கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, சன்னல் ஓவியம், புனித மத்தேயு (லூத்தரன்) ஆலயம், சால்லெஸ்டன், தென் கரொலைனா

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்பது இயேசு கிறிஸ்து, மீண்டும் விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்குத் திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படும் நம்பிக்கையைக் குறிக்கும். இது மனிதர் எதிர்பாரா காலத்தில் நடக்கும் என நம்பப்படுவதால் இதனை இரகசிய வருகை என்றும் அழைப்பர். இந்த நிகழ்வினைப் பற்றிய முன் அறிவிப்பு நற்செய்தி நூல்களில் உள்ளது. உலக முடிவினைப் பற்றிய எல்லா கிறித்தவப் பிரிவுகளின் நம்பிக்கையிலும் இந்த நிகழ்வு இடம் பெறுகின்றது. ஆனாலும் இது எவ்வாறு, எப்போது நிகழும் என்பதைப் பற்றிய ஒத்த கருத்து கிறித்தவ உட்பிரிவுகளினரிடையே இல்லை.

நைசின் விசுவாச அறிக்கையில் இது (இயேசு) ... சீவியரையும் மரிதவரையும் நடுத்தீர்க்க வருவார்' எனக் குறிக்கப்பட்டிருக்கின்றது. இது கிறித்தவ விசுவாசங்களில் அடிப்படையான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இரண்டாம் வருகையின் அறிகுறிகள்[தொகு]

திருத்தூதர் பணிகளின்படி:

இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர்.

—தி.ப 1:9-11

மேலும் பெரும்பான்மையான கிறித்தவப் பிரிவுகள் இந்த நிகழ்வைப்பற்றி நம்புவது:

  1. உலகம் முழுமைக்கும் ஒரே பொழுதில் இது நிகழும்.[1] "ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வது போல மானிட மகனின் வருகையும் இருக்கும்." —மத்தேயு 24:27
  2. எல்லோரும் காணும் படி இருக்கும்.[2] "பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர்." —மத்தேயு 24:30
  3. எல்லோரும் கேட்கும் படி இருக்கும்.[3] "அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்." —மத்தேயு 24:31
  4. இறந்த நீதிமான்கள் உயிர்த்தெழுவர்.[4] "கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்: அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்." —1 தெசலோனிக்கர் 4:16
  5. ஒரே பொழுதில் இறந்து உயிர்த்தோரும், உயிரோடு இருப்போரும், கிறித்துவைச் சந்திக்க நடு வானில் எடுக்கப்படுவர்.[5] "பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்." —1 தெசலோனிக்கர் 4:17

இரண்டாம் வருகையின் நாள்[தொகு]

"அந்த(இரண்டாம் வருகை) நாளையும் வேளையையும் பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது." என்று இயேசு மத்தேயு 24:36-இல் கூறியுள்ளார். எனினும் இரண்டாம் வருகை எப்போது நிகழும் என்பது குறித்து பல சபையினர் பலமுறை முன் அறிவித்தும் நடவாமல் போனது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Secret Rapture by Joe Crews
  2. "Caught Up" – When?
  3. Anything But Secret
  4. "Eugene Prewitt - Audioverse". Archived from the original on 2010-09-07. பார்க்கப்பட்ட நாள் 2011-08-15.
  5. Secret Rapture Truth