நா. காமராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிஞர் நா. காமராசன்
பிறப்புநா. காமராசன்
1942
இந்தியா தேனி மாவட்டம், போ. மீனாட்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா
இறப்புமே 24, 2017 (அகவை 75)[1]
சென்னை
பணிகவிஞர், பாடலாசிரியர்
பெற்றோர்நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
லோகமணி
பிள்ளைகள்தைப்பாவை, திலீபன்

நா. காமராசன் (1942 - மே 24, 2017) தமிழ் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனக்கவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தன் சிறப்பை வெளிப்படுத்தினார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார். அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடும் காமராசன், "கவியரசு, சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான்" என்றும் அழைக்கப்பட்டவர்,கருணாநிதியால் அரசியலுக்கும்,எம்.ஜி.இராமச்சந்திரனால் திரைத்துறைக்கும் வந்தவர்.

"தன் கால்களில் இரத்தம் கசியக்கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் நா. காமராசன் தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன் கூட மறந்து விடக் கூடாது" என்று கவிஞர் வைரமுத்துவால் புகழப்பட்டவர்.

வாழ்க்கை[தொகு]

1942-ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்பாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவர் தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசிக்கும் தா. பொம்மையன் மகள் லோகமணியை வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்டவர், இவருக்குத் தைப்பாவை என்ற மகளும், தீலீபன் என்ற மகனும் உள்ளனர்.

இவர் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப பள்ளி பருவத்திலே பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றுப் போடிநாயக்கனூர் ஊர் மக்களால் யானை மீது இவரை அமரவைத்து ஊரைச் சுற்றி வந்து பெருமைபடுத்தியது இவரது கவிதை எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது,1964-ஆம் ஆண்டில் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் மாணவராக இருந்த பொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்டு போலிசாரால் கைது செய்யப்பட்டு காலில் விலங்கு பூட்டப்பட்டுப் சிறையில் அடைக்கப்பட்டவர். முதுகலைப் பட்டம் பெற்ற இவர் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கதர் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் அ.தி.மு.க வில் பல்வேறு பதவியில் இருந்துள்ளார். 1990-இல் மாநில மாணவர் அணி மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளர் பதவியில் இருந்துள்ளார், கலைஞர் மு.கருணாநிதி கையில் பல விருதுகள் பெற்றுள்ளார், 1991-இல் தமிழ் நாட்டு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராகச் செல்வி ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.

இவரது கவிதை தொகுப்புகள் சில தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் பாடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கறுப்புமலர் புத்தகத்தில் திருநங்கைகள் பற்றி இவர் எழுதிய கவிதை பலரால் பாரட்டப்பெற்றது. இலக்கியத்துறை, திரைப்படத்துறை, அரசியல்துறை ஆகியவற்றில் கால்பதித்து முத்திரை பதித்தவர். இவர் சிறந்த பேச்சாளர்.

நா. காமராசன் உடல்நலக் குறைவால் 2017 மே 24 அன்று சென்னையில் காலமானார் இவரது கவிதை புத்தகங்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கி அவரை சிறப்பிக்கும் வகையில் அவரது மனைவி திருமதி லோகமணி காமராசனை கெளரவித்து சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது[2]

வெளியான நூல்கள்[தொகு]

கவிதைகள்[தொகு]

  1. கறுப்புமலர்கள்
  2. சூரியகாந்தி
  3. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்
  4. சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்
  5. மலையும் ஜீவநதிகளும்
  6. கவியரசு நா. காமராசன் கவிதைகள்
  7. மகாகாவியம்
  8. கிறுக்கல்
  9. சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி
  10. ஆப்பிள் கனவு
  11. அந்த வேப்பமரங்கள்
  12. பெரியார் காவியம்
  13. பட்டத்துயானை
  14. காட்டுக்குறத்தி
  15. சிகரத்தில் உறங்கும் நதிகள்
  16. பொம்மைப்பாடகி
  17. ஞானத்தேர்

கதைகள்[தொகு]

  1. நரகத்திலே சில தேவதைகள்

திறனாய்வு[தொகு]

  1. நாவல்பழம்

பெற்ற விருதுகள்[தொகு]

  1. கலைமாமணி விருது
  2. சிறந்த பாடலாசிரியர் விருது
  3. பாரதிதாசன் விருது

இவரது பாடல்கள் இடம்பெற்ற சில திரைப்படங்கள்[தொகு]

  1. பல்லாண்டு வாழ்க,
  2. நீதிக்குத் தலைவணங்கு,
  3. இதயக்கனி,
  4. இன்று போல் என்றும் வாழ்க,
  5. நவரத்தினம்,
  6. ஊருக்கு உழைப்பவன்,
  7. வெள்ளைரோஜா,
  8. கோழிகூவுது,
  9. நல்லவனுக்கு நல்லவன்,
  10. இதயகோயில்
  11. உதயகீதம்
  12. நான் பாடும் பாடல்
  13. பாடும் வானம்பாடி
  14. ரெட்டை வால் குருவி
  15. தங்கமகன்,
  16. அன்புள்ள ரஜினிகாந்த்,
  17. கை கொடுக்கும் கை,
  18. காக்கிச்சட்டை,
  19. காதல்பரிசு,
  20. முந்தானை முடிச்சு,
  21. வாழ்க வளர்க,
  22. பெரியவீட்டு பண்ணக்காரன்,
  23. எங்க ஊரு காவக்காரன்,
  24. அன்புக்கட்டளை.
  25. ஓசை
  26. ஆனந்த கண்ணீர்
  27. அந்த ஒரு நிமிடம்
  28. மந்திர புன்னகை
  29. உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
  30. மனிதனின் மறுபக்கம்
  31. ஒரு நல்லவன் ஒரு வல்லவன்
  32. கற்பகம் வந்தாச்சு
  33. ஊர்க்குருவி
  34. சொல்ல துடிக்குது மனசு
  35. நாளை உனது நாள்

வசனம் எழுதிய திரைப்படம்[தொகு]

  1. பஞ்சவர்ணம்

நடத்திய இதழ்கள்[தொகு]

நாட்டுடைமையாக்கல்[தொகு]

இவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. அதற்கான பரிவுத் தொகை 2020 சனவரி 20 அன்று வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. கார்த்திக் துரைமகாராஜன்.சி, தொகுப்பாசிரியர் (25th May, 2017). கவிஞர் நா.காமராசன் காலமானார்..! அவருக்கு வயது 75. விகடன் இதழ். https://www.vikatan.com/news/miscellaneous/90284-poet-nkamarasan-was-died-age-75. 
  2. "திரைப்படப் பாடலாசிரியர் நா.காமராசன் காலமானார்". தினமணி நாளிதழ். பார்க்கப்பட்ட நாள் 25 May 2017.
  3. தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிஞர் ந. காமராசன், தினமணி, 2014. மார்ச். 11
  4. "45 பேருக்கு தமிழக அரசின் சிறப்பு விருதுகள் - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்". Maalaimalar (in Tamil). 2020-01-20. Archived from the original on 2020-11-23. பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._காமராசன்&oldid=3624222" இலிருந்து மீள்விக்கப்பட்டது