பெரியம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியம்மை
Smallpox
[[File:=
|frameless|upright=1.36]]
பெரியம்மையால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10B03.
ஐ.சி.டி.-9050
நோய்களின் தரவுத்தளம்12219
மெரிசின்பிளசு001356
ஈமெடிசின்emerg/885
பேசியண்ட் ஐ.இபெரியம்மை
ம.பா.தD012899
Variola virus (Smallpox)
தீநுண்ம வகைப்பாடு
குழு: Group I (dsDNA)
குடும்பம்: Poxviridae
பேரினம்: Orthopoxvirus
இனம்: Variola vera

பெரியம்மை (smallpox), மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இது வரியோலா மேசர் (Variola major) மற்றும் வரியோலா மைனர் (Variola minor) ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது.[1] இவற்றுள் வரியோலா மேசர் அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடுகின்றனர். வரியோலா மைனர் கிருமி தாக்கியவர்களுள் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இறக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களில் பலரும், (ஒன்று அல்லது) இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர். 20ஆம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300-500 மில்லியன் மக்கள் இறந்தனர். 1967ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய்யால் பாதிக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர். எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை.

வரலாறு[தொகு]

பெரியம்மையின் முதல் தோற்றம் இன்னும் தெரியவில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளாக, இந்தக் கொடிய நோய், உலகின் பல்வேறு இடங்களில் தாக்கியுள்ளது. இதற்கான காலவரிசை[2] கீழே உள்ளது

  • 3ம் நூற்றாண்டு - எகிப்து நாட்டில் வாழ்ந்த பார்வோன் ராம்சேஸின் மம்மியில், பெரியம்மையின் தடயங்கள் தென்பட்டன. 3ம் நூற்றாண்டிலே, பெரியம்மை இவ்வுலகில் இருந்தது என்பதற்கு இதுவே சான்றாகும்.
  • 4ம் நூற்றாண்டு - சீனாவில், இந்த நோயின் அறிகுறிகளைப் பற்றி எழுத்து வடிவில் 4ம் நூற்றாண்டில் பதிவு செய்துள்ளனர். இந்த நோயிலிருந்து குணமடைய தேவன் 'யோ ஹோ லாங்'கிடம் மக்கள் வேண்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 6ம் நூற்றாண்டு - சீனாவுக்கும், கொரியாவுக்கும் இடையே வர்த்தகம் அதிகரித்த காலம், 6ம் நூற்றாண்டு. இதன் மூலமாக கொரியாவுக்கும், சப்பானுக்கும் பெரியம்மை பரவத் தொடங்கியது. 'சிவப்பு வண்ணம்/ஒளி பெரியம்மையை நீக்கும்' என்னும் கட்டுக்கதை உலகும் முழுவதும் நம்பப்பட்டது. சப்பான் கலாச்சாரத்திலும் அப்படித்தான், பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் சிவப்பு உடைகளை அணிந்தனர்.[3]
  • 7ம் நூற்றாண்டு - 7ம் நூற்றாண்டில், இந்திய துணைக் கண்டத்திற்கு பரவியது. பின்னர், அரேபியர்கள் மூலம் வடக்கு ஆபிரிக்காவுக்குப் பரவத் தொடங்கியது.
  • 10ம் நூற்றாண்டு - 10ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேக்கம், துருக்கி, ரோமெனியா போன்ற நாடுகள், பெரியம்மையால் பாதிக்கப்பட்டன. ஆசியாக் கண்டத்தில் வர்த்தகம் மூலமாகப் பெரியம்மை பரவியதாகக் கருதப்படுகிறது.
  • 11ம் நூற்றாண்டு - ஐரோப்பிய கண்டத்தில் பெரியம்மை பரவியது. சிலுவைப் போரின் காரணமாக, ஐரோப்பிய கிருத்துவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் குடிபுகுந்த போது பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
  • 13ம் நூற்றாண்டு - மக்கள் தொகை பெருக்கத்தினாலும், உலகம் சுற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், பெரியம்மை வடக்கு ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்துக்கு பரவியது.
  • 15ம் நூற்றாண்டு - 15ம் நூற்றாண்டில், பெரியம்மை ஐரோப்பிய நாடுகளில் பரவலாக தென்பட்டது. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த மக்கள் மேற்கொண்ட கடல் வழி பயணத்தால், கிழக்கு ஆபிரிக்காவுக்குப் பெரியம்மை பரவியது
  • 16ம் நூற்றாண்டு - ஐரோப்பியர்களின் குடியேற்றத்தினாலும், ஆபிரிக்காவின் அடிமை வர்த்தகத்தினாலும், அமெரிக்கக் கண்டங்களுக்கு பெரியம்மை பரவியது. 1520ல் ஸ்பாணியர்கள் தற்போதைய மெக்ஸிகோவில் பெரியம்மையபை் பரப்பினர். அப்போது அங்கு வாழ்ந்த அஸ்டெக் நாகரிகமே அழிந்ததிற்கு பெரியம்மையும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதற்கிடையே 16ம் நூற்றாண்டில், வரியோலேசன் என்னும் பெரியம்மையின் தடுப்பு முறை சீனாவிலும் இந்தியாவிலும் பரவலாக பின்பற்றபட்டது. வரியோலேசன் என்பது, பெரியம்மையால் பாதிக்கப்பட்டவரின் பொருக்கை எடுத்து நன்றாக வரண்ட பிறகு, அதை பொடித்து வைப்பதாகும். பெரியம்மையால் பாதிப்படையாதவர்கள், இந்த பொடியை மூச்சு வழியாக உள்ளிழுக்க வேண்டும். இதன் மூலம் பெரியம்மை கட்டுப்படுத்தினர்.
  • 17ம் நூற்றாண்டு - 'வரியோலேசன்' தடுப்பு முறை, ஒட்டோமன் பேரரசாங்கத்திலும் பின்பற்றத் தொடங்கினர். இதன் பொருட்டு, துருக்கி மற்றும் வட ஆபிரிக்கா நாடுகளில், இந்த தடுப்பு முறை பயன்படுத்தப்பட்டது.
  • 18ம் நூற்றாண்டு - 'வரியோலேசன்' தடுப்பு முறை இங்கிலாந்து நாட்டில் 'லேடி மேரி வார்ட்லி மான்டெகு' அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர், துருக்கி நாட்டின் ஆங்கிலேய தூதரின் மனைவி ஆவார். இவர் துருக்கியில் பெரியம்மையால் நோயுற்ற போது, தனது இரு குழந்தைகளுக்கும் 'வரியோலேசன்' தடுப்பு முறையை அளித்தார். இதற்கிடையே 1796ம் ஆண்டில், 'எட்வார்ட் ஜென்னர்' மாட்டு அம்மை மூலமாக, பெரியம்மையை தடுக்க முடியும் என நிரூபித்தார். இதுவே, பெரியம்மையின் தடுப்பு ஊசிக்கு அடிப்படையாக அமைந்தது.
  • 20ம் நூற்றாண்டு - 20ம் நூற்றாண்டில், பெரியம்மை ஆபிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் இன்னும் தென்பட்டது. ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் தடுப்பூசி மூலம் பெரும்பாலும் கட்டுப்படுத்தப் பட்டிருந்தது. உலகளாவிய வேருடன் அழித்தல் முகாம் மூலம், 1980ம் ஆண்டில் பெரியம்மை முற்றிலுமாக நீக்கப்பட்டது.

அறிகுறிகள்[தொகு]

பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர், குணமடையும் முன் கீழ் காணும் கட்டங்களை கடக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திற்கும் சில அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் உள்ளன.[4]

1) நோயரும்பல் : இந்தக் கால கட்டத்தில், பெரியம்மையின் நோய்க்கிருமி மனிதனின் உடலில் பெருகிக்கொண்டிருக்கும். ஆனால் எந்த அறிகுறியும் தெரியாது.

அறிகுறிகள் : இல்லை
காலம்: 7 - 19 நாட்கள் (பெரும்பாலும் 7 -14) வரை நீடிக்கும்.
பரவும் தன்மை : இல்லை

2) ஆரம்ப அறிகுறிகள் : இந்த கட்டத்தில், நோயுற்றவர்கள் எந்த வேலையும் செய்ய இயலாத அளவிற்கு, சோர்வு அடைந்திருப்பார்கள்.

அறிகுறிகள் : அதிகபடியான காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி மற்றும் அவ்வப்போது வாந்தியெடுத்தல்
காலம் : 2 - 4நாட்கள்
பரவும் தன்மை : சில சமயங்களில்

3) முற்கால வேனற்கட்டி : சின்ன வேனற்கட்டிகள், முதலில் நாக்கிலோ அல்லது வாயினிலோ வரும். இந்த கட்டிகள் புண்னாகி வெடித்தப்பின், இந்த நோய்கிருமி பெரிய அளவில் உடம்பு முழுவதும் பரவும். முகத்தில் ஆரம்பித்து, 24 மணி நேரத்திற்குள், கை மற்றும் கால் வரை, உடம்பில் எல்லா இடங்களிலும் பருக்கள் தென்பட ஆரம்பிக்கும். இப்படி கட்டிகள் தென்படும் தருணத்தில் காய்ச்சல் சற்று தனிந்திருக்கும். நான்காம் நாளில், எல்லா கட்டிகளும் தடித்து புண்ணாகி விடும். இந்த புண்ணில் தடித்த, தெளிவற்ற திரவம் இருக்கும். இந்த தருணத்தில் காய்ச்சல் மீண்டும் அதிகரிக்கும்

அறிகுறிகள் : அதிகபடியான காய்ச்சல், உடம்பு முழுவதும் தடித்த, தெளிவற்ற வேனற்கட்டிகள்
காலம் : 4நாட்கள்
பரவும் தன்மை : ஆமாம், அதிகமாக பரவும் கட்டம்

4) சீழ் கொப்புளங்கள் மற்றும் பொருக்குகள் : இந்த கட்டத்தில், உடம்பில் உள்ள புண்கள், கொப்புளங்களாக மாறும். இந்த கொப்புளங்களின் தன்மை, சற்று எழுப்பப்பட்ட, வட்டமாகவும் தொடுவதற்கு தோலுக்குள் பட்டாணி இருப்பது போல தோன்றும். சுமார் 5 நாட்களுக்கு பிறகு, இந்த கொப்புளங்களின் மேல் ஓடுகள் போன்று உருவெடுக்கும், பின்னர் பொருக்களாகும். பொருக்கள் என்பது காய்ந்த புண்ணின் மேல் படிந்திருக்கும் ஓடு போன்றது.

அறிகுறிகள் : கொப்புளங்கள் மற்றும் பொருக்குகள்
காலம் : சுமார் 10 நாட்கள் நீடிக்கும்
பரவும் தன்மை : ஆமாம்

5) பொருக்குகள் உதிர்வது : இந்த கட்டத்தில், காய்ந்த பொருக்கள் உதிர ஆரம்பிக்கும். காய்ந்த போதிலும், இன்னும் பரவும் தன்மை கொண்டது. ஆகையால் கவனமாக இருக்க வேண்டும். உதிர்ந்தப் பின், உடம்பில் தழும்புகள் இருக்கும்.

அறிகுறிகள் : பொருக்குகள் உதிரும்
காலம் : 6 நாட்கள் வரை நீடிக்கும்
பரவும் தன்மை : ஆமாம்

6) பொருக்கின்மை : எல்லா பொருக்குகளும் உதிர்ந்தப் பின், நோய் பரவாது. பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டவர், முழுவதும் குணமடைவதற்கான அறிகுறி இது.

பரவும் தன்மை : இல்லை

மருத்துவ சிகிச்சை[தொகு]

பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை ஒன்றும் கிடையாது. எந்த ஒரு சிகிச்சையும் பயனளிக்காது. ஆயினும், சில சமயங்களில் நச்சுயிருக்கு எதிரான சில மருந்துகளும், நுண்ணுயிர்க்கு எதிரான சில மருந்துகளும் பரிந்துரைக்கப்படலாம்.[5] இவை பெரியம்மையின் நச்சுயிரை எதிர்ப்பதற்காக இல்லை. பெரியம்மையால் பாதித்த போது மற்ற நோய்கள் தாக்கக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படலாம்.

வருமுன் காத்தல்[தொகு]

பெரியம்மைக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் இல்லாததால், இதனை வருமுன் காப்பதே நல்லது. இதற்காக தடுப்பூசிகள் உள்ளன.

  • பெரியம்மை நச்சுயிர்கள் தாக்கும் முன் எடுத்துக் கொண்டால், நோயிலிருந்து முற்றிலுமாக காத்திடலாம்
  • நச்சுயிர்கள் தாக்கிய 3 நாட்களுக்குள் எடுத்துக் கொண்டால், தடுப்பூசி அந்த நச்சுயிகள் பெருக விடாமல் காக்கும். இதனால் பாதிப்பு இருக்காது
  • தாக்கிய 4-7 நாட்களுக்குள் எடுத்துக் கொண்டால், நோயிலிருந்து காத்துக் கொள்ள இயலும். இருப்பினும் நோய் வசப்பட்டால், அதன் தாக்கம் சற்று குறைவாகத் தான் இருக்கும் [6]

வேருடன் அழித்தல்[தொகு]

பெரியம்மை தொற்றும் தன்மை கொண்டிருந்தமையால், இது மிகவும் கொடிய நோயாக கருதப்பட்டது. பெரியம்மைக்கு தடுப்பு ஊசிகள் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இருந்த போதிலும், ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் இந்த நோய் பரவிக்கொண்டு தான் இருந்தது. 1959ம் ஆண்டில் தான், உலக சுகாதார மையம், பெரியம்மையை முற்றிலுமாக நீக்க முடிவெடுத்தது. நிதி பற்றாகுறையினாலும், போதுமான தன்னார்வத் தொண்டர்கள் இல்லாததாலும், இதனை வெற்றிகரமாக செயலாக்க இயலவில்லை. 1967ம் ஆண்டில், மீண்டும் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது.

அழித்த காலவரிசை[தொகு]

பெரியம்மையின் கடைசி தோற்றங்கள்,[7]

  • வட அமெரிக்கா கண்டம் - 1952
  • தென் அமெரிக்கா கண்டம் - ஏப்ரல் 19, 1971 (பிரேசில்)
  • ஐரோப்பிய கண்டம் - 1953
  • ஆப்ரிக்கா கண்டம் - அக்டோபர் 12, 1977 (சோமாலியா)
  • ஆசியா கண்டம் - அக்டோபர் 16, 1975 (வங்காளதேசம்)
  • ஆஸ்திரேலியா கண்டம் - நோய் இங்கு பரவியதற்கு எந்த அடையாளமும் இல்லை

இறுதித் தோற்றம்[தொகு]

  • 1975ம் ஆண்டில், வங்காளதேசத்தில், 'ரஹிமா பானு' என்னும் 3 வயது சிறுமி பெரியம்மை 'வரியோலா மேசர்' நோயால் இயற்கை முறையில் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடைசி மனிதராவார்.
  • அக்டோபர் 12, 1977 அன்று, 'அலி மாவோ மாலின்' என்னும் சமையல்காரர், பெரியம்மை 'வரியோலா மைனர்' நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.
  • 1978ம் ஆண்டில், 'ஜேனட் பார்க்கர்' என்னும் மருத்துவ புகைப்படம் எடுப்பவர், பெரியம்மை நோயின் ஆராய்ச்சியின் போது நோயுற்று, செப்டம்பர் 11 அன்று இறந்தார்.

பெரியம்மை நோய் வேருடன் அழிக்கப்பட்டதாக, மே 8, 1980 அன்று, உலக சுகாதார் சட்டசபையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[8] உலகிலிருந்து பெரியம்மை நொய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, 27 ஆண்டுகளாகிறது (2017ல்).

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியம்மை&oldid=3848910" இலிருந்து மீள்விக்கப்பட்டது