சாஸ்தாமங்கலம் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாஸ்தாமங்கலம் மகாதேவர் கோயில், இந்தியாவின் கேரள மாநிலம், திருவனந்தபுரம் முனிசிபல் கார்ப்பரேஷன் சாஸ்தமங்கலம் வார்டில் உள்ள ஒரு பழமையான இந்துக் கோயில் ஆகும். ஆன்மீக அமைதியை மேம்படுத்தும் வகையில் இந்தக் கோயில் நகர மையத்திலிருந்து சிறிது தொலைவில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. ஆவணங்களின்படி இக்கோயில் 700 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயிலாகக் கருதப்படுகிறது. திருவிதாங்கூர் மன்னர்கள் தவறாமல் இக்கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். [1] இக்கோயில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

புராணம்[தொகு]

ஒருகாலகட்டத்தில் புல்வெளியாகப் பகுதியாக இருந்த இவ்விடத்தில்புல் வெட்டும் பெண்மணி ஒருவர் தரையில் கிடந்த பாறையில் தனது கத்தியைக் கூர்மையாக்கியதாகவும், அப்போது அப்பாறையிலிருந்து இரத்தம் கசிந்ததாகவும் புராணம் கூறுகிறது. அந்தக் கல் துண்டானது ஒரு சிவலிங்கம் என்பது பின்னர் அறியவந்தது. பின்னர் அது பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது.

மூலவரும், துணைத்தெய்வங்களும்[தொகு]

இக்கோயிலில் உறைகன்ற மூலவர் உமா மகேஸ்வரரான சிவபெருமான் ஆவார். இங்கு கணபதி, முருகன் மற்றும் தர்ம சாஸ்தா (ஐயப்பன்) உள்ளிட்ட துணைத் தெய்வங்கள் உள்ளன. கோயில் வளாகத்திற்கு வெளியில் கிள்ளி ஆற்றின் கரையில், பத்ரகாளி, வீரபத்திரன், நாகர், மற்றும் நாகயட்சி ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன.

முக்கிய விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் விழா பத்து நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. மலையாள மாதமான தனுவில் திருவாதிரை நட்சத்திர நாளில் தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு, பத்தாம் நாள் ஆராட்டு விழாவுடன் (டிசம்பர்-ஜனவரி) அவ்விழா முடிவடையும். பிரதோஷம், சிவராத்திரி, மகர விளக்கு போன்ற அனைத்து விழாக்களும் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

படைப்பு[தொகு]

நீர், பன்னீர், பால், இளநீர், நெய் போன்றவற்றால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பேல் மரத்தின் புனித இலைகளால் ஆன மாலைகளை (சமஸ்கிருதத்தில் வில்வ இலைகள், மலையாளத்தில் கூவலம்) இறைவனுக்கு அணிவிக்கின்றனர். கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் போன்ற தீ தொடர்பான சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. அர்ச்சனை, முழு சந்தனக்காப்பு, பாயசம் உள்ளிட்டவை இத்தெய்வத்திற்கு உண்டு. விழா நாட்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள்[தொகு]

திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரம் மகாதேவர் கோயில் போன்ற பெரும்பாலான சிவன் கோயில்களில் கருவறையை சுற்றி வர அனுமதிக்கப்படுவதில்லை. முக்கால்வாசி பகுதியைச் சுற்றி வந்து மறுபடியும் அதே இடத்திலிருந்து திரும்பி வணங்கப்படுவது வழக்கம். புனித நீர் எனப்படுகின்ற சோமசூதம் இருப்பதால் அதனைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், இந்த கோயிலில், ஆரம்ப நாட்களில் இருந்து பின்பற்றப்பட்ட ஒரு நடைமுறையானது தவறில்லை என்று பின்னர் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது முழுவதுமாகச் சுற்றிவர அனுமதிக்கப்படுகிறது.

சிவபெருமானின் துணைவியான பார்வதி தேவிக்கு மூர்த்தியோ, சன்னதியோ இங்கு காணப்படவில்லை. இருப்பினும் ஒரு பழங்கால கவிதையில் தேவி பார்வதி இங்கு உறைவதாக நம்பப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]