துவாரகநாத் தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவாரகநாத் தாகூர்
துவாரகநாத் தாகூர்
பிறப்பு1794
கொல்கத்தா, வங்காள மாகாணம், இந்தியாவில் கம்பெனி ஆட்சி (தற்போதைய கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா)
இறப்பு1 ஆகத்து 1846(1846-08-01) (அகவை 51–52)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானிய இந்தியர்
பணிதொழிலதிபர்
வாழ்க்கைத்
துணை
திகம்பரி தேவி (தி.1811 - 1839)
பிள்ளைகள்தேபேந்திரநாத் தாகூர், கிரிந்தரநாத் தாகூர், நாகேந்திரநாத் தாகூர்

துவாரகநாத் தாகூர் ( Dwarkanath Tagore ; 1794-1846) பிரித்தானியர்களுடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தை உருவாக்கிய முதல் இந்திய தொழிலதிபர்களில் ஒருவர்.[1] இராம்மோனி தாகூரின் மகனான இவர் தனது பெரியப்பா இராம்லோச்சன் தாகூருக்கு தத்து கொடுக்கப்பட்டார். மேலும், கொகத்தாவின் தாகூர் குடும்பத்தின் வாரிசான தேபேந்திரநாத் தாகூரின் தந்தையும் இரவீந்திரநாத் தாகூரின் தாத்தாவும் ஆவார்.

பரம்பரை[தொகு]

துவாரகநாத் தாகூர், குசாரி (சாண்டில்ய கோத்ரம்) பிரிவைச் சேர்ந்த இராரியா பிராமணர்களின் வழித்தோன்றல் ஆவார். இவர்களின் மூதாதையர்கள் பிராலி பிராமணர் என்று அழைக்கப்பட்டனர் - "பிராலி" என்ற வார்த்தை இஸ்லாத்திற்கு மாறியதாகக் கூறப்படும் தாகூர்களின் மூதாதையரான பீர் அலியிலிருந்து வந்தது. அவரது சந்ததியினர் மீண்டும் இந்துக்களாக மாறி, "பிராலி பிராமணர்" என்று பெயர் பெற்றார்கள்.[2][3]

துவாரகாநாத்தின் பெரியப்பா ஜெய்ராம் தாகூர் சந்தன்நகரில் பிரெஞ்சு அரசாங்கத்திடம் வணிகராகவும் திவானாகவும் பணியாற்றி பெரும் செல்வத்தை ஈட்டினார். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆங்கிலேயர்கள் புதிய வில்லியம் கோட்டையைக் கட்டியபோது, தனது மனைவி இலலிதா தேவி, மூத்த மகன், நில்மோனி தாகூர் (பி.1721 - 1791), ஆகியோருடன் கோவிந்தபூரில் இருந்து பாதுரியகட்டாவுக்கு மாறினார். அவரது இளைய சகோதரர் தர்பநாராயண் தாகூருடன் ஏற்பட்ட பிணக்கைத் தொடர்ந்து பாதுரியகட்டாவில் உள்ள மூதாதையர் வீட்டை விட்டு வெளியேறி ஜோராசங்காவில் குடியேறினார். நில்மோனி தாகூர் ஜோராசங்கா தாகூர் மாளிகையைக் கட்டினார். அங்கு குடும்பத்தின் ஜோராசங்கா கிளையினர் வசித்து வந்தனர். அதே சமயம் தர்பநாராயண் தாகூரின் சந்ததியினர் பாதுரியகட்டா தாகூர் கிளையைச் சேர்ந்தவர்கள்.[4]

குழந்தைப் பருவம்[தொகு]

நில்மோனியின் பேரன், துவாரகநாத் தாகூர், 1794 இல் இராம்மோனி தாகூர் மற்றும் அவரது மனைவி மேனகா தேவிக்கு பிறந்தார். பிறந்த உடனேயே, இவர் இராம்மோனியின் குழந்தை இல்லாத மூத்த சகோதரர் இராம்லோச்சனுக்கு (பி.1759-1807) தத்து கொடுக்கப்பட்டார்.

1807 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி, இராம்லோச்சன் இறந்தார். அவர் ஏரளாமான சொத்துக்களை வைத்திருந்தார். துவாரகாநாத் அப்போது சிறுவயதாக இருந்தார். 1792 இல் கார்ன்வாலிஸ் பிரபு அறிமுகப்படுத்திய வங்காள நிலப்பகுதியிலிருந்து வசூலிக்கப்படும் வேளாண்மை நிலவரி வருவாய்களை, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் ஜமீந்தார்கள் எவ்வாறு தங்களுக்குள் எவ்வாறு பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என இருதரப்பும் செய்து கொண்ட நிரந்தத்தீர்வுக்கான ஒப்பந்தமான நிரந்தரத் தீர்வு மூலம் ஜமீந்தாராக பயிற்சி பெற துவாரகநாத் 1810 இல் தனது 16 வயதில் பள்ளியை விட்டு வெளியேறி, புகழ்பெற்ற பாரிஸ்டர் இராபர்ட் கட்லர் பெர்குசனிடம் பயிற்சி பெற்றார். மேலும் கொல்கத்தாவிற்கும் பகரம்பூர் மற்றும் கட்டக்கில் உள்ள தனது தோட்டங்களுக்கும் இடையே அடிக்கடி பயணம் செய்தார். . துவாரகாநாத் கொல்கத்தாவின் சித்பூரில் உள்ள செர்போர்ன் ஆங்கிலப் பள்ளியில் படித்து வந்தார்.[5]

இந்திய தேசிய நூலகத்திலுள்ள துவாரகநாத் தாகூரின் மார்பளவு சிலை.

திருமணம்[தொகு]

துவாரகாநாத் தனது 17வது வயதில் 1811ல் ஜெஸ்ஸூருக்கு அருகிலுள்ள ஜமீந்தாரின் மகளான 9 வயது திகாம்பரி தேவியை மணந்தார். இவர்களுக்கு 4 மகன்களும் 1 மகளும் இருந்தனர் - அவர்களில் 3 பேர் உயிர் பிழைத்தனர் - தேபேந்திரநாத் தாகூர் (பி.1817), கிரிந்திரநாத் தாகூர் (பி.1820 - 1854) மற்றும் நாகேந்திரநாத் தாகூர் (பி.1829 - 1858). துவாரகாநாத் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வழிநடத்தத் தொடங்கியதால், இவரது திருமண வாழ்க்கை சிரமமாக மாறியது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இவரது மனைவி 1839 இல் தனது 37 வயதில் இறந்தார்.[6]

வணிக வாழ்க்கை[தொகு]

துவாரகநாத் தாக்கூரின் உருவப்படம், சுமார் 1907 .

தாகூர் ஒரு மேற்கத்தியக் கல்வி படித்த வங்காள பிராமணரும், கொல்கத்தாவின் குடிமைத் தலைவரும் ஆவார். இவர் பித்தானிய வர்த்தகர்களுடன் கூட்டு சேர்ந்து வங்கி, காப்பீடு மற்றும் கப்பல் நிறுவனங்களை போன்ற வணிக முயற்சிகளை அமைப்பதில் ஈடுபட்டிருந்தார். 1828 இல், இந்தியாவில் தொடங்கப்பட்ட வங்கியின் முதல் இயக்குநரானார். 1829ல் கொல்கத்தாவில் யூனியன் வங்கியை நிறுவினார். முதல் [1] ஆங்கிலேய-இந்திய மேலாண்மை முகமை ( சணல் ஆலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவற்றை நடத்தும் தொழில்துறை நிறுவனங்கள்[7]). மேலும் 'கார், தாகூர் நிறுவனத்தையும்' நிறுவ உதவினார்.

தாகூரின் நிறுவனம், இந்தியாவின் இன்றைய மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் மற்றும் வங்காளதேசத்தில் பரந்து விரிந்துள்ள பெரிய ஜமீந்தாரி தோட்டங்களை நிர்வகித்து வந்தது. மேலும், வங்காளத்தின் வளமான நிலக்கரிகளை, கொல்கத்தா மற்றும் ஊக்லி ஆற்றின் முகத்துவாரத்திற்கு இடையே கொண்டு செல்லும் சேவைகளை நடத்தும் புதிய நிறுவனங்களில் பங்குகளை வைத்திருந்தது. சீனத் தேயிலைப் பயிரை மேல் அசாமின் சமவெளிகளில் நடவு செய்யும் பணியையும் செய்து வந்தது.

'கார், தாகூர் நிறுவனம்' சீனாவுடன் அபினி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த இந்திய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும். அபினி இந்தியாவில் உற்பத்தி செய்து சீனாவில் விற்கப்பட்டது. இதற்கு சீனர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, கிழக்கிந்திய நிறுவனம் அபினி வர்த்தகத்தை குறிப்பிட்ட சில குறிப்பிட்ட இந்திய நிறுவனங்களுக்கு மாற்றியது. அதில் இவரது நிறுவனமும் ஒன்று.

வங்காளச் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள துவாரகநாத் தாகூரின் உருவப்படம்

1832 இல் தாகூர் ராணிகஞ்சில் முதல் இந்திய நிலக்கரிச் சுரங்கத்தை வாங்கினார்.[1] which eventually became the Bengal Coal Company.[8]

இறப்பு[தொகு]

இலண்டன் கென்சல் பசுமைக் கல்லறையில் துவாரகநாத் தாகூரின் நினைவிடம்.

துவாரகநாத் தாகூர் 1846 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாலை இலண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் விடுதியில் இறந்தார்.[1][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Stanley Wolpert (2009). A New History of India (8th ). Oxford University Press. பக். 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-533756-3. https://archive.org/details/newhistoryofindi0000wolp_i0v9/page/221/mode/1up. 
  2. Thompson, E Jr. (1926), Rabindranath Tagore: Poet and Dramatist, Read, p. 12, ISBN 1-4067-8927-5, The [Tagores] are Pirili Brahmans [sic]; that is, outcastes, as having supposedly eaten with Musalmans in a former day. No strictly orthodox Brahman would eat or inter-marry with them.
  3. Dutta, K.; W. Andrew Robinson (1995). Rabindranath Tagore: The Myriad-Minded Man. Saint Martin's Press. பக். 17–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-312-14030-4. 
  4. James Wyburd Furrell (1882). The Tagore Family: A Memoir. K. Paul, Trench, & Company. பக். 17. https://books.google.com/books?id=h3gOAAAAQAAJ&pg=PA17. பார்த்த நாள்: 5 April 2017. 
  5. "History of the Adi Brahmo Samaj (1906)"
  6. Chitra Deb. Thakurbarir Andarmahal. Ananda Publishers. 
  7. Kulke, Hermann; Rothermund, Dietmar (2004). A History of India (4th ). New York, NY: Routledge. பக். 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-32920-5. https://books.google.com/books?id=V73N8js5ZgAC&pg=PA265. பார்த்த நாள்: 18 September 2011. 
  8. Kling, Blair B., Partner in Empire: Dwarkanath Tagore and the Age of Enterprise in Eastern India, p. 32. University of California Press, 1976; Calcutta, 1981. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-02927-5
  9. Kripalani, Krishna (1981). Dwarkanath Tagore, A Forgotten Pioneer: A Life. New Delhi, India: National Book Trust, India. பக். 246–7. https://books.google.com/books?id=yoMeAAAAMAAJ. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாரகநாத்_தாகூர்&oldid=3816784" இலிருந்து மீள்விக்கப்பட்டது