ்காட்டின் கிழக்கே ஒரு குன்றின் மேல் சுமார் 60 மீட்டருக்கு 20 மீட்டர் என்ற அளவில் சாம்வர்காட் என்ற மிகச் சிறிய கோட்டை இருந்தது. தற்போது இதன் இடிபாடுகளே எஞ்சியுள்ளன.

பெயர் காரணம்[தொகு]

1715 ஆம் ஆண்டில் பசவலிங்கராஜ் என்பவர் தனது தந்தை சதாசிவலிங்கராஜின் நினைவாக ஒரு கோட்டையை எழுப்பி இந்த கோட்டைக்கு சதாசிவ்காட் என்று பெயரிட்டார். சோண்டாவின் தலைவர்களான இவர்கள், காத்ரா, கார்வார், அங்கோலா மற்றும் கனராவின் வேறு சில பகுதிகளை இணைத்து 'ராஜா' என்ற பட்டத்துடன் ஆட்சி செய்து வந்தனர். பழைய கார்வார் கோட்டை இடிக்கப்பட்டு அதில் கிடைத்தப் பொருட்கள் சதாசிவ்காட் கட்ட பயன்படுத்தப்பட்டது.

ஆரம்பகால வரலாறு[தொகு]

சித்ரகுல் (சித்தகுலா) மற்றும் சிந்த்பூர் என்றும் அழைக்கப்பட்டதும் போர்த்துகீசியர்களால் சிந்தகோரா என்றும் அழைக்கப்பட்ட மிகவும் பழமையான துறைமுகம் இருந்தது. இந்தப் பகுதியில் சதாசிவ்காட் கட்டப்பட்டபோது, அந்த கிராமமும் அந்தப் பெயரிலேயே அறியப்பட்டது.

சிந்தகோராவில் ஒரு கோட்டை இருந்தது. இது 1510 இல் போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்டது. அவர்கள் அங்கு கண்டெடுக்கப்பட்ட முஸ்லிம் தர்காவின் (சூஃபி துறவி சகராமுதீனின் கல்லறை) காரணமாக இதை பிர் கோட்டை என்று அழைத்தனர் - & போர்த்துகீசிய மொழியில் ஃபோர்டே டி பிரோ அல்லது பிட்டோ என்றும் அறியப்பட்டது.

காளி ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள சிற்றோடை ஆரம்ப காலத்தில் வர்த்தக மையமாக இருந்தது. சதாசிவ்காட் கட்டப்பட்ட பிறகு, போர்த்துகீசியர்கள் அதன் அடைக்கலமான துறைமுகத்தின் நன்மைகளை உணர்ந்த பிறகு இது அதிக முக்கியத்துவம் பெற்றது.

ஆரம்பகால வர்த்தகம்[தொகு]

1638 ஆம் ஆண்டில், ஒரு போட்டி ஆங்கில வர்த்தக அமைப்பான கோர்டீன் அசோசியேஷன், கார்வாரில் ஒரு தொழிற்சாலையை நிறுவியது. மஸ்லின் துணி இங்கு முக்கிய வணிகப் பொருளாக இருந்தது. ஆனால் கார்வார் மிளகு, ஏலக்காய், கரடுமுரடான நீல பருத்தி துணிக்கு ஆதாரமாக இருந்தது. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில், கோவாவிலிருந்து தென்கிழக்கே 50 மைல் தொலைவில் அமைந்துள்ள கார்வார், பாதுகாப்பான துறைமுகத்திற்குப் பெயர் பெற்றது.

மராட்டியத் தாக்கம்[தொகு]

தெற்கில் பெத்தனூரிலிருந்து அணிவகுத்துச் சென்று, கோகர்ணத்திலுள்ள கோவிலில் வழிபட்ட சிவாஜி அங்கோலாவைக் கைப்பற்றினார். அதிலிருந்து கார்வார் (அப்போது காட்வாட் என்று அழைக்கப்பட்டது) வந்தார். [1] கிழக்கிந்திய நிறுவனமும், பிஜாப்பூரின் சர்தாரான ஷேர்ஷாவும் இந்த திடீர் முற்றுகையால் மிகவும் கவலையடைந்தனர். அவர்கள் பெரும் தொகையை சிவாஜிக்குக் கொடுத்து, தங்களைக் காப்பாற்றிக்கொண்டார்கள். தனது அதிகாரத்தை அங்கீகரிப்பதில் திருப்தியடைந்த சிவாஜி, 1665 பிப்ரவரி 21 அன்று காளி ஆற்றைக் கடந்து சதாசிவ்காட்டைக் கைப்பற்றினார்;

போர்த்துகீசியம் & கிழக்கிந்திய நிறுவன விதி[தொகு]

சோண்டா அரசனின் விரோதத்தின் காரணமாக, 1720 இல் தொழிற்சாலை மூடப்பட்டது. மேலும், 1750 வரை மீண்டும் திறக்கப்படவில்லை. போர்ச்சுகீசியர்களுக்கும் சோண்டா அரசனுக்கும் இடையில் போர் மூண்டது. சோண்டாவின் மன்னன் ஆங்கிலேயர்களுக்கு கார்வாரில் ஒரு தொழிற்சாலையை நிறுவ உதவினார். இது போர்த்துகீசியர்களுக்கு பிடிக்கவில்லை. மே 1752 இல் போர்த்துகீசியர்கள் ஒரு கடற்படையை அனுப்பி, சதாசிவ்காட்டிலிருந்த சோண்டா கோட்டையைக் கைப்பற்றினர்.

இது 1793 இல் திப்பு சுல்தான் வசம் சென்றது. இறுதியாக 1799 இல் திப்பு கொல்லப்பட்ட சீரங்கப்பட்டிண முற்றுகைக்குப் பிறகு கிழக்கிந்திய நிறுவனத்திடம் சென்றது.

தற்போதைய நிலை[தொகு]

1783 இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரி மேத்யூஸால் இடிக்கப்பட்ட கோட்டையின் பெரும்பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இப்போது அதற்கும் அதன் துணைக் கோட்டையான சாம்வர்காட்க்கும் இடையே ஒரு சாலை மட்டுமே செல்கிறது.

சதாசிவகாட் மலையின் நடுவே பல நூற்றாண்டுகள் பழமையான சாந்ததுர்கை கோயில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் இருந்து அரபிக்கடலில் சூரியன் மறையும் காட்சி ஒரு அனுபவமாக இருக்கும். 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தர்காவும் ஏராளமான இஸ்லாமிய யாத்ரீகர்களை ஈர்க்கிறது.

சதாசிவ்காட்டை அடையும் முறைகள்[தொகு]

தொடர்வண்டி மூலம்[தொகு]

கார்வார் மற்றும் அஸ்னோதி ஆகியவை அருகிலுள்ள தொடர்வண்டி நிலையங்களாகும். கார்வாரிலிருந்து போக்குவரத்து வசதிகள் சிறப்பாக உள்ளன.

சாலை வழியாக[தொகு]

கர்நாடகா மாநில சாலை போக்குவரத்து கழகப் பேருந்துகள் மற்றும் கோவா அரசுக்கு சொந்தமான கடம்பா போக்குவரத்து கழக பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலை 17 இல் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. அரசுப் போக்குவரத்தைத் தவிர, பல தனியார் நிறுவனங்களும் தங்கள் பேருந்து சேவைகளை அதே வழித்தடத்தில் இயக்குகிறார்கள்.


சான்றுகள்[தொகு]

  1. Raghuram, M (23 April 2012). "The Great Maratha Warrior Shivaji's Karwar link". DNA. பார்க்கப்பட்ட நாள் 30 March 2013.
  2. "Project South Asia". Archived from the original on 2008-07-20. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாசிவ்காட்&oldid=3750854" இலிருந்து மீள்விக்கப்பட்டது