கிறித்தவ இறையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறித்தவ இறையியல் (Christian Theology) என்பது கடவுள் தம்மை இயேசு கிறிஸ்து வழியாக வெளிப்படுத்தியுள்ளார் என்னும் உண்மையை மையப் பொருளாகக் கொண்டு, அதன் உட்கிடக்கையை அறிவியல் முறைப்படி ஆய்ந்து விளக்குதல் ஆகும். கடவுளின் வெளிப்பாட்டை மக்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்து அறிந்து உணர்ந்து ஏற்று அதனடிப்படையில் கிறித்துவின் சீடர்களாக வாழ்ந்திட இறையியல் துணைபுரிகிறது [1].

கிறித்தவ இறையியல் விவிலிய விளக்கம், பகுத்தறிவு ஆய்வு, கருத்து மெய்ப்பித்தல் ஆகிய வழிமுறைகளைக் கையாண்டு, கிறித்தவ நம்பிக்கையை விளங்கிக்கொள்கிறது; விளக்குகிறது; விமர்சிக்கிறது; வளர்த்தெடுக்கிறது. கிறித்தவ இறையியலை ஆக்குவோர் அச்செயல் வழியாகத் தம் கிறித்தவ நம்பிக்கையை ஆழப்படுத்தவும் இயலுகிறது.

கிறித்தவ நம்பிக்கையைப் பிற சமய மரபுகளோடு ஒப்பிட்டும், அதை மறுப்பாரின் கருத்துகளுக்குப் பதிலளித்து அதைக் காத்தும், கிறித்தவம் தூய்மையடையச் செய்தும், கிறித்தவ நம்பிக்கை பரவிட வழிசெய்தும், கிறித்தவ மரபுச் செல்வங்களை ஆழ்ந்து ஆய்ந்து அவற்றின் ஒளியில் இன்றைய சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் இறையியலார் உதவுகின்றனர்.

நம்பிக்கையும் பகுத்தறிவும் (Faith and Reason) [2][தொகு]

கிறித்தவ இறையியலின் முக்கியமான அடிப்படை அது நம்பிக்கையையும் பகுத்தறிவையும் இணைத்துப் பார்ப்பதில் அடங்கும். நம்பிக்கை என்பது இரு பொருள்களில் புரிந்துகொள்ளப்படுகிறது. முதல் பொருள் நம்பிக்கைக் கோட்பாடு (tenets of faith) ஆகும். கிறித்தவ சமயம் ஒருசில உண்மைகளை மக்களுக்கு அறிவிக்கிறது. அந்த உண்மைகளை மக்கள் ஏற்று அவற்றின்படி வாழ வேண்டும் என்று கிறித்தவ மக்கள் குழு (திருச்சபை) கற்பிக்கிறது.

நம்பிக்கையின் இரண்டாம் பொருள் தம்மையே மனிதருக்கு வெளிப்படுத்துகின்ற கடவுள் உண்மையானவர், அன்புடையவர் என்பதால் அவர்தம் வெளிப்பாட்டை உண்மையென்று மனதார, உள உறுதியோடும் பணிவோடும் ஏற்று அதன்படி ஒழுகுதல் ஆகும். இது பணிந்து ஏற்கும் நம்பிக்கை (faith as trust) என்று கூறப்படும்[3].

கடவுளுக்குப் பணிந்து, அவர் கூறுவதை உண்மையென ஏற்கும் அதே நேரத்தில் அந்த உண்மைகள் பகுத்தறிவுக்கு எதிராகப் போக நேரலாமே என்றொரு சிக்கல் எழுவது இயல்பு. பகுத்தறிவும் சரி, பணிந்து ஏற்கும் நம்பிக்கையும் சரி, இரண்டிற்கும் ஊற்றாக இருப்பவர் கடவுளே என்பதால் அவை இரண்டும் தமக்குள் முரண்பட முடியாது என்பது கிறித்தவ உறுதிப்பாடு[4].

அவ்வாறு முரண்பாடு எழுவதாகத் தோன்றினால், ஒருவேளை நாம் இறைவெளிப்பாட்டைச் [5] சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றிருக்கலாம், அல்லது நமது பகுத்தறிவு எப்படியோ தவறிப்போயிருக்கலாம். எனவே, சரியான புரிதலும், தவறுநீக்கலும் நிகழும்போது நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையிலான முரண்பாடு மறைந்துவிடும்.

ஆக, கிறித்தவ இறையியலாக்கத்தில் இரு தவறுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. பகுத்தறிவு மிதமிஞ்சிப் போவது [6] ஒரு தவறு. நம்பிக்கை பகுத்தறிவின் துணை வேண்டாம் என்று கருதுவது [7] மற்ற தவறு.

இதையே சற்று விரிவாகக் கூறுவதாயிருந்தால், பகுத்தறிவு இவ்வுலகு சார்ந்த உண்மைகளைக் கண்டுகொள்வதில் தேர்ச்சியுள்ளது. அதே நேரத்தில் மனிதர் தம் பகுத்தறிவின்படி எப்போதும் நடப்பதில்லை என்பது துயரமான ஓர் உண்மையே. மனிதரை மனிதர் அடிமைகளாக நடத்துவது அறநெறிக்கு ஒவ்வாதது என்று நம் பகுத்தறிவு நமக்குக் கூறுகிறது[8]. ஆனால் வரலாற்றில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரை அடிமைகளாக நடத்தியது உலகெங்கும் நடந்துள்ளது. இங்கே பகுத்தறிவு உண்மையைக் காணத் தவறிவிட்டது என்பதை நாம் ஏற்றே ஆக வேண்டும்.

விவிலியத்தின் முதல் நூல் "தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்" என்று தொடங்குகின்றது. (காண்க: தொடக்கநூல் 1:1). கடவுள் ஆறு நாட்களில் அனைத்தையும் படைத்தார் என்னும் கூற்று ஆங்குளது. சில கிறித்தவர்கள் இந்த விவிலியக் கூற்றை எழுத்துக்கு எழுத்து அப்படியே பொருள்கொண்ட நேரங்கள் உண்டு. ஆனால் அறிவியல் நமக்குத் தரும் சான்றுகள்படி, இவ்வுலகும் பல்லாயிரக் கோடிக்கணக்கான விண்மீன்களும் கோள்களும் உருவாகி இன்றைய நிலையை அடைய எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆயின. இங்கே நம்பிக்கையும் பகுத்தறிவும், படைப்புக் கொள்கையும் பரிணாமக் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரண்படுவதுபோல் தெரிகிறது[9]. இந்த முரண்பாட்டைக் களைவது எப்படி?[10]

கிறித்தவ இறையியலின்படி, விவிலிய நூல்கள் எழுத்துக்கு எழுத்து பொருள்கொள்ளக் கூடியவை அல்ல [11]. ஏனென்றால் விவிலியம் என்பது கடவுளின் வெளிப்பாட்டை உள்ளடக்கியிருக்கிறது என்பது அறிவியல் தொடர்பான உண்மைகளை நமக்கு அளிப்பதற்கன்று. எனவே, மனித பகுத்தறிவு நமக்கு அறிவியல் தொடர்பான உண்மைகளை அறிவிக்கும்போது அந்த உண்மைகளுக்கும் ஊற்றாக இருப்பவர் கடவுளே என்பதை நாம் ஏற்பதாக இருந்தால், நம்பிக்கை என்பது மாற்றமடைய வேண்டும்; தூய்மைப்பட வேண்டும். கிறித்தவ நம்பிக்கையும் அறிவியலும் அவ்வப்போது மோதிக்கொண்டன என்பதை வரலாறு காட்டுகிறது[12]

இவ்வாறு, கிறித்தவ இறையியல் மனித பகுத்தறிவையும் ஏற்கிறது, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட உண்மைகளைக் கடவுள் நமக்கு அறிவிக்க முடியும் என்பதையும் ஏற்கிறது. இவை இரண்டிற்கும் இடையே முரண்பாடு இல்லை எனவும், கடவுளுக்குப் பணிந்து அவர்தம் வெளிப்பாட்டை ஏற்பது பகுத்தறிவுக்கு முரணானதன்று எனவும் இறையியல் காட்டுகிறது.

கிறித்தவ இறையியலுக்கும் வாழ்வில் வெளிப்படும் சமய நம்பிக்கைக்கும் இடையிலான உறவு[தொகு]

கிறித்தவ இறையியலும் சமய நம்பிக்கையும் ஒன்றோடொன்று தொடர்புடையன; ஆனால் அவற்றிற்கிடையே வேறுபாடு உண்டு. சமய நம்பிக்கை என்பது மக்களின் அன்றாட வாழ்வில் கடவுள் நம்பிக்கை வெளிப்படுவதையும் அவர்கள் சமய உண்மைகளைக் கடைப்பிடிப்பதையும் குறிக்கும். ஆனால் இறையியல் என்பது சமய நம்பிக்கையினின்று ஒரு படி அகன்று நிற்பது. சமய நம்பிக்கை என்றால் என்னவென்னும் கேள்வியை இறையியல் எழுப்புகிறது. சமய நம்பிக்கை பொருத்தமான விதத்தில் வெளிப்படுகிறதா அல்லது அங்கே மிகைப் போக்குகள் உளவா என்பதை இறையியல் விமர்சனக் கண்ணோடு நோக்குகிறது. சமய நம்பிக்கையின் அடிப்படைகள் யாவை என்னும் கேள்வியையும் இறையியல் எழுப்புகிறது.

இறையியலை மருத்துவப் படிப்புக்கு ஒப்பிடுவதாக இருந்தால், சமய நம்பிக்கை என்பது நோயாளரைப் பராமரித்து அவர்கள் நலம்பெற அருகிருந்து உதவுவதற்கு சமம். நோயாளரைப் பராமரிப்பது ஒரு கலை; மருத்துவப் படிப்பு ஓர் அறிவியல் துறை. சமய நம்பிக்கை என்பது மெய்ம்மை என்றால், இறையியல் என்பது கொள்கை.

வரலாற்றுப் பார்வையில் கிறித்தவ இறையியல்[தொகு]

கிறித்தவத்தின் தொடக்க காலத்தில் இறையியலார் இறைநம்பிக்கையின் உட்கிடக்கை பற்றிச் சிந்தித்தார்கள். கடவுள் என்றால் யார்? இயேசு கிறித்து யார்? கடவுள் தம்மை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்? - இவை போன்ற கேள்விகள் இறையியலின் மைய விவாதப்பொருள்கள் ஆயின. கடவுள் ஒருவரே. ஆயினும் அக்கடவுள் தம்மை மூன்று ஆள்களாக வெளிப்படுத்தியிருக்கிறார் (திரித்துவம்) என்னும் உண்மையைக் கிறித்தவ இறையியல் வகுத்தளித்தது [13]. இந்த உண்மையின் அடிப்படை விவிலியத்தில் உள்ளது. ஆனால், அந்த உண்மையை ஆய்வுக்கு உட்படுத்தி, பகுத்தறிவின் கூரிய ஒளியை அங்கு பாய்ச்சி விளக்கம் அளித்த பணி இறையியலைச் சார்ந்தது.

கடவுள்பற்றிய இரு பெரும் உண்மைகளைக் கிறித்தவ இறையியல் தொடக்க காலத்தில் வரையறுத்தது: 1) ஒரே கடவுள் மூன்று ஆள்களாய் இருக்கிறார். அம்மூவரும் தந்தை, மகன் (இயேசு கிறித்து), தூய ஆவி ஆவர். இவர்கள் மூவரும் மூன்று தனித்தனிக் கடவுளர் அல்ல, மாறாக ஒரே கடவுள் இவ்விதத்தில் தம்மை மனிதருக்கு வெளிப்படுத்தியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் விவிலியத்தில் உள்ளன. ஆனால் அவற்றை ஆய்ந்து, பகுப்பாய்வு செய்து, இறுதியாக ஒரு சுருக்கமான வாய்பாடாக எடுத்துரைக்க இறையியல் பெரும் துணையாயிற்று. 2) இரண்டாவது பேருண்மை இயேசு கிறித்துவைப் பற்றியதாகும். நாசரேத்து இயேசு என்பவர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலசுத்தீனம் என்னும் நாட்டில் மனிதராகப் பிறந்தார். ஆனால் அவர் கடவுளாகவும் இருந்தார். எனவே, இயேசு ஒரே ஆள் என்றாலும் அவரிடத்தில் மனித இயல்பும் இறை இயல்பும் இணைந்துள்ளன. அவர் இரண்டு ஆள்கள் அல்ல, மாறாக ஒரே ஆள்தான். ஆனால், அவர் முழுமையாகக் கடவுளும் முழுமையாக மனிதருமாக இருக்கின்றார்[14].

இந்த இரு மறை உண்மைகளும் கிறித்தவத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் இறையியல் துணையோடு நிறுவப்பட்டன. அதிகாரப் பூர்வமாகத் திருச்சபையால் கற்பிக்கப்பட்டன.

நடுக்காலத்தில் (Middle Ages) கிறித்தவ இறையியலார் கிறித்தவர் எத்தகைய அறவாழ்வு வாழ வேண்டும் என்பதில் கருத்தைச் செலுத்தினர். மனித வாழ்வில் சில அடிப்படையான நற்பண்புகள் விளங்கும்போதுதான் அவர்கள் உண்மையான மனிதராக, கிறித்தவராக வாழ்கின்றனர் எனலாம். எனவே, அத்தகைய நற்பண்புகளை அடையாளம் கண்டு, அவற்றை மக்கள் கடைப்பிடிக்குமாறு எடுத்துரைக்கும் பணியைக் குறிப்பாக நடுக்கால இறையியல் ஆற்றியது. இந்நற்பண்புகள் அறநெறி சார்ந்தவை நான்கு, இறையுறவு சார்ந்தவை மூன்று என்பது இறையியல் மரபு. அறநெறி நற்பண்புகள் நீதி, பகுத்துணர்வு, அளவுடைமை, ஊக்கம் (justice, prudence, temperance, fortitude) என்பவை ஆகும்[15]. இறையுறவு சார்ந்த நற்பண்புகள் பணிந்து ஏற்கும் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு (faith, hope and charity [love]) என்பவை ஆகும்[16].

பின்னர், புரோட்டஸ்தாந்து சீர்திருத்த காலம் வந்தது. அப்போது சபை சீர்திருத்தம் தொடங்கியது[17]. அப்போதைய இறையியல் திருச்சபையின் அதிகார அமைப்பில் கருத்தைச் செலுத்தியது. வழிபாடு எவ்வாறு அமைய வேண்டும், கிறித்தவரின் ஆன்மிக வாழ்வு மேம்பட என்ன செய்ய வேண்டும் போன்ற பொருள்களை ஆய்வதில் இறையியலார் கவனம் செலுத்தினர்.

இருபதாம் நூற்றாண்டில் இரு உலகப் போர்கள் நடந்து முடிந்த நிலையில், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்றவை பெருவளர்ச்சி கண்டன. இப்பின்னணியில் இன்றைய கிறித்தவ இறையியல் மனித மைய சிந்தனையாக வடிவெடுத்துவருகிறது. நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் எழுந்துள்ள சூழ்நிலையில் மனிதன் என்றால் யார்? இன்றைய மனிதருக்குக் கிறித்தவ நம்பிக்கையும் சமயமும் எச்செய்தியை அளிக்க இயலும்? இன்றைய உலகு கடவுளின் விருப்பத்துக்கு ஏற்ற உலகாக மாற வேண்டும் என்றால் மனிதர் என்ன செய்யலாம்? - இவை போன்ற கேள்விகள் இன்றைய கிறித்தவ இறையியல் எழுப்புகின்ற கேள்விகள் ஆகும்[18].

கிறித்தவ இறையியலின் வரலாற்று வளர்ச்சிப் பருவங்கள்[19][தொகு]

கால கட்டம் ஆய்வுப் பொருள் இறையியல் வடிவம் பெற்ற முறை
1. கி.பி. முதல் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரை கிறித்தவ இறை நம்பிக்கை எதில் அடங்கியுள்ளது? கிறித்தவ நம்பிக்கை வாழ்வு அனுபவமாகிறது
2. கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து 11ஆம் நூற்றாண்டு வரை கிறித்தவர் அறிந்து ஏற்க வேண்டிய நம்பிக்கையின் உண்மையும் உள்ளடக்கமும் யாது? கிறித்தவ நம்பிக்கை கொள்கை வடிவம் ஏற்கிறது
3. கி.பி. 12ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரை கிறித்தவ நம்பிக்கையின் உண்மைகள் ஒன்றோடொன்று இசைவுற அமைவது எவ்வாறு? கிறித்தவ நம்பிக்கை கோட்பாட்டு அமைப்பாக மாறுகிறது
4. கி.பி. 19ஆம் நூற்றாண்டிலிருந்து 21ஆம் நூற்றாண்டு வரை கிறித்தவ நம்பிக்கையில் மாறுவது எது, மாறாதது எது? கிறித்தவ நம்பிக்கை வரலாற்று வளர்ச்சிக்கு உட்பட்டதாக ஏற்கப்படுகிறது

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தவ_இறையியல்&oldid=2764908" இலிருந்து மீள்விக்கப்பட்டது