வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், வாள்வச்சகோஷ்டம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் ஒரே கோயில் இந்த வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமா்தினி அம்மன் ஆலயம். சண்டிகாதேவி என அழைக்கப்படும் இந்த தேவி மகிஷாசுரன் என்ற அசுரனை வதம் செய்ததால் மகிஷாசுரமா்தினி என பெயர் பெற்றாள்.

அரசர்கள் தங்களுடைய படைவாளை வைத்து வழிபட்ட தலம் என்பதால் இந்த ஊருக்கு வாள்வச்சகோஷ்டம் என்ற பெயர் உருவானது.

கோயில் வரலாறு[தொகு]

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்தது. இக்கோயிலின் கட்டுமானம் 12, 16, 18ம்நூற்றாண்டுகள் என மூன்று காலகட்டங்களில் நடந்துள்ளது.  14 ஆண்டுகள் வன வாசத்திற்காக பாண்டவர்கள் புறப்படும் போது தங்கள் ஆயுதங்களை மறைவான இடத்தில் பாதுகாப்பாகவைக்க விரும்பினார்களாம்,  மகிஷாசுரமர்த்தினி குடிகொள்ளும் கோயிலே இதற்குதகுதியான இடம் என முடிவு செய்து ஆயுதங்களை வைத்தார்களாம், ஆகவே இத்தலம் வாள்வச்சகோஷ்டம் எனபெயர் பெற்றதாக மகாபாரதகதையுடன் தொடர்பு கொண்டு தலபுராணம்பேசப்படுகிறது.

பரசுராமன்[தொகு]

பரசுராமன் சத்ரியர்களை அழித்த பின் அம்மனுக்கு கோயில் கட்டினார். கோயில் அருகே குளம் அமைத்தார். அவர் தன் போராட்ட குணத்தை விட்டு, தன் ஆயுதமான பரசுவை குளத்தில் வைத்து வணங்கியதாகவும்,  ஆதலால் இத்தலம் வாள்வச்சகோஷ்டமாகமாறியது என பரசுராமனுடன் தொடர்பு கொண்டும் பேசப்படுகிறது.

மார்த்தாண்டவர்மன்[தொகு]

திருவிதாங்கூர் மாமன்னர் மார்த்தாண்டவர்மா தனது ஆட்சிகாலத்தில் நாட்டின் எல்லையை விரிபுபடுத்தவும், எதிரிகளை எதிர் கொள்ளவும் பலயுத்தங்களை மேற்கொண்டார். தனது வெற்றிகளுக்குபின் அனந்தபத்மனாபனிடம் நாட்டை ஒப்படைத்து பத்மனாபதாசனாக ஆட்சியை தொடர்ந்தார். பத்மனாப தாசனாக மாறிய மன்னர் தனது வாளை மகிஷாசுரமர்தினி முன்வைத்து வணங்கினார்.அன்று முதல் இத்தலம் வாள்வச்சகோஷ்டமாக மாறியதாக ஏடுகள் கூறுகிறது.

சங்கரவாரியார் என்ற எடத்துவா போற்றியின் வேண்டுகோளுக்கு இணங்க வேணாட்டு அரசன் உண்ணிகேரளவர்மா இக்கோயிலை கட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இக்கோயிலின் உரிமை வாரியர் குடும்பத்திற்கும், நிர்வாகம் மகாராஜா குடும்பத்திற்கும் உரியது என்ற வழக்கம் 18ம்நூற்றாண்டிலிருந்து பின்பற்றி வந்தது.

கோயில் அமைப்பு[தொகு]

இந்த கோயில் தரைமட்டத்திலிருந்து மூன்று மீட்டர் உயரத்தில்அமைந்துள்ளது. இக்கோயிலை தரிசிக்க7 படிகள் ஏறி செல்ல வேண்டும். படிக்கட்டைக் கடந்தால் இருபுறமும் திண்ணையுடன் கூடிய அனுப்பு மண்டபம் உள்ளது. அதை அடுத்து முகமண்டபம் அமைந்துள்ளது. முக மண்டபமானது ஆறு தூண்கள் கொண்டதாக உள்ளது. இந்தத் தூண்களில் நடராஜர், காளி, அர்ஜூனன், கர்ணன், இந்திரஜித், லக்ஷ்மணன் ஆகியோரது சிற்பங்கள்செதுக்கப்பட்டுள்ளன.

முகமண்டபத்தின் வாசலில் இருபுறமும் துவாரபாலகி சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் மகிஷாசுரமர்த்தினி நின்றகோலத்தில் அருள்பாளிக்கிறார். இக்கோயில் உபகோயில் என்ற வகைப்பாட்டில் இந்துஅறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பள்ளிவேட்டை[தொகு]

இக்கோயிலில் சிவாகமமுறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பத்து நாட்களுக்கு திருவிழா நடக்கின்றது. விழாவின் ஒன்பதாவது நாளன்று மாலையில் அம்மன் தங்க அங்கி அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு, ஏழுமுறை கோயிலைச்சுற்றிவலம்வருகிறாள். அதற்கு பள்ளி வேட்டை என்றுபெயர்.

பத்தாவது நாள்காலையில் அம்மனுக்கு ஆறாட்டு நடத்தப்படும். அத்துடன்திருவிழா முடிவடையும். கார்த்திகை மாதமும் இங்கு அம்மனுக்கு விசேஷ வழிபாடுகளும் களபசார்த்தும் நடத்தப்படும்.

குமரியில் ஒரே கோயில்[தொகு]

குமரி மாவட்டத் திருக்கோயில்களில் அம்மன் நின்றகோலத்தில் அருள்பாலிக்கும் ஒரே கோயில் வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்தினி கோயில். அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் தங்கள் ஆயுதங்களை வைத்துவழிபட்ட இடமாகும். 

அடுத்து 45அடி உயரமுள்ள கொடிமரம் காணப்படுகிறது. கொடிமரத்தையடுத்து பலிபீடமும் தொடர்ந்து கதிர் மண்டபம், மருதமண்டபம் மற்றும் நமஸ்காரமண்டபமும் உள்ளது. இந்த மண்டபங்கள் அழகிய புடைப்பு சிற்பங்களைக்கொண்ட துாண்களையுடையது. குறிப்பாகரதியும், மன்மதனும் வில்,அம்புடன் நின்ற கோலத்தில் காண்போரைக் கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது. அது போன்று முன் மண்டபத்திலுள்ள 12தூண்களில் ஒன்றில் சங்கு, சக்கரம் ஏந்திய விஷ்ணு இரண்டு கைகளில் பெண்ஒருத்தியை ஏந்தி நிற்கிறார். திருப்பாற்கடலைக் கடையும் போதுகடலில் இருந்து லட்சுமியை விஷ்ணு ஏந்தி எடுத்த நிகழ்ச்சி இது.

கருவறை[தொகு]

ஸ்ரீ கோயில் என்னும் கருவறை கிழக்குநோக்கி கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி உட்பிரகாரமும், காற்றாலை மண்டபமும் அமைந்துள்ளது. கருங்கல்லில் கட்டப்பட்டுள்ள கருவறைமேல் பகுதி மரத்தால் அமையப்பெற்றுள்ளது. கூரையின் மேல்பகுதி செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. கருவறையின்மேல் பகுதியில் 32 அடி உயரமுள்ள ஏகதள கோபுரமும் உள்ளது. 

எருமை தலையில் அம்மன் கல்லில் செய்யப்பட்டுள்ள படிமம் திரிபங்கா நிலையில்வலது கால், எருமை வடிவிலான மகிஷன் தலையில் ஊன்றிய நிலையிலும், இடதுகால், தரையில் தொட்ட நிலையிலும் உள்ளது. நான்கு கைகளையுடைய அம்மனின் பின் வலது கையில் சக்கரமும், பின் இடதுகையில் சங்கும், முன்வலது கை வரதமும், முன் இடது கைகடிஹஸ்தமாயும் இருக்கும். காலில் சிலம்பு, கழுத்தில் அணிகலன்களுடன் அம்மன்நின்று அருள்புரிகிறாள். 

கோயில் அர்ச்சகர் சங்கர நாராயணன் கூறியதாவது :[தொகு]

பல்வேறுசிறப்பு அம்சங்களைகொண்ட இந்த கோயில்சுமார் 1000 – ம் ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்தது ஆகும். முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகள் இல்லாத ஆலயம் இது.

யோகாநிலையில் மகிஷாசுரமர்த்தினி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.  கொடிமரம் சிற்ப மண்டபம், இடைஞாழி, நமஸ்கார மண்டபம், ஒற்றை கல்லினால் ஆன ஒற்றைக்கல்மண்டபம், கருவரை, நாலம்பலம், சுற்றம்பலம் என பல்வேறு சிறப்புகள் பெற்றது. இறைவனின் ஆசீர் பெற்றவர்கள் சித்தர்கள். அவர்கள் இன்றும் இவ்வாலயத்தில் இருப்பதாகவும், தினமும் அம்மனை வராகி சித்தர்பூஜை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வருடாந்திரத்திருவிழா, கார்த்திகை திருவிழா, நவராத்திரி விழா, உற்சவபலி, திருஆராட்டு என அனைத்தும் நடக்கிறது. தினசரி பூஜையின் போது ஷிவேலி என்ற பூஜையும் நடக்கிறது. சத்ரு சம்ஹாரம், திருமண தடை நீங்க, காரிய சித்தி, பயம் நீங்க, அகர்ஷனபலம் கிடைக்க செய்வது தேவியின் மகிமையாக கூறப்படுகிறது.

கும்பாபிஷேகம்[தொகு]

இக்கோயிலுக்கு திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். இதனால்ஆலய விக்ரஹம்ஸ்ரீ கோயில் கருவறை கூரை பாதுகாக்கப்படும், அதனால் ஆறாட்டு கடவு என்று அழைக்கப்படும் தெப்பகுளம் தூய்மை அடையும், எனவே கோயிலுக்கு கட்டாயம் கும்பாபிஷேகம் செய்திட வேண்டும் என்றார்.

[1]

  1. https://www.hindutamil.in/news/spirituals/128922-.html