ஆறாம் விக்கிரமாதித்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.பி.1083 ஆண்டைய ஆறாம் விக்ரமாதித்தனின் பழங் கன்னட கல்வெட்டு ,இடம் கள்ளேசுவரர் கோயில், அம்பலி

ஆறாம் விக்ரமாதித்தன் (ஆட்சிக்காலம்1076 - 1126 ), என்பவன் மேலைச் சாளுக்கிய மன்னனாக இருந்தஅவனது அண்ணணான சோமேசுவரனை அகற்றிவிட்டு மன்னனானவன். விக்ரமாதித்தனின் ஆட்சி சாளுக்கிய-விக்ரம சகாப்தத்தின் தொடக்கமாக குறிப்பிடப்படுகிறது. ஆறாம் விக்ரமாதித்தனின் ஆட்சிக்காலமானது மேலைச் சாளுக்கிய அரசர்களின் ஆட்சிகளில் சிறந்ததாகவும், மரபின் மிக நீளமான ஆட்சியாகவும் இருந்தது. இவன் பெருமாடிதேவன், திரிபுவணமல்லன் போன்ற பட்டங்களைப் பெற்றிருந்தான். ஆறாம் விக்ரமாதித்தன் கலை, இலக்கியங்களுக்கு ஆதரவாளித்தான். இவனது அவையில் புகழ்பெற்ற கன்னட, சமஸ்கிருத புலவர்கள் இருந்தனர். கன்னடத்தில், இவனது சகோதரர் கீர்த்திவர்மன் கால்நடை மருத்துவ நூலான கோவைத்யா என்னும் நூலை எழுதினார். பிராமசிவா எனபவர் சமயபரிக்ஷி என்னும் நூலை எழுதி கவிச்சக்ரவர்த்தி என்னும் பட்டம் பெற்றார். பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய வேறு எந்த மன்னனையும் விட ஆறாம் விக்ரமாதித்தனைப் பற்றிய கன்னடக் கல்வெட்டுகள் மிகுதியாக கிடைத்து உள்ளன. [1] சமஸ்கிருத கவிஞர் பில்ஹனா இவனைப் புகழுந்து விக்ரமன்கடிவசரித்ரா என்ற நூலை எழுதினார். மற்றும் விஜ்நந்தீசுவரர் என்பவர் மிட்டக்ஷாரா இந்து மத குடும்பச் சட்டம் தொடர்பான நூலை எழுதினார். ஆறாம் விக்கிரமாதித்தனின் அரசிகளில் ஒருவரான சந்தலாதேவி என்பவர் நாட்டியத்தில் சிறந்தவராக இருந்ததால் அபிநவ சரஸ்வதி என அழைக்கப்பட்டார். இவனது ஆட்சியின் உச்ச நிலையில் தெற்கே காவிரி ஆறு, வடக்கே நர்மதை ஆறு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பரந்த நிலப்பரப்பை ஆண்டான்.

வடக்கில் சாளுக்கியர் வெற்றிகள்[தொகு]

இவன் இளவரசனாக இருந்தபோது கி.பி1068க்கு முன் வங்கத்தின் மீது படையெடுத்து கவுடா, காமரூபம் நாடுகளின் அரசர்களை வென்றான். [2] சாளுக்கிய படையெடுப்புகள் உண்மை என்பதற்கு ஆதாரமாக சாளுக்கியர் படையெடுத்ததை அடுத்து இவர்களின் வம்சா வளியினரின் ஆட்சி வங்காளம், பீகார் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டது என்பதற்கு ஷீனா மரபினரின் ஆட்சியே சான்று. [3]

விக்ரமாதித்தனின் கிளர்ச்சி[தொகு]

முதலாம் சோமேசுவரனின் மூத்த மகனான இரண்டாம் சோமேசுவரன் அரியணை ஏறிய உடன் விக்ரமாதித்தன் அவனை அரியணையிலிருந்து இறக்க்கும் திட்டத்தைத் தொடங்கினான். சோழ படையெடுப்பை நல் வாய்ப்பாகப் பயன்படுத்தி, சோமேசுவரன் தனக்கு ஆதரவான சிற்றரசர்களைத் திரட்டினான். குறிப்பாக சீனுனா, போசளர்கள், கதம்பர்கள் ஆகியோரைச் சேர்த்து, தனது இலக்கை அடைந்தான். விக்ரமாதித்தன் சோழ மன்னன் வீரராஜேந்திர சோழனுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றான் . சோழர் கூட்டணியில் வேங்கி அரசு இணங்கியிருந்தது. வீரராஜேந்திர சோழனின் உதவியுடன், விக்ரமாதித்தன் சாளுக்கிய நாட்டின் தென் பகுதியை சுதந்திரமாக ஆண்டுவந்தான். சோழர்களுடனான தனது உறவைப் பலப்படுத்திக் கொள்ள வீரராஜேந்திர சோழனின் மகளைத் திருமணம் செய்துகொண்டான்.

சோழப் பேரரசுடன் சிக்கல்கள்[தொகு]

இந்த நேரத்தில் வீரராஜேந்திர சோழன் இறந்தபின் (1070) அவனது மகன் அதிராஜேந்திர சோழன் அரியணைக்கு வந்தான். இராஜேந்திர சாளுக்கியன் (எதிர்கால முதலாம் குலோத்துங்க சோழன்), சோழ இரத்த உறவுள்ள வேங்கி இளவரசன் ஆவான். இவன் வேங்கி சிம்மாசனத்தில் அமர்வதை விக்ரமாதித்தன் தடுத்தான். அதற்குப் பதிலாக சோழ சிம்மாசனத்தில் அமர வேண்டும் என இராஜேந்திர சாளுக்கியன் விரும்பினான். சோழ நாட்டில் உள்நாட்டுக் கலவரங்கள் எழுந்தபோது இராஜேந்திர சாளுக்கியனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. காஞ்சிபுரத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தை, விக்ரமாதித்தன் தனது மைத்துனன் அதிராஜேந்திரனுக்கு உதவியாக தனது படைகளுடன் வந்து கலகத்தை அடக்கினான். பிறகு விக்ரமாதித்தன் சோழர் தலைநகர் அடைந்து அதிராஜேந்திர சோழனை ஆட்சியில் அமரவைத்தான். அரசு உரிமையுள்ள சோழ மன்னனைத் தூக்கியெறிய இராஜேந்திர சாளுக்கியன் செய்த முயற்சிகளைத் தோற்கடித்து உதவினான். ஆட்சியை தன் மைத்துனனுக்கு மீட்டுக் கொடுத்த திருப்தியுடன் விக்ரமாதித்தன் தனது தலைநகர் திரும்பினான். ஆனால் மீண்டும் சோழ நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் அதிராஜேந்திர சோழன் கொல்லப்பட்டான். இராஜேந்திர சாளுக்கியன் குலோத்துங்க சோழன் என்ற பெயரில் சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

போர் ஏற்பாடுகள்[தொகு]

தெற்கில் முதலாம் குலோத்துங்கனும் வடக்கில் இரண்டாம் சோமேசுவரனும் இருபுறமும் ஆபத்தாய் இருப்பதை உணர்ந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள விக்ரமாதித்தன் அடுத்த ஆறு ஆண்டுகள் போராடினான். விக்ரமாதித்தன் தொடர்ந்து இரண்டாம் சோமேசுவரனை பலவீனப்படுத்த தன் ஆதரவாளர்கள் மூலம் முயன்றுவந்தான். இறுதியாக சியுனா, போசலர்கள், கதம்பர் ஆகியோர் உதவியுடன் இரண்டாம் சோமேசுவரனை தோற்கடித்து, கி.பி.1076இல் மேலைச் சாளுக்கிய அரியணையில் ஏறினான்.

குலோத்துங்கனுடன் போர்[தொகு]

முதலாம் குலோத்துங்கன் கி.பி.1076இல் விக்ரமாதித்தன் மீது தாக்குதலை நிகழ்த்தினான். இப்போர் கோலார் மாவட்டத்தின் நங்கிலி என்ற இடத்தில் தொடங்கியது. விக்ரமாதித்தன் படைகள் தோற்கடிக்கப்பட்டு சோழ படைகளால் துங்கபத்ரை ஆறுவரை விரட்டியடிக்கப்பட்டன. முதலாம் குலோத்துங்கன் கங்கபாடியைக் கைப்பற்றிக் கொண்டான். 1088 ஆம் ஆண்டில், விக்ரமாதித்தன் வேங்கியின் (கீழைச் சாளுக்கிய நாடு) முக்கியப் பகுதிகளை வெற்றிகண்டான். குலோத்துங்கனால் 1099இல் கைப்பற்றப்பட்ட வேங்கியை 1118இல் சாளுக்கியர் கைப்பற்றி, 1124 வரை தக்க வைத்துக்கொண்டனர். கோவாவின் கதம்பர்கள், சிலகரர், சீனு, உச்சங்கி பாண்டியர், குஜராத் சாளுக்கியர், இரத்ணபூரின் சேடி ஆகிய ஆட்சியாளர்கள் ஆறாம் விக்ரமாதித்தனால் அடக்கப்பட்டனர்.

போசளர் அச்சுறுத்தல்[தொகு]

விக்ரமாதித்தனின் ஆட்சிக்காலத்தின் முதல் சில ஆண்டுகளில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டான். தனக்கெதிராகக் கிளர்ச்சி செய்த தம்பி ஜெயசிம்மனை போசளர்களின் உதவியுடன் அடக்கினான். இதில் உதவி செய்த போசளர்கள் பின்னர் விக்ரமாதித்தனின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சியைத் தொடங்கினர். போசளர்கள் படிப்படியாக தங்களது ஆட்சிப் பரப்பை விரிவாக்கும் பணியைத் தொடங்கினர். ஹோய்சல அரசன் விஷ்ணுவர்தனன் கி.பி.1116இல் மேற்கு கடற்கரையில் கோவா வரை கைப்பற்றி வடக்கில் கிருஷ்ணா ஆறு வரை முன்னேறினான்.

விக்ரமாதித்தன் இந்த நிலையை மாற்ற உறுதியாக நடவடிக்கை எடுத்து சாளுக்கிய பகுதிகளில் இருந்து போசளர்களை வெளியேற்றினான். விஷ்ணுவர்தனன் தனது நாட்டில் ஒரு மலைக் கோட்டையில் புகலிடம் தேட வேண்டியிருந்தது. பல போர்களுக்குப் பின்னர், விஷ்ணுவர்தனன் 1123 ல் விக்ரமாதித்தனுக்குக் கீழ்படிந்தான்.

சிங்கள உறவுகள்[தொகு]

இலங்கைத் தீவில் சோழ ஆட்சியை விஜயபாகு முடிவுக்கு கொண்டு வந்தான். விக்ரமாதித்தன் விஜயபாகுவிடம் நட்புறவு பாராட்டி, பல பரிசுகளுடன் ஒரு தூதரையும் இலங்கைக்கு அனுப்பினான்.

நர்மதைப் பகுதியைக் கைப்பற்ல்[தொகு]

விக்ரமாதித்தன் மாலவம் மீது கி.பி.1077, 1087, 1097 என மூன்று முறை படையெடுத்து தெற்கு நர்மதைப் பகுதிகளைக் கைப்பற்றினான். அங்கு ஒரு வெற்றித் தூணை தார் பகுதியில் அமைத்தான்.

மேற்கோள்[தொகு]

  1. Thousands of Kannada language inscriptions are ascribed to Vikramaditya VI and pertain to his daily land and charitable grants (Nityadana),Kamat, Jyotsna. "Chalukyas of Kalyana". 1996-2006 Kamat's Potpourri. பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.
  2. Dynastic History Of Magadha by George E. Somers p.214
  3. Dynastic History Of Magadha by George E. Somers p.214

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாம்_விக்கிரமாதித்தன்&oldid=3432067" இலிருந்து மீள்விக்கப்பட்டது