உள்ளடக்கத்துக்குச் செல்

கா. சு. பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராசிரியர்
கா. சுப்பிரமணிய பிள்ளை
தாகூர் விரிவுரையாளர் கா. சு. பிள்ளை
பிறப்பு(1888-11-05)5 நவம்பர் 1888
திருநெல்வேலி, தமிழ்நாடு
இறப்புஏப்ரல் 30, 1945(1945-04-30) (அகவை 56)
திருநெல்வேலி, தமிழ்நாடு
இனம்தமிழர்
குடியுரிமைபிரித்தானிய இந்தியா
கல்விஎம்ஏ, எம்எல்
பணிசட்டப் பேராசிரியர்
தமிழ்ப் பேராசிரியர்
எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தமிழ் இலக்கிய வரலாறு
பெற்றோர்காந்திமதிநாத பிள்ளை, மீனாட்சியம்மை
விருதுகள்கொல்கத்தா பல்கலைக்கழக தாகூர் சட்ட விருது
பல்கலைப் புலவர்
பல்கலைச் செம்மல்
நுண்மான் நுழைபுலச் செம்மல்

கா. சு. பிள்ளை என அழைக்கப்படும் காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை (5 நவம்பர் 1888 - 30 ஏப்ரல் 1945) தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழறிஞர்; சைவசித்தாந்த வல்லுநர்; வழக்குரைஞர்; தமிழ்ப் பேராசிரியர்; சட்ட வல்லுநர்; மொழிபெயர்ப்பாளர்; உரையாசிரியர்; சொற்பொழிவாளர்; தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்த பன்மொழிப் புலவர்.

பிறப்பு

[தொகு]

கா. சுப்பிரமணியபிள்ளை திருநெல்வேலியில் சைவ வெள்ளாளர் மரபில் வாழ்ந்த காந்திமதிநாத பிள்ளை, மீனாட்சியம்மை இணையருக்கு மகனாக 1888 - ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் நாள் மகனாகப் பிறந்தார்.[1]

கல்வி

[தொகு]

திருநெல்வேலியில் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் தனது தொடக்கக் கல்வியைத் தொடங்கினார். மூன்றாண்டுகள் கடந்ததும் அருகிலிருந்த தொடக்கப் பள்ளியில் தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தார். 1906ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேறினார்.[2]

1908ஆம் ஆண்டில் சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பயின்று கலை உறுப்பினர் (Fellow of Arts) தேர்வில் வென்றார். அதேவேளையில் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்றார். Pதற்காக, பவர்முர்கெட் என்ற ஆங்கிலேயர் தமிழ் ஆராய்ச்சிக்கென அமைத்த பரிசினைப் பெற்றார். 1910ஆம் ஆண்டில் வரலாற்றைச் சிறப்புப் பாடமாகப் படித்து கலை இளவர் (Bachelor of Arts) பட்டம் பெற்றார். 1913ஆம் ஆண்டில் ஆங்கில இலக்கியத்திலும் 1914ஆம் ஆண்டில் தமில் இலக்கியத்திலும் தேறி கலை முதுவர் (Master of Arts) பட்டங்களைப் பெற்றார். பின்னர் சென்னைச் சட்டக் கல்லூரியில் பயின்று சட்ட இளவர் பட்டத்தையும் 1917ஆம் ஆண்டில் சட்ட முதுவர் பட்டத்தையும் பெற்றார். இவருடைய உறவினர்களில் முதன்முறையாக முதுகலைச் சட்டம் பட்டம் பெற்றவர் இவர்தான் என்பதால், உறவினர்கள் இவரை எம். எல். பிள்ளை என்றே அழைத்தனர்.

சட்டக் கல்லூரிப் பேராசிரியர்

[தொகு]

கா. சுப்பிரமணிய பிள்ளையின் மீது அன்புகொண்ட நீதிபதி சேசகிரி ஐயர், இவரை 1919ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் அமர்த்தினார்.

கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் இரவீந்திரநாத் தாகூர் குடும்பத்தினர், தாகூர் சட்ட விரிவுரைப் பரிசு ஒன்றை நிறுவியிருந்தனர். இப்பரிசினைப் பெற விரும்புபவர்கள், சட்டக்கலை தொடர்பாகக் கொடுக்கப்படும் மூன்று தலைப்புகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதனைப் பற்றி பன்னிரண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும். கா. சு. பிள்ளை 1920ஆம் ஆண்டில் அப்போட்டியில் கலந்துகொண்டு குற்றங்களின் நெறிமுறைகள் (Principles of Criminology) என்னும் தலைப்பில் சொற்பொழிகள் ஆற்றி, பரிசுத்தொகையான பத்தாயிரம் ரூபாயையும் தாகூர் சட்ட விரிவுரையாளர் என்னும் சிறப்பையும் பெற்றார்.

1922ஆம் ஆண்டில் சென்னை மாகாண அரசு அமைத்த கலைச் சொல்லாக்கக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக இடம் பெற்றார். பிறமொழி கலவாத தனித் தமிழ்நூல்களை வெளியிடுவதற்கென்று உருவாக்கப்பட்ட திருநெல்வேலி தென்னிந்தியா சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் நிறுவனத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக 1926ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இப்பதவியை 1932ஆம் ஆண்டு வரை வகித்தார்.

நீதிக்கட்சி என்னும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான சர். பி. டி. தியாகராயச் செட்டியாரின் உதவியால் சட்டப்பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1927ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் உருவாக்கப்பட்ட விதிமுறையின் காரணமாக 1927ஆம் ஆண்டில் சட்டப் பேராசிரியர் பதவியைத் துறந்தார்.

நெல்லை வாழ்க்கையும் தமிழாய்வும்

[தொகு]

பேராசிரியப் பதவியைத் துறந்த கா. சு. பிள்ளை தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். 1927 -ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு வரை இங்கேயே தங்கியிருந்து சைவக் குரவர்களான சுந்தரர், சேக்கிழார், மணிவாசகர் முதலியவர்களைப் பற்றிய வரலாற்று ஆய்விலும் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் பணியிலும் ஈடுபட்டார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்

[தொகு]

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் பேராசிரியராக 1929 – 30ஆம் கல்வியாண்டில் பணியாற்றினார். பத்தாண்டுகள் கழித்து 1940-41ஆம் கல்வியாண்டிலிருந்து 1943-44ஆம் கல்வியாண்டு வரை நான்காண்டுகள் அப்பல்கலைக் கழகத்தில் மீண்.டும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, 1 சூலை 1944ஆம் நாள் ஓய்வுபெற்றார்.[3] இப்பல்கலைக்கழகத்தில், இரா. நெடுஞ்செழியனும், க. அன்பழகனும் இவரது மாணவர்களாக இருந்தவர்கள் ஆவர்.[4].

மீண்டும் நெல்லை வாழ்க்கை

[தொகு]

1930ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கா. சு. பிள்ளை மீண்டும் நெல்லைக்குத் திரும்பினார். இங்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு திருநெல்வேலி நகராட்சியில் உறுப்பினராகப் பணியாற்றினார். அதே வேளையில் நெல்லை நகரில் அமைந்திருக்கும் காந்திமதி அம்மன் உடனுறை நெல்லையப்பர் கோயிலின் அறங்காவலராகவும் பணியாற்றினார். அப்பொழுது, தமிழ் வழிபாட்டுக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் தேவார, சைவ ஆகமப் பாடசாலைகளைத் தோற்றுவித்தார்.

1934ஆம் ஆண்டில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு முதன்முறையாக நெல்லையில் கூடியது. அம்மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவராக கா. சு. பிள்ளை பொறுப்பேற்றார். அம்மாநாட்டில் தமிழின் பெருமை, தமிழர் பெருமை குறித்து எடுத்துரைத்தார். அம்மாநாட்டு முடிவின்படி, பாளையங்கோட்டையில் 1934ஆம் ஆண்டில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. சச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற கா. சு. பிள்ளை 1938ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார்.

காஞ்சி வாழ்க்கை

[தொகு]

கா. சு. பிள்ளை 1938ஆம் ஆண்டு முதல் 1940ஆம் ஆண்டு வரை காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார். அப்பொழுது தன் நண்பர் இசைமணி சுந்தரமூர்த்தி ஓதுவார் என்பவருடன் தங்கியிருந்தார்.

இறுதிக் காலம்

[தொகு]

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது முறையாக தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய பொழுது வாதநோயால் பாதிக்கப்பட்டார். எனவே, தன்னுடைய ஆய்வுரைகளையும் நூல்களையும் உதவியாளர் ஒருவர் மூலம் எழுதிவந்தார். 1944ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் இருந்து நெல்லைக்குத் திரும்பிய கா. சு. பிள்ளை, தம்முடைய 56வது வயதில் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் மரணமடைந்தார்.

சிறப்புப் பட்டங்கள்

[தொகு]
  1. பல்கலைப் புலவர் என்னும் பட்டம் 1940ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழ்சங்கக் கூட்டத்தில் கா. சு. பிள்ளைக்கு வழங்கப்பட்டது.
  2. நீதிக்கட்சி என்னும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரும் செட்டிநாட்டின் இளவரசருமான மு. அ. முத்தையா செட்டியார் 1940ஆம் ஆண்டில் கா. சு. பிள்ளையின் பணிகளைப் பாராட்டி செப்புப் பட்டயம் ஒன்றினை வழங்கினார்.
  3. பல்கலைச் செம்மல்
  4. நுண்மான் நுழைபுலச் செம்மல்

வாழ்க்கை வரலாறு

[தொகு]

கா. சு. பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இ. மு. சுப்பிரமணிய பிள்ளை என்பவர் கா. சு. பிள்ளை வரலாறு என்னும் தலைப்பில் நூலாக எழுதினார். 124 பக்கங்களை உடைய இந்நூலை 1958ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் சென்னையில் உள்ள திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தனது 959 நூலாக வெளியிட்டது.[5]

நினைவேந்தல்

[தொகு]

திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில், தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்திருக்கிறது கைலாசபுரம். இங்குள்ள நகர்மன்றப் பூங்காவில் கா. சு. பிள்ளையின் நினைவாக 13 அக்டோபர் 1947–ஆம் நாளன்று நடுகல் ஒன்று நாட்டப்பட்டது.

கா. சு. பிள்ளையின் கருத்துகளைத் தமிழர்களிடையே பரப்பும் நோக்கில் “கா. சு” நினைவு இலக்கியக் குழு என்னும் அமைப்பு குளித்தலையில் நிறுவப்பட்டது. திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான மீ. சு. இளமுருகு பொற்செல்வி இக்குழுவை நிறுவினார். இக்குழுவின் சார்பில் குளித்தலையில் கா. சு. பிள்ளை நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 1987 நவம்பர் 5ஆம் நாள் கா. சு. பிள்ளை எழுதிய (1) சைவசித்தாந்த சந்தானாசாரியர்களும் அவர்களின் அருள் நூல்களும் (2) சுத்தாத்துவிதம் (3) பண்டார சாத்திரம் பதினான்கு என்னும் நூலின் முன்னுரை (4) சைவச் சடங்கு முறை ஆகியவற்றைத் தொகுத்து, பல்கலைச் செம்மல் தமிழ்க் கா.சு. வின் பல்துறைத் திரட்டு என்னும் 116 பக்க நூலை இக்குழு வெளியிட்டுள்ளது.

கா. சு. பிள்ளையின் படைப்புகள்

[தொகு]
வ. எண் முதற் பதிப்பு இரண்டாம் பதிப்பு மூன்றாம் பதிப்பு நூல் பக்கம் வெளியீட்டகம்
01 1920 Principles of Criminology
02 1923 1927சூலை இந்து சமயங்களின் சுருக்க வரலாறு 42 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
03 1923 ஆகத்து சைவசித்தாந்த விளக்கச் சுருக்கம் 16 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
04 1924 1927 மே சைவசித்தாந்த உண்மை வரலாறு 40 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
05 1924 ஏப்பிரல் சம்பந்தர் தேவாரம் இயற்கைப் பொருளழகு 2+42 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
06 1925 1939 சூலை அறிவு விளக்க வாசகம் 5+66 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
07 1925 ஆகத்து பண்டார சாத்திரம் பதினான்கு சதாசிவ முதலியார், சீர்காழி
08 1925 திசம்பர் 1958 அக்டோபர் சைவ சித்தாந்த சந்தானாசாரியர்களும் அவர்களின் அருள் நூல்களும் சைவசித்தாந்த விளக்கமும் 4+90 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
09 1926 1947 சனவரி அப்பர் சுவாமிகள் சரித்திரம் 164 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
10 1927 1953 சூன் ஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரம் 10+205 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
11 1927 சந்தனாசாரியர் சரித்திரம் (சைவசித்தாந்த உரைக்கொத்து என்னும் நூலில் ஒரு பகுதி) தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
12 1928 1947 சுந்தரமூர்த்தி சுவாமிகள் சரித்திரம் 8+208 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
13 1928 1954 செப்டம்பர் சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும் 154 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
14 1928 1947 மார்ச்சு மணிவாசகப் பெருமான் வரலாறு 8+124 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
15 1928 1958 சனவரி இலக்கிய வரலாறு, தொகுதி 1 20+269 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
16 1928 1958 சனவரி இலக்கிய வரலாறு, தொகுதி 2 20+516 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
17 1929 1955 சனவரி திருக்குறள் பொழிப்புரை 10+370 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
18 1929 மார்ச்சு முருகன் பெருமை 36 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
19 1929 மே Metaphysics of the Saiva Siddhanta System 4+38 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
20 1930 சூன் 1955 மார்ச் தாயுமான சுவாமிகள் 4+207 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
22 1930 1958 பிப்ரவரி பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் 8+112 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
23 1932 சனவரி 1947 குமரகுருபர அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் 4+6+134 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
24 1932 அக்டோபர் 1949 நவ மெய்கண்டாரும் சிவஞான போதமும் 18+177 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
25 1933 சுத்தாத்துவிதம் தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை பொன்விழா மலர்
26 1934 ஆண்டாள் வரலாறும் நூலாராய்ச்சியும்
27 1938 1952 திசம்பர் இந்திய வரலாற்றுக் கதைகள் – புத்தகம் 1 4+74 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
28 1938 1949 நவம்பர் இந்திய வரலாற்றுக் கதைகள் – புத்தகம் 2 4+92 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
29 1939 பழந்தமிழ் நாகரிகம் அல்லது பொருளதிகாரக் கருத்து
30 1938 வானநூல்
31 1939 மே 1941 மே உலகப் பெருமக்கள், தொகுதி 1 136 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
32 1940 அக்டோபர் உலகப் பெருமக்கள், தொகுதி 2 6+141 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
33 1940 அக்டோபர் 1948 மே 1963 ஏப் சர். பி.சி.ராய் 6+122 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
34 1949 திசம்பர் சிவஞானபோதம் பொழிப்புரை 6+81 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
35 1953 தமிழர் சமயம் 14+134 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
36 1955 நவம்பர் சிவஞான சுவாமிகள் வரலாறு 8+150 தி.தெ.சை.நூ.கழகம், சென்னை
37 திருவாசகம் பொழிப்புரை
38 திருமுருகாற்றுப்படை குறிப்புரை
39 குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பா குறிப்புரை
40 பல புலவர்கள் இயற்றிய தனிப்பாடற்றிரட்டு – தொகுதி 1
41 பல புலவர்கள் இயற்றிய தனிப்பாடற்றிரட்டு – தொகுதி 2
42 நால்வர் வரலாறு (மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சித்தியார், உமாபதி சிவாச்சாரியார்)
43 இறையனார் அகப்பொருள்
44 தமிழ் நூற்கொள்கையும் தமிழ் மொழியமைப்பும்
45 திருச்சோலையார் துறை விளக்கம்
46 திருநான் மறை விளக்கம்
47 சைவச் சடங்கு விளக்கம்
48 மெய்கண்ட நூல்களின் உரைநடை
49 தியானமும் வாழ்க்கை உயர்வும்
50 கடவுளும் வாழ்க்கை நலமும்
51 உலக நன்மையே ஒருவன் வாழ்வு
52 மக்கள் வாழ்க்கை தத்துவம்
53 வாழ்க்கை இன்பம்
54 உடல் நூல்
55 சிவப்பிரகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு
56 நீதிநெறி விளக்கம் ஆங்கில மொழிபெயர்ப்பு
57 A Short Sketch of the Hindu Religion
58 A Note on Hindu Religion Endowment Bill
59 Tamil Blooms
60 Nature of Thevaram and ancient Tamil Scripture
61 பொருட் சட்டம்
62 பதிவு விதி
63 குற்றச் சட்டம்
64 இந்திய தண்டனைத் தொகுதி – முதற்பாகம்
65 Lectures on the Indian Penal Code
66 திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்

சான்றடைவு

[தொகு]
  1. http://www.tamilonline.com/thendral/content.aspx?id=65&cid=14
  2. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10003:2010-07-16-10-31-25&catid=1149:10&Itemid=417
  3. குடிஅரசு, 22-7-1944, பக்.7 (பார்த்த நாள்.2018-12-05)
  4. இரா. நாறும்பூநாதன் (5 நவம்பர் 2016). "தமிழுக்குத் தொண்டுசெய்த பிள்ளை". தினமணி. Retrieved 5 நவம்பர் 2016.
  5. ரங்கநாதன் டாக்டர் எஸ்.ஆர், முத்துக்குமாரசாமி இரா; பாராட்டுவிழா நூல்பட்டி; திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை;1961;பக்248

வெளி இணைப்புகள்

[தொகு]
Commons logo
Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :கா. சு. பிள்ளை

பேராசிரியர் கா.சு.பிள்ளை - மறக்க முடியுமா? கருஞ்சட்டைத் தமிழர், அக்டோபர் 2017, எழில்.இளங்கோவன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._சு._பிள்ளை&oldid=4229130" இலிருந்து மீள்விக்கப்பட்டது