மனித உரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மனித உரிமைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"மனித உரிமைகள் என்றால் என்ன?கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமுகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பவற்றுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை. மனிதனின் இன்றியமையாத தேவைகளான நீர், நிலம், காற்று. உறைவிடம், பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில் கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன.

அடிப்படை மனித உரிமைகள்[தொகு]

எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம், கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன. பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாக கருதப்படுவையாகும்.

வரலாறு[தொகு]

மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது.

1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்".

பல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன. இவற்றுள், பொ.ஊ.மு. 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட நோக்கப் பிரகடனம்; பொ.ஊ.மு. 272-231 காலப்பகுதியில் இந்தியப் பேரரசனான அசோகன் வெளியிட்ட அசோகனின் ஆணை எனப்படும் ஆணையும்; பொ.ஊ. 622 இல் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. 1215 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்" (Magna Carta Libertatum) ஆங்கிலச் சட்ட வரலாற்றில் முக்கியமானது ஆகும். இதனால் இது இன்றைய அனைத்துலகச் சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

ஆனாலும், நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக செருமனியில் வெளியிடப்பட்ட "கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம் என அழைக்கப்படும், "குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்", ஐக்கிய இராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது.

1789 ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரான்சின் தேசிய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை.

18 ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவிலும் (1776), பிரான்சிலும் (1789) இரண்டு முக்கிய புரட்சிகள் இடம்பெற்றன. இவற்றின் விளைவாக இரண்டு அறிக்கைகள் வெளியிடபட்டன. ஒன்று ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கை, மற்றது மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை. இரண்டுமே சில சட்டம் சார்ந்த உரிமைகளை நிலைநாட்டியிருந்தன. மேலும் 1776 ஆம் ஆண்டின் உரிமைகளுக்கான வெர்ஜீனியா அறிக்கையும் பல அடிப்படை உரிமைகளைச் சட்டத்தில் இடம்பெறச் செய்தது.

இவற்றைத் தொடர்ந்து 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில், தாமசு பைன், ஜான் இசுட்டுவார்ட் மில், ஜி டபிள்யூ. எஃப். கேகெல் போன்றோரால் மனித உரிமைகள் தொடர்பான மெய்யியல் வளர்ச்சி பெறலாயிற்று.

20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் பல குழுக்களும், இயக்கங்களும் மனித உரிமையின் பெயரால் பலவகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. மேற்கு ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, மிகக்குறைந்த வேலை நிலைமைகளை நிலைநாட்டுதல், சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்துதல் போன்ற உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. பெண்ணுரிமை இயக்கங்களால் பல நாடுகளில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நாட்டு விடுதலை இயக்கங்கள் பல குடியேற்றவாத அரசுகளை வெளியேற்றி விடுதலை பெற்றுக்கொண்டன. இவற்றுள் மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலைப் போராட்டம் முக்கியமானது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் "லீபர் நெறிகள்" 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.

உலகப் போர்களும், அவற்றினால் விளைந்த உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்களும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் வளர்ச்சிபெறத் தூண்டுதலாக அமைந்தன. முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வெர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் நாடுகள் சங்கம் உருவானது. இச் சங்கம், ஆயுதக் களைவு; கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராசதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது.

இச் சங்கத்தின் பட்டயத்தில் இச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவேண்டிய பல உரிமைகள் குறித்த ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வுரிமைகள் பின்னர், இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டன.

1945 ஆம் ஆண்டின் யால்ட்டா மாநாட்டில், நாடுகளின் சங்கத்தின் பணிகளை முன்னெடுப்பதற்குப் புதிய அமைப்பொன்றை உருவாக்க கூட்டு வல்லரசுகள் இணங்கின. இதன் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் இவ்வமைப்பு பெரும் பங்கு ஆற்றியுள்ளது. உலகப் போர்களைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அவையும் அதன் உறுப்பு நாடுகளும் ஈடுபட்ட கலந்துரையாடல்களும், உருவாக்கிய சட்ட அமைப்புக்களுமே இன்றைய அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் என்பவற்றில் உள்ளடங்கியுள்ளன.

மனித உரிமைகளின் மூலங்கள்[தொகு]

மனித உரிமைகளின் மூலங்கள், ஆதாரங்கள் அல்லது நியாப்படுத்தல் மனித உரிமைகளின் இருத்தல் பற்றியும், அவற்றைப் பேணுவதன் அவசியம் பற்றி, அல்லது மனித உரிமை கோட்பாட்டின் போதாமைகள் பற்றி சுட்டிக் காட்டுகின்றன.

இயற்கை உரிமைகள்[தொகு]

மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்தால் அவர்களுக்கு இயல்பாக, இயற்கையாக இருக்கும் உரிமைகள் என்பது மனித உரிமைகளின் மூலம் பற்றிய ஒரு தத்துவ நோக்கு ஆகும்.

சட்டங்களும் கருவிகளும்[தொகு]

மனிதாபிமானச் சட்டம்[தொகு]

1864 ஆம் ஆண்டின் செனீவாச் சாற்றுரையின் மூலப்பிரதி.

அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனரான என்றி துரந்த்தின் முயற்சிகளின் விளைவாக 1864 ஆம் ஆண்டுக்கும் 1907 ஆம் ஆண்டுக்கும் இடையில் செனீவாச் சாசனம் உருவானது. இச் சாசனம் ஆயுதப் போர்களில் ஈடுபடும் தனியாட்களது மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தை உடையது. இது அனைத்துலகச் சட்டத்தில் போர், போர்க் குற்றங்கள் என்பன தொடர்பான சட்டங்களை முறைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாக அமைந்த 1899, 1907 ஆம் ஆண்டுகளின் ஏக் சாசனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் விளைவாக இச் சாசனம் திருத்தப்பட்ட பின்னர் 1949 ஆம் ஆண்டில் மீண்டும் உலக சமுதாயத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.

செனீவா சாசனம், இன்று மனிதாபிமானச் சட்டம் எனக் குறிக்கப்படும் சட்டத்தை வரையறுக்கிறது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவே செனீவாச் சாசனத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும்.

உலக மனித உரிமைகள் சாற்றுரை[தொகு]

"இது ஒரு ஒப்பந்தம் அல்ல...[எதிர் காலத்தில், இது] உலகத்தின் சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம் ஆக உருவாகக் கூடும்."[1] 1949 ஆம் ஆண்டில், உலக மனித உரிமைகள் சாற்றுரையின் எசுப்பானிய மொழிப் பிரதியுடன் எலினோர் ரூஸ்வெல்ட்.

உலக மனித உரிமைகள் சாற்றுரை என்பது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறைவேற்றப்பட்ட கட்டுப்படுத்தாத ஒரு சாற்றுரை ஆகும். 1949 ஆம் ஆண்டில் இச் சாற்றுரை உருவாக்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற அட்டூழியங்களும் ஒரு காரணமாகும். இது ஒரு கட்டுப்படுத்தாத சாற்றுரையாக இருப்பினும் தற்போதைய அனைத்துலக மரபார்ந்த சட்டத்தின் முக்கியமான கூறாக இது கருதப்படுகிறது. நாடுகளால் அல்லது பிற நீதித் துறைகளினால் பொருத்தமான வேளைகளில் இதனைப் பயன்படுத்த முடியும். விடுதலை, நீதி, உலக அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாக அமைபவை என்ற வகையில் சில மனித, குடிசார், பொருளாதார, சமூக உரிமைகளை முன்னெடுக்குமாறு உறுப்பு நாடுகளை இச் சாற்றுரை வேண்டுகிறது. நாடுகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் குடிமக்கள் பால் அவற்றுக்கு இருக்கக்கூடிய கடமைகளைச் செய்யுமாறு தூண்டும் முதலாவது உலகச் சட்டம் சார்ந்த முயற்சி இச் சாற்றுரை ஆகும்.

நாடுகள் வாரியாக மனித உரிமைகள்[தொகு]

இந்தியா[தொகு]

மனித உரிமைகளை மீறிய செயல்களுக்காக இந்திய காவல்துறைஅதிகாரிகள் மீது போடப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. 2012-ம் ஆண்டு மட்டும் காவல்துறையினர் மீது 205 வழக்குகள் போடப்பட்டுள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த எண்ணிக்கை 2011-ம் ஆண்டு 72 ஆகவும், 2010-ஆம் ஆண்டு 37 ஆகவும் இருந்ததாக ஆணையத்தின் பதிவுகள் குறிப்பிடுக்கின்றன. 205 வழக்குகளில், வெறும் 19 காவல்துறை அதிகாரிகள் மீதே குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.தலைநகர புது டெல்லியிலும் (75), அசாம் மாநிலத்திலும் (102) அதிகபட்சமான வழக்குகள் பதிவாகியுள்ளன. போலி காவல்துறை மோதல்கள், கைதிகளைச் சித்ரவதை செய்தல், பெண்களை அவமதித்தல், நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் போன்ற குற்றங்களுக்காக அவர்கள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. எலீனோர் ரூஸ்வெல்ட்: ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் பேசியது 10 டிசம்பர் 1948 பாரிஸ், பிரான்ஸ்
  2. "போலீஸ் மீது அதிகரிக்கும் மனித உரிமை மீறல் வழக்குகள்". தி இந்து. 25 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2013.

புத்தக விவரணங்கள்[தொகு]

நூல்கள்[தொகு]

கட்டுரைகள்[தொகு]

இணையத்தில்[தொகு]

  • Nickel, James (2010). "Human Rights". The Stanford Encyclopedia of Philosophy (Fall 2010).  
  • Fagan, Andrew (2005). "Human Rights". The Internet Encyclopedia of Philosophy.  

மற்றவை[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

  • Abouharb, R. and D. Cingranelli (2007). "Human Rights and Structural Adjustment". New York: Cambridge University Press.
  • Barzilai, G (2003), Communities and Law: Politics and Cultures of Legal Identities. The University of Michigan Press, 2003. ISBN 0-47211315-1
  • Barsh, R. (1993). “Measuring Human Rights: Problems of Methodology and Purpose.” Human Rights Quarterly 15: 87-121.
  • Chauhan, O.P. (2004). Human Rights: Promotion and Protection. Anmol Publications PVT. LTD. ISBN 81-261-2119-X
  • Forsythe, David P. (2000). Human Rights in International Relations. Cambridge: Cambridge University Press. International Progress Organization. ISBN 3-900704-08-2
  • Forsythe, Frederick P. (2009). Encyclopedia of Human Rights (New York: Oxford University Press)
  • Ishay, M. (2004). The history of human rights: From ancient times to the globalization era. Los Angeles, California: University California Press.
  • Landman, Todd (2006). Studying Human Rights. Oxford and London: Routledge ISBN 0-415-32605-2
  • Robertson, Arthur Henry; Merrills, John Graham (1996). Human Rights in the World: An Introduction to the Study of the International Protection of Human Rights. Manchester University Press. ISBN 0-7190-4923-7.
  • Gerald M. Steinberg, Anne Herzberg and Jordan Berman (2012). Best Practices for Human Rights and Humanitarian NGO Fact-Finding. Martinus Nijhoff Publishers / Brill ISBN 9789004218116
  • Steiner, J. & Alston, Philip. (1996). International Human Rights in Context: Law, Politics, Morals. Oxford: Clarendon Press. ISBN 0-19-825427-X
  • Shute, Stephen & Hurley, Susan (eds.). (1993). On Human Rights: The Oxford Amnesty Lectures. New York: BasicBooks. ISBN 0-465-05224-X

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_உரிமை&oldid=3845256" இலிருந்து மீள்விக்கப்பட்டது