எஸ். ஜே. ஜனனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுப்பிரமணியன் ஜெயா ஜனனி (Subramanian Jaya Jananiy) மேலும் கடலூர் ஜனனி மற்றும் எஸ்.ஜே. ஜனனி என்றும் அறியப்படும் இவர் ஒரு இந்திய இசையமைப்பாளரும், பாடகரும்,பாடலாசிரியரும், பல வாத்திய இசைக் கலைஞரும் ஆவர். இவர் தமிழ்நாட்டின் சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறார்.[1] 2001 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் விதிவிலக்கான சாதனைக்கான தேசிய குழந்தை விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2003ஆம் ஆண்டில் தமிழக அரசால் கலை இளமணி விருதும் ஜனனிக்கு வழங்கப்பட்டது.[2] ஜனனி கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை மற்றும் மேல்நாட்டுச் செந்நெறி இசை ஆகியவற்றில் நன்கு பயிற்சி பெற்றவராவார்.[3][4] இவர் விசைப்பலகை , பியானோ மற்றும் அரங்கப் பதிவுக்காக வயலின், வீணை மற்றும் கிட்டார் ஆகியவற்றையும் வாசிப்பார்.[5] ஜனனி அகில இந்திய வானொலியின் பி உயர் தர கலைஞர் ஆவார்.[6]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஜனனி தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் சாந்தி மற்றும் வி.சுப்பிரமணியன் ஆகியோருக்குப் பிறந்தார். கடலூரில் உள்ள புனித மேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை தனது கல்வியை முடித்தார் . அங்கு இவருக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பாடகர் விருது வழங்கப்பட்டது. புனித மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்தபோது, இசை பிரிவில் தேசிய அளவில் போகோ தொலைக்காட்சி நடத்திய போகோ அமேசிங் கிட் விருதுக்கு ஜனனி பரிந்துரைக்கப்பட்டார். 2006ஆம் ஆண்டில், இவரது குடும்பத்தினர் சென்னைக்கு குடிபெயர்ந்தனர். அங்கு இவர் ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் முடித்தார். சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தனது மேல்நிலைக் கல்வியை முடித்தார் .[7]

2009ஆம் ஆண்டில், ஜனனி சென்னை ஸ்டெல்லா மேரிக் கல்லூரியில் நுழைந்தார் . அங்கு இவர் 2012இல் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். சென்னை ராணி மேரி கல்லூரியில் தனது இசையில் முதுகலைப் பட்டமும், பெற்றார். 2017ஆம் ஆண்டு நிலவரப்படி, ஜனனி குயின் மேரி கல்லூரியில் இசையில் முதுதத்துவமாணி செய்து கொண்டிருந்தார்.[8]

இசை நடை மற்றும் செல்வாக்கு[தொகு]

ஜனனி ஒரு முக்கிய கருநாடக பாடகர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாவின் சீடராக இருந்து வருகிறார்.[9] நெய்வேலி சந்தானகோபாலன், இஞ்சிக்குடி கணேசன், ருக்மிணி ரமணி, சிதம்பரம் சண்முகம், கீதா சீனிவாசன் மற்றும் குரு லட்சுமி ஆகியோரின் கீழும் பயிற்சி பெற்றுள்ளார்.[1] அகஸ்டின் பால் மற்றும் வி. கிரிதரன் ஆகியோரின் கீழ், ஜனனி இசை விசைப்பலகையில் 8 ஆம் வகுப்பையும், லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியிலிருந்து குரலில் 8 ஆம் வகுப்பையும் முடித்துள்ளார். லண்டனின் டிரினிட்டி கல்லூரியில் மேல்நாட்டுச் செந்நெறி இசையையும், பண்டிட் குல்தீப் சாகரின் கீழ் இந்துஸ்தானி இசையைக் கற்றுக் கொண்டார். மேலும் அலகாபாத்தின் பிரயாக் சங்கீத் சமிதியிலிருந்து பட்டயச் சான்று பெற்றுள்ளார்.[7]

தொழில்[தொகு]

ஜனனி தனது 5ஆவது வயதில் கடலூரில் தனது முதல் மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக, ஜனனி கர்நாடக இசை, இணைவு இசை, பஜனை, பக்தி மற்றும் மெல்லிசை ஆகியவற்றின் 1000 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் நிகழ்த்தியுள்ளார். மேலும் 100க்கும் மேற்பட்ட கர்நாடக இசை விசைப்பலகை இசை நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார்.[10] இவரது 8 ஆவது வயதில், தமிழ் மொழி வார இதழான ஆனந்த விகடன் "சாதனை நாயகி" என்று இவரை அங்கீகரித்தது. தமிழ் நாளிதழான தினமணி, இவரை "ஏழு வயது இசைக்குயில்" என்று பாராட்டியது. பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, தமிழ் வார இதழான குமுதத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் இவரை "நீ என் மகள்" என்ற தலைப்பில் குறிப்பிட்டார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜே._ஜனனி&oldid=3743971" இலிருந்து மீள்விக்கப்பட்டது