மாரியப்பன் சரவணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலபதி

மாரியப்பன் சரவணன்

பட்டப்பெயர்(கள்)"படாலிக் நாயகன்"
பிறப்பு(1972-08-10)10 ஆகத்து 1972
இராமேசுவரம் , தமிழ்நாடு, இந்தியா
இறப்பு29 மே 1999(1999-05-29) (அகவை 26)
படாலிக் பகுதி, கார்கில்
சார்புஇந்தியா இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1995–1999
படைப்பிரிவுபீகார் படைப்பிரிவு
போர்கள்/யுத்தங்கள்கார்கில் போர்
விருதுகள் வீர சக்கரம்

கலபதி மாரியப்பன் சரவணன் (Mariappan Saravanan;10 ஆகத்து 1972 - 29 மே 1999), கார்கில் போரின்போது வீரமரணம் அடைந்த இந்தியத் தரைப்படையின் புகழ்பெற்ற பீகார் படைப்பிரிவில் அதிகாரியாக இருந்தார். 29 மே 1999 அன்று கார்கில் பிரிவின் படாலிக் பகுதியில் நான்கு ஊடுருவும் நபர்களைக் கொன்ற பின்னர், ஊடுருவும் நபர்களுடன் நேருக்கு நேர் நடந்த சண்டையில் இவர் கொல்லப்பட்டார். சரவணன் 10 மார்ச் 1999 அன்று நான்கு ஆண்டுகள் சேவையை முடித்திருந்தார்.

கார்கில் போரில் கொல்லப்பட்ட முதல் அதிகாரி கலபதி சரவணன். போதிய தகவல்கள் கிடைக்காதபோது இவர் தலைமையிலான தாக்குதல் மோதலின் ஆரம்ப கட்டங்களில் நடந்தது.[1] இவரது நடவடிக்கைகள் இவரை "படாலிக் நாயகன்" என்று குறிப்பிட வழிவகுத்தது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1972 ஆகத்து 10 அன்று இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள இராமேசுவரத்தில் பிறந்த சரவணன், கயா மாவட்டத்திலுள்ள கேந்திரிய வித்யாலயாவில் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். திருச்சிராப்பள்ளியிலுள்ள காம்பியன் ஆங்கிலோஇந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தனது உயர்நிலைப் பள்ளியைத் தொடர்ந்தார். பின்னர், திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1992இல் சரவணன் கல்லூரியில் மாணவர் சங்கத்தின் தலைவராகவும், நாட்டு நலப்பணித் திட்டத்தின் C சான்றிதழ் வைத்திருப்பவராகவும் இருந்தார். இந்திய அமைதி காக்கும் படையில் பணியாற்றிய இவரது தந்தை லெப்டினன்ட் கர்னல் ஆதி மாரியப்பன் இலங்கையில் பவான் நடவடிககையின் போது 19 சூன் 1989 அன்று பெங்களூரில் நடந்த சாலை விபத்தில் இறந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர்.

இராணுவ வாழ்க்கை[தொகு]

சரவணன் 1995இல் பீகாரில் லெப்டினட்டாக சேர்ந்தார். இராணுவத்தில் சேர்ந்த பிறகு, கார்கிலுக்குச் செல்வதற்கு முன்பு இவர் தமுல்பூர், கூச் பெகர் பூட்டான் ஆகிய இடங்களில் பணியாற்றினார். இவர் 1996இல் தளபதியாகவும் 1999இல் கலபதியாகவும் உயர்த்தப்பட்டார்.

கார்கில் போர்[தொகு]

இவரது படைப்பிரிவு கார்கில் போர் தொடங்கியபோது அசாமில் இருந்தது. இவர்கள் கார்கில், ஜம்மு காஷ்மீர் செல்ல உத்தரவிடப்பட்டது. மே 28, 1999 இரவில், சரவணனுக்கு படாலிக் பகுதியில் 14,229 அடி (4,337 மீ) உயரத்தில் நன்கு பாதுகாக்கப்பட்ட பாக்கித்தான் நிலையை கைப்பற்றும் பணி வழங்கப்பட்டது. இவரும் இவரது ஆட்களும் இந்திய சீர் நேரம் 04:00 இல் தாக்குதலைத் தொடங்கினர். பீரங்கிகளாலும், தானியங்கி ஆயுதங்களாலும் தாக்கினர். எதிரிகளிடமிருந்து தீவிர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், இவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். சரவணன் எதிரி நிலைக்கு ராக்கெட் லாஞ்சரை வீசினார். அது இரண்டு எதிரி வீரர்களை கொன்றது. போரின் போது, இவர் குண்டடிபட்டு காயமடைந்தார். ஆனால் சண்டை தொடர்ந்தது. அதிகமான இந்திய வீரர்கள் காயமடைந்ததால் இவரை பின்வாங்குமாறு இவரது கட்டளை அதிகாரி உத்தரவிட்டார். இவர் மேலும் இரண்டு ஆக்கிரமிப்பாளர்களைக் கொன்றார். ஆனால் இந்த முறை இவர் தலையில் குண்டு பாய்ந்து இந்திய நேரம் 06:30 இல் இறந்தார்.

வீர சக்கரம்[தொகு]

சரவணனுக்கு மரணத்திற்குப் பின் வீர சக்கரம் வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனால் இவரது தாய்க்கு வழங்கப்பட்டது.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Shaheed Acting Major Mariappan Saravanan". Kargil War Heroes. Kashmir News Network. 10 July 1999. பார்க்கப்பட்ட நாள் 11 November 2010.
  2. "Vir Chakra (VrC), Awardee: Maj M Sarvanan, VrC @ TWDI".

https://www.facebook.com/pages/Major-saravanan/219879964694542

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரியப்பன்_சரவணன்&oldid=3462183" இலிருந்து மீள்விக்கப்பட்டது