இளஞ்சேட்சென்னி
இளஞ்சேட்சென்னி, பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர்[1] என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார்[2] என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.
கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது[3]. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது.
இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இருங்கோவேள் என்பவனால் கொல்லப்பட்டான்.
பொருளடக்கம் |
பலரா?[தொகு]
| அரசர் | வெற்றி, கொடை | பாடிய புலவர் |
|---|---|---|
| உருவப் பஃறேர் (பல்தேர்) இளஞ்சேட் சென்னி | தேரில் ஏறிப் படை நடத்திச் சென்றவன். 'வயமான் சென்னி' எனப் போற்றப்பட்டவன். | பரணர் [4] |
| செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி | தென்பரதவர் வலிமையைச் சாய்த்தவன். வடவடுகரை வாட்போரில் ஓட்டியவன். புலவர்க்குப் போர்களத்திலேயே களிறுகளைப் பரிசாக நல்கியவன். புலவர் குடும்பத்துக்கு அணிகலன் நல்கினான். [5] | ஊன்பொதி பசுங்குடையார் [6] |
| (பாழி நூறிய) இளம்பெருஞ்சென்னி | செருப்பாழி நகரை நூறியவன், வடுகரை வென்றவன் | இடையன் சேந்தன் கொற்றனார் [7] |
| சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி | தேரில் படை நடத்திச் சென்றான். பாமுள்ளூர் சேரர் கையில் இருக்கும்போதே தனது என்று சொல்லிப் பாணர்களுக்கு வழங்கினான் | ஊன்பொதி பசுங்குடையார் [8] |
| நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி | நெய்தலங்கானல் அரசன். பகைவர் பணிந்தபோது தண்டிக்காதவன். வள்ளல் | ஊன்பொதி பசுங்குடையார் [9] |
இவன்காலத்துப் பிற மன்னர்கள்[தொகு]
வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னனும், பாண்டிய மன்னன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்பவனும் இளஞ்சேட் சென்னியின் சமகாலத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
குறிப்புகள்[தொகு]
- ↑ புறநானூறு நான்காம் பாடல்
- ↑ புறநானூறு 266 ஆம் பாடல்
- ↑ அகநானூறு 375 ஆவது பாடல்:
- .....எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்
- விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
- குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்
- செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி
- வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்.....
- ↑ புறம் 4, 266
- ↑ அணிகலன்களைப் புலவர் குடும்பத்தினருக்குச் சூடிக்கொள்ளக் கூடத் தெரியவில்லையாம். (சீதையை இராவணன் தூக்கிச் சென்றபோது அவள் ஆங்காங்கே போட்ட அணிகலன்களைக் குரங்குகள் எங்கே அணிந்துகொள்வது எனத் தெரியாமல் எங்கெங்கோ அணிந்துகொண்டது போல புலவர் குடும்பத்தினர் அணிந்துகொண்டார்களாம்)
- ↑ புறம் 370, 378
- ↑ அகம் 375
- ↑ புறம் 365
- ↑ புறம் 10
உசாத்துணை நூல்கள்[தொகு]
- அகநானூறு, மதுரைத் திட்ட மின்பதிப்பு
- புறநானூறு, புலியூர்க் கேசிகன் தெளிவுரை, பாரி நிலையம், சென்னை, 1958, மறுபதிப்பு 2004.
- கனகசபை வி., 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம், அப்பாத்துரையார் கா. (தமிழாக்கம்), வசந்தா அதிப்பகம், சென்னை, 2001.
- செல்லம் வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1995, மறுபதிப்பு 2002.