சோதனை (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோதனை என்பது 1970 களில் வெளியான சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சென்னையில் இருந்து மாதாந்தம் வெளிவந்தது.

வரலாறு[தொகு]

புதுமைப்பித்தன் உயர்தரமான இலக்கியப் பத்திரிகை ஒன்றை நடத்திக் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு சோதனை எனப் பெயர் வைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் இதழ் எதையும் துவக்கவில்லை.

புதுமைப் பித்தனின் யோசனையை முன்மாதிராகக் கொண்டு சேதனை இதழின் இதழ் 1973 இல் வெளியானது. இதன் ஆசிரியராக நா. காமராசன் இருந்தார்.[1] இதன் ஆலோசகர் கி. ராஜநாராயணன் என குறிப்பிடப்பட்டது. இதில் நா. காமராசன் பல தலைப்புகளில் விதம் விதமாக எழுதினார். 'உரைகல்' என்ற பெயரில் தலையங்கங்கள் எழுதினார்.

இந்த இதழ் தரமான தயாரிப்பாக விளங்கியது. இதழில் காமராசன் நிறையவே எழுதியிருந்தார். நல்ல கதைகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கிய சம்பந்தமான கேள்வி பதில் பகுதி எல்லாம் இருந்தன.

நாடகத்துக்கும் 'சோதனை' முக்கிய கவனிப்பு அளிக்க முன் வந்தது. அழகான அட்டையுடன், ‘சோதனை' நல்ல தோற்றமும் அச்சு அமைப்பும் கொண்டிருந்தது. 'ஆனந்த விகடன்' அளவில் 80 பக்கங்கள். விலை ஒரு ரூபாய் என்று இருந்தது.[2]

இவ்வளவும் இருந்ததும் இது மொத்தம் இரண்டே இதழ்கள்தான் வெளியானது. பின்னர் வெளியாகவில்லை.

குறிப்புகள்[தொகு]

  1. தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிஞர் ந. காமராசன், தினமணி, 2014. மார்ச். 11
  2. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 142–148. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதனை_(இதழ்)&oldid=3655726" இலிருந்து மீள்விக்கப்பட்டது