இரசீத் ஜகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரசீத் ஜகான்
பிறப்பு(1905-08-25)25 ஆகத்து 1905
அலிகர், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், இந்தியா
இறப்புசூலை 29, 1952(1952-07-29) (அகவை 46)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
அடக்கத்தலம்மாஸ்கோ, உருசியா
தொழில்எழுத்தாளர், பெண்கள் நல மருத்துவர்
மொழிஉருது
கல்வி நிலையம்இசபெல்லா தொபர்ன் கல்லூரி, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி
வகைசிறுகதைகள், நாடகங்கள்
இலக்கிய இயக்கம்முற்போக்கு எழுத்தாளர் இயக்கம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அங்காரே
துணைவர்மக்முதுசு சாபர்
குடும்பத்தினர்சேக் அப்துல்லா (தந்தை)
பேகம் குர்சித் மிர்சா (சகோதரி)
ஹமீதா சைதுசாபர் (உறவினர்)
சல்மான் ஐதர்]] (உறவினர்)

இரசீத் ஜகான் ( Rashid Jahan ) (25 ஆகஸ்ட் 1905 – 29 ஜூலை 1952) ஓர் இந்திய எழுத்தாளரும் மற்றும் மருத்துவரும் ஆவார். இவர் உருது இலக்கியம் மற்றும் தீவிரமான சமூக வர்ணனைகளுக்கு பெயர் பெற்றவர். இவர் சிறுகதைகள் மற்றும் நாடகங்களை எழுதியுள்ளார். உருது மொழியில் 1932 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட அங்காரே (1932) என்ற ஒன்பது சிறுகதைத் தொகுப்புக்கு பங்களித்தார். இது சஜ்ஜாத் ஜாகீர், அகமத் அலி மற்றும் மகமுதுஸ் ஜாபர் ஆகியோருடன் இணைந்து எழுதப்பட்ட வழக்கத்திற்கு மாறான சிறுகதைகளின் தொகுப்பாகும்.[1] [2]

தனது வாழ்நாளில், இரசீத் ஜகான் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கம் மற்றும் இந்திய மக்கள் நாடக சங்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்தார். [3] [4] இவர், முதல் பெண்ணியவாதிகளில் ஒருவராகவும், முன்னணி இந்தியப் பொதுவுடைமைவாதியாகவும் இருந்தார்ர்.[3] [5] [6]

சுயசரிதை[தொகு]

இரசீத் ஜகான், 1905 ஆகஸ்ட் 25 அன்று அலிகரில் பிறந்தார். கல்வியாளர் சேக் அப்துல்லாவுக்கும் அவரது மனைவி பேகம் வாகித் ஜகானுக்கும் பிறந்த ஏழு குழந்தைகளில் மூத்தவர்.[7] இவரது தந்தை இந்தியாவில் பெண்கள் ஆங்கில அடிப்படையிலான கல்வியின் முன்னணி முன்னோடியாக இருந்தார். மேலும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் அலிகர் மகளிர் கல்லூரியை நிறுவினார்.[8] சேக் அப்துல்லா, காதுன் என்ற உருது இலக்கிய இதழையும் நடத்தி வந்தார். இது பெண்களின் விடுதலை மற்றும் கல்வியை ஊக்குவித்தது. மேலும் ஜகானின் தாயாரும் அதில் அடிக்கடி பங்களிப்பாளராக இருந்தார். [9]

கல்வி[தொகு]

இரசீத் ஜகான், தனது ஆரம்பக் கல்வியை அலிகரில் உள்ள முஸ்லிம் பெண்கள் பள்ளி மற்றும் விடுதியில் தங்கி (பின்னர் அலிகர் மகளிர் கல்லூரியாக மாறியது) தனது 16 வயது வரை படித்தார்.[4] 1921 ஆம் ஆண்டில், இவர் அலிகரை விட்டு இலக்னோவில் உள்ள இசபெல்லா தோபர்ன் கல்லூரியில் சேர்ந்து, அறிவியலில் பட்டம் பெற்றார் [10] ஜகான் தனது முதல் சிறுகதைகளை இசபெல்லா தோபர்ன் கல்லூரியின் வெளியீடான சந்த் பாக் குரோனிக்கிளுக்கு எழுதினார்.[1] மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1924 இல், இவர் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் படிக்க தில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார்.[1] மருத்துவ மாணவராக இருந்த ஜகான், ஏழைப் பெண்களுக்கு எழுத்தறிவு வகுப்புகள் மற்றும் இலவச மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்தார். 1929 இல் இளநிலை மருத்துவம் பட்டம் பெற்ற பிறகு, ஜகான் ஐக்கிய மாகாணங்களின் மாகாண மருத்துவ சேவையில் சேர்ந்தார். மேலும் பகராயிச் முதல் புலந்தசாகர் மற்றும் மீரட் வரையிலான வட இந்தியா முழுவதும் உள்ள சிறிய நகரங்களில் பணியமர்த்தப்பட்டார்.[1]

செயல்பாடுகள்[தொகு]

1931 இல், ஜகான் ஐக்கிய மாகாணங்களின் தலைநகரான இலக்னோவில் உள்ள லேடி டஃபெரின் மருத்துவமனையில் (இப்போது டஃபெரின் மருத்துவமனை) பணியில் நியமிக்கப்பட்டார்.[1] இலக்னோவில், இவர் எழுத்தாளர்களான சஜ்ஜாத் ஜாகீர், அகமது அலி மற்றும் மக்முதுசு சாபர் ஆகியோரை சந்தித்தார். அடுத்த ஆண்டு, நால்வர் குழு அங்காரே என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டது. இது இசுலாமிய மரபுவழி மற்றும் பிரித்தானிய ராச்சியத்தின் பாசாங்குத்தனங்களுக்கு எதிரான சிறுகதைகளின் தொகுப்பாகும். 1933 ஆம் ஆண்டில், ஜகான் இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தார். பின்னர், ஐக்கிய மாகாணங்களில் முன்னணி கட்சி நபராகி "தோழர் இசித் ஜகான்" என்ற புனைப்பெயரையும் ஏற்றுக்கொண்டார்.

அக்டோபர் 1934 இல், ஜகான் அங்காரேவை ஒருங்கிணைத்தவரும் மற்றும் குறிப்பிடத்தக்க பொதுவுடைமைவாதியுமான மக்முதுசு சாபரை மணந்தார். [5] பின்னர், ஐக்கிய மாகாணங்களின் மருத்துவ சேவையிலிருந்து விலகி அமிர்தசரசிலிருந்த தனது கணவருடன் சேர்ந்தார்.[10] 1935 மற்றும் 1936 இல், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தை நிறுவுவதில் ஜகான் தீவிரமாக ஈடுபட்டார். ஏப்ரல் 1936 இல் இலக்னோவில் முதல் முற்போக்கு எழுத்தாளர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்தார். 1937 ஆம் ஆண்டில், ஜகான் மீண்டும் ஒரு முறை தேராதூனுக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் மகளிர் மருத்துவ நிபுணராக பணிபுரியும் போது மற்றும் பொதுவுடமை செய்தித்தாள் மற்றும் இலக்கிய இதழான சிங்காரியின் ஆசிரியராக பணியாற்றும் போது இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தீவிர உறுப்பினராகத் தொடர்ந்தார்.[5] 1937 இன் ஆரம்பத்தில், அவுரத் என்ற தலைப்பில் நாடகங்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட்டார். அதே ஆண்டு கோடையில்,கேடயச் சுரப்பி பிரச்சனைக்கு மருத்துவ உதவி பெற வியன்னாவிற்கு சென்றார்.[1]

ஜகானின் அமைப்பு நடவடிக்கைகள் மார்ச் 1949 வரை தொடர்ந்தது. ஐக்கிய மாகாணங்களின் இரயில்வே அமைப்பை முடக்கிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதற்காக இவர் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.[10] ஜகான் தனது சக கைதிகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட பிறகு மே 1949 இல் விடுவிக்கப்பட்டார். ஆனால் புற்றுநோய் காரணமாக 1950 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜகானின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் இவர் தனது வாழ்நாள் செயல்பாட்டுத்திட்டங்களைத் தொடர முடியாமல் செய்தது. [1]

இறப்பு[தொகு]

2 ஜூலை 1952 அன்று, கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக இவரும் இவரது கணவரும் இந்தியாவை விட்டு சோவியத் ஒன்றியம் சென்றனர். அங்கு இவர் கிரெம்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் அனுமதிக்கப்பட்ட 29 ஜூலை 1952 அன்றே இறந்தார். இரசீத் ஜகான் மாஸ்கோவிலுள்ள ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அங்கு இவரது கல்லறையில் "பொதுவுடைமை மருத்துவர் மற்றும் எழுத்தாளர்" என்று எழுதப்பட்டுள்ளது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Coppola, Carlo; Zubair, Sajida (1987). "Rashid Jahan: Urdu Literature's First 'Angry Young Woman'". Journal of South Asian Literature 22 (1): 166–183. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-5637. https://www.jstor.org/stable/40873941. 
  2. "Rashid Jahan: Rebel With a Cause". 11 July 2014. https://www.thehindu.com/features/metroplus/rebel-with-a-cause/article6201124.ece. 
  3. 3.0 3.1 Asaduddin, M. (2015). "Review of A Rebel and Her Cause: The Life and Work of Rashid Jahan". Indian Literature 59 (1 (285)): 179–182. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5804. https://www.jstor.org/stable/44479275. 
  4. 4.0 4.1 4.2 Abbasi, Aisha (7 September 2015). "A REBEL AND HER CAUSE: THE LIFE AND WORK OF RASHID JAHAN by rakhshanda Jalil India: Women Unlimited, 2012, 248 pp.: Book Reviews and Commentary" (in en). International Journal of Applied Psychoanalytic Studies 12 (4): 367–371. doi:10.1002/aps.1462. http://doi.wiley.com/10.1002/aps.1462. 
  5. 5.0 5.1 5.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :3 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. Khanna, Neetu (2018). "Three Experiments in Subaltern Intimacy". Postcolonial Text 13 (4). https://www.postcolonial.org/index.php/pct/article/view/2252. 
  7. SAIDUZZAFAR, HAMIDA (1987). "JSAL interviews DR. HAMIDA SAIDUZZAFAR: A conversation with Rashid Jahan's sister-in-law, Aligarh, 1973". Journal of South Asian Literature 22 (1): 158–165. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-5637. https://www.jstor.org/stable/40873940. 
  8. Mahurkar, Vaishnavi (2017-03-29). "Rashid Jahan: The Bad Girl Of Urdu Literature | #IndianWomenInHistory" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
  9. Singh, Madhulika (2014). "Radical Writings on Women: The Work of Dr. Rashid Jahan". Proceedings of the Indian History Congress 75: 729–735. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44158454. 
  10. 10.0 10.1 10.2 POULOS, STEVEN M. (1987). "Rashid Jahan of 'Angare': Her Life and Work". Indian Literature 30 (4 (120)): 108–118. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5804. https://www.jstor.org/stable/23337071. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசீத்_ஜகான்&oldid=3887054" இலிருந்து மீள்விக்கப்பட்டது