ராம. அழகப்பச் செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: en:Alagappa Chettiar
வரிசை 75: வரிசை 75:
[[பகுப்பு:தமிழக கல்வியாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக கல்வியாளர்கள்]]


[[en:R. M. Alagappa Chettiar]]
[[en:Alagappa Chettiar]]

02:21, 3 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

ராம.அழகப்பச் செட்டியார்
படிமம்:Chettiar.jpg
வள்ளல் டாக்டர் திரு க.வி.அழ.அழகப்பா செட்டியார்
பிறப்பு(1909-04-06)ஏப்ரல் 6, 1909
கோட்டையூர்,சிவகங்கை மாவட்டம்,தமிழ்நாடு
இறப்பு(1957-04-05)ஏப்ரல் 5, 1957
தேசியம்இந்தியன்
கல்விமுதுகலை (ஆங்கில இலக்கியம்), சட்டம்
பணிதொழிலதிபர்
அறியப்படுவதுவள்ளல், கல்விப்பணி
வலைத்தளம்
http://www.alagappa.org

ராம.அழகப்பச் செட்டியார் (பிறப்பு 06 ஏப்ரல் 1909 - இறப்பு 05 ஏப்ரல் 1957)ஓர் இந்திய தொழிலதிபரும் வள்ளலும் ஆவார்.விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளையும் ஆய்வுக்கூடங்களையும் தமது செலவில் நிறுவி தமிழகம் இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்டவர்.

இளமையும் கல்வியும்

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் கோட்டையூரில் கே.வி.அழ.ராமநாதன் செட்டியார் மற்றும் உமையாள் ஆச்சி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக ஏப்ரல் 06,1909ஆம் ஆண்டு பிறந்தார். காரைக்குடியில் இருந்த எஸ் எம் எஸ் வித்யாசாலையில் படித்து பின்னர் தமது 21ஆவது வயதில் சென்னை மாகாணக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.அப்போது பின்னாளில் இந்தியக் குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணனுடன் தோழமை கொண்டிருந்தார்.சட்டம் பயில இங்கிலாந்து சென்று சார்ட்டட் வங்கி,லண்டனில் பயிற்சி பெறும் முதல் இந்தியராக விளங்கினார்.மிடில் டெம்பிள் வழக்கறிஞர் அவை(bar)யில் தேர்வானார். அவரது துடிப்பான இயல்பால் லண்டன் கிரயோடனில் உள்ள பநிற்சிக்களத்தில் விமான ஓட்டி உரிமம் பெற்றார்.

பணிவாழ்வு

தமது தொழில் முயற்சியை துணி தயாரிப்பில் கொச்சி டெக்ஸ்டைல்ஸ் என்று 1937ஆம் ஆண்டு துவக்கினார். பின்னர் அழகப்பா டெக்ஸ்டைல்ஸ் ஆலையை கேரளாவில் திருச்சூர் அருகே புதுக்காடு என்ற இடத்தில் துவக்கினார்.அங்குள்ள பணியாளர் குடியிருப்பு அழகப்பா நகர் என அழைக்கப்படலாயிற்று.

தமது வணிகத்தை விரைவாக விரிவாக்கி மலாயாவில் தேயிலைத் தோட்டங்கள்,பர்மாவில் ஈய சுரங்கங்கள்,கேரளத்தில் துணியாலைகள்,கொல்கத்தாவில் காப்பீடு நிறுவனம்,மும்பை|பம்பாயில் உணவுவிடுதிகள்,சென்னையில் திரைப்பட கொட்டகைகள் என பல்வேறு துறைகளில் தடம் பதித்தார்.பங்கு வணிக நிறுவனம் ஒன்றும் திறம்பட நடந்து வந்தது.தனி விமானசேவையும் நடத்தினார்.

இருப்பினும் கல்விப்பணியில் நாட்டம் கொண்டு தமது குவியத்தை மாற்றிக் கொண்டார்.

கல்வி புரவலர்

இவரது கல்விப்பணி திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறையை ஏற்படுத்த 1943ஆம் ஆண்டு ஒரு இலக்கம் ரூபாய்கள் நன்கொடை வழங்கியதுடன் துவங்கியது.

1947ஆம் ஆண்டு நடந்த அன்னி பெசண்ட் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இந்தியாவில் கல்வியை வளர்க்க தொழிலதிபர்களுக்கு விடுத்த அழைப்பினை ஏற்று காரைக்குடியில் காந்திமாளிகையில் அழகப்பா கலைக்கல்லூரியை மூன்று நாட்களுக்குள் நிறுவினார்.

அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவை காரைக்குடியில் அழகப்பா வளாகத்தில் 15 இலக்கம் ரூபாய் மதிப்புள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பினை நன்கொடை அளித்து நடுவண் அரசின் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவ இணங்கச் செய்தார்.இவரது இந்த நன்கொடையைப் பாராட்டி நேரு இவரை சோசலிச முதலாளி என்று புகழ்ந்தார்.1953ஆம் ஆண்டுசனவரி 14 அன்று இந்நிலப்பரப்பில் மத்திய மின் வேதியியல் ஆய்வுக் கழகத்தை (CECRI) இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

தமது அரண்மனை போன்ற கோட்டையூர் இல்லத்தையே ஓர் பெண்கள் கல்லூரி நிறுவ வழங்கியது இவரது வள்ளல்தன்மைக்கு சிகரமாக அமைந்தது.

இவரது பிற நன்கொடைகள் மற்றும் நிறுவனங்கள்:

  • அவரது பிறந்த ஊரான கோட்டையூரில் ஓர் உயர்நிலைப் பள்ளி
  • சென்னை வேப்பேரியில் ஓர் பெண்கள் தங்கும் விடுதி
  • கோட்டையூர் நகரமைப்பிற்காக வளர்ச்சி நிதி
  • கந்தனூர் மீனாட்சி மன்றத்திற்காக நன்கொடை
  • சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்தில் பொறியியல் கல்லூரி துவக்கம்
  • கிண்டியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில், பின்னர் அழகப்பா செட்டியார் தொழில்நுட்பகல்லூரி என பெயர்பெற்ற,தொழில்நுட்பக் கல்லூரி துவக்கம்
  • மலேசியாவில் உயர்கல்வி துவங்க நன்கொடை
  • 1948ஆம் ஆண்டு புது தில்லியில் தென்னிந்தியா கல்வி சொசைட்டி அமைக்க நன்கொடை
  • மதுரை லேடி டோக் கல்லூரிக்கு நன்கொடை
  • 1946ஆம் ஆண்டு தக்கர் பாபா வித்யாலயாவில் அழகப்பா மண்டபம் கட்ட நன்கொடை
  • தமிழ் களஞ்சியம் பதிப்பித்திட நன்கொடை
  • புவியியல் ஆய்விற்காக திருவாங்கூர் அரசிற்கு நன்கொடை
  • கொச்சியில் குழந்தைப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பு மையம் ஒன்றை நிறுவ நன்கொடை
  • எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் நாட்டு மருத்துவ ஆய்வினுக்காக நன்கொடை

அவர் நிறுவிய கல்விக்கூடங்களின் அடிப்படையில் தமிழக அரசு 1985ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகத்தை அமைத்தது.

விருதுகள்

1943ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தாலும் 1944ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தாலும் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

1945ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம் அவருக்கு சர் விருது வழங்கி கௌரவித்தது.இந்திய விடுதலையை அடுத்து இவ்விருதினை அவர் புறக்கணித்தார்.இந்திய அரசு 1957ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கியது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம._அழகப்பச்_செட்டியார்&oldid=604592" இலிருந்து மீள்விக்கப்பட்டது