கார்த்திகேசு சிவத்தம்பி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| கார்த்திகேசு சிவத்தம்பி | |
|---|---|
| பிறப்பு | மே 10, 1932 கரவெட்டி, யாழ்ப்பாணம் |
| கல்வி | PhD (பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், 1970) MA (இலங்கைப் பல்கலைக்கழகம், 1963) |
| தொழில் | பேராசிரியர் |
| பெற்றோர் | வள்ளியம்மை T.P.கார்த்திகேசு (பண்டிதர், சைவப்புலவர்) |
| வாழ்க்கைத் துணை |
ரூபவதி நடராஜா (1963) |
| பிள்ளைகள் | கிரித்திகா (பெண்) தாரிணி (பெண்) வர்த்தனி (பெண்) |
| சிறப்புத் தேர்ச்சி | தமிழிலக்கிய வரலாறு இலக்கியத் திறனாய்வு தமிழர் சமூக வரலாறு தமிழரிடையேயான கலாசாரமும் தொடர்பாடலும் தமிழ் நாடகம் |
கார்த்திகேசு சிவத்தம்பி (கரவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை), (பிறப்பு மே 10, 1932) ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார்.
பொருளடக்கம் |
[தொகு] கல்வியும் கல்விப்பணியும்
ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் கொழும்பு ஷாகிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
[தொகு] கலைப் பங்களிப்பு
பல்கலைக் கழக காலத்தில் மேடை நாடகங்களில் ந்டித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய "விதானையார் வீட்டில்" தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் ந்டித்தார்.
[தொகு] ஆக்கங்கள்
ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.
[தொகு] இவர் பற்றிய படைப்புக்கள்
தமிழக அரசின் திரு.வி.க. விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகசிப்பின் சில ஊற்றுக்களை பதிவு செய்யும் வகையில், 'கரவையூற்று' எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'கரவையூற்று' நூலின் தொகுப்பு ஆசிரியர் வீ.ஏ.திருஞானசுந்தரம்.
[தொகு] இவருடைய நூல்கள்
- இலங்கைத் தமிழர் - யார், எவர்? - நூலகம் திட்டம்
- யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு - நூலகம் திட்டம்
- தமிழில் இலக்கிய வரலாறு - நூலகம் திட்டம்
- இலக்கணமும் சமூக உறவுகளும் - நூலகம் திட்டம்
- மதமும் கவிதையும் - நூலகம் திட்டம்
- தமிழ் கற்பித்தலில் உன்னதம் - நூலகம் திட்டம்
- சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள் - நூலகம் திட்டம்
- திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு - நூலகம் திட்டம்
- தமிழ்ப் பண்பாட்டில் சினிமா (மக்கள் வெளியீடு)