நசிருதின் நசரத் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசிருதின் நசரத் சா
வங்காள சுல்தான்
ஆட்சிக்காலம்1519 - 1533
முன்னையவர்அலாவுதீன் உசைன் சா
பின்னையவர்நான்காம் அலாவுதீன் பிரூசு சா
இறப்பு1533
வாழ்க்கைத் துணைகள்இப்ராகிம் லௌதியின் மகள்
குழந்தைகளின்
பெயர்கள்
நான்காம் அலாவுதீன் பிரூசு சா
தந்தைஅலாவுதீன் உசைன் சா
மதம்சுன்னி இசுலாம்
நசரத் சாவின் செம்பு நாணயம்

நசிர் உத்-தின் நசரத் சா ( Nāsir ad-Dīn Naṣrat Shāh) (1519-1533), நுசரத் சா என்றும் அழைக்கப்படும் இவர், உசைன் ஷாஹி வம்சத்தைச் சேர்ந்த வங்காளத்தின் இரண்டாவது சுல்தான் ஆவார். [1] இவர் தனது தந்தை அலாவுதீன் உசைன் சாவின் விரிவாக்கக் கொள்கைகளைத் தொடர்ந்தார். ஆனால் கி.பி.1526 வாக்கில், காக்ரா போரில் முகலாய ஆட்சியை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. அதே நேரத்தில், இவரது ஆட்சியும் அகோம் இராச்சியத்தின் கைகளில் வீழ்ந்தது. அலாவுதீன் உசைன் சா மற்றும் நசரத் சா ஆகியோரின் ஆட்சிகள் பொதுவாக வங்காள சுல்தானகத்தின் "பொற்காலம்" என்று கருதப்படுகிறது.

இவர், கி.பி 1526 இல் கௌடாவில் பரோ சோனா பள்ளி வாசலைக் கட்டினார். 8 இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.[2]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

நசரத் வங்காள சுல்தானகத்தில் ஒரு பிரபுத்துவ சுன்னி இசுலாம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை அலாவுதீன் உசைன் சா உசைன் ஷாஹி வம்சத்தின் முதல் சுல்தான் ஆவார். இவருக்கு பதினெட்டு மகன்களும் மற்றும் பதினொரு மகள்களும் பிறந்தனர். நசரத்தின் உடன்பிறந்தவர்களில் தன்யால் மற்றும் [[ கியாசுதீன் மக்மூத் சா ]] ஆகியோர் அடங்குவர்.

நசரத் சா அண்டை நாடான தில்லி சுல்தானகத்தின் பஷ்தூன் ஆட்சியாளராக இருந்த இப்ராகிம் லௌதியின் மகளை மணந்தார். [3]

ஆட்சி[தொகு]

வங்காள சுல்தானகத்தின் உசைன் ஷாஹி வம்சத்தின் வரைபடம்

1519 இல் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, நசரத் நசிருதீன் அரியணை ஏறினார். தனது தந்தையின் கொள்கைகளைப் பின்தொடர்ந்த இவர் தனது ஆட்சியின் ஆரம்பத்தில் சுல்தானகப் பிரதேசத்தை விரிவுபடுத்தினார். இந்த சமயத்தில் கலிபதாபாத் ஒரு முக்கியமான நாணயம் அச்சடிக்கும் நகரமாக உருவெடுத்தது. பாபுர் இந்தியாவின் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, லௌதி வம்சத்தின் மக்மூத் லோடி மற்றும் அவரது ஆப்கானிய கூட்டாளிகள் பாதுகாப்புக்காக வங்காளத்திற்குத் தப்பி வந்தனர். 1527 இல், முகலாய ஆட்சியைப் பற்றிய நசரத் சாவின் அணுகுமுறையைக் கண்டறியவும், வங்காளத்தைப் பற்றிய சில தகவல்களைச் சேகரிக்கவும் பாபுர் ஒரு தூதரை வங்காளத்திற்கு அனுப்பினார். நசரத் சா தூதருக்கு பதிலளிக்காமல் அவரை சிறையில் அடைத்தார். இருப்பினும், நசரத் சா பின்னர் சமாதான ஒப்பந்தம் மேற்கொண்டு பாபுருக்கு பரிசுகளை அனுப்பி தூதரை விடுவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பாபுர் நசரத்தை இந்திய துணைக் கண்டத்தின் சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராக விவரித்துப் பாராட்டினார். வங்காள இராணுவத்தையும் மற்றும் கடற்படையையும் பாராட்டினார். மேலும் வங்காளத் தலைவரின் விசுவாசத்தையும் அங்கீகரித்தார்.

காக்ரா போர்[தொகு]

ஆப்கானியர்களால் துன்புறுத்தப்பட்ட பிறகு, முகலாயர்கள் அவர்களுக்கும் அவர்களது வங்காளக் கூட்டாளிகளுக்கும் எதிராக போரை அறிவித்தனர். வழியில் ஆப்கானியர்களைத் தோற்கடிக்க முயன்ற முகலாயர்கள் வங்காளத்தை நோக்கித் திரும்பினர். பாபுர் படைகளை பக்சரில் நிறுத்துவதற்கு முன் மிதிலை பிரதேசத்தைக் கட்டுப்படுத்தினார். அங்கு காக்ராவின் கரையில் முகாமிட்டிருந்த துருப்புக்களை வெளியேற்றுமாறு வங்காளத்தை கேட்டுக் கொண்டார். நசரத் சாவின் மறுப்பு காக்ரா போருக்கு வழிவகுத்தது. 6 மே 1529 அன்று முகலாயர்கள் ஆப்கானியர்கள் மற்றும் வங்காளிகளுடன் போரிட்டனர். இதில் முகலாயப் பேரரசு வெற்றி பெற்றது. அவர்கள் வங்காளத்தில் ஊடுருவாவிட்டாலும் பீகாரில் உள்ள காக்ராவின் கிழக்குக் கரை வரை அவர்களது பிரதேசம் விரிவடைந்தது. நசரத் சா வங்காளத்தை சுதந்திர நாடாக நிலைநிறுத்தினார். [4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. M.H. Syed, History of Delhi Sultanate, pp.237-238.
  2. "List of Ancient Monuments and Archaeological Sites and Remains of National Importance". West Bengal. Archaeological Survey of India. Archived from the original on 27 June 2014. பார்க்கப்பட்ட நாள் 17 April 2020.
  3. A Textbook of Medieval Indian History. 
  4. Erskine, William (1854). A History of India Under the Two First Sovereigns of the House of Taimur, Báber and Humáyun. Longman, Brown, Green, and Longmans. https://archive.org/details/ahistoryindiaun01erskgoog. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசிருதின்_நசரத்_சா&oldid=3848741" இலிருந்து மீள்விக்கப்பட்டது