அர்த்தநாரீசுவரர்
அர்த்தநாரீசுவரர் சிவபெருமானின் உருவ திருமேனிகளில் ஒன்றாகும். சைவ சமயத்தவர்கள் வழிபடும் உருவ திருமேனிகளில் அர்த்தநாரிசுவரர் சிறப்பிடம் பெறுகின்றது. அர்த்தம் என்பது பாதி; நாரி என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அமைகின்றது. சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்கின்ற உருவாகும்.
பொருளடக்கம் |
இலக்கியத்தில் அர்த்தநாரீசுவரர் [தொகு]
அர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி பழைய பாடல்களிலே காணலாம். "நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்" என ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து இவ்வடிவத்தினைக் கூறுகிறது. "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்" என்று புறநானூற்றூக் கடவுள் வாழ்த்து இதனையே கூறுகிறது.
தேவார பதிகங்களிலும் "வேயுறு தோளி பங்கன்", "வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர்" எனப்படுவது உமையொரு பாகனேயேயாம்.
கோயில்களில் அர்த்தநாரீசுவரர் [தொகு]
காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள அர்த்தநாரீசுவரர் வடிவம் தென்னிந்தியாவில் காணப்படும் பழைய வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு உமாதேவி வீணையுடனும் சிவன் காளையில் ஏறிய கோலத்திலும் காணப்படுகிறார்.
திருச்செங்கோடு சிவன் கோயிலில் மூலவர் அர்த்தநாரீசுவராராக அமர்ந்துள்ளார். இங்கு உமாதேவியாருக்கு அர்த்தநாரீசுவரி, பாகம்பிரியாள் என்ற பேர்களுள்ளன. இங்கு அர்த்தநாரீசுவரர் மாதொருபாகன் என்றும் அழைக்கப்படுகிறார் [1].
பிருங்கி முனிவரின் வரலாறு [தொகு]
அர்த்தநாரீசுவர உருவத்துடன் தொடர்புடையது பிருங்கி முனிவரின் கதை. பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபடும் தீவிரபக்தர். இறைவி இதனால் தவம் செய்து அர்த்தநாரீ வடிவம் பெற்ற போதும் பிருங்க்கி முனிவர் இறைவியையும் சேர்த்து வழிபட விரும்பாது, வண்டு வடிவத்திலே இறைவன் பகுதியைத் துளைத்துத் தனிப்படுத்தி வழிபட்டாராம். இதனால் கோபமடைந்த இறைவி அவரை வலுவிழந்து போகும்படி சாபமிட்டனர். சாபத்தினால் வலுவிழந்து கொண்டு வந்த போதும் பிருங்கி முனிவர் தன்னிலையில் இருந்து மாறவில்லை. நடக்க முடியாத கட்டத்தினை அடைந்தார். சிவன் தன் பக்தனின் நிலை கண்டு இரங்கி அவருக்கு மூன்றாவது காலை அருளினார். இதனால் பிருங்கி முனிவர் மூன்று கால், மூன்று கையுடன் அமைக்கப்படுவதுண்டு[2].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ காலச்சுவடு
- ↑ பூலோகசிங்கம், பொ., இந்துக்கலைக்களஞ்சியம், கொழும்பு, இலங்கை, 1990]